Showing posts with label திரை விமர்சனம். Show all posts
Showing posts with label திரை விமர்சனம். Show all posts

Thursday, July 15, 2010

நான் ர‌சித்த‌ க‌ள‌வாணி...

க‌ள‌வாணி திரைப்ப‌ட‌த்தின் டிரைல‌ரை பார்த்த‌போதே ப‌ட‌த்தை பார்க்க‌ வேண்டுமென்று நினைத்திருந்தேன்.ப‌ட‌ம் என் எதிர்பார்ப்பை முற்றிலும் பூர்த்தி செய்த‌து என்றே சொல்ல‌லாம். ப‌ழ‌கிய‌ க‌தைதான் என்றாலும் ஒரு சாதார‌ண‌ க‌தையை நேட்டிவிட்டியோடு கொடுத்து ர‌ச‌னையான‌ திரைக்க‌தையால் ர‌சிக்க‌ வைத்திருக்கிறார் இய‌க்குன‌ர்.

* இப்ப‌ட‌த்தின் வ‌ட்டார‌ப் பேச்சு வ‌ழ‌க்கு அவ்வ‌ள‌வு இய‌ல்பாக‌ வ‌ந்திருக்கிற‌து. "போக‌னும்ல‌", "சொல்றோம்ல‌" என்ற‌ ம‌துரையின் ஸ்லாங்கும் "ஏனுங்", "சொல்றேனுங்" என்ற‌ கொங்கு த‌மிழையும் வ‌ட்டார‌ வ‌ழ‌க்காக்கியே கிராம‌த்தை க‌தைக்க‌ள‌மாக‌க் கொண்டிருக்கும் திரைப்ப‌ட‌ங்க‌ள் அதிக‌ அள‌வில் வெளிவ‌ந்திருக்கின்ற‌ன‌. ஆனால் முத‌ன் முத‌லாக‌ த‌ஞ்சை மாவ‌ட்ட‌த்தின் ஒர‌த்த‌நாட்டைச் சுற்றியுள்ள‌ கிராம‌ங்க‌ளில் பேச‌ப்ப‌டும் "இங்க‌ர்ள‌ கேக்குற‌ன்ன‌"("இங்கே பாரு புள்ள‌ கேட்கிறேன்ல‌"), "அவ‌னும் போட்டா எடுக்க‌னும்ன‌", "அண்ணாந்து பார‌", "அய்ய‌னார் கோயிலுக்கெல்லாமா மால‌ போடுவோ", "அவ்வோ ரெண்டு பேரும் சேர்ந்து ஏதோ க‌ள‌வாணித்த‌ன‌ம் ப‌ண்ற‌வோ" மேலும் க‌ண‌வ‌ன்மார்க‌ள் ம‌னைவிக‌ளை "ஏட்டி"(ஏன்டி)என‌ அழைப்ப‌து என‌ இப்ப‌டியான‌ வ‌ட்டார‌ வ‌ழ‌க்கை அப்ப‌டியே கொண்டுவ‌ந்திருப்ப‌தை பார்த்து ஆச்ச‌ர்ய‌ப்ப‌ட்டேன். கார‌ண‌ம் நானும் இதே ஸ்லாங்கை பேசும் ஒர‌த்த‌நாட்டுக்கார‌ன்.

"அவ‌ய்ங்க‌","வ‌ராய்ங்க‌","போறாய்ங்க‌" என்ப‌து ம‌துரையின் வ‌ட்டார‌ வ‌ழ‌க்கு அதை இந்த‌ப் ப‌ட‌த்திலும் பேசுகிறார்க‌ள் என்று சில‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளில் ப‌டித்தேன். இந்த‌ "வ‌ந்துட்டாய்ங்க‌", "போயிட்டாய்ங்க‌" என்ப‌து ஒர‌த்த‌நாட்டு வ‌ட்டார‌ வ‌ழ‌க்கிலும் உண்டு. எங்க‌ள் ப‌குதியில் பெண்பிள்ளைக‌ளை "ஆயி", "ஆத்தா", "புள்ள‌" என்று அழைப்ப‌து வ‌ழ‌க்க‌ம். அதையும் இப்ப‌ட‌த்தில் அழ‌காய் ப‌ய‌ன்ப‌டுத்தியிடுக்கிறார் இய‌க்குன‌ர்.

* "க‌ட்டிக்கிறேன்னு சொல்லு" என‌ பார்க்கும் பொண்ணுங்க‌ளிட‌மெல்லாம் ல‌ந்த‌டிக்கும் ஹீரோ விம‌ல், ப‌ஸ்ஸில் அம‌ர்ந்திருக்கும் இர‌ண்டு பெண்க‌ளுக்கு ஒரே நேர‌த்தில் ரூட் விடுமிட‌த்தில் இளைஞ‌ர்க‌ளிட‌ம் கிளாப்ஸை அள்ளுகிறார். ஹீரோயின் ஓவியாவிட‌ம் நிறைய‌ ரிப்பீட்ட‌ட் எக்ஸ்பிர‌ஷ‌ன்க‌ளாக‌வே இருந்தாலும் ப‌ர‌வாயில்லாம‌ல் ந‌டித்திருக்கிறார். குறிப்பாய் விம‌லிட‌ம் "அறிவ‌ழ‌க‌ன்" என‌ சொல்லுமிட‌த்தில் ந‌ன்றாக‌வே செய்திருக்கிறார்.

* க‌தாபாத்திர‌ங்க‌ளின் ப‌டைப்பும் தேர்வும் மிக‌வும் ர‌சிக்கும்ப‌டி இருந்த‌து. "இந்தா வந்திட்டாரு அறிக்கி" என‌ பொருப்பில்லா ம‌க‌னை க‌டிந்துகொள்ளும் அப்பாவாக‌ இள‌வ‌ர‌ச‌ன், ஹிரோ என்ன‌ க‌ள‌வாணித்த‌ன‌ம் ப‌ண்ணாலும் "அவனா ப‌ண்றான் அவ‌ன் கெர‌க‌ம் அப்ப‌டியிருக்கு"என‌ ம‌க‌னை விட்டுக்கொடுக்காத‌ அம்மாவாக‌ வ‌ரும் ச‌ர‌ண்யா,நெல்வியாபாரியாக‌ வ‌ரும் க‌தாநாய‌கியின் அப்பா,சில‌ காட்சிக‌ளிலேயே வ‌ந்தாலும் இய‌ல்பாய் ந‌டித்திருக்கும் க‌தாநாய‌கியின் அம்மா,வ‌ண்ட‌ல் ம‌ண்ணின் மைந்த‌னாக‌வே முறுக்கித் திரியும் க‌தாநாய‌கியின் கோப‌க்கார‌ அண்ண‌ன்,ப‌ஞ்சாய‌த்தாக‌ வ‌ரும் க‌ஞ்சா க‌ருப்பு என‌ இன்னும் நிறைய‌ சுவார‌ஸ்ய‌மான‌ க‌தாபாத்திர‌ங்க‌ள் அழ‌காய் உலாவருகிறார்க‌ள்.ம‌க‌ன் திடீர் க‌ல்யாண‌ம் செய்து கொள்ளும்போதும் கூட‌ அசால்ட்டாய் ம‌க‌னுக்கு ச‌ப்போர்ட் ப‌ண்ணும் ச‌ர‌ண்யா கேர‌க்ட‌ர் ம‌ற்ற‌ எல்லா துணைக் கதாபாத்திர‌ங்க‌ளை விட‌வும் முந்தி நிற்கிற‌து. ராம்,த‌வ‌மாய் த‌வ‌மிருந்து,எம்ட‌ன் ம‌க‌ன் என வித‌வித‌மான‌ கேர‌க்ட‌ர்க‌ளில் அச‌த்திய‌ ச‌ர‌ண்யா இந்த‌ப் ப‌ட‌த்தில் அசால்ட்டான‌ ந‌டிப்பில் பின்னியிருக்கிறார்.

*ஹிரோ விம‌ல் ஹீரோயினை காத‌லிக்க‌ச் சொல்லி க‌லாட்டா செய்யும் "அறிக்கி LCII2 கூட்டு "காட்சிக‌ள் க‌விதையென்றால் ஹீரோயின் ந‌ட்டு வைக்கும் நாற்றுக‌ள் செழித்து வ‌ள‌ரும் காட்சிக‌ள் வ‌ண்ட‌ல் ம‌ண் ஹைக்கூ. அறிவ‌ழ‌க‌ன் என்னும் பேரை "அறிக்கி" என‌ ந‌ண்ப‌ர்க‌ள் அழைப்ப‌தைப் பிடிக்காத‌ ஹீரோயின்,"அறிவ‌ழ‌க‌ன் என்றுதான் கூப்பிட‌ணும்" என்ப‌தைத் தொட‌ர்ந்து ந‌ண்ப‌ர்க‌ள் ஹீரோவை க‌லாய்க்கும் காட்சி கிச்சு கிச்சு.

* ஃபிள‌க்ஸ் பேன‌ரில் வித்தியாச‌மான‌ கோண‌ங்க‌ளில் போஸ் கொடுப்ப‌துத் தொட‌ங்கி க‌ஞ்சா க‌ருப்பை காணுமிட‌த்திலெல்லாம் க‌லாட்டா செய்து காலியாக்குவ‌து என‌ ஹீரோவின் ந‌ண்டப‌ர்க‌ளாக‌ வ‌ருப‌வ‌ர்க‌ள் ர‌சிக்க‌ வைத்திருக்கிறார்க‌ள் சில‌ காட்சிக‌ளில் சொத‌ப்பினாலும் .

* "ம‌ல்லியே மெல்ல‌ வ‌ந்து கிள்ளி போ","மாடி மாடி ஒன்னு" போன்ற‌ மெல்ல‌ மெல்ல‌ தொலைந்து கொண்டிருக்கும் வ‌ண்ட‌ல் ம‌ண் விளையாட்டுக‌ளை திரைக்க‌தையின் ஓட்ட‌த்தில் இய‌ல்பாய் தொட்டுச் சென்ற‌து ர‌ச‌னை.

* மினிப‌ஸ்ஸில் ஹீரோயினின் சைக்கிளை ர‌ன்னிங்கிலேயே ஹீரோ தூக்கும் காட்சி,க‌ஞ்சா க‌ருப்பு இற‌ந்துவிட்ட‌தாக‌ அனொன்ஸ் ப‌ண்ணுமிட‌ம், ஹீரோயினிட‌மிருந்து ஹீரோவிற்கு போன் கால் வ‌ரும்போது சிக்ன‌ல் கிடைக்காம‌ல் ஹீரோ மாட்டு வ‌ண்டியை அப்ப‌டியே ரோட்டிலேயே விட்டு விட்டு சிக்ன‌ல் தேடுமிட‌ம் என‌ ப‌ட‌ம் நெடுக‌ ப‌டு சுவார‌ஸ்ய‌மான‌ காட்சிக‌ள் ர‌சிக்கும்ப‌டி கையாள‌ப்ப‌ட்டிருக்கிற‌து.

* ஒர‌த்த‌நாட்டின் ப‌சுமைக் காட்சிக‌ளை க‌ள‌வாடி வ‌ந்திருக்கும் ஓம்பிர‌காஷின் கேம‌ராவிற்கு ஒரு பெரிய‌ ச‌பாஷ். மிக‌ அழ‌காய் ஒவ்வொரு காட்சியையும் ஒளிப்ப‌திவு செய்திருக்கிறார். ப‌ட‌த்தின் இன்னொரு பெரிய‌ பிள‌ஸ் ம‌ண்வாச‌ம் வீசும் ய‌தார்த்த‌மான‌ வ‌ச‌ன‌ங்க‌ள் .

* குறையென்று பார்த்தால் ப‌ள்ளிக்கூட‌ மாண‌வியை காத‌ல் செய்வ‌து போன்ற‌ காட்சிக‌ள். மேலும் ஹீரோ விம‌ல் த‌ன‌து க‌தாபாத்திர‌த்தை மிக‌ச் சிற‌ப்பாக‌ உள்வாங்கி ந‌டித்திருந்த‌ போதும் என்ன‌தான் ஒர‌த்த‌நாட்டின் வ‌ட்டார‌ வ‌ழ‌க்கை உச்ச‌ரித்தாலும் அவ‌ரின் வாய்ஸ் மாடுலேஷ‌ன் ம‌துரைக்கே இழுத்துச் செல்கிற‌து. அதே போன்று ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் ஸ்லாங்கிலிருந்து மாறுப‌ட்டு "ப‌ருத்தி வீர‌ன்" சுஜாதாவின் வாய்ஸும் ஒட்ட‌வில்லை. ரீட்டா டான்ஸ் இட‌ம்பெறும் திருவிழாக் காட்சிக‌ளை கொஞ்ச‌ம் குறைத்திருக்க‌லாம். எப்படா முடியுமென‌ நினைக்கும்ப‌டி வெகு நீள‌ம். நேட்டிவிட்டிக்காக‌ ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌ட்டிருக்கும் சில‌ க‌தாபாத்திர‌ங்க‌ளின் முக‌த்தில் கேம‌ரா ப‌ய‌த்தினால் செய‌ற்கைத் த‌ன‌ம் தெரிவ‌தையும் கொஞ்ச‌ம் க‌வ‌னித்திருக்க‌லாம். இம்மாதிரியான‌ சின்ன‌ச் சின்ன‌ குறைக‌ளைத் தாண்டி ர‌க‌ளையாய் ம‌ன‌தை க‌ள‌வாடுகிறான் இந்த‌க் க‌ள‌வாணி.

* ப‌ஞ்ச் ட‌ய‌லாக்,குத்துப்பாட்டு இவ‌ற்றையெல்லாம் ந‌ம்பாம‌ல் அழ‌கான‌ திரைப்ப‌ட‌த்தைத் த‌ந்த‌ இய‌க்குன‌ர் ச‌ற்குண‌த்திற்கு ம‌ன‌ம் நிறைந்த‌ பாராட்டுக்க‌ள்.

டிஸ்கி:இப்ப‌ட‌த்தில் ஓரிரு காட்க‌ளில் ந‌டித்திருக்கும் சில‌ரை ப‌ட‌ம் பார்த்த‌ அன்றே ஒர‌த்த‌நாட்டில் பார்க்க‌ நேர்ந்த‌து."நீங்க‌தானே க‌ள‌வாணியில‌..." என்று கேட்கும்போது அவ‌ர்க‌ளின் முக‌த்தில் தெரிந்த‌ ச‌ந்தோஷ‌த்தைப் பார்த்திருக்க‌ணும் ....

Saturday, December 19, 2009

வேட்டைக்காரன் எனது பார்வையில்

விஜய் ஒரு நல்ல நடிகர் என அறியப்பட்ட ‘பூவே உனக்காக’ காலத்திற்கு முன்பே வெளியான ’தேவா’, ’கோயமுத்தூர் மாப்ளே’ காலத்திலிருந்தே விஜயை எனக்குப் பிடிக்கும். குருவி,வில்லு ஆகிய படங்களைப் பார்த்தப் பிறகு விஜயைப் பிடிக்கும் என்பதைக் காட்டிக்கொள்ளாவிட்டாலும் அடுத்தமுறை சரி செய்துவிடுவார் என்று சுய சமாதானம் செய்து கொண்டான் எனக்குள் இருக்கும் விஜய் ரசிகன் (கட் அவுட்,பாலாபிஷேகம் டைப் ரசிகன் இல்லை, ஜஸ்ட் பிடிக்கும்). ஆனால் ”இதுக்கு மேலயும் நீ சுய சமாதானம் செய்து கொள்ளத்தான் வேண்டுமா?” என்று குமுற ஆரம்பித்திருக்கிறான் அதே ரசிகன். (முடியல).

சரி கதைக்கு(?) வருவோம்,எத்தனையோ படத்தில் பார்த்து பார்த்து சலித்துப்போன சிட்டியில் அட்டகாசம் செய்யும் தாதாவை ஒழிப்பதுதான். திருப்பாச்சி படத்தில் திருப்பாச்சியிலிருந்து சென்னைக்கு வந்து வதம் செய்தார். இதில் தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு வந்து அவதாரம் எடுக்கிறார்.இம்மாதிரியான கதைகளில் இருக்கும் பரபரப்பான திரைக்கதை இந்த படத்தில் சுத்தமாக மிஸ்ஸிங். படத்தின் முக்கியத் திருப்பமாக வரும் இடத்தில் வில்லன் சலிம்கௌஸ் விஜயிடம் தன் ஃப்ளாஷ்பேக்கைச் சொல்லும் காட்சி ஆரம்பிக்கும் போது சுவாரஸ்யமாய் இருந்து போகப்போக எஸ்.பி.முத்துராமன் காலத்துக்கெல்லாம் அழைச்சிட்டுப்போய் கொட்டாவி விட வைக்கிறது. காதல் காட்சிகளிலிருந்து ஆக்‌ஷன் காட்சிகள் வரை ஒரு கண்டினியூட்டி இல்லாதது போலவே தெரிந்தது.

விஜயின் அறிமுகக் காட்சி நன்றாகயிருந்தது அதைத் தொடர்ந்து வரும் சில குளோசப் காட்சிகளிலும் விஜய் அழகாய் தெரிந்தார்.தூத்துக்குடியில் நடக்கும் நண்பனின் திருமணத்தில் விஜய் செய்யும் கலாட்டாக்கள் ஆஹா ஓஹோ இல்லையென்றாலும் ரசிக்கலாம். சண்டைக் காட்சிகளில் அனல் பறக்கிறது. காதல் காட்சிகளில் விஜய்க்கென்றே இருக்கும் சில மேனரிஸங்களையே செய்திருந்தால் கைதட்டல் வாங்கியிருக்கும் இடங்களில் ரஜினியை இமிடேட் செய்து சொதப்பியிருக்கிறார். வில்லனை சந்திக்கும் காட்சிகளிலும் பாட்ஷாவை ஃபாலோ பண்ணியிருக்கிறார்.

விஜய் படங்களில் முக்கிய பங்காற்றும் நடன அமைப்புகளில் இந்த படம் மிகப் பெரிய ஏமாற்றம். ’சின்னத்தாமரை’ பாடலில் விஜயின் தீவிர ரசிகர்கள் கூட ஏற்றுகொள்ள முடியாத அளவுக்கான ஹேர்ஸ்டைல். (என்ன கொடுமை ஸார் அது). அனுஷ்காவை வில்லன் கடத்தி வைத்திருக்கும்போது வில்லனிடம் விஜய் பேசும் ”என்னமோ பேசனும்னு சொன்னியே” காட்சி மட்டும்தான் விஜய் இருப்பிற்கான அடையாளம்.

குருவி ரயில்வே பிரிட்ஜ் ஜம்ப் அளவிற்கு காமெடி இல்லாவிட்டாலும் கைவிலங்கோடு போலிஸிடமிருந்து தப்பிக்கும்போது ஓடிக்கொண்டே விலங்கை வாயில் சாவியை வைத்து நொடிப்பொழுதில் திறப்பது,பிரமாண்ட உயர அருவியிலிருந்து குதிப்பது என இதிலும் சில காட்சிகள் அந்த வகையில் இருக்கிறது. என்னவோ பால்காரன்,பேப்பர் போடுகிறவன் போல் சர்வ சாதாரணமாய் வில்லனின் வீட்டுக்கு போயிட்டு வருவதெல்லாம் ரொம்ப ஓவர். ஹிரோயிச துதிபாடும் காட்களிலெல்லாம் ’தான்’ என்ற ஆங்காரத் தோரணை விஜயிடம்.(ண்ணா கொஞ்சம் அடக்கியே வாசிங்க). ஒரே ஆறுதல் பஞ்ச் டயலாக் அதிகமாக இல்லை.

அனுஷ்கா வழக்கமான விஜய் படத்தின் கதாநாயகிகள் என்ன செய்வார்களோ அதைச் செய்திருக்கிறார். தொழிலதிபரை மணக்கும் வயதில் இருப்பது போன்று தெரிவதால் அனுஷ்கா- விஜய்” சோடி பொருத்தம் அம்புட்டு ஒன்னும் சொகமாயில்லை”. பொண்ணு என்னா உயரம்(சிங்கத்தில் சூர்யாவிற்கு ஜோடியாமே காம்பினேஷன் காட்சியிலெல்லாம் ஸ்டூல் தேவை படும்),சிரிக்கும்போது மனசை அள்ளுகிறார்.

வில்லனாய் நீண்ட நாட்களுக்குப் பிறகு சலிம்கௌஸ்(சின்னக் கவுண்டர் வில்லன்) , இவரின் கேரக்டரைசேஷன் ரசிக்கும்படி அமையாவிட்டாலும் நடிப்பிலும் டயலாக் டெலிவரியிலும் ரசிக்க வைக்கிறார். இவரின் வில்லத்தனங்களாக சித்திரிக்கப்பட்டிருக்கும் காட்சிகளெல்லாம் அதரப் பழசானவை.இவரின் மகனாக இன்னொரு வில்லன் படம் நெடுக எரிச்சலைக் கிளப்புகிறார். அவரைப் பெண்பித்தனாய்க் காட்ட சித்திரித்திருக்கும் காட்சிகளெல்லாம் மகா மட்டமான சிந்தனை.

தேவராஜாக வரும் கதாபாத்திரம் ரசிக்கும்படி இருக்கிறது,ஆனாலும் கண்பார்வை இழந்த அவர் கிளைமேக்ஸில் விஜயோடு சேர்ந்து நல்லா காமெடி செய்திருக்கிறார்.(யப்பா டைரக்டரு எப்படி இப்படியெல்லாம்).

ஷாயாஜிஷிண்டே,கொச்சின் ஹனிஃபா சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்கள். சத்யன் நட்பு சென்டிமெண்ட்டுக்காக.கொச்சின் ஹனிஃபாவின் அந்த ”ஆறு பேரு சேர்ந்து ....... என்னாகும்” ரொம்ப ஓவரு. (இருந்தாலும் நான் சத்தமாய் சிரித்தக் காட்சி அது ஒன்னுதான்).

இசை விஜய் ஆண்டெனி,பாடல்கள் ஏற்கனவே ஹிட். பேக்கிரவுண்ட் மியூசிக்கிலும் நன்றாகவே செய்திருக்கிறார் குறிப்பாய் சண்டை காட்களில் பயன்படுத்தியிருக்கும் பறையடிப்பது போன்ற சத்தம்.பாடல்கள் ரகளையாக இருந்தும் காட்சிப் படுத்துதலில் சொதப்பியிருக்கிறார்கள்.

திரைக்கு மிக அருகில் அமர்ந்து படம் பார்த்ததால் ஒளிப்பதிவைப் பற்றி நான் பேசுவது கூடாது.

டைரக்‌ஷன் பாபு சிவன், இவரைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. ”எத்தனை பேரு இப்படி கிளம்பியிருக்கீங்க?” என்று கேட்பதைத் தவிர.

வேட்டைக்காரன் - ரஜினிகள் ஆசையால் போட்டுக்கொண்ட சூடு .

டிஸ்கி: ஃபர்ஸ்ட் ஷோ பார்த்துவிட்டு வெளியில் வந்தபோது நீண்ட க்யூவில் தாய்குலங்கள் உட்பட செகண்ட்ஷோவிற்கு நின்றார்கள். இவ்வளோ ஆர்வமா வர்றவங்களுக்கு கமர்சியல் ஃபார்முலாவிலேயே விஜய் வேற ரூட் பிடிச்சா நல்லாயிருக்கும்.

சில நாட்களுக்கு முன்பு எழுதிய கற்பனை வேட்டைக்காரனின் விமர்சனம் இங்கே:

Monday, June 29, 2009

நாடோடிகள் என் பார்வையில்..........


நண்பனின் காதலுக்கு உதவும் மூன்று நண்பர்களைப் பற்றிய கதை. பெரும்பாலும் இந்த மாதிரிக் கதைகளில் காதலர்களைப் பற்றி இடைவேளை வரையிலும், அதன் பிறகு காதலர்களுக்கு வரும் பிரச்சனைகளை சாமாளித்து, நண்பர்கள் அவர்களைப் பத்திரமாக ட்ரெயினிலோ, பஸ்ஸிலோ அல்லது நெடுஞ்சாலைகளில் செல்லும் ஏதோ ஒரு வாகனத்திலோ பல கஷ்டங்களுக்கிடையே வழியனுப்பிவிட்டு டாட்டா காட்டுவதோடு படம் முடிவடையும். ரசிகனும் நட்புன்னா இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே வெளியே வருவான்.ஆனால் இயக்குனர் சமுத்திரகனி காதலுக்கு உதவும் நண்பர்களை முக்கிய கதாப்பாத்திரங்களாக்கி காதலர்களைச் சேர்த்து வைத்தபிறகு நண்பர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களையும்,நட்பு என்றப் பெயரில் இளமை வேகத்தில் பின்விளைவுகள் எதையும் யோசிக்காத இளைஞர்களுக்கு ஒரு பாடத்தையும் இந்தப் படத்தின் மூலம் மிக அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார். அறிவுரைக் காட்சிகளை நேரடியாக வைக்காமலேயே இளைஞர்களும் ஏற்றுக்கொள்ளும்படி அறிவுறுத்தியிருப்பது இயக்குனரின் சாமர்த்தியம்.

சிறந்த இயக்குனராக மற்றும் தயாரிப்பாளராக ஏற்கனவே வெற்றிப் பெற்றிருக்கும் சசிக்குமார், தான் ஒரு சிறந்த நடிகர் என்பதையும் இப்படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார். சுப்ரமணியபுரத்திலேயே அவரின் நடிப்பு நன்றாக இருந்தது அதைவிட இந்தப் படத்தில் நிறைய ஸ்கோப் நடிப்பில் ஸ்கோர் செய்ய. ரொமான்ஸ், காதலர்களைச் சேர்த்து வைக்க எடுக்கும் முயற்சிகளில் காட்டும் வேகம், குடும்பத்தாரிடம் காட்டும் பாசம், நண்பர்களோடு அடிக்கும் லூட்டி என எல்லா ஏரியாவிலும் பட்டாசாய் இருக்கும் சசி, டான்ஸ் மூவ்மென்ட்ஸ்களில் நிறையவே சிரமப்படுகிறார், எனினும் நல்ல முயற்சியே. (ஆட்டோகிராஃப் படத்தில் சேரன் நன்றாக நடித்திருப்பதாக சொல்லப்போய் அவர் அதையே விடாப்பிடியாக பிடித்துக் கொண்டு தான் இயக்கும் எல்லாப் படங்களிலும் அவரே நடித்து எப்படி சேரன் படமென்றாலே அலறும் அளவிற்கு கொண்டுவந்து விட்டாரோ, அதுமாதிரி ஏதும் செய்துவிடாதீர்கள், உங்களின் இயக்கத்தில் நிறையப் படங்களை எதிர்ப்பார்க்கிறோம்).
சசியின் நண்பர்களாக வரும் விஜயும், பரணியும் தத்தம் கதாப் பாத்திரங்களை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக பரணியின் நடிப்பை ஒற்றை வரியில் சொல்லிவிட்டு போக முடியாது. தான் வரும் அத்தனைக் காட்சிகளிலும் தூள் கிளப்பியிருக்கிறார். காமெடிக் கலந்த குணச்சித்திர வேடங்களுக்கு நல்லதொரு நடிகராக பரணி கிடைத்திருக்கிறார்.

கதாநாயகிகளில் சசியின் ஜோடியாக நடித்திருப்பவர் கொஞ்சம் "தூள்" ஜோதிகாவையும், கோபிகாவையும் நினைவூட்டும்படியான முகவெட்டு. குறைவான காட்சிகளில் வந்தாலும் அழகிலும், நடிப்பிலும் நம் மனதில் நிறைகிறார். சசியின் தங்கையாக நடித்திருக்கும் அந்த அழகுப் பெண் உண்மையில் காது கேட்காத வாய் பேச இயலாதவராம். ஆனால் இது ஒரு மேட்டரே இல்லை என்பதுபோல் அத்தனை அசத்தலாய் நடித்திருக்கிறார். அவரை வசனம் பேச வைத்து சிறப்பான நடிப்பையும் வாங்கியிருக்கும் இயக்குனர் சமுத்திரகனிக்கு ஒரு பெரிய சல்யூட்.

கஞ்சா கருப்புக்கு இது இன்னொரு டக்ளஸ் கேரக்டர்.அவரும் பரணியும் பேசிக் கொள்ளும் இடத்திலெல்லாம் தியேட்டரே குலுங்கிச் சிரிக்கிறது. காதலர்களின் பெற்றோர்களாக வரும் ஜெயப்பிரகாஷ் மற்றும் அந்த அரசியல் பெண்மணியும் நிறைவாகவே செய்திருக்கிறார்கள்.

படத்தின் மிகப்பெரிய பலம் கதிரின் கேமரா.காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்க நடக்கும் அந்த சேஸிங் காட்சிகளில் ஒளிப்பதிவில் மிரட்டியிருக்கிறார். கண்ணுக்கு குளிர்ச்சியாக புதுப்புது லொகேஷன்களை அருமையாக காட்சிப் படுத்தியிருக்கிறார்.
பின்னணி இசையில் கலக்கியிருக்கும் சுந்தர்.சி பாபு பாடல்களில் கோட்டை விட்டிருக்கிறார். இருப்பினும் இந்த படத்திற்கு பாடல்களே தேவையில்லை என்பது என் கருத்து.

படத்தின் இன்னொரு பெரிய பலம் வசனங்கள் குறிப்பாக ஜெயப்பிரகாஷ் சசியிடம் சொல்லும் "நட்புன்னா அதற்குள் எல்லா உறவும் அடங்கிடும்னு சொன்ன, இப்போ என்னாச்சு" என ஆரம்பித்து பேசும் வசனங்களும், காதலர்களுக்கு காவலாக இருக்கும் நபர், பப்ளிக் டாய்லெட்டைக் காட்டி "அவனுங்க காதலிக்க இந்த இடம் போதும்டா" என பேசும் வசனங்களும் ரொம்ப ஷார்ப்.

விளம்பர விரும்பி அரசியல்வாதி,எதற்கெடுத்தாலும் தற்கொலை மிரட்டல் விடுத்துக் காரியம் சாதிக்கும் கதாநாயகியின் அப்பா, இளைய மனைவிக்குப் பயந்து மூத்த மனைவியின் மகனை திட்டுவதுபோல் நடிக்கும் பரணியின் அப்பா மற்றும் விஜயின் அப்பாவாக வரும் எக்ஸ் மிலிட்டரிமேன் கேரக்டர் என ரசனையான கேரக்டர்களை செதுக்கியதில் இயக்குனரை பாராட்டலாம் என்றாலும் அந்த கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களிடம் ஒரு செயற்கைத்தனம் படம் நெடுக தெரிந்ததையும் மறுப்பதற்கில்லை. அதற்கு அவர்களை குறை சொல்ல முடியாது, நடிப்பையும் கேமராவையும் பற்றி அறிந்திராத அவர்களை படத்தின் நேட்டிவிட்டிக்காக பயன்படுத்த நினைக்கும்போது இயக்குனர்தான் மிகுந்த சிரத்தையோடு வேலை வாங்கியிருக்க வேண்டும். (பருத்தி வீரனில் இந்த மாதிரியான கதாப்பாத்திரங்களிடம் அமீர் வேலை வாங்கியிருந்த நேர்த்தி இப்படியெல்லாம் யோசிக்க வைக்கிறது).

இயக்குனர் சமுத்திரகனி, படத்தை ரொம்பவும் யதார்த்தமாக எடுக்க நினைத்த இன்னும் சில காட்சிகளிலும் செயற்கைத்தனம் தெரிகிறது, குறிப்பாக சசியின் நண்பன் தற்கொலைக்கு முயலும் காட்சியிலும், கதாநாயகியின் அப்பா தற்கொலைக்கு முயலும் காட்சியிலும் காப்பாற்ற ஓடிவருபர்கள் ரெடியாக நிறுத்தி வைக்கப்பட்டு ஓடிவருவது அப்பட்டமாகவேத் தெரிகிறது. விளம்பர விரும்பி அரசியல்வாதியிடம் சமையல் கான்ட்ராக்ட் கேட்கபோய் திரும்பும் சசி டீம் திரும்பிச் செல்லும்போது அவர்கள் நடையின் வேகமே திரும்பவும் அரசியல்வாதி கூப்பிடப் போகிறார் என்பதை உணர்த்திவிடுகிறது.

படம் ஆரம்பித்து முதல் பத்து நிமிடங்கள் கொஞ்சம் மொக்கையாகவே செல்வது, நண்பனின் காதலை அவ்வளவு ரிஸ்க் எடுத்து சேர்த்து வைக்கும் சசியின் கேரக்டர் தனது காதலை எளிதாக விட்டுக் கொடுப்பது, படம் சூடுபிடிக்க ஆரம்பிக்கும் நேரத்தில் வரும் அந்த குத்துப் பாடல் என சில குறைகளும் இருப்பினும் மேற்சொன்ன நல்ல விஷயங்களில் இவை காணாமல் போகின்றன.

'சுப்ரமணியபுரம்' சசிக்குமார் நடித்தப் படம் என்ற பெரிய எதிர்ப்பார்ப்பில் செல்லாமல் "உன்னைச் சரணடைந்தேன்","நெறஞ்ச மனசு" படங்களை இயக்கிய சமுத்திரகனியின் படம் என்று நினைத்து பார்த்தால் கண்டிப்பாக நெறஞ்ச மனசோடுத் திரும்பலாம்.
பொதுவாக நல்ல படங்கள் ரிலிஸாகும்போது, "ரொம்ப நாள் கழித்து நல்லதொரு படம் பார்த்தேன்" என்று சொல்வார்கள், ஆனால் "பசங்க" என்ற அற்புதமான படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் தமிழ் சினிமா நல்லதொரு பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை நிரூபிக்கும் விதத்தில் அடுத்ததாய் வந்திருக்கிறது இந்த நாடோடிகள்.

நாடோடிகள் - நிரந்தர முகவரியோடு.

Tuesday, June 9, 2009

பசங்க படமும் எனது பால்ய காலமும்

"பசங்க" படத்தில் வரும் ஜீவாவை போன்றே எனது சிறுவயதில் நானும் இருந்திருக்கேன்.ஜீவாவிற்கு பக்கடாவும் மணியும் எப்படியோ அது மாதிரி எனக்கு கோபுவும்,தங்கப்பனும்(ஏத்தியெல்லாம் விடமாட்டானுங்க). எங்கே போனாலும் ஒன்னாத்தான் திரிவோம்.நான் என்ன சொன்னாலும் ரெண்டு பேரும் எதிர்த்து பேசமாட்டானுங்க. எல்லாத்துக்கும் "சரி"ன்னு தலையாட்டுவானுங்க. ஏன் அப்படி என்றால் கீழே இருக்கிற உரையாடல்களை படித்தால் உங்களுக்கே புரியும்.

உரையாடல் 1:

நான்: கோபு நான் ஒரு ஜோக் சொல்றேன்டா?

கோபு:சொல்லு சொல்லு..

(ஏதோ ஒரு ஜோக் சொன்னதும் விழுந்து விழுந்து சிரித்தான் கோபு)

நான்:இப்ப எதுக்கு இப்படி சிரிக்கிற,இந்த ஜோக்ல உனக்கு என்ன புரிஞ்சிச்சு சொல்லு பர்ப்போம்?.

கோபு:அதான் நல்லா காமடியா இருந்துச்சு.

நான்:என்ன காமடியா..

கோபு: (மௌனம் காக்கிறான்)

நான்:சொல்லுடா உனக்கு என்ன புரிஞ்சிச்சு?

கோபு:ம்ம் போடா நீ புரியிற மாதிரி ஜோக்கும் சொல்ல மாட்ட,சிரிக்காட்டியும் அடிப்ப,அதான் சிரிச்சேன்.

நான்:??????

உரையாடல் 2:

நான்:ஏன்டா கோபு இப்படி டியூப் லைட்டா இருக்க?

தங்கப்பன்:ஏன் அவன எப்ப பார்த்தாலும் டியூப் லைட்டுன்னு திட்டுறே,டியூப் லைட்டுன்னா என்னா?

நான்:ம்ம் ஸ்விட்ச் போட்டவுடனேயே ட்யூப்லைட் எரியாது கொஞ்ச நேரம் கழித்துதான் எரியும் அதுமாதிரிதாண்டா இவனும் சொன்ன உடனே எதையும் புரிஞ்சிக்க மாட்டேங்குறான்.

தங்கப்பன்:அப்போ உடனேயே புரிஞ்சிகிட்டா குண்டு பல்பா?

நான்:?????????

உரையாடல் 3:

ஒருமுறை காட்டுக்கு எலந்த பழம் பறிக்கச் சென்றோம். அப்போது எலந்த மரத்தின் உச்சியில் தேன் கூடு இருந்ததைப் பார்த்த நான், கோபுவிடம்..


நான்:டேய் அங்கா பாருடா தேன் கூடு.

கோபு:எங்க?

நான்:உச்சாங் கெளையில இருக்கு பாரு.

கோபு:எங்கடா எனக்கு தெரியல.

நான்:டேய் நல்லா பாருடா எவ்வளோ பெருசா இருக்கு,பக்கத்தில கூட ஒரு பட்ட குச்சி இருக்கு பாரு.

கோபு: (கொஞ்ச நேரம் அண்ணார்ந்து பார்த்துக் கொண்டே) ம்ம் ஆமான்டா,எவ்ளோ பெருசா இருக்கு.

(எனக்கு அவன் இன்னும் பார்க்கல சும்மா சொல்றான்னு புரிஞ்சிடுச்சு அதனால)

நான்: பாருடா அந்த தேன் பக்கத்தில இப்போ ஒரு குருவி வந்து உட்கார்ந்திருக்கு.

கோபு:ஆமாண்டா சூப்பரா இருக்குல்ல.

நான்:எங்க இருக்கு குருவி தெரியலேன்னா தெரியலன்னு சொல்லு எதுக்கு இப்படி ..என்று வைத்தேன் தலையில் ஒரு கொட்டு.

கோபு:உங்கிட்ட அடிவாங்கனும்னே என்னிய நேந்து உட்டுருக்காய்ங்க போலருக்கு.

இன்னும் இப்படி நிறைய இருக்குங்க."பசங்க" படம் பார்த்த பிறகு எனக்கு பழசெல்லாம் ஞாபகம் வந்திடுச்சு.அதான் இந்த கொசுவத்தி.

அப்படியே பசங்க படம் பார்க்காதவங்க பார்த்திடுங்க, அருமையான படம். ஃபிரேம் பை ஃபிரேமா ரசிக்க வேண்டிய படம்.

வகுப்பறை காட்சிகளிளெல்லாம் தத்ரூபமாக நடித்திருக்கிறார்கள் அத்தனை சிறுவர் சிறுமியரும். ஏதோ ஹிடன் கேமரா வைத்து படம் பிடித்தது போல் மாணவர்களின் செயல்கள், குறும்புகள் அத்தனையும் இயல்பு மாறாமல் படமாக்கப்பட்டிருக்கிறது.

பசங்களின் குறும்பு ஒரு பக்கமென்றால் விமல்,வேஹாவின் காதல் ஆஹா போடவைக்கிறது.விமல் அறிமுகமாம்,பையனின் மதுரைத்தமிழ் உச்சரிப்பு புல்லரிப்பென்றால் வேஹாவின் புருவ சுழிப்பு "பருவ செழிப்பு". இருவரும் அசத்தியிருக்கிறார்கள். "எப்பூடி" புஜ்ஜிமா வரும் சீன்களிலெல்லாம் தியேட்டரில் விசில்.

அன்புக்கரசு,ஜீவா,பக்கடா,மணி,"அப்பத்தா மங்கலம்" ஆகிய இந்த பசங்கள அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. பசங்க சும்மா பூந்து வெளையாடியிருக்கானுங்க. கூட அந்த குட்டி பொண்ணும் குறைவான காட்சியில் வந்தாலும் மனதில் நிறைவாக தங்கிவிடுகிறாள்.

ஜீவாவின் அப்பாவாக நடித்திருப்பவர் சின்ன சின்ன முக பாவங்களில் அசத்துகிறார். குறிப்பாக "ஸார் உங்கள ஹெட்மாஸ்டர் கூப்பிடுறார்"என்று பியூன் சொல்லும் போது அவர் கொடுக்கும் அந்த சின்ன தலையாட்டலே அத்தனை தேர்ந்த நடிப்பு.அன்புவின் அம்மா அப்பாவாக நடித்திருப்பவர்களின் நடிப்பிலும் வெகு யதார்த்தம். அன்புவின் வீட்டில் நடக்கும் காட்சிகள் அத்தனை அழகு. அவர்கள் நிஜமாகவே ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் போலவே நினைக்கத் தோன்றுகிறது படம் முடிந்த பின்னும்.

"ஒரு வெட்கம் வருதே","அன்பாலே அழகாகும் வீடு"என ஜேம்ஸ் வசந்தனும் தன் பங்கிற்கு மனதை வருடுகிறார். ஒளிப்பதிவு அருமை குறிப்பாக "ஒரு வெட்கம் வருதே" பாடலில் மழை நம்மீது பொழிவதுபோல் காட்சி படுத்தியிருக்கிறார்கள். இயக்குனர் பாண்டியராஜ் அவர்களுக்கு பெரிய எதிர்காலம் இருக்கிறது. அவருக்கு நிறைய நன்றிகளும் வாழ்த்துகளும்.


உரையாடல்:சிறுகதைக்கான எனது சிறுகதை இங்கே

Saturday, January 17, 2009

படிக்காதவன் என் பார்வையில்:

7G ரெயின்போ காலனி,பருத்திவீரன் இந்த இரண்டு படங்களுக்கு பிறகு எனது தூக்கத்தை கெடுத்த படம் படிக்காதவன். தூக்கம் தொலைந்தது மட்டுமே ஒற்றுமை, மற்றபடி காரணம் வேறு. இப்ப‌ட‌த்தைப் ப‌ற்றி எங்கேயிருந்து ஆரம்பிக்க, ஒன்னுமே புரியல , படத்தோட ஸ்கிரீன்பிளே மாதிரி.

கதையென்று பார்த்தால் எல்லோரும் படித்தவர்களாக இருக்கும் குடும்பத்தில் படிக்காதவன் தனுஷ். வழக்காமான தனுஷ் படத்தின் அப்பாக்கள் போலவே இதிலும் அப்பா(பிரதாப் போத்தன்) திட்டிக் கொண்டே இருக்கிறார். இதனால் எப்படியாவது ஒரு டிகிரி வாங்கிவிட முயல்கிறார் தனுஷ்,முயற்சிகள் தோல்வியில் முடிய நண்பர்களின் தூண்டுதலில் படித்த பெண்ணான தமனாவை லவ் பண்ணுகிறார்.(
இதுவரைக்கும் ஏதோ ஸ்டோரி இருக்கிற மாதிரியே இருக்கும் ஆனால் இல்லை). இதற்கிடையில் தனுஷ் ஒரு வில்லன் கும்பலோடு மோத நேரிடுகிறது, அதனால் அவர்கள் தனுஷை ஃபாலோ பண்ணிக்கொண்டிருக்க, தனுஷைத்தான் ஃபாலோ செய்கிறார்கள் என நாம் நினைக்கும் போது திடிரென தமனாவை துரத்துகிறார்கள். அங்கே இன்னொரு புது வில்லன் குரூப் வந்து தமனாவை காப்பாற்றுகிறார்கள். அப்போது தமனாவின் அப்பாவாக வில்லன் சுமன் என்டராகி தமனாவை ஆந்திராவிற்கு அழைத்துச் செல்கிறார். இங்கே நீங்க கவனிக்க வேண்டியது தனுஷை துரத்தியது வேறொரு வில்லன் குரூப் (என்ன மண்ட காயுதா).

பிறகு விவேக்கை(இவரும் ஒரு ரௌடி) அழைத்துக்கொண்டு தனுஷ் ஆந்திரா செல்கிறார். அதன் பின் பொல்லாதவன் படத்தை நினைவூட்டும் ஒரு பிளாஷ்பேக், அதுனுள் ஒரு வில்லன் குரூப்(ஜண்டுபாம் தடவிகிட்டு கண்டினியூ பண்ணுங்க) பிறகு ரன் படத்தின் கிளைமாக்ஸோடு அதே ரன் அதுல் குல்கர்னியோடு மோதி காதலில் வெற்றிபெறுகிறார்.

மேலே சொன்னது எதுவும் புரியவில்லையெனில் படத்தை பற்றிய சரியான விமர்சனத்தை நான் எழுதியிருக்கிறேன் என்றே அர்த்தம்.

தனுஷ் நன்றாகவே நடித்திருக்கிறார். கூலிங் கிளாஸை மாட்டிக்கொண்டு தமனாவிடம்"எஸ்சுஸ்மி ஐ லவ் யூ " என்று ரொமான்ஸ் பண்ணும்போதும், வயது வித்யாசமின்றி இருக்கும் நட்பு வட்டத்தில் அடிக்கும் லூட்டிகளிலும் கலக்கியிருக்கிறார். தனுஷ், உங்க உடலமைப்பை பற்றி எழுதப்படும் வசனங்களும், காட்சிகளும் நிறைய படங்களில் பார்த்து போரடிக்க ஆரம்பிச்சிடுச்சு,கொஞ்சம் மாத்தி யோசிங்க பாஸ்.

தமனா,அழகாக இருக்குது பாப்பா, படத்தின் எண்ணிக்கையில் ஒன்று கூடியிருக்கிறது அவ்ளோதான்.

தலைநகரம் படத்தில் வடிவேலு நடித்த நாய் சேகர் கதாபாத்திரத்தின் இரண்டாம் பாகத்தை இந்த படத்தில் விவேக் செய்திருக்கிறார். பாடிலாங்வேஜ் உட்பட அப்படியே வடிவேலு மாதிரியே செய்திருக்கிறார்.(புதுசா ஏதும் அறிவுரை தோணலையா கருத்து கந்தசாமிக்கு).

மணிஷர்மாவின் இசையில் "காதலும் கடவுளும்" பாடல் நல்ல மெலடி, மற்ற பாடல்கள் அவ்வளவாக ஈர்க்கும்படி இல்லை.

அடியாட்களின் எண்ணிக்கையைவிட கூடுதலாக இருக்கிறது வில்லன்களின் எண்ணிக்கை. யாருக்கு யாரோட என்ன பிரச்சினை ஒன்னும் புரியல. எல்லா அடியாட்களும் யூனிஃபார்ம் அணிந்து ஆளுக்கொரு கொக்கு சுடும் துப்பாக்கியோடு திரிகிறார்கள்(எங்கேயிருந்துதான் திங் பண்றா(னு)ங்களோ).


சில இயக்குனர்கள் தமிழ் சினிமாவின் தரத்தையும் ,தமிழனின் ரசனையையும் வேறு தளத்திற்கு நகர்த்தும் முயற்சியில் இருக்க, இயக்குனர் சுராஜ் நம்ம ரசனையை பக்கத்து மாநிலத்திற்கு(ஆந்திரா) நகர்த்த செய்த முயற்சி இந்த படம்.


மொத்தத்தில் வில்லுவின் வெற்றியை உறுதி செய்ய வந்த படம் இந்த படிக்காதவன்.

Tuesday, January 13, 2009

வில்லு என் பார்வையில்..

விஜய் படம் இப்படித்தான் இருக்கும் என்று பெரிதாய் எதிர்பார்ப்பின்றி சென்றதாலோ என்னவோ படத்தின் முதல் பாதி பரவாயில்லைங்கிற மாதிரி இருந்தது.பிரபுதேவாவை "கேசினோ ராயல்" படம் ரொம்ப கவர்ந்திருக்கும் போல இடைவேளைக்கு சற்று முன்னும்,பின்னும் வரக்கூடிய காட்சிகளில் ராயலின் சாயல் தெரிகிறது.

"கதை"- தந்தையை தேச துரோகி என்று வீண்பழி சுமத்தி கொன்றவர்களை மகன் பந்தாடும் மற்றுமொரு ரிவெண்ஜ் ஸ்டோரி,அதற்காக ஒரு தெலுங்குத் தனமான ஃபிளாஷ்பேக்.ஓரளவுக்கு ஓடக்கூடிய கமர்சியல் விஷயங்கள் இருக்கும் இப்படம் ஊத்திக்கொண்டால் அதற்கு இந்த பிளாஷ்பேக்கே காரணமாய் இருக்கும்.

விஜய் தன்னிடம் ரசிகர்கள் எதிர்பார்க்கும் வழக்கமான டான்ஸ், காமெடி, சண்டை என தன் கடமையை செவ்வனே செய்திருக்கிறார்.காதல் காட்சிகளில் நயன்தாராவுடன் கொஞ்சம் கூடுதல் நெருக்கம் காட்டியிருக்கிறார். பிரகாஷ் ராஜை சந்திக்கும் இடங்களில் பட்டையை கிளப்பாவிட்டாலும் ஓரளவிற்கு ஏலக்காயையாவது கிளப்பும்படி சுவராஸ்யமாகவே செய்திருக்கிறார்.

நயன்தாரா, விஜய் படங்களில் நாயகிகள் செய்யும் அத்தனை லூஸ் தனங்களையும் செய்கிறார்.சரக்கடித்துவிட்டு ரகளை செய்யும் இடத்தில் உண்மையிலேயே நன்றாக நடித்திருக்கிறார்.பார்ப்பதற்கும் ஒரு சில காட்சிகளை தவிர்த்து அழகாகவே தெரிகிறார்.எப்போது அவிழ்ந்து விழும் என்கிற பயத்தையும், எதிர்பார்ப்பையும் ரசிகர்களுக்கு கொடுத்துக் கொண்டே இருக்கிறது இவரின் மேல் மற்றும் கீழ் ஆடைகள்.

வடிவேலுக்கு இந்த படம் ஒரு பெரிய திருஷ்டி.மொக்கையின் உச்சம். ஆரம்பத்தில் வரும் ஓரிரு காட்சிகளில் கூட லேசாக சிரிப்பை வரவழைக்க முயற்சி செய்தது.போகப் போக ம்ஹும் ஒன்னும் வேலைக்காகல. வடிவேலுவின் பாணியிலே சொன்னால் ஆரம்பத்திலேயே கண்ண கட்ட ஆரம்பிச்சிடுச்சு.

தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கின்றன. பேக்ரவுண்ட் மியூசிக்கில் சில இடங்களில் பில்லாவை நினைவூட்டுகிறது,ஒரு வேளை படத்தின் சில காட்சிகளும் பில்லாவை போன்றே இருப்பதாலோ என்னவோ.(பில்லாவில் பென்டிரைவ் இங்கே டிஸ்க் தேடும் காட்சிகள்).

படத்தில் பிரகாஷ்ராஜ்,ஆனந்தராஜ் இன்னும் சில அல்லக்கைகளும் வில்லன்களாக நடமாடுகிறார்கள் மேலும் இவர்களைப் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

மகன் விஜயை உயிரோடு புதைக்கும் காட்சியில் அப்பா விஜய் புதையுண்ட இடத்திலிருந்து புறப்படும் புயல்,பிரபுதேவா நடனத்தில் மட்டுமே புயல் என்பதை காட்டுகிறது.குருவி ரயில்வே ட்ராக் ஜம்ப்பைவிட கொடுமை, கொன்னு கொலையில விடுரானுங்களேன்னு இருக்கு இந்த காட்சி.(பிரபு தேவா சார் நீங்க கதையை பற்றிதான் யோசிக்கல அட்லீஸ்ட் எடுக்க போறது தமிழ் படமா இல்லை தெலுங்கு படமான்னு கொஞ்சம் யோசிச்சிருக்கலாம்).

ஃபிளாஷ்பேக்கில் வரும் விஜயின் கெட்-அப் "என்ன கொடுமை சார் இது" ரகம்.போக்கிரியின் இறுதில் வாட்ச்மேன் மாதிரி வருவாரே,இதில் ராணுவ உடையில் மற்றபடி படத்தில் காமெடி சீனில் வராத சிரிப்பு சத்தம் இந்த காட்சியில் தியேட்டரில் பரவலாக கேட்டது.

மொத்தத்தில் வில்லு குருவி அளவிற்கு மோசமில்லை.அப்போ பார்க்கலாமான்னு கேட்டால் எவ்வளவோ பார்துட்டோம்ங்கிற மாதிரி இருப்பீர்களேயானால்,"beware of flahback" என்ற எச்சரிக்கையோடு ஒரு முறை பார்க்கலாம் என்பேன்.

டிஸ்கி:பாக்ஸ் டீக்கெட் எடுத்துவிட்டு பஸ்ட் கிளாஸில் உட்கார்ந்து படம் பார்த்தோம்,கூட வந்தவரிடம் 40 ரூபாய் வேஸ்ட்டா கொடுத்திட்டோமேன்னு சொன்னேன்,அவரோ படம் முடிந்த பிறகு , இருனூறு ரூபாயும் வேஸ்டா போச்சேடான்னு சொன்னார்.