Thursday, May 31, 2012

வண்டல் மண் கதைகள் - 3

”டேய் குவாட்டர் ஃபைனல்ல நம்ம கூட மோதப் போறது சில்லத்தூர் டீம், செம்ம ஃபார்ம்ல இருக்காய்ங்க, இன்னைக்கு கண்டிப்பா மதியரசன எப்படியாச்சும் போட்டு இழுத்துகிட்டு போயிடனும், இவய்ங்கள மட்டும் ஜெயிச்சிட்டோம்னு வெய்யி கப்பு நமக்குதான்” என்றான் கையில் கிரிகெட் பேட்டோடு நின்று கீழே கிடந்த கரும்பு சக்கையை பந்தாக பாவித்து தட்டியடியே நின்ற கோபு. 

”அவன எங்கடா இப்பயெல்லாம் பாக்க முடியுது,முந்தா நாளு பாத்தேன், மேச்சு இருக்குடா போகனும்னு சொன்னேன், உளுந்து அரிக்கணும், வேல இருக்குன்னான், சரின்னுட்டு இப்போ போனடிகிறேன், ரிங்கு போயிட்டே இருக்கு எடுக்க மாட்டேங்கிறான்டா” என்றான் தங்கப்பன்.

பக்கத்து ஊரில் நடக்கும் கிரிக்கெட் மேட்சில் ரெண்டு ரவுண்ட் ஜெயித்துவிட்டு இதோ இன்னைக்கு நடக்கவிருக்கும் குவாட்டர் ஃபைனலுக்கான மேட்சுக்கு, டீமை இன்னும் ஸ்ட்ராங்காக்கத்தான் மதியரசன தேடிகிட்டு இருக்காய்ங்க. மதியரசன்தான் இவைங்க டீமின் ஆல் ரவுண்டர். ஓப்பனிங் பௌலிங்கும் சரி ,பேட்டிங்கும் சரி அவந்தான். முக்கியமா பௌலிங்கில் கிராமத்தானுங்களுக்கே உரிய மாங்கா அடியை இடையிடையே வீசி , நல்லா ஆடிட்டு இருக்கிறவய்ங்கள க்ளீன் போல்டாக்குவதில் மன்னன்.

“என்னாது உளுந்து அரிக்கிறானா, நீ வேற அவந்தான் வத்தலாம்பட்டியிலேயே குடியா கெடக்குறான்டா, அவரு வேற முக்கிய சோலியா திரியிறாரு” என்று கண்ணடித்து நக்கலாச் சிரித்தான் முத்துக்குமார்.

முத்துக்குமார் ஏதோ அவல் கொண்டுவந்ததை அறிந்து ஆசையாய் மெல்லும் ஆவலில் எல்லோரும் ஆர்வமாய் அவனை என்னடா சொல்ற என்பதாய் பார்க்க, முத்து தொடர்ந்தான்,

“டேய் வத்தலாம்பட்டி வசந்தா தெரியுமா? அதான்டா செண்டுக்காரி, அந்த பொம்பளைகிட்ட மதி அப்பாரு பேச்சு வார்த்தையிலே இருக்காராம் ” என்றுவிட்டு சிரித்தான்.

“அது பெரும் பார்ட்டில்ல , எப்படிடா இவரோட லிங்கானுச்சு, நம்புற மாதிரி இல்லையே” என்றான் கோபு.

”நெசமாத்தான்டா அந்த பொம்பள ஊரணிகாட்டு பேங்குக்கு அடிக்கடி குழு பணம் கட்ட போகும் , அது மாதிரி போகையிலே எப்பயோ கடைசி பஸ்ஸ விட்டுட்டு நின்னிருக்கு, நம்ப மதியப்பாரு அப்போன்னு பார்த்து அங்கிட்டு வண்டியிலே வந்திருக்காரு , அப்படியே பிக்கப் பண்ணவருதான் இன்னும் இறக்கி விடலயாம் ” என்றுச் சொல்லி சிரித்த முத்து தொடர்ந்தான்.

மதி அம்மா இத பத்தி அரச பொரசலா கேள்விப்பட்டு கேட்டப்பயெல்லாம் இல்லேன்னு அடிக்க போயிருக்காரு, ஆனா அவ்வோ ரெண்டு பேரும் சோடிபோட்டுகிட்டு போனத நம்ம ஊரு பொம்பளைக யாரோ பாத்துட்டு மதியம்மாகிட்ட சொல்ல , வேற வழியில்லாம மதிகிட்ட வெவரத்த சொல்லி அழுதிருக்கு அவ்வோ அம்மா. அதான் மதிப்பய ரெண்டு பேரையும் கையுங் களவுமா புடிக்கிறேன்னு யாருக்கும் சொல்லாம அங்க போயி சுத்திகிட்டு இருக்கான். இந்த கூத்து நாலஞ்சு மாசமா நடந்துகிட்டு இருக்கு, உங்களுக்குத்தாண்டா தெரியாம இருந்திருக்கிய” என்று முடித்தான்.

“அந்த பொம்பளைக்கு எளசா இருந்தா கசக்கும்போல, பாரு முன்னாடி வெட்டிக்காட்டு மணியாரு இப்போ மதி அப்பாரு” என்று சிரித்தான் கோபு.

”இதுல என்ன காமெடின்னா நேத்து மதி அப்பாரு எங்க அப்பாருகிட்ட ‘இந்த பய அங்கயே சுத்திகிட்டு மானத்தை வாங்கிட்டு இருக்கான், அவன் பண்ணுறது ஒன்னும் மொறையில்ல, பாக்குறவய்ங்க என்ன நெனப்பாய்ங்க,ஓ மவன்கிட்ட சொல்லி கொஞ்சம் அவனை கண்டிக்க சொல்லுய்யான்’னு பொலம்பியிருக்காரு” என்றான் முத்து.

“நல்லாயிருக்குடா கதை அந்தாளு அங்க போறதுமில்லாம ..”என்று ஆரம்பித்த கோபு ,“ஏ தம்பியளா ” என்றபடியே பாலகட்டைய நோக்கி மதியம்மா வந்துகிட்டு இருந்துதத பார்த்ததும்.”அடிச்சாம் பாரு சிக்சு” என டக்குன்னு பேச்சை மாத்தினான் .

“என்ன சின்னம்மா என்னா விசியம் மதி எங்க? கொல்லையிலயா நிக்குறான்?” என்றான் முத்து வெகுளியான முகத்தோடு.

“ம்ம் கொல்லையில நிக்குறானா? ஏன் அவன் எங்க போறான் வறான்னு உங்களுக்கு தெரியாதா?” என்று கோபமாய் ஆரம்பித்தவள், சட்டுன்னு தணிந்து ”யப்பா நல்லாயிருப்பியய்யா, எம்புருஷன் இருக்கானே ஊர் மேயிர நாயி,அது எப்படியாச்சும் போயி தொலையிது, எம்புள்ளய கொண்டு வந்து சேத்துருங்கய்யா, ஆயி மாதிரியே இருந்திருக்காளே மவளும்” என்று ஒப்பாரி வைத்தாள்.

Tuesday, May 15, 2012

வண்டல் மண் கதைகள்-2

”அம்பலாரு மாமோய், எங்கின இருக்கிய” என்று அம்பலார் வீட்டு கரும்புக் கொல்லை வரப்பில் நின்னுகிட்டு குரல் கொடுத்தான் வேலன்.

ஏக சந்தோஷமா இருக்கும் வேலனின் முகத்தைப் பார்க்கும்போதே அவனப் பத்தி தெரிஞ்சவய்ங்களுக்கு ஓரளவுக்கு விஷயம் புடிபட்டுரும். அதுவும் அம்பலாரை இந்த உச்சி வெயில் நேரத்துல , தலையில துண்டுகூட போடாம தேடிகிட்டு வந்திருக்கான்னா கண்டிப்பா ஊருக்குள்ள ஏதோ பிரச்சனைங்கிறதை உறுதி பண்ணிக்கலாம்.

வண்ணாந்தொற ஆலமரத்தடியில அழுக்குத் துணிக்கெல்லாம் ஓருமண்ண போட்டுட்டு இவ்வளவையும் இன்னிக்கு தொவைச்சு முடிக்கணுமேன்னு எரிச்சலாய் ஒக்காந்து வெத்தலாக்கு போட்டுகிட்டு இருவன்கிட்ட, தெக்கித்தெரு சொக்கலிங்கம் வந்து சொன்ன சேதியதான், தாக்கலா கொண்டுகிட்டு வேலன் இப்போ அம்பலார தேடிகிட்டு வந்திருக்கான்.

“யாருப்பா அது” என்ற அம்பலத்தின் குரலுக்கு,”நாந்தான் மாமோய் வேலன்” என்றான்.

“வேலனா, இங்கிட்டு கீழண்ட கொல்லை பம்ப்செட் ஓரமா நிக்கிறேன் வா” என்ற அம்பலத்தின் பதிலுக்கு மின்னலாய் போய் நின்றான் வேலன்.

சொன அறுக்காம இருக்க சோலக்கொல்லை பொம்மைக்கு போட்டிருக்கும் தொம்பா தொம்பா சட்டை மாதிரியான ஒரு பழைய சட்டையை போட்டுகிட்டு, கரும்புக்கு தோகை உரிச்சிகிட்டு இருந்த அம்பலம் வைரக்கண்ணுக்கு ஐம்பது வயசிருக்கும். பாத்தா நாப்பதுதான் சொல்லலாம். அப்படி ஒரு தோற்றம், கடுமையான உழைப்பாளிங்கிறதால இயல்பிலேயே வலிமையான தேகம்.

“என்னடா வேலா, மொட்ட வெயில்ல என்னைய தேடிகிட்டு, என்னா விசியம்” கேட்டார் அம்பலம்.

ஒரு மாதிரி அசட்டு சிரிப்போட தலைய சொரிஞ்சிகிட்டே “ஒன்னுமில்ல மாமா , இந்த தெக்கித்தெரு சொக்கு சம்சாரத்த மாடு மேய்க்க போன எடத்துல, பழனியம்மா மவன் வடிவேலு ஏதோ கலாட்டா பண்னிபுட்டாப்ளயாம், அதான் சொக்கு பஞ்சாயத்த கூட்டச் சொல்லி தாக்கல் சொல்லிவிட்டாப்ல”

“தூத்தேரி, எதுக்கெடுத்தாலும் அருவா தூக்குற பய சொக்கு, தெரிஞ்சும் இந்த கிருத்துருவம் புடிச்ச நாயி அங்க போயி வாலாட்டியிருக்கு, மாட்டு வைத்தியன் கிட்டிணங்கிட்ட சொல்லி கிட்டி போட்டு அடிச்சிவிட்டாத்தான் அடங்குவான் போலிருக்கு” என்றபடியே வேற ஏதோ சொல்ல வந்த அம்பலம், வேலன் காட்டும் சுவாரஸ்யத்தைப் பார்த்து சட்டுன்னு சுதாரிச்சு ”சரி சரி நீ கெளம்பு தோவையெல்லாம் கரபாச்சிட்டு வறேன்” என்றார்.

மீண்டும் அதே அசட்டு சிரிப்போடவே “சரி மாமா நான் மேல வலவுகாரவுகளுக்கும் சொல்லணும், நேரமா சாவடிக்கு வந்துருங்க ” என்றபடியே வேலன் காத்தா போயிட்டிருந்தான். இன்னிக்கு வேலன் இருக்குற குசிக்கு இன்னும் ரெண்டு ஊரு துணியக்கூட வெளுப்பான்.

இப்பயெல்லாம் மாசம் பொறந்தா இப்படி ஒரு பஞ்சாயத்துன்னு ஆயிபோச்சு . இவிங்களுக்கு என்னன்னு நாம பஞ்சாயத்து பண்ண” என்று தனக்குதானே புலம்பிய அம்பலம், சட்டைய கழட்டி வரப்புல வச்சிட்டு , வெத்தல சீவ பொட்டலத்தை பிரிக்கவும், ஆறுமுகம் பொண்டாட்டி சரசு புல்லறுக்க கரும்புக் கொல்லைக்குள்ள நொழையவும் சரியா இருந்துச்சு.

Thursday, May 3, 2012

வண்டல் மண் கதைகள்-1

”சித்தப்பா, ஓ மச்சான் மவன்கிட்ட சொல்லிவய்யி, கால கைய முறிச்சாத்தான் அடங்குவான் போலருக்கு”

“வருஷா வருஷம் உங்களுக்கு இதே பொழப்பா போச்சுடா, சரி அவன் தண்ணி கட்டினதுக்கு அப்புறமா நீ கட்டிக்கடான்னாலும் கேக்க மாட்டேங்குற”

“யோவ், என்ன அவனுக்கு பரிஞ்சு பேசற,நல்லாயில்ல பாத்துக்க. விடிய காலம் மூணு மணிக்கெல்லாம் ஆத்துக்கு போயி, கிளைவாய்க்கா மதக திறந்து, ஒவ்வொருத்தங்கிட்டயா போராடி நாங்க தண்ணி கொண்டுவருவோம், வக்காலி அவம்பாட்டுக்கு நோகாம மடைய திறந்து வச்சுக்குவான், கேட்டா குத்தம், நல்லாயிருக்குய்யா ஞாயம்”

”ஏலேய் புரியாம இல்லடா, அவன் ஒரு கொணங்கெட்டவன், பேசிக்குவோம் கோவப்படாம போ”

“என்னத்த கிழிச்சியோ போ, பாத்துக்கிட்டே இரு , இன்னொரு வாட்டி வாலாட்டுனான்னு வையி மவன அவ்வளதான் சொல்லுவேன்” என்றபடியே இளங்கோ பய மேலுள்ள தாறுமாறான கோபத்தை எம்பங்காளி சேகருகிட்ட கத்திவிட்டு குளத்து பக்கம் நடையைக் கட்டினேன்.

மட்ட மத்தியானம், உச்சி வெயிலுக்கு இதமா குளத்துக்குள்ள எறங்கி தண்ணிக்குள்ள நல்லா முங்கி முங்கி எந்திரிச்சா, ஏதோ மேல வந்து விழற மாதிரி இருந்துச்சு. 

சுத்தி முத்திப் பார்த்தேன், பக்கத்து தொறையில அவ மட்டும் குளிச்சிட்டு இருந்தா, மறுபடியும் சுத்திப் பார்த்தேன், வேற யாரும் அங்கே இல்ல. குழப்பத்தோடே திரும்பவும் முங்க போனேன், சின்னதா ஒரு கல்லு என்னை நோக்கி , பார்த்துவிட்டேன் அவதான், இளங்கோ பய தங்கச்சி. அப்படியே அவளையே பாத்தேன்.

கல்லை அவ வீசாதது போலவே கண்டுக்காம சோப்பு போட்டுகிட்டு இருந்தா, மெல்ல தண்ணிக்குள்ள முங்கி சின்னதா ஒரு நத்தைக் கூடை எடுத்து அவளை நோக்கி வீசினேன், சரியா அவ முதுகுல விழுந்துச்சு, 

டக்குன்னு திரும்பிப் பார்த்து வெட்கத்தோட சிரிச்சா..

நான் மறுபடியும் சுத்தி முத்திப் பார்த்தேன் ...