Tuesday, August 17, 2010

வாழ்க்கைப் ப‌ய‌ண‌த்தில்....

தெருவின் துவக்கத்தில்
ஒயின்ஸை நோக்கி தொடங்கிய பயணம்
இடவலமாய் மாறிமாறி குலுக்கியும்
இடைஇடையே இறக்கும் சரக்கில்
இறுதிவரை நிகழவே இல்லை
எதிர்பார்த்த போதை..!


முதல் ரவுண்டின் துவக்கத்தில்
நட்பின் மேல்
துளிர்க்கும் பாசமும் பிடிப்பும்
பற்றுதலும் பிரியமும்
மூன்றாவது ரவுண்டில்
முற்றிலும் நீர்த்துபோகிறது
எந்த மரியாதையுமின்றி....


எல்லா ஒயின்ஸின் வாசலிலும்
வாங்குவதில் பரபரப்பு வியாதியாய்
இந்த முறையாவது எல்லோரும்
வாங்கும் முன் வாங்க வேண்டும்
சங்கல்பம் நினைவிற்கு வருகிறது
வழக்கம் போல் முட்டிமோதி
வாங்க யத்தனிக்கும் நேரத்தில்..!


ஒரிஜின‌ல் இங்கே
:

ந‌ன்றி க‌திர்.

Friday, August 13, 2010

ச‌ங்க‌த்தில் பாடாத‌ க‌விதை

ஆட்டோ ராஜா பட‌ பாட‌லான‌ ச‌ங்க‌த்தில் பாடாத‌ க‌விதை மெட்டுக்கு வ‌ரிக‌ள் எழுத‌ முய‌ன்ற‌த‌ன் விப‌ரீத‌ விளைவு கீழே.

ஆண்:என்செய்தாய் ஏதேதோ செய்தாய்
என்னைத்தான் நீ சொல்லடி.
கண்வைத்தேன் கண்ணுக்குள் வைத்தேன்
உன்னெஞ்சில் எனைத் தள்ளடி (எனை என்செய்தாய்)

ச‌ர‌ண‌ம் 1

பொன் தேகம் நான் தீண்டும் வேளையில்
வெட்கப்பூ நீ சூடுவாய்
சிறு கோபம் நான் கொண்டு திரும்பினால்
ஒரு தாயாய் எனைக் கொஞ்சி அணைக்கிறாய்
பொன்னந்தி .... நிறம் அள்ளி
நாணத்தால் புதுக் கோலம் பூணுவாய்..
பாவத்தால் எதிர் காலம் காட்டுவாய்..

ச‌ர‌ண‌ம் 2:
பெண்:என்னை நீ பார்க்கின்ற‌ வேளையில்
என்னுள் தீ எழுகின்ற‌தேன்
பின்னால் நீ தொட‌ர்கின்ற‌ வேளையில்
என் கால்க‌ள் ந‌டை ம‌ற‌ந்து போவ‌தேன்?
அன்பே உன்........ பொன்மார்பில்....
நான் சாயும் நாள் பார்த்துச் சொல்லிடு
மஞ்சத்தில் எனைச் சேர்த்துக் கொன்றிடு..

கண்ணோடு கண் பேசும்போது
மௌனம்தான் மொழியானதோ
பூவைதான் பூவைக்கும்போது
பூவாய்த்தான் நான் மாறவோ

கொசுறு:பாட‌லில் மூன்று ச‌ர‌ண‌ம் இருக்கும் இந்த‌ இர‌ண்டு ச‌ர‌ண‌த்திற்கே உங்க‌ளுக்கு க‌ண்ணைக் க‌ட்டியிருக்கும் என்ப‌தால் இத்தோடு ரூமை காலிசெய்து வ‌ந்துவிட்டேன்.:))‌

Wednesday, August 11, 2010

திரையில் கிராமத்து மெட்டுகள் பாகம் 1

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாடல்களைப் பற்றிய பதிவு .

ராஜாவின் இசையில் 90களில் வெளிவந்த மெலடி பாடல்களின் தொகுப்புகளை இரவில் கேட்க இதமான காதல் பாடல்கள் பாகம் 1, பாகம் 2 என கொடுத்ததை அடுத்து இம்முறை சில கிராமத்து மெட்டுகளை தொகுத்திருக்கிறேன். இதுவும் கூட வழக்கம் போல் 90 களின் தொகுப்பே.

தாமர பூவுக்கும் தண்ணிக்கும் - பசும்பொன் - வித்யாசாகர்:

துள்ளலான இசை, குறும்பான வரிகள், நடனம் எல்லாவற்றும் மேலாக யுவராணியின் இளமை என எப்போதும் மயக்கும் பாடலிது. க‌ன்ன‌ங்க‌ளை வ‌ருடும் நாய‌க‌னின் கைக‌ள் மெல்ல‌ க‌ழுத்துக்குக் கீழே வ‌ரும்போது அவ‌னிட‌மிருந்து வில‌கி ஓடும் நாய‌கியைப் பார்த்து நாய‌க‌ன் பாடுவ‌தாக‌ வ‌ரும் "இந்த‌ நாட்டில் தீண்டாமைதான் இன்னும் உள்ள‌தா?" என்ற‌ குறும்பு வ‌ரிக்காக‌வே இப்பாட‌லை ப‌ல‌முறை பார்த்தும் கேட்டும் ர‌சித்திருக்கிறேன்.




ஆத்தங்கர மரமே - கிழக்குச் சீமையிலே - ஏ.ஆர்.ரஹ்மான்:
ரஹ்மான் இன்னும் கூட நிறைய கிராமத்து மெட்டுகளை தந்திருக்கலாமென கேட்கும் போதெல்லாம் ஏங்க வைக்கும் பாடல். "அத்தைக்குப் பிற‌ந்த‌வ‌ளே" என‌ ர‌க‌சிய‌மாய் ஆர‌ம்பித்து த‌ட‌த‌ட‌த்து ஓடும் ர‌யிலின் வேக‌மாய் ப‌ய‌ணித்து ஹைபிட்சில் முடியும் ம‌னோவின் குர‌லை ரொம்ப‌ நாட்க‌ளாய் எஸ்.பி.பி.யின் குர‌லென‌ நினைத்துக் கொண்டிருந்தேன்.



நான் ஏரிக்கரை மேலிருந்து - சின்னத்தாயி - இசைஞானி:
பள்ளிநாட்களில் பலமுறை கேட்டு ரசித்த பாடலிது. இப்பாடலில் வரும் ’கையேந்தும் ஆட்டுக்குட்டி கன்னிப் பெண்ணா மாறாதோ’என்ற வரியை இப்போதும் கூட அடிக்கடி முணுமுணுத்துக் கொண்டே இருப்பேன்.


என்னைத்தொட்டு அள்ளிக்கோண்ட - உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன் - இசைஞானி:
பள்ளிநாட்களில் நான் கார்த்திக் ரசிகன் அந்த வகையில் இப்பாடலை அடிக்கடி கேட்டுக்கொண்டே இருப்பேன். ராஜாவின் இசை, எஸ்.பி.பி., சுவர்ணலதாவின் குரல்கள் , மோனிஷாவின் அழகு என எல்லாமே இந்த பாடலில் அசத்தலாய் இருக்கும். பாட‌லின் ஆர‌ம்ப‌த்தில் சொர்ண‌லாதாவும் இடையில் எஸ்.பி.பியும் பாடும் ஆலாப‌னை இப்பாட‌லுக்கு கூடுத‌ல் வ‌சீக‌ர‌ம்.



மல்லிக மொட்டு - சக்திவேல்- இசைஞானி:
அருண்மொழி மற்றும் சொர்ணலதா பாடிய இப்பாடலின் ஆரம்பத்தில் வரும் இசை அருமையாக‌ இருக்கும். எப்போது ஊருக்கு போனாலும் மினிபஸ்ஸில் கேட்க கிடைக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.



சிவகாமி நெனப்பினிலே - கிளிப்பேச்சு கேட்க வா- இசைஞானி:
வார்த்தைக்குகொரு மாடுலேஷனோடு கலக்கியிருப்பார் எஸ்.பி.பி . டான்ஸில் மம்முட்டி பாக்யராஜை ஓவர்டேக் செய்த பாடலிது.



மத்தாளம் கொட்டுதடி மனசு - சிந்துநதி பூ - சௌந்தர்யன்:
பூவரச இலை பீபீ, எறுமை படகு, புளியங்கா அடித்தல், அய்யனாரு வெள்ளைக் குதிரை என இப்பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் கிராமத்தில் பால்யம் அமைய பெற்றவர்களின் மலரும் நினைவுகளை கிளரிவிடக் கூடியவை. பாடலின் தொடக்கத்தில் வரும் இசை ஆடாதவனையும் ஆடவைக்கும் என்பது போல் இருக்கும்.




சின்னப்பொண்ணுதான் வெட்கப்படுது - வைகாசி பொறந்தாச்சு- தேவா:

வெளிவந்த காலத்தில் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பிய இப்பாடலின் மூலம்தான் தேனிசை தென்றலுக்கு முதன் முதலாய் தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருது கிடைத்தது.


கொசுறு:
தங்கமனசுக்காரன் பட பாடலான ’பூத்தது பூந்தோப்பு ’ பாடலின் சுட்டி கிடைத்தால் நட்புகள் பகிரவும்.