Tuesday, July 24, 2012

மூணாம் பக்கம்

மூணாம் பக்கம் 1988ல் பத்மராஜன் இயக்கத்தில் வெளிவந்த மலையாளத் திரைப்படம்.

கடற்கரையோர கிராமம் ஒன்றில் தனது பரம்பரை வீட்டில் ரிட்டயர்மெண்ட் வாழ்க்கையைத் தனிமையில் கழித்து வரும் ஒரு பெரியவர்(திலகன்). அதே ஊரில் இருக்கும் தனது சக வயது நண்பரோடு சேர்ந்து மது அருந்துவது, பழைய கதைகளை பேசிக்கொண்டிருப்பது என்பதாக அவரது பொழுதுகள் கழிகின்றன.

மருத்துவக் கல்லூரி மாணவனான அவரின் பேரன்(ஜெயராம்) விடுமுறையில் அவனின் சில நணபர்களோடு தாத்தாவை பார்க்க வருகிறான். தனது ஒரே மகனின் இழப்பிற்குப் பிறகு ஒட்டுமொத்த அன்பையும் தனது பேரனின் மீது வைத்திருக்கும் பெரியவர் அவனின் வருகையை கொண்டாடி மகிழ்கிறார். 

ஒரு நாள், பேரன் தனது நண்பர்களோடு அருகில் இருக்கும் பீச்சில் குளித்துக்கொண்டிருக்கும்போது அலையில் அடித்துச் செல்லப்படுகிறான்.  அதுவரை மிகச் சாதாரணமான காட்சிகளுடன் பயணிக்கும் திரைக்கதை, பத்மராஜனின் படமாக மெல்ல மெல்ல உருமாற ஆரம்பிப்பது இந்தக் காட்சியிலிருந்தான் என்று சொல்லலாம். அலையில் அடித்துச் செல்லப்படுபவர்களின் உடல் மூன்றாவது நாளில்(படத்தின் பெயர்) கரை ஒதுங்கும் என்பது அங்கே அவர்கள் அனுபவத்தில் கண்டுகொள்கிற உண்மை. அப்படி கரை ஒதுங்குபவர்களில் சிலர் உயிருடனும் இருந்த நிகழ்வுகளும் சில கதாபாத்திரங்கள் வாயிலாக சொல்லப்படுகிறது. 

கடலில் அடித்துச் செல்லப்பட்டவன் உயிருடன் இருக்கிறானா, இல்லையா என்பது தெரியாமல் நகரும் அந்த மூன்று நாட்களில்,  சுற்றத்தார் எல்லோரும் கவலையோடு இருக்கும்போதும் பெரியவர் மட்டும் ”அவன் நிச்சயமாய் உயிரோடு கிடைப்பான்” என்று மற்றவர்களிடம் சொல்லியபடி தனது அன்றாட செயல்களை செய்துகொண்டிருக்கிறார்.

மூன்றாவது நாள் கரை ஒதுங்குகிறது பேரனின் உயிரற்ற உடல். அதனைத் தொடந்து நடக்கும் சம்பவங்கள் பத்மராஜனின் மேஜிக்.குறிப்பாய் மனதை கனக்கச் செய்துவிடும் அந்த கிளைமேக்ஸ். அதை நீங்கள் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் இப்படத்தில் நான் ரசித்த சில காட்சிகள் உண்டு. தான் மது அருந்தியிருப்பது பேரனுக்கு தெரிந்துவிடாமல் இருக்க செய்யும் பெரியவரின் பாடிலாங்வேஜ், தனது நண்பரின் பேத்திக்கும், தனது பேரனுக்கும் இடையே காதலை வளர்த்துவிட பெரியவர் செய்யும் விஷயங்கள் குறிப்பாய் பேரனுக்குத் தெரியாமல் இயல்பாய் அவர்களின் சந்திப்புகள் நிகழ்வதுபோல சூழலை கிரியேட் செய்து கண்டுக்கொள்ளாதது போல இருக்குமிடத்திலெல்லாம் திலகனின் நடிப்பு கிளாஸாக இருக்கும். தமிழில்தான் அவரை வில்லனாக மட்டுமே பாவித்துவிட்டார்கள். பேரனின் உடல் கரை ஒதுங்கிவிட்டதா என பெரியவர் அந்த மூன்று நாட்களும் அதிகாலையில் வந்து வந்து கடற்கரையைப் பார்த்துச் செல்லும் காட்சிகள், கடற்கரையில்  ”இது ஆபத்தான பகுதி இங்கே யாரும் குளிக்காதீர்கள்”(தமிழிலும் எழுதப்பட்டிருக்கும்) என்று போட் வைக்கும் காட்சி , பேரன் இறந்துவிட்டான் என்ற செய்தியைக் கேட்டதும்,”நெனச்சேன்” என்றபடியே பெரியவர் காட்டும் முகபாவம் என இப்படி நிறைய காட்சிகள் இப்படத்தில் இருக்கின்றன அசைப்போட்டு சிலாகித்துச் சொல்ல. முடிந்தால் ஒருமுறை இப்படத்தை பாருங்கள். 


பத்மராஜனின் ”இந்நலே” படத்தைப் பற்றி அடுத்துப் பகிர்ந்துகொள்கிறேன்.

8 comments:

Prathap Kumar S. said...

இந்தப்படத்தில் வரும் வேணுகோபால் பாடிய "உணரும்ஈ கானம் உருகுமென் உள்ளம்" என்னுடைய ஆல்டைம் ஃபேவரிட், ஜெயராம் இறக்கும் வரை படத்தில் காமெடி அதுவும் ஜெகதியின் காமெடி க்ளாஸ்..... பத்மராஜனின் தாழ்வாரம் படம் குறித்து எழுதியிருக்கிறேன். இன்னலே பாத்திருக்கிறேன்...பகருங்கள்.

நாடோடி இலக்கியன் said...

நன்றி பிரதாப்,

தாழ்வாரம் பரதன் இயக்கிய படம் என்று நினைக்கிறேன்.

தாழ்வாரம் இன்னும் பார்க்கவில்லை. நினைவூட்டியமைக்கு நன்றி.

arasan said...

இந்த வார விகடன் வலையோசையில் உங்களின் வலைப்பக்கம் பிரசுரமாகிருக்கின்றது என்று நினைக்கிறேன் சார் ..
பாருங்கள் ... (http://karaiseraaalai.blogspot.in/

நாடோடி இலக்கியன் said...

@ அரசன் சே,
ஆமாம் நண்பரே,காலையிலேயே அறிந்துகொண்டேன்.

மிக மகிழ்சியான தருணம் இது.

ILA (a) இளா said...

வலையோசை வாழ்த்துகள்!

நாடோடி இலக்கியன் said...

நன்றிங்க இளா.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல விமர்சனம்...

வலையோசை மூலம் உங்கள் தளத்திற்கு வருகை...

பகிர்வுக்கு நன்றி. தொடர வாழ்த்துக்கள்...

மற்றுமொரு தகவல் : ([http://shadiqah.blogspot.in] தளத்தில், உங்கள் தளம் அறிமுகப்படுத்தி உள்ளது.)

நாடோடி இலக்கியன் said...

வருகைக்கு மிக்க நன்றி தனபாலன்.