Showing posts with label மினிபஸ். Show all posts
Showing posts with label மினிபஸ். Show all posts

Friday, December 12, 2008

மினிபஸ் பயணமும் ராமராஜன் பாடல்களும்:


எப்போதாவது கிராமப்புறங்களில் செல்லும் மினிபஸ்ஸில் பயணித்திருக்கின்றீர்களா? இல்லையெனில் ஒருமுறைச் சென்று பாருங்கள், சுவாரஸ்யங்களும், எதிர்பாரா திருப்பங்களும் நிறைந்த நல்லதொரு சிறுகதைத் தொகுப்பை படிக்கும் உணர்வை தரவல்லது இந்த மினிபஸ் பயணம்.

பஸ் வசதியில்லா கிராமங்களிலிருந்து அருகில் உள்ள பேரூராட்சி அல்லது நகராட்சி அந்தஸ்த்துள்ள ஊர்களுக்கு விடப்பட்டிருக்கும் மினிபஸ்களின் சேவை மகத்தானது.

கிராமப்புறங்களில் புழக்கத்திலுள்ள பதினெட்டுப் பட்டி என்ற சொல் அனேகர் அறிந்ததே, திருமணத்திற்கு பெண் கொடுப்பது,எடுப்பது என எல்லாமே பெரும்பாலும் இந்த பதினெட்டு ஊர்களுக்குள்ளாகவே நடக்கும்.குறிப்பிட்ட இந்த பட்டிகளில் ஏதோ ஒரு பட்டியில் தனது பயணத்தைத் தொடங்கும் இந்த மினிபஸ்கள், குறைந்தது ஒரு பத்து பட்டிகளிலாவது நுழைந்து இருபது நிமிடத்தில் அடையவேண்டிய தூரத்தை ஒரு மணி நேரத்திற்கு மேலாக நகர்ந்து வந்து சேரும்.இதிலென்ன சுவராஸ்யம் என்கிறீர்களா?நிறைய இருக்கிறது.

பயணிகள் வசதி நிறுத்தம்(passengers dependent bus stop), நாம் எங்கு வேண்டுமானாலும் ஏறிக்கொள்ளலாம், இறங்கிக்கொள்ளலாம். இதில் அடுத்தடுத்த வீட்டில் வசிக்கும் இருவர் ஒரே நேரத்தில் பயணித்தால் இருவரும் அவரவர் வீட்டு வாசலிலேயே இறங்கிக்கொள்ள முயல்வர், அவர்களிடம் நடத்துனர், "ஏங்க ஒரே இடத்திலே இறங்கிக்கலாம்ல" என்று சொல்லிவிட்டால் போச்சு ,"ஏன் அவன் வீட்டு வாசலில நிக்கிற வண்டி ஏவீட்டு வாசலில நிக்காதோ" என்று பெரிய கௌரவப்பிரச்சினை கிளம்பிவிடும்.

டிரைவரிடம்,"தம்பி,எம்மவகிட்ட இத மறக்காம கொடுத்துடுங்க, அவ வந்து வாங்கிக்குவா" என பக்கத்து ஊரில் கட்டிகொடுத்திருக்கும் தனது மகள் வீட்டிற்கு பால் முதல் பனியாரம் வரை பார்சல் அனுப்பும் தாய்க்குலங்கள், மருந்துச் சீட்டை கொடுத்து மாத்திரைகள் வாங்கிவரச் சொல்லும் பெருசுகள், அண்ணே அடுத்த நடை வரும்போது ரெண்டு முழம் பூ வாங்கிட்டு வந்துருங்கண்ணே என்று காசை நீட்டும் குமரிகள் இப்படியாக ஒரு இலவச கூரியர் சர்விஸ் வேலையையும் செய்து கொண்டிருக்கும் இந்த மினிபஸ்களில் நடக்கும் சுவாரஸ்யங்களின் பட்டியல் இன்னும் நீளும்.

சாலையில் பஸ் செல்வதை பார்த்திருப்போம்,ஆனால் இந்த மினிபஸ்கள் பல இடங்களில் சாலையென்ற ஒரு யூகத்தின் அடிப்படையிலேயேச் சென்று கொண்டிருக்கும். ஒரு சில இடங்களில் நல்ல நிலையில் சாலைகளிருக்கும், ஆனால் கண்டிப்பாக அங்கே ஒரு பெண்மணி தானியங்களை காயவைத்துக்கொண்டிருப்பார், டிரைவர் அவரிடம்,"ஏம்மா இப்படி நடுரோட்ல காயவெச்சீங்கன்னா எப்படி வண்டி ஓட்றது" என்று கேட்டால்,"ஆமா நீ ஒரு நாளைக்கு வருவ ஒம்போது நாளைக்கு ரிப்பேருன்னு வரமாட்ட, இன்னைக்கு நீ வருவேன்னு எனக்கென்ன சோசியமா தெரியும்" என்பதுதான் அந்தப் பெண்மணியின் பதிலாக இருக்கும். அதற்குள் பஸ்ஸினுள் இருக்கும் எதாவது ஒரு பெருசு, "தம்பி கிராமம்னா கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும், அட்சஜ்ட் பண்ணிப் போப்பா" என்று குரல் கொடுக்கும்,ஏன்னா அடுத்த திருப்பத்துல அவர்வீட்டு நெல் காய்ந்து கொண்டிருக்கும்.

சாலையின் நடுவே சில இடங்களில் கால்நடைகள் கும்பலாக படுத்து ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும்,அவற்றை எழுப்ப நடத்துனர் படும்பாடு இன்னும் வேடிக்கையாக இருக்கும்(அவருக்கல்ல). ஹேர்பின் பென்ட்டைவிட அபாயகரமான வளைவுகளைக் கடந்து நம்ம பென்ட்டைக் கழட்டிவிடும் இந்த மினிபஸ் பயணத்தில் இப்படி சில அசௌகர்யங்கள் இருப்பினும் நான் ஒவ்வொருமுறை ஊருக்குபோகும்போதும் இதில் பயணிப்பதை மிஸ் பண்ணுவதில்லை,அதற்கு முக்கியமான காரணமென்றால் இளயராஜாவின் பாடல்கள்தான்.

சென்ற முறை பயணத்தின்போது ராமராஜன் பாடல்களை ரொம்ப நாளைக்கு பிறகு கேட்கும் வாய்ப்பு அதுவும் வயல்வெளிகளினூடாக பஸ் வரும்போது "சொர்கமே என்றாலும்" பாடலை கேட்டபோது இதற்கு முன் பலதடவை கேட்ட பாடல்தானென்றாலும் அந்த ரம்மியமான சூழலில் பாடலின் வரிகளுக்கேற்ற காட்சிகளை நேரில் பார்த்துக்கொண்டே பயணித்தபோது அந்த பாடலின் வீச்சை முழுமையாக உணரமுடிந்தது.
தொடர்ந்து "தினமும் சிரிச்சு மயக்கி", "ராசாத்தி மனசுல","அரும்பாகி மொட்டாகி","நேத்து ஒருத்தர ஒருதர பார்த்தோம்", "மதுர மரிக்கொழுந்து வாசம்", "செண்பகமே" ஆகிய பாடல்கள் வரிசையாக ஒலித்துக்கொண்டே வந்தது. அதென்னவோ தெரியல,மோகன் மற்றும் ராமராஜன் படங்களுக்கு இளயராஜா அவர்கள் கொஞ்சம் ஸ்பெஷலாகவே இசையமைத்திருக்கிறார். இந்த மாதிரியான கிராமத்துக் கீதங்களை சத்தமாக ஒலிக்கவிட்டுக்கொண்டு செல்லும் மினிபஸ்கள் வாழ்க.

கொசுறு:எங்க பக்கத்து வீட்டுக்காரரும் அன்று என்னோடு பஸ்ஸில் வந்தார்,இருவரும் பஸ்ஸிலிருந்து இறங்கியபோது அவரவர் கௌரவத்தை காப்பாற்றிக் கொண்டோம் என்பதை இங்கே சொல்லிக்கிறேன்.
:)