Monday, March 29, 2010

எங்க ஊரின் வரலாறு


 எங்க ஊரில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மற்றொரு கிராமத்தின் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் எங்கள் ஊரைச் சேர்ந்தவர்களோடு நன்றாகப் பழகினாலும் தண்ணீர் உட்பட எதுவுமே கொடுக்க மாட்டார்களாம். ”முறைப்பாடு இருக்கிறது தெய்வ குத்தம் ஆகிடும்” என்று சொல்வார்களாம்.இதன் பின்னணியில் ஏதோ ஒரு சுவாரஸ்யம் இருப்பதையறிந்து ஊர் பெருசு ஒன்றிடம் கேட்டபோதுதான் எங்க ஊரின் வரலாறு எனக்குத் தெரிய வந்தது.

எந்த காலக் கட்டத்தில் நடந்தது என்பது தெரியவில்லை, தற்போது எங்கள் ஊர் அமைந்திருக்கும் இடத்திற்கு 2கி.மீ தொலைவில் ஊரின் தெற்கு எல்லையாக காட்டாறு இருக்கும். அந்த காட்டாற்றின் மறுகரையில் தான் எங்களின் பூர்வீகக் கிராமம் இருந்ததாம். நான் சொல்லிக் கொண்டிருக்கும் கதை நடந்த காலத்தில் அடிக்கடி பெரு மழை பெய்து காட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் அங்கே குடியிருந்த எங்கள் முன்னோர்கள் வீடு, கால்நடைகள் முதலிய எல்லாவற்றையும் இழக்க நேர்ந்ததால் அங்கிருந்து இடம் பெயர்ந்து தற்போது இருக்கும் இவ்விடத்திற்கு வந்தார்களாம். அப்படி வந்தபோது அங்கே ஏற்கனவே பூர்வீகக் குடியாய் இருந்த சொற்ப எண்ணிக்கையிலான மற்றொரு சமுதாயத்தினரை மெஜாரிட்டியான எம்முன்னோர்கள் விரட்டியிருக்கிறார்கள். அப்படி விரட்டப்பட்டவர்கள் தான் தற்போதும் தண்ணீர் கூட கொடுக்க மறுக்கும் அம்மக்கள்.(நியாயம்தான்).

எனது முன்னோர்கள் வாழ்ந்த இடமாகச் சொல்லப்படும் அந்த காட்டாற்றின்
மறுகரையில் இன்றும் பாழடைந்த நிலையில் மிகவும் சிறிய அளவிலான பொன்னியம்மன் மற்றும் சிவன் கோயில்கள் இருக்கின்றன.

பொன்னியம்மன் சிலை

பொன்னியம்மன் கோவிலில் அம்மனின் சிலை மட்டுமே இருக்கிறது, சுற்றுச் சுவர் முற்றிலும் சிதிலமடைந்து விட்டது.

சிவன் கோவில் பொன்னியம்மன் கோவிலைவிட சற்று பெரியது, மூன்று அறைகளாகத் தடுக்கப்பட்டிருக்கும் இக்கோயிலில் தற்போது மூலவர் அறை மட்டுமே முழுதாய் இருக்கிறது. ஆள் நடமாட்டம் இல்லாததால் புதர்களும், மரங்களும், பாம்பு சட்டைகளுமாய் ஒரு வித அச்சத்தை தருவிக்கும் தோற்றத்தோடு இருக்கிறது.






சிவன் கோவில்

இப்படி ஒரு கோயில் இருப்பதே எங்கள் ஊரின் இளைய தலைமுறையினர் நிறைய பேருக்குத் தெரியவில்லை. நானும் கூட இக்கதையை அறிந்த பிறகே அங்கே சென்று பார்த்தேன்.
நந்தி
மூலவர் அறை



இந்த செங்கற்கலின் வடிவங்கள் மூன்று விதங்களில் இருக்கின்றன.

கோயிலைக் கட்டப் பயன்படுத்தியிருக்கும் சுட்ட கற்களில் வடிவமும்,அதை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி சுண்ணாம்புக் கலவையால் பூசியிருக்கும் விதமும் அக்காலக் கட்டிடக் கலையின் நேர்த்தியை எண்ணி வியக்க வைத்தது.


சிவன் கோவிலின் உட்புறம் இருக்கும் பெண் சிலை


முட்செடிகளுக்கிடையில் இருக்கும் சிவன் கோவில்

அந்த கோயிலினுள் நின்ற போது பெரிய தொல்பொருள் ஆராய்ச்சியாளன் மாதிரி பயங்கரமான ஒரு ஃபீல்.(உள்ளுக்குள் உதறலோடு).வைரமுத்து மாதிரி “வண்டல்மண் இதிகாசம்” என்று ஒன்று எழுத வேண்டும் என்ற பேராசையெல்லாம் எனக்கு அங்கே நின்றபோது வந்ததுன்னு சொன்னா நீங்க சிரிப்பீங்கதானே,ஆனா நிஜமாவே அப்படித்தாங்க நெனச்சேன்.

கொசுறு:படங்கள் மட்டுமே புதிது, கட்டுரை மீள் பதிவு.

ஊருக்குப் போயிருந்தேன்-4

செப்பனிடப்பட்டுக் கொண்டிருக்கும் பஞ்சாயத்து சாலை.(இதன் தரம் நிரந்தரம் அல்ல என்பது இப்போதேத் தெரிகிறது) .



மூக்குத்தி பூமேலே காத்து ஒக்காந்து பேசுதம்மா...


எள்ளுச் செடி



நெய்வேலி காட்டாமணக்கு அல்லது ஜனதா காட்டாமணக்கு (இந்தச் செடியை அழிக்க பலமுறை பல வழிகளில் முயன்றும் முடியாமல் இருக்கிறது).


ஓணான் கொடி (சிறுவயதில் இந்த கொடிகளை இணைத்துதான் பஸ் ஓட்டி விளையாடுவோம்).


ஆற்றுப் பூண்டுச் செடி (காயம் பட்ட இடத்தில் இதன் காம்பில் வடியும் பாலை மருந்தாக இட்டால் உடனடி நிவாரணம் கிடைக்கும்).

ரம்மியமான மாலையில் காட்டாறு.


ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் அழகாய் வளர்ந்திருக்கும் தென்னைகள்.

Friday, December 25, 2009

காக்கா டாக்டர்

வீட்டை நெருங்க நெருங்க உள்ளுக்குள் கொஞ்சம் பயமாத்தான் இருந்துச்சு.

இவ்வளவுக்கும் நேத்தே அம்மாக்கிட்ட பேசினப்போ,"ரெண்டு மாசம் ஆயிடுச்சு அதெல்லாம் மறந்து போயிருக்கும்,நீ பயப்படாம வா" அப்படின்னு சொன்னாங்க, இருந்தாலும் எனக்கு பயம் இன்னும் போகல.

வீட்டுக்குப் பக்கத்துல வந்ததும் மெதுவாக அந்த மரத்தை நோக்கிப் பாத்தேன், அங்கே அது இருக்கிற மாதிரித் தெரியல, அப்பாடான்னு மனசுக்கு கொஞ்சம் நிம்மதியாயிருந்தது. என்னையுமறியாமல் அனிச்சையாய் ஒரு பாடலை முணுமுணுத்துக்கிட்டே வீறுநடை போட்டு வீட்டை நோக்கி நடக்கையில திடீர்ன்னு அந்தச் சத்தம்,

"கா.. கா... கா... கா.. கா" சத்தம் கேட்டு சப்த நாடியும் ஒடுங்கிப்போச்சு.

எந்தச் சத்தத்தைக் கேக்கக் கூடாதுன்னு இவ்வளவு நேரம் பயந்துக்கிட்டு வந்தேனோ அதேச் சத்தம்.

"நீ இன்னுமா மறக்கல"ன்னு சொல்லிட்டு கைகளைத் தலைக்கு மேலே விசிறிக்கிட்டே வீட்டுக்குள்ள ஓடினேன். வீட்டுக்குள்ள போனதுகப்புறமும் கொஞ்ச நேரம் அது கத்திக்கிட்டே இருந்துச்சு.

என்ன விஷயம்னா, ரெண்டு மாசத்துக்கு முன்னாடி லீவுல ஊருக்கு வந்திருந்தப்போ வீட்டுக்கு முன்னால இருக்கிற இந்த வேப்ப மரத்து நெழலுல உக்காந்து நியூஸ் பேப்பர் படிச்சிகிட்ருந்தேன், அப்போ ஏதோ கிழே விழற சத்தம் கேட்டுத் திரும்பிப் பாத்தாக்க பொறந்து கொஞ்ச நாளேயான ஒரு காக்காக் குஞ்சு மரத்திலேருந்து விழுந்துத் தத்தளிச்சிக்கிட்டிருந்துச்சு.

ஐயோ பாவம்னு இரக்கப்பட்டு அதை மறுபடியும் கூட்லயே வச்சிடலாம்னு கையில எடுத்தா அதன் கால் வெரல் ஒண்ணு முறிஞ்சு தொங்கிட்ருந்துச்சு, வாயிலயும் லேசா ரத்தம் வழிஞ்சுகிட்டிருந்துச்சு. ரொம்பக் கவனமா கையாண்டும் அந்த முறிஞ்ச வெரல் தனியாக் கீழே விழுந்திருச்சு. சரி எதாவது முதலுதவி செய்யலாம்னு வீட்டுக்குள்ளக் கொண்டு வந்தேன்.

"ஐயையோ,அதத் தூக்கி வெளியிலே வீசுடா,வீட்டுக்குள்ள கொண்டு வராத தரித்திரியம்" அலறினாங்க அம்மா.

"போம்மா,இதப் பாத்தா பாவமா இல்ல"

"இந்த மாதிரிக் கிறுக்குத்தனமெல்லாம் பன்னாதேன்னா கேக்குறானா இவன்" அம்மா கத்திக்கிட்டே இருந்தாங்க.

நான் காதிலே வாங்கிக்கவே இல்ல, கொஞ்சமா மஞ்சத்தூளை அடிப்பட்ட இடத்திலத் தடவி,ஒரு கூடையில் கவுத்துப் போட்டு கொஞ்சம் சோத்துப் பருக்கய அதுக்கு முன்னால தூவுனேன்,கழுத்த சாச்சு என்னையேப் பாத்துக்கிட்ருந்துச்சு. காக்கைக்கு மட்டுமா அது பொன்குஞ்சு ,கழுத்த சாச்சுப் பாக்கையில எனக்கும் அப்படித்தாங்க தெரிஞ்சிச்சு.

இப்படியே ஒரு நாலு நாள் எனது பராமரிப்பில வச்சிருந்து ஓரளவுக்குக் காயம் ஆறின உடனே அதை மறுபடியும் கூட்லயே வச்சிடலாம்னு மரத்துல ஏறும்போது எங்கிருந்துதான் வந்துச்சுன்னேத் தெரியல, கொஞ்சமும் நான் எதிர்பாக்காத நேரத்துல ஒரு காக்கா தன் கால் நகத்தால அழுத்தமா என் தலையில கீறிட்டுப் போச்சு. தாய் காகமா இருக்கும் போலன்னு நெனச்சுகிட்டே, அவசர அவசரமாகக் காக்காக் குஞ்ச கூட்ல வச்சிட்டு நான் இறங்றதுக்குள்ளயே மேலும் ரெண்டுவாட்டி அதன் தாக்குதலுக்கு ஆளாக வேண்டியதாகிப்போச்சு.

அப்போ ஆரம்பிச்ச தாக்குதல் வீட்லருந்த ஒரு வாரத்துக்கும் தொடர்ந்துச்சு, வீட்டுக்கு வெளியில் என் தலை தெரிஞ்சாப் போதும், எங்கிருந்து வருதுன்னே தெரியாது, மாடார்ன்னு தலையில அடிச்சிட்டுப் போகும்.அந்த ஒருவாரமும் தொப்பியோடதான் திரிஞ்சேன்.விஷயம் கொஞ்சம் கொஞ்சமா எங்க தெருவுக்கே பரவி எல்லாரும் என்னைய "காக்கா டாக்டரு, காக்கா டாக்டரு"ன்னு நக்கல் பண்ண ஆரம்பிச்சுட்டாய்ங்க.

இது கூடப் பரவாயில்லை, "என் பணி நக்கல் செய்து கிடப்பதே"ங்கிற மாதிரியான ஒரு ஆள் எங்க ஊர்ல இருக்கான்,ரொம்பச் சாதாரணமா எல்லாரையும் நக்கலடிச்சிகிட்டே இருப்பான், இந்த விஷயம் அவனுக்குத் தெரிஞ்சா சும்மா விடுவானா, அன்னைக்கு ஒரு நாளு கூட்டாளிகளோட நின்னுப் பேசிக்கிட்டிருந்தேன், அந்தச் சமயம் பாத்து இந்த ஆள் அங்கே வந்தான்,

"என்ன மாப்ள,எப்போ ஊர்ல இருந்து வந்தாப்ல"-என்னைப் பாத்துத்தான் கேட்டார்.

"நாலஞ்சு நாளாச்சு"- நானும் ரொம்பப் பொறுப்பா பதில் சொன்னேன்.

"நல்ல உத்தியோகமாமே,பயலுவ பேசிக்கிட்டாய்ங்க"

"ம்ம்"

"பரவால்லடா,நீ ஒருத்தனாவது,ஒழுங்காப் படிச்சு நல்ல வேலைக்கும் போயிட்டே, உங்க அப்பா அம்மாவுக்கு மட்டுமில்ல நம்ம ஊருக்கேப் பெருமையான விஷயமுடா இது"-ரொம்பவேப் புகழ்ந்து பேசினாரு.

அப்படியே உச்சிக் குளுந்துபோயி நின்னேன்.மத்த பசங்கலெல்லாம் செம்ம கடுப்பா பார்த்துட்ருந்தானுங்க.

"சரி மாப்ள,அப்படியே நேரங்கெடச்சா,நம்ம வூட்டுப் பக்கம் வந்திட்டுப் போ, கோழி ஒண்ணு சொனங்குனாப்ல இருக்கு, நீதான் நல்லா வைத்தியம் பாப்பியாமுல்ல" - ரொம்பச் சாதாரணமாச் சொல்லிட்டு போயிட்டுருந்தான்.

கூட நின்ன அத்தன பேரும் சிரிச்சானுங்க பாருங்க, சரி அந்தாளு மட்டுமா அப்படின்னா, ஊர்ல இத்துணூண்டு வாண்டுங்கக்கூட,"அண்ணே பின்னாடி காக்கா வருது ஓடுங்க ஓடுங்க"ன்னுச் சொல்லி வெறுப்பேத்துசுங்க. ஒரு கட்டத்துல ஏன்டா இத பண்ணனோம்னு ஆயிடுச்சு.அப்புறம் விடுமுறை முடியறதுக்குள்ளேயே திரும்பி நான் வேலை பாக்குற ஊருக்கேப் போயிட்டேன்.

மறுபடியும் இப்போதுதான் ஊருக்கு வறேன்.நான் ஓடிவந்ததப் பாத்த அம்மா, ”இன்னுமா அந்த சனிய மறக்கல”ன்னு சொல்லிகிட்டே மரத்துல உட்கார்த்திருந்த அதப் பார்த்து,

"ஏ சனியனே ஒம்புள்ளய காப்பாத்தப் போயி இப்படி எம்புள்ளய படுத்தியெடுக்கிறியே"ன்னு கோபமா சத்தம் போட்டாங்க,என்னவோ அதுக்குப் புரியப்போறமாதிரி.

கொஞ்ச நேரங்கழிச்சு மறுபடியும் மெதுவா வாசல் பக்கம் வந்தேன். என் தலை வெளில தெரிஞ்சதோ இல்லையோ கத்த ஆரம்பிச்சுடுச்சு.அப்படியே நகராம நின்னுப் பார்த்துக்கிட்டே இருந்தேன், அது கத்திக்கிட்டே பறந்து வந்து நான் நின்ன இடத்துக்குக் கொஞ்சந்தள்ளி உக்காந்து கழுத்தச் சாச்சு என்னையேப் பாத்தப்பதான் கவனிச்சேன் அதோட ஒரு காலுல மூணு வெரல்கள்தான் இருந்தத. அடுத்த நொடியில சந்தோஷத்துல கத்தினேன்,

"அம்மா, இங்கே சீக்கிரமாக் கொஞ்சம் சாதம் எடுத்துட்டு வா!" .

Thursday, December 24, 2009

மலையாள சினிமாவின் அம்மாக்கள்

இந்திய அளவில் சிறந்த நடிகர்களை பட்டியலிட்டால் அதில் முதல் பத்து இடங்களுக்குள் நிறைய மலையாள நடிகர்கள் இடம்பெறுவார்கள். மோகன்லால், மம்முட்டி, நெடுமுடி வேணு, திலகன், ஜெகதி ஸ்ரீகுமார் என திறமையான ஒரு பெரிய நடிகர் கூட்டம் அங்கே இருக்கிறது.

இவர்கள் மட்டும் எப்படி எந்த கதாபாத்திரமானாலும் அப்படியே மாறிவிடுகிறார்கள் என்பதற்கு என்னளவில் காரணமாய் நினைப்பது, பொதுவாக மலையாளப் படங்கள் அதிகபட்சம் ஒரு மாதத்தில் எடுத்துவிடுவார்கள். எனவே மோகன்லால்,மம்முட்டி போன்ற பெரிய நடிகர்களே வருடத்திற்கு ஏழு,எட்டு படங்கள் செய்துவிடுகிறார்கள்.(இப்போது எண்ணிக்கை சிறிது குறைந்திருக்கிறது). மற்ற குணச்சித்திர நடிகர்களாக இருக்கும் நெடுமுடி வேணு, சமிபத்தில் மறைந்த முரளி போன்ற ஒரு பத்து பதினைந்து நடிகர்களே மாற்றி மாற்றி எல்லா ஹிரோக்களின் படங்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்துக்கொண்டிருப்பார்கள்.

இப்படி எண்ணிக்கையில் கூடுதலான படங்களில் நடிக்கும்போது நிறைய வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பும் இயல்பாகவே அவர்களுக்கு கிடைத்துவிடுவதால் கிடைக்கும் அனுபவத்தில் எந்த கதாபாத்திரத்தையும் சிறப்பாக செய்துவிடுகிறார்கள் என்பது என் எண்ணம். இன்னொன்று பத்மராஜன்,பரதன்,சிபிமலயில்,சத்யன் அந்திக்காடு வேணு நாகவல்லி போன்று அவர்களுக்குக் கிடைத்த இயக்குனர்கள்.

இது நடிகர்களுக்கு மட்டுமல்லாமல் கேரள நடிகைகளுக்கும் மிகப் பொருந்தும், அந்த வகையில் குணச்சித்திர வேடங்களில் மலையாள திரையுலகை நீண்ட வருடங்களாக அசத்திக்கொண்டிருக்கும் மூன்று நடிகைகளைப் பற்றியே இந்த இடுகை.

கவியூர் பொன்னம்மா:

மலையாள திரையுலகின் அம்மா என்று அழைப்படுபவர். சாந்தமான முகத்துடன் இவர் ஸ்கிரினில் வரும் முதல் காட்சியிலேயே பார்வையாளர்களின் அம்மாவை நினைவுக்கு கொண்டுவந்துவிடுவார். திலகன் போன்ற தன்னைவிட வயசில் சீனியர் நடிகர்கள் தொடங்கி குஞ்சாக்கோ கோபன் போன்ற இன்றைய இளம் கதாநாயகர்கள் வரை எல்லோருக்கும் அம்மாகியிருக்கிறார். மோகன்லாலின் அம்மா யாரென்றால் இவரின் முகம்தான் நினைவுக்கு வரும்,அந்த அளவிற்கு மோகன்லாலின் பெரும்பான்மையான படங்களில் இவர்தான் அம்மா. மலையாள திரையுலகின் பெஸ்ட் அம்மா-பையன் காம்பினேஷனும் மோகன்லால்- கவியூர் பொன்னம்மாதான். தமிழில் சத்யா படத்தில் அமலாவின் அம்மாவாக வருவார்.

கே.பி.ஏ.சி.லலிதா:


இயக்குனர் பரதனின் மனைவியான இவரை மலையாளத் திரையுலகி
ன் மனோரமா எனலாம். இரு முறை தேசிய விருதுகள் வாங்கியிருக்கும் இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு சகலகலா வல்லி. தமிழில் காதலுக்கு மரியாதைப் படத்தில் ஷாலினியின் அம்மாவாக நடித்திருப்பார்.மலையாளத்தின் லோக்கல் ஸ்லாங்குகள் அனைத்திலும் பேசி நடிக்கக் கூடியவர். வெகுளித்தனம், வில்லி,வேலைக்காரி, ஆர்வக்கோளாறு, திமிர்த்தனமான கதாபாத்திரம் என எதிலும் பெஸ்ட் என நிரூபித்துக்கொண்டிருப்பவர். பெரிய நடிகர்களுக்கு அம்மாவாகவும் நடிப்பார் ஒரு சீனில் தலைக்காட்டிப் போகும் குணச்சித்திரங்களுக்கும் ஜோடியாக நடிப்பார். வாய்ஸ் மாடுலேஷனிலும் டைமிங் சென்சிலும் இவருக்கு நிகர் இவர்தான்.



சுகுமாரி:

பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கும் இவர் தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு பரிச்சயமானவர். வேட்டைக்காரனில் கூட அனுஷ்காவின் பாட்டியாக வருபவர். மலையாள திரைப்படங்களைப் பார்க்க ஆரம்பித்த பிறகே இவரின் திறமை எனக்கு தெரிய வந்தது. இவரும் பெரும்பாலும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் சோகம் அதற்கு நேர்மாறான காமெடி இரண்டிலுமே கலக்குவார். நாட்டிய பேரொளி பத்மினியின் உறவினரான இவர் பிரியதர்ஷனின் முதல் படமான ’பூச்சைக்கொரு மூக்குத்தி’ படத்தில் மோகன்லாலுடன் சேர்ந்து ஆடும் டிஸ்கோ நடனம் இவரை அப்பாவி அம்மாவாகவே பார்த்து பழகியவர்களுக்கு ஆச்சர்யப்பட வைக்கும். திமிர் பிடித்த பணக்கார அலட்டல் அம்மாவாகவும் சர்வ சாதாரணமாக நடிப்பார்.இவரின் முக அமைப்பு கோடீஸ்வர லுக்கிற்கு ஒத்துவராதது போல் இருக்கும் ஆனால் நடிப்பில் அந்த நினைப்பையே மாற்றிவிடுவார். தமிழில் மலையாள இயக்குனர்கள் இயக்கிய மௌனம் சம்மதம்,வருஷம் 16,கோபுர வாசலிலே போன்ற படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். மலையாள வாடையே இல்லாமல் தெளிவாய் தமிழை உச்சரிக்கக் கூடியவர்.

Wednesday, December 23, 2009

நொறுக்குத் தீனி 23/12/09

”படிக்காதவனுக்கு ஒரு இடத்தில் அசிங்கம், படிச்சவனுக்கு மூன்று இடங்களில்” இப்படி ஒரு சொலவடையை கேள்விப்பட்டிருக்கின்றீர்களா?.

பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சமயம் குரூப் ஸ்டெடிக்காக எங்கள் வீட்டிற்கு என்னுடன் படித்த சக மாணவ,மாணவிகள் வருவது வழக்கம். உரச் சாக்குகளை படுதாக்களாய்(தார்ப்பாய்) தைத்துக்கொடுத்து பிழைப்பு நடத்தும் ஒரு பெரியவர் வருடத்திற்கு இரண்டு,மூன்று முறை எங்கள் ஊருக்கும் வந்து ஓரிரு வாரங்கள் தங்கி வேலை செய்வார். இரவில் எங்கள் வீட்டுத் திண்ணையில்தான் படுத்துக்கொள்வார்.ஒரு முறை அவர் வந்திருந்த போது, நாங்கள் வழக்கமாய் திண்ணையில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தோம். அப்போது அங்கே வந்த ஒரு மாணவன் வாசலில் கிடந்த மாட்டு சாணத்தை மிதித்துவிட்டு அவன் செய்த செயலைக் கண்டுதான் ”படிச்சவனுக்கு மூனு இடத்தில,படிக்காதவனுக்கு ஒரு இடத்திலங்கிறது சரியாத்தான் போச்சு” என்று சொன்னார். 1:3 கணக்கிற்கு அவரிடம் விடை கேட்டபோது, ”சாணிய மிதிச்ச உடனே உங்க கூட்டாளி என்ன பண்ணான், ஐயையே சாணிய மிதிச்சிகிட்டேன்னு சொல்லி கையால துடச்சானா,அப்புறம் கை நாறுதான்னு மோந்து பாத்தானா மொத்தத்தில கை,காலு,மூக்குன்னு மூனு இடமாச்சா ” என்று சொல்லிவிட்டு மேலும், ”இதே படிக்காதவனா இருந்தா மிதிச்சது சாணின்னு தெரிஞ்சதும் அப்படியே காலை தரையிலேயே தேய்ச்சுட்டு போயிருப்பான்,படிக்கிற புள்ளை அதான் ஆராச்சி பண்ணுது” என்றார்.

மேலே ‘அசிங்கம்’ என்று சொன்ன வார்த்தையை அவர் வேறுவிதமாக ஓரெழுத்து ஒரு மொழியில் சொன்னார்.

********************

பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் ட்ரைலர்(ட்ரைலரே என்று சொல்லலாம்தான்) மிரட்டுகிறது. கார்த்தி இன்னும் பருத்தி வீரன் ஹேங் ஓவரில் இருப்பது போலவும் தெரிகிறது. இருப்பினும் படம் வரட்டும். இன்னும் அஃபிஷியலா ட்ரைலர் வெளியிடவில்லையாம்,அதற்குள் யூடியூபில் உலா வருகிறது.



********************
கொரிய மொழிக்கும் தமிழுக்கும் கிட்டத்தட்ட 500 ஒத்த வார்த்தைகள் உள்ளதாக ஓரிரு வருடங்களுக்கு முன் நாளிதழில் செய்தி வெளியாகியிருந்தது. எனக்குத் தெரிந்து வார்த்தைகளைத் தாண்டி கலாச்சார அடிப்படையிலும் கூட தென்னிந்திய பழக்க வழக்கங்களை ஒத்தே அவர்களின் குடும்ப அமைப்புகளும் இருக்கின்றது. குடும்ப உறவுகளை அழைக்கும் வார்த்தைகள் தமிழை ஒட்டியே இருக்கின்றது. குறிப்பாக தாய்,தந்தையரை அவர்களும் அம்மா,அப்பா என்றே அழைக்கிறார்கள். அவர்களிலும் பெற்றோர் நடத்தி வைக்கும் திருமணம் சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை நடைமுறையில் இருந்து அமேரிக்க கலாச்சார மோகத்தால் மறைந்திருக்கிறது.

********************

மலையாளத்தில் நெடுமுடி வேணு,சாரதா,தேவன்,பார்வதி நடிப்பில் 1987 ல் வெளிவந்த ஒரு ’ஒரு மின்னாமினிகின்டே நுருன்னு வெட்டம்’ என்னும் படத்தை சமீபத்தில் பார்த்து நெகிழ்ந்துபோனேன்.

ஒரு சிறு நகரத்தில் வசிக்கும் குழந்தைகள் இல்லாத ஓய்வு பெற்ற ஆசிரியத் தம்பதி. அந்த ஆசிரியை முன்பு வேலை பார்த்த ஊரில் தங்கியிருந்த வீட்டு ஓனரின் மகள் ஆசிரியையின் வீட்டில் தங்கி படித்து வருகிறாள். அந்தப் பெண்ணின் அப்பா அவளின் அம்மாவைக் கொலை செய்துவிட்டு இரண்டாவது திருமணம் செய்துகொண்ட காட்டுமிராண்டித்தனமானவன். அப்படி ஒரு இடத்தில் வளர்ந்த அவளை பிள்ளைகள் இல்லாத ஆசிரியத் தம்பதி தங்களது மகளாகவே நேசிக்கிறார்கள்.

ஒரு சந்தர்ப்பத்தில்தான் தெரிகிறது அவளை அவளின் அப்பா அங்கே கொண்டு வந்து சேர்த்தற்கான காரணம் காதல் என்று. அவளை நேசிப்பவன் நல்லவன் என அறிந்து அவளின் அப்பாவை எதிர்த்து ஆசிரியத் தம்பதி காதலர்களைச் சேர்த்து வைக்கிறார்கள். காதலன், வேலை விஷயமாக அமேரிக்கா சென்றுவிட தலைப்பிரசவத்தில் ஒரு ஆண் குழந்தையை ஈன்றுவிட்டு இறந்து போகிறாள் அந்தப் பெண். துடித்து ஓடிவரும் காதல் கணவன் தன் கைக்குழந்தையோடு அமேரிக்கா செல்ல முயல்கிறான். அவனால் குழந்தையை வளர்க்க முடியாது என்பதை பக்குவமாகச் சொல்லி அக்குழந்தையை தாங்களே வளர்க்கிறார்கள் ஆசிரியத் தம்பதி.குழந்தைக்கு ஐந்து வயது வந்ததும் குழந்தையின் தந்தை இனிமேலும் அவனை பிரிந்து தன்னால் இருக்க இயலாது மேலும் அவன் படிப்பும் அமேரிக்காவில் தொடர்ந்தால் எதிர்காலத்திற்கு நல்லது என்று கேட்கும்போது போக மாட்டேன் என அடம்பிடிக்கும் குழந்தையை மனசில்லாமல் அவனோடு வேறுவழியின்றி அனுப்புகிறார்கள். தங்களது சொத்துக்களை அக்குழந்தையின் பெயரிலேயே எழுதிவைத்து,தங்களின் இறுதிச் சடங்கை அக்குழந்தைதான் செய்ய வேண்டும் என்று கேட்பதோடு படம் முடிவடையும்.

ஆசிரியத் தம்பதியாக நடித்திருக்கும் நெடுமுடி வேணுவுக்கும் சாரதாவுக்கும் இப்படம் நடிப்பில் ஒரு மைல்கல். பார்வதி இவர்களை அம்மா,அப்பா என்று அழைக்கும்போது நெடுமுடி வேணுவும் சாரதாவும் காட்டுகிற எக்ஸ்பிரஷன்கள் சிறிதும் மிகை நடிப்பின்றி அத்தனை யதார்த்தம். மகளின் இறப்பிற்குப் பிறகு மீண்டும் சூன்யமாகிப்போன வாழ்க்கையைப் பூரணமாக்க வந்த அக்குழந்தையை தங்களது கண்ணுக்குள் வைத்து வளர்க்கும் காட்சிகள் எளிதில் மனதைவிட்டு அகலாதவை. இப்படத்தைப் பற்றி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.முடிந்தால் நீங்களும் பாருங்கள்.
youtube-ல் காண இங்கே கிளிக்கவும்:


********************

இந்த ஆண்டு வெளிவந்த திரைப்படங்களில் நான் பார்த்ததில் எனக்குப் பிடித்த ஐந்து படங்கள்:

5.பொய் சொல்லப் போறோம்:
+ முகம் சுழிக்க வைக்காத நகைச்சுவைக் காட்சிகள்,மௌலி மற்றும் நாசரின் நடிப்பு
- நாடகத்தனம்

4.ஈரம்:
+ ஒளிப்பதிவு,கிராபிக்ஸ் காட்சிகள்
- முடிவு தெரிந்த பின்னர் நீளும் இறுதிக் காட்சிகள்

3.நாடோடிகள்:
+ திரைக்கதை வேகம்
- சேர்த்து வைத்த ஜோடிகள் சேர்ந்தேதான் இருக்க வேண்டுமென்பது போன்ற கடைசி நேர வசனங்கள்.

2.பேராண்மை:
+அட்வென்சர் காட்சிகள்
- ஹிரோவிற்கு தெரியாத விஷயமே இல்லை என்பது போன்ற கதாபாத்திர அமைப்பு.

1.பசங்க
+ எல்லாமே

இவ்வாண்டில் மொத்தமே பத்து படங்கள்தான் பார்த்திருப்பேன்.அதில் எனக்குப் பிடித்தவை இவை.இப்பட்டியலில் சேர்க்காமல் விட்ட பொம்மலாட்டமும் எனக்குப் பிடித்தப் படமே.

Sunday, December 20, 2009

சூழ்நிலைக் கைதிகள்..

”சூழ்நிலை அமையாத வரை எல்லோரும் நல்லவர்களே” என்பது எத்தனை சத்தியமான உண்மை. இதற்கு எழுத்தாளர் திரு எஸ்.ரா அவர்கள் ஈரோடு புத்தகக் கண்காட்சியில் சொன்ன இரண்டு விஷயங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.
சம்பவம் 1:
ஒரு சிறிய நகரத்தின் நகைக்கடை ஒன்றில் தனது இருபதாவது வயதிலிருந்தே கணக்குப் பிள்ளையாக வேலை செய்யும் வயது ஐம்பதைக் கடந்துவிட்ட நேர்மையான ஒரு மனிதர். அவரின் முதலாளி கணக்குப் பிள்ளையின் மீது இருக்கும் நம்பிக்கையில் பெரும்பாலும் கடைக்கு வருவதில்லை, பொறுப்பையுணர்ந்த கணக்குப் பிள்ளையும் முதலாளியின் மீது அளவு கடந்த விசுவாசத்தோடு இருந்தார். ஒரு நாள் முதலாளி தனக்கு வயதாகிவிட்டதாலும், கடையில் பெரிதாய் வருமானம் வராததாலும் நகைக்கடையை மூடிவிட முடிவு செய்து கணக்கப் பிள்ளைக்கு சேர வேண்டிய சம்பளத்தொகையையும் மேற்கொண்டு கொஞ்சம் பணமும் கொடுத்து, ”நாளையிலிருந்து வேலைக்கு வரவேண்டாம்,வேறு வேலை தேடிக்கொள்” என்கிறார்.

கணக்குப் பிள்ளை,”இந்த வயதில் என்னை எங்கே புதிதாய் வேலைக்குச் சேர்ப்பார்கள்” என்று ஆரம்பித்து, ”திருமணத்திற்கு காத்திருக்கும் மகள் மற்றும் குடும்பத்தை எப்படி காப்பாற்றுவேன்” என முதலாளியிடம் தொடர்ந்து கடையை நடத்துமாறு கெஞ்சிக் கேட்கிறார். முதலாளிக்கும் கணக்குப் பிள்ளையின் நிலை புரிந்தாலும் லாபமில்லாத கடையை இனிமேலும் நடத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களைச் சொல்லிவிட்டு கைவிரித்து விடுகிறார்.

வழக்கம் போல் கடையை மூடிவிட்டு சாவியை முதலாளி வீட்டிற்கு கொடுக்க போகும்போது தன் மகளின் திருமணச் செலவுகளை நினைத்து பயம்கொண்ட கணக்குப்பிள்ளைக்கு அன்று வசூலான பணத்தையும்,நகையில் கொஞ்சமும் எடுத்தால் என்ன என்ற எண்ணம் வருகிறது.பெரிய மனப் போராட்டத்திற்கு ஆளாகிறார்.

சம்பவம் 2:
சின்ன வயதிலிருந்தே தன்னை வளர்த்த தனது அண்ணன் குடும்பம்தான் எல்லாமே என்று திருமணமே வேண்டாம் என்று இருக்கும் தம்பி தன் மொத்த வருமானத்தையும் அண்ணன் குடும்பத்திற்கே கொடுக்கிறான். அண்ணன் எவ்வளவோ வற்புறுத்தியும் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ள மறுக்கிறான்.

ஒரு நாள் அண்ணன் வீட்டில் இல்லாத போது சமையலறையில் தண்ணீர் குடிக்கச் செல்லும் தம்பி சமைத்துக்கொண்டிருக்கும் அண்ணியின் விலகிய முந்தானையைப் பார்த்து சபலம் கொண்டு வெறித்துப் பார்க்கிறான்.பிறகு தனது சம்பாத்தியத்தின் கீழ் இருப்பவர்கள்தானே தொட்டால் என்ன என்கிற எண்ணம் வர கையைப் பிடிக்கிறான் மிரண்டுபோய் செய்வறியாது நிற்கும் அண்ணியின் முகத்தைப் பார்த்து சுதாரித்து கையை விடுவித்துவிட்டு தனது அறைக்கு திரும்பி விடுகிறான்.

விஷயம் அறிந்துகொள்கிற அண்ணன் ஒரு பெரிய தொகை மற்றும் தம்பி பெயரிலான பேங்க் பாஸ்புக் ஆகியவற்றைக் கொடுத்துவிட்டு,”தயவு செய்து வேறு எங்கேயாவது தங்கிக்கொள்” என்கிறான். அண்ணனின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் தம்பியை ஆறுதலாய் பிடித்துக்கொள்ளும் அண்ணன் சொல்கிறான்,”இதுக்குதான்டா கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்னேன் ” என்று கூறிவிட்டு மேலும் “இது உனக்கும் எனக்குமான பிரச்சனை இல்லை உலகத்துப் பிரச்சனையே இதுதான்டா” என்கிறான்.

சம்பவம் ஒன்றில் தனது வாழ்நாளின் பெரும்பான்மையை நேர்மையாக கடந்துவிட்ட ஒரு மனிதரை தனது நேர்மைக்கு எதிரான எண்ணத்தை அவரிடம் விதைத்தது எது? அவர் அந்த பணத்தை களவாடியிருப்பின் அதுநாள் வரை அவரின் மேலிருந்த நல்லவர் பிம்பத்தை எத்தனை எளிதாக கேலி செய்து அசிங்கப்படுத்திவிடும் சமூகம்.

சம்பவம் இரண்டில் தன்னைச் சார்ந்து இருக்கும் மனிதர்களையும் தனது உடமைகளைப் போல் எண்ணுகிற மனோபாவம் வந்துவிடுகிறது. மேலும் அந்தப் பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சிக்கும்போது அவள் மிரண்டு நின்றாலும் எதிர்ப்பை தெரிவிக்காமல் செய்வதறியாது நிற்க வைத்தது எது?

அந்த கணக்குப் பிள்ளையும் சரி,தம்பியும் சரி தான் இப்படி நடந்து கொள்வோம் என்பதை அப்படியொரு சூழ்நிலை அமையும் வரை கற்பனையில் கூட நினைத்திருக்க மாட்டார்கள்.

நாம் எல்லோருமே தவறுகள் செய்யும்போது அதற்கு ஒரு நியாயத்தைக் கற்பித்துக்கொண்டு நல்லவர்களாகக் காட்டிக்கொள்ள முயற்சிப்போம். அதே மற்றவர்களுக்கென்று வரும்போது அவர்களை நிராகரிப்பது, கார்னர் செய்து ஆளாளுக்கு நீதிமான்களாகி தண்டனை கொடுப்பது போன்றதைச் செய்வோம்.

தவறு செய்வது எல்லோருக்கும் பொதுவான இயல்பு என்பதையும், நாம் அனைவருமே தண்ணீரைப் போன்றவர்கள் சூழ்நிலை என்னும் பாத்திரம் மட்டுமே நமது வடிவத்தை தீர்மானிக்கும் சக்தி என்பதை அறிந்தும் அடுத்தவரின் சூழ்நிலைகளை புரிந்துகொண்டு சக மனிதர்களை நேசிப்போம்.

டிஸ்கி: அடிப்பதற்கும்,கொலை செய்வதற்கும் கூட ஏதோ சூழ்நிலையிருக்கும் என்றெல்லாம் கேட்க மாட்டீங்க தானே. :)))))

Saturday, December 19, 2009

வேட்டைக்காரன் எனது பார்வையில்

விஜய் ஒரு நல்ல நடிகர் என அறியப்பட்ட ‘பூவே உனக்காக’ காலத்திற்கு முன்பே வெளியான ’தேவா’, ’கோயமுத்தூர் மாப்ளே’ காலத்திலிருந்தே விஜயை எனக்குப் பிடிக்கும். குருவி,வில்லு ஆகிய படங்களைப் பார்த்தப் பிறகு விஜயைப் பிடிக்கும் என்பதைக் காட்டிக்கொள்ளாவிட்டாலும் அடுத்தமுறை சரி செய்துவிடுவார் என்று சுய சமாதானம் செய்து கொண்டான் எனக்குள் இருக்கும் விஜய் ரசிகன் (கட் அவுட்,பாலாபிஷேகம் டைப் ரசிகன் இல்லை, ஜஸ்ட் பிடிக்கும்). ஆனால் ”இதுக்கு மேலயும் நீ சுய சமாதானம் செய்து கொள்ளத்தான் வேண்டுமா?” என்று குமுற ஆரம்பித்திருக்கிறான் அதே ரசிகன். (முடியல).

சரி கதைக்கு(?) வருவோம்,எத்தனையோ படத்தில் பார்த்து பார்த்து சலித்துப்போன சிட்டியில் அட்டகாசம் செய்யும் தாதாவை ஒழிப்பதுதான். திருப்பாச்சி படத்தில் திருப்பாச்சியிலிருந்து சென்னைக்கு வந்து வதம் செய்தார். இதில் தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு வந்து அவதாரம் எடுக்கிறார்.இம்மாதிரியான கதைகளில் இருக்கும் பரபரப்பான திரைக்கதை இந்த படத்தில் சுத்தமாக மிஸ்ஸிங். படத்தின் முக்கியத் திருப்பமாக வரும் இடத்தில் வில்லன் சலிம்கௌஸ் விஜயிடம் தன் ஃப்ளாஷ்பேக்கைச் சொல்லும் காட்சி ஆரம்பிக்கும் போது சுவாரஸ்யமாய் இருந்து போகப்போக எஸ்.பி.முத்துராமன் காலத்துக்கெல்லாம் அழைச்சிட்டுப்போய் கொட்டாவி விட வைக்கிறது. காதல் காட்சிகளிலிருந்து ஆக்‌ஷன் காட்சிகள் வரை ஒரு கண்டினியூட்டி இல்லாதது போலவே தெரிந்தது.

விஜயின் அறிமுகக் காட்சி நன்றாகயிருந்தது அதைத் தொடர்ந்து வரும் சில குளோசப் காட்சிகளிலும் விஜய் அழகாய் தெரிந்தார்.தூத்துக்குடியில் நடக்கும் நண்பனின் திருமணத்தில் விஜய் செய்யும் கலாட்டாக்கள் ஆஹா ஓஹோ இல்லையென்றாலும் ரசிக்கலாம். சண்டைக் காட்சிகளில் அனல் பறக்கிறது. காதல் காட்சிகளில் விஜய்க்கென்றே இருக்கும் சில மேனரிஸங்களையே செய்திருந்தால் கைதட்டல் வாங்கியிருக்கும் இடங்களில் ரஜினியை இமிடேட் செய்து சொதப்பியிருக்கிறார். வில்லனை சந்திக்கும் காட்சிகளிலும் பாட்ஷாவை ஃபாலோ பண்ணியிருக்கிறார்.

விஜய் படங்களில் முக்கிய பங்காற்றும் நடன அமைப்புகளில் இந்த படம் மிகப் பெரிய ஏமாற்றம். ’சின்னத்தாமரை’ பாடலில் விஜயின் தீவிர ரசிகர்கள் கூட ஏற்றுகொள்ள முடியாத அளவுக்கான ஹேர்ஸ்டைல். (என்ன கொடுமை ஸார் அது). அனுஷ்காவை வில்லன் கடத்தி வைத்திருக்கும்போது வில்லனிடம் விஜய் பேசும் ”என்னமோ பேசனும்னு சொன்னியே” காட்சி மட்டும்தான் விஜய் இருப்பிற்கான அடையாளம்.

குருவி ரயில்வே பிரிட்ஜ் ஜம்ப் அளவிற்கு காமெடி இல்லாவிட்டாலும் கைவிலங்கோடு போலிஸிடமிருந்து தப்பிக்கும்போது ஓடிக்கொண்டே விலங்கை வாயில் சாவியை வைத்து நொடிப்பொழுதில் திறப்பது,பிரமாண்ட உயர அருவியிலிருந்து குதிப்பது என இதிலும் சில காட்சிகள் அந்த வகையில் இருக்கிறது. என்னவோ பால்காரன்,பேப்பர் போடுகிறவன் போல் சர்வ சாதாரணமாய் வில்லனின் வீட்டுக்கு போயிட்டு வருவதெல்லாம் ரொம்ப ஓவர். ஹிரோயிச துதிபாடும் காட்களிலெல்லாம் ’தான்’ என்ற ஆங்காரத் தோரணை விஜயிடம்.(ண்ணா கொஞ்சம் அடக்கியே வாசிங்க). ஒரே ஆறுதல் பஞ்ச் டயலாக் அதிகமாக இல்லை.

அனுஷ்கா வழக்கமான விஜய் படத்தின் கதாநாயகிகள் என்ன செய்வார்களோ அதைச் செய்திருக்கிறார். தொழிலதிபரை மணக்கும் வயதில் இருப்பது போன்று தெரிவதால் அனுஷ்கா- விஜய்” சோடி பொருத்தம் அம்புட்டு ஒன்னும் சொகமாயில்லை”. பொண்ணு என்னா உயரம்(சிங்கத்தில் சூர்யாவிற்கு ஜோடியாமே காம்பினேஷன் காட்சியிலெல்லாம் ஸ்டூல் தேவை படும்),சிரிக்கும்போது மனசை அள்ளுகிறார்.

வில்லனாய் நீண்ட நாட்களுக்குப் பிறகு சலிம்கௌஸ்(சின்னக் கவுண்டர் வில்லன்) , இவரின் கேரக்டரைசேஷன் ரசிக்கும்படி அமையாவிட்டாலும் நடிப்பிலும் டயலாக் டெலிவரியிலும் ரசிக்க வைக்கிறார். இவரின் வில்லத்தனங்களாக சித்திரிக்கப்பட்டிருக்கும் காட்சிகளெல்லாம் அதரப் பழசானவை.இவரின் மகனாக இன்னொரு வில்லன் படம் நெடுக எரிச்சலைக் கிளப்புகிறார். அவரைப் பெண்பித்தனாய்க் காட்ட சித்திரித்திருக்கும் காட்சிகளெல்லாம் மகா மட்டமான சிந்தனை.

தேவராஜாக வரும் கதாபாத்திரம் ரசிக்கும்படி இருக்கிறது,ஆனாலும் கண்பார்வை இழந்த அவர் கிளைமேக்ஸில் விஜயோடு சேர்ந்து நல்லா காமெடி செய்திருக்கிறார்.(யப்பா டைரக்டரு எப்படி இப்படியெல்லாம்).

ஷாயாஜிஷிண்டே,கொச்சின் ஹனிஃபா சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்கள். சத்யன் நட்பு சென்டிமெண்ட்டுக்காக.கொச்சின் ஹனிஃபாவின் அந்த ”ஆறு பேரு சேர்ந்து ....... என்னாகும்” ரொம்ப ஓவரு. (இருந்தாலும் நான் சத்தமாய் சிரித்தக் காட்சி அது ஒன்னுதான்).

இசை விஜய் ஆண்டெனி,பாடல்கள் ஏற்கனவே ஹிட். பேக்கிரவுண்ட் மியூசிக்கிலும் நன்றாகவே செய்திருக்கிறார் குறிப்பாய் சண்டை காட்களில் பயன்படுத்தியிருக்கும் பறையடிப்பது போன்ற சத்தம்.பாடல்கள் ரகளையாக இருந்தும் காட்சிப் படுத்துதலில் சொதப்பியிருக்கிறார்கள்.

திரைக்கு மிக அருகில் அமர்ந்து படம் பார்த்ததால் ஒளிப்பதிவைப் பற்றி நான் பேசுவது கூடாது.

டைரக்‌ஷன் பாபு சிவன், இவரைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. ”எத்தனை பேரு இப்படி கிளம்பியிருக்கீங்க?” என்று கேட்பதைத் தவிர.

வேட்டைக்காரன் - ரஜினிகள் ஆசையால் போட்டுக்கொண்ட சூடு .

டிஸ்கி: ஃபர்ஸ்ட் ஷோ பார்த்துவிட்டு வெளியில் வந்தபோது நீண்ட க்யூவில் தாய்குலங்கள் உட்பட செகண்ட்ஷோவிற்கு நின்றார்கள். இவ்வளோ ஆர்வமா வர்றவங்களுக்கு கமர்சியல் ஃபார்முலாவிலேயே விஜய் வேற ரூட் பிடிச்சா நல்லாயிருக்கும்.

சில நாட்களுக்கு முன்பு எழுதிய கற்பனை வேட்டைக்காரனின் விமர்சனம் இங்கே:

Thursday, December 17, 2009

கீதாரி மவ

ஆடுக அய்யங்கோயில் இலுப்பமர நெழலுல அடைக்கலமாகியிருந்த சித்திரையின் உச்சி வெயில் நேரம். இலுப்ப வேர்ல துண்ட சுருட்டி தலமாட்டுக்கு வச்சபடி” வைகாசி மாசத்துல பந்தல் ஒன்னு போட்டு ரெண்டு வாழமரம் கட்டப் போறேண்டி”ன்னு பாடியபடியே ஆடுகளோட ஆடா படுத்திருந்த பாண்டி எப்போதுமே இப்படித்தான் எதாச்சும் பாடிக்கிட்டே இருப்பான்.

கத்தரி சித்திரைங்கிறதால வெயில்ல மேஞ்ச ஆடுக சில படுத்துக்கிட்டு ’கர்ர்ர்..புர்ர்ர்’ ன்னு மூச்சிறைச்சபடியும்,சில நின்ன வாக்குல கண்கள மூடிகிட்டு வேகமாக அசைபோட்டபடியும், கொட அடங்காத ஒன்னு ரெண்டு ஆடுக நெழல்ல நின்னபடியே மேஞ்சிகிட்டும் இருந்துச்சுக. ஆடுகள நெழலுல பத்திவிட்ட பிறகு மத்தியானத்துல எப்போதும் ஒரு குட்டித் தூக்கம் போட்டுருவான் பாண்டி. ஆனா இன்னைக்கி தூங்காம அவன் பாடுறதுல விசியமிருக்கு, நெசமாவே வைகாசியில மாம மவ சோதிமணிய கல்யாணம் பண்ணிக்கப் போறான்ல அந்த சந்தோசம்தான்.

”கீதாரி குட்டி அய்யரூட்டு பொண்ணுக மாதிரில்ல இருக்கா” ன்னு ஊருக்குள்ள பேசிக்குற அளவுக்கு சோதிமணி நல்ல செவப்பு,பாண்டியோ அய்யனாரு சிலைக்கு பக்கத்துல கொஞ்ச நேரம் நின்னான்னா அவனுக்கு தேங்கா ஒடச்சு கற்பூரம் காட்டிட்டு போயிருவாய்ங்க.

பாண்டியின் மாமன் சின்னச்சாமி கீதாரிக்கு, சொந்த ஊர் ராமநாதபுரம் பக்கம், பாண்டிக்கும் அங்கிட்டுதான். ஒவ்வொரு வருசமும் மாசி கடைசிக்கு வந்து ஆடி மாசம் ஆத்துல தண்னி வர்ற வரைக்கும் இங்கே தங்கி வயக்காடுகளுக்கு கெட வைக்கிறதுதான் பொழப்பு. ஒத்த புள்ளயும் பொட்டப்புள்ளயாப் போனதால தன் தங்கச்சி மவன் பாண்டிய ஆடுமேய்க்க தொணைக்கு வச்சிருக்கான்.

ஊர் நாட்டாம வீட்டின் கொல்லைபுறத்துலதான் கீதாரி குடும்பம் டேரா போடுவது வழக்கம். சின்னச்சாமியின் அப்பன் காலத்துலருந்தே அங்கதான் தங்குறதால நாட்டாமைக் குடும்பத்தோடு ரொம்ப நெருக்கம்.

சின்னச்சாமிக்கும் நாட்டாமை மாரியப்பனுக்கும் சின்ன வயசிலிருந்தே நல்ல நட்பு. மாரியப்பனுக்கு பக்கத்து ஊர் பேங்குக்கு போறதலருந்து எந்த வேலையாக இருந்தாலும் சைக்கிள்தான்.ஆனால் ஒரு ட்ரைவர் வச்சிகிட்டுதான் போவார். இவ்வளவுக்கும் நாட்டாமையின் மகன் பஜாஜ் பல்சர் வைத்திருக்கிறான். ஆனால் அதில் அமர்ந்து செல்ல பயந்து `சே சே இந்தப் பழம் புளிக்கும்` என்பதாய் ஏறவே மாட்டார்.

சின்னச்சாமி இங்கே இருக்கிற இந்த ஆறுமாசமும் நாட்டாமைக்கு ட்ரைவர் வேலைப் பார்க்க வேண்டியிருக்கும். சின்னச்சாமியும் விரும்பியே செய்வான். இருவரும் சின்ன வயது கதைகள சத்தமா பேசிக்கிட்டே மெதுவாக சைக்கிளில் போறத பாத்து,”ரெண்டும் கிளம்பிருச்சுடா”ன்னு சொல்லி நக்கலா சிரிப்பாய்ங்க இளந்தாரிக.


சின்னச்சாமி வேலை விசயமா வெளியில போறப்பவெல்லாம் சோதிமணிதான் பாண்டிக்குத் தொணையா ஆடுமேய்க்க போவா. சின்னச்சாமியோட பொண்டாட்டி ரஞ்சிதத்துக்கு மகளை வயசு பயலோடு ஆடு மேய்க்க அனுப்புவதில் உடன்பாடு இல்லைனாலும் அடிக்கடி நோவுல படுத்துக்குற அவளால வேற ஒன்னுஞ் சொல்லமுடியாம இருந்துட்டா. என்னதான் கல்யாணம் பண்ணிக்க போறவந்தான்னாலும் அதுக்கு முந்தி ஏதாவது எசகுபெசகாயிருச்சுன்னா அசிங்கமா போயிருமேங்கிற பயம் அவளுக்கு.

சோதிமணி,ஆடுமேய்க்க வர்றப்பயெல்லாம் பாண்டிய பாடச் சொல்லி கேட்டுகிட்டே இருப்பா. அந்த மாதிரி நேரத்துல தொறட்டிக்கம்ப பொறடில வச்சு கம்பின் நீட்டிக்கிட்டிருக்குற ரெண்டுபக்கட்டும் கைகள போட்டபடி ரொம்ப லயிச்சு பாடுவான். தினமும் நாட்டாமைக்கு வெளியூர் போற வேலை இருந்துகிட்டே இருக்கணும்னு மனசுக்குள் நெனச்சுக்குவான் பாண்டி.

”கிட்ட வராதய்யா ஒரே மொச்ச நாத்தம்”

”உங்கப்ப மேலுல செண்டு வாசம் அடிக்குமா?”

”ம்ம் என்ன இருந்தாலும் அது எங்க அப்பா”

”அவரு ஓ அப்பன்னா, நான் ஒம்...” நிறுத்திவிட்டுச் சிரிப்பான்.

”சீ ரொம்பதான்” .

என்னைக்கிருந்தாலும் தனக்கு பொண்டாட்டியா வரப்போறவதானேன்னு அப்பப்போ சோதிமணிகிட்ட ஏதாவது சில்மிஷம் பண்ணிக்கிட்டே இருப்பான். அப்பயெல்லாம் இப்படித்தான் கழுவுற மீனுல நழுவுற மீனா பேசுவா.

நாட்டாமையோட சின்னச்சாமி வெளியில் போயிருந்த ஒரு நாளுலதான் ஆடு மேய்க்க போன சோதிமணி மத்தியானத்தோட வீட்டுக்குத் திரும்பி சோந்து படுத்துக்கெடந்தா.

எங்கேயோ வெளியில போயிட்டு வந்த ரஞ்சிதம் சோதிமணிய பாத்துட்டு,

“ஏண்டி வந்திட்ட”

“தலய வலிக்குது,கொஞ்சம் சும்மா இருக்கியா”

“என்னத்துக்குடி இப்படி சடத்துக்குற” என்னு சொல்லிட்டு அடுப்பு பத்த வைக்க போகும்போது ’உவ்வே’ குடிசைக்குள்ளேயே வாந்தி எடுத்துவிட்டாள் சோதிமணி.

“என்னடி பண்ணுது”ன்னு பதறுன ரஞ்சிதத்தின் கேள்விக்கு எதுவுஞ்சொல்லாம சுருட்டிக்கிட்டு படுத்த மகளை கொஞ்ச நேரம் பாத்துகிட்டிருந்துட்டு,

“தலைக்கி குளிச்சு எத்தன நாளாச்சு”

“ ”
“சொல்லுடி”

“ ”

“கொழுப்பெடுத்த முண்ட,ஆடு மேய்க்க போறதுன்னா குதிச்சுகிட்டு கெளம்பயலயே தெரியுண்டி” ன்னு சொல்லிகிட்டே கையில் வைத்திருந்த ஈயக் குண்டானால மூஞ்சியிலேயே இடிச்சா. தாவணியால் போத்திகிட்டு விசும்பிக்கிட்டிருந்த மகளைப் பாத்து தானும் சோந்து போய் உக்காந்துட்டா.

விசயத்த சின்னச்சாமிகிட்ட சொன்னப்பவும் என்னைக்கு இருந்தாலும் நடக்குறதுதானேங்கிற மாதிரி அவனும் பெருசா அலட்டிக்கல.ஆனாலும் இப்படியொரு விசயத்தை சின்னச்சாமியும் சரி, அவன் பொண்டாட்டியும் சரி யாரிடமும் காட்டிக்கல. பாண்டிகிட்டயும் கூட. ஒருவேள சோதிமணி பாண்டிகிட்ட சொல்லியிருந்தா அவனோட சேத்து நாலு பேருக்குத்தான் தெரியும்.

ரெண்டு வருஷம் கழிச்சு நடக்க இருந்த கல்யாணம் அவசர அவசரமாக முடிவானது இதுனாலதான்.

ஊருக்குப்போயி கூடி பண்ற மாதிரியான சூழல் இல்லாததால் கல்யாணத்த இங்கயே கோயில்ல வச்சிக்கலாம்னு முடிவுபண்ணி, நெருங்கிய சொந்தக்காரங்களுக்கு மட்டும் தகவல் சொல்லிவிட்டாச்சு.

கல்யாணத்துக்கு மொத நாளு சாயங்காலத்திலிருந்து கீதாரி வீட்டுக்கு சொந்த பந்தங்கள் வர ஒவ்வொருத்தரையும் பாண்டிதான் பஸ்ஸ்டாண்டிலிருந்து நாட்டாமை வீட்டு பல்சரில் அழைச்சுட்டு வந்துகிட்டிருந்தான்.

பெரிய பெரிய தண்டட்டியோடு கெண்டைக்கால் தெரிய சேலைகட்டி வந்திறங்கிய கீதாரியின் சொந்த பந்தங்களை விசித்திரமாய் பாத்த உள்ளூர் சனம், கீதாரிக் குட்டியின் கல்யாணத்துல நடக்குற சடங்குகள பாக்க ஆவலா இருந்துச்சு.

நாட்டாமை வீட்டு சனங்கதான் எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு செஞ்சிட்டு இருந்துச்சுக. அன்னிக்கு ராத்திரி நாட்டாமை வீட்டுலே ஏற்பாடாயிருந்த விருந்து முடிஞ்சதும் முகூர்த்தம் காலையில் ஆறுலேர்ந்து ஏழு மணிக்குள்ளங்கிறதால நேரமாய் எல்லாரும் உறங்கிவிட விடிய காலம் நாலு மணி வாக்கில் மணப்பொண்ணுக்கு அலங்காரம் செய்ய எழுந்திரிச்ச உறவுக்காரப் பொண்ணு ஒருத்தி ரஞ்சிதத்தை மெல்ல எழுப்பி,

“யத்தே,சோதிமணிய ரொம்ப நேரமாக் காணும்”

“என்னடி சொல்ற இங்கதான் எங்கயாச்சும் இருப்பா”ன்னு சொல்லிகிட்டே வெளியில் வந்து சுத்தும் முத்தும் பாத்து ”சோதிமணி சோதிமணி”ன்னு கூப்பிட்ட ரஞ்சிதத்தின் குரல் கேட்டு மெல்ல சிலபேரு எந்திரிக்க,விஷயம் கொஞ்சம் கொஞ்சமாப் பரவி அந்த விடிய காலை நேரத்தில் எல்லோரும் பரபரப்பாக, ”கல்யாணத்துல விருப்பமில்லாம இருந்தாளோ?”,”எதுக்கும் பக்கத்துல இருக்க கேணியெல்லாம் பாருங்க”,”மரங்கிரத்துல தொங்கிட்டாளோ”ன்னுஆளாளுக்கு ஒன்னு ஒன்னச் சொல்ல ரஞ்சிதம் வெடிச்சு ஒப்பாரி வைக்க ஆரம்பிசிட்டா. சின்னச்சாமிக்கு நெஞ்ச அடைக்குற மாதிரி இருக்க அப்படியே சுவத்த புடிச்சுகிட்டு உக்காந்துட்டான்.

“யாரோ விடிஞ்சும் விடியாம இருக்குறப்ப பஸ்ஸ்டாண்டு பக்கம் போனத பாத்தேன்”ன்னு உள்ளூர்காரர் ஒருத்தர் சொல்ல பல்சரை எடுக்க ஓடுனான் பாண்டி, அங்கே பல்சரையும் காணும்.

Monday, December 14, 2009

தமாஷ் தாத்தா

கிராமங்களில் சில வேடிக்கையான குணாதிசயங்களைக்கொண்ட மனிதர்களைக் காணலாம்.அப்படி ஒரு வேடிக்கையான தாத்தாவின் சாகசங்கள் இங்கே.

ஒரு தடவை கடலை விதைப்பின்போது ஏர் ஓட்டிக்கொண்டிருந்த தாத்தாவின் அண்ணன், விதைத்துக் கொண்டிருந்த தாத்தாவிடம் நெருக்கமா விதைக்கும்படி சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறார்.தாத்தாவும் அண்ணன் சொல் தட்டாமல் தன்னால் முடிந்தவரை நெருக்கமாக விதைகளை விதைத்தும், பெரியவருக்குத் திருப்தியில்லாமல் மீண்டும் மீண்டும் ”இன்னும் கிட்ட கிட்ட போடுடா,அப்பத்தான் நல்லா நெருக்க மொளைக்கும்” என்றபடியே தனது சீனியாரிட்டியைக் காட்டிக்கொண்டே இருக்க கடுப்பான தாத்தா, மண்வெட்டியால் வேக வேகமாக ஒரு குழியைத் தோண்டி கூடையில் வைத்திருந்த மொத்த விதையையும் அதிலே கொட்டிவிட்டு “வெதச்சாச்சு, நல்லா நெருக்க மொளைக்கும்” என்ற சொல்லிவிட்டு விடு விடுவென்று வீட்டை நோக்கி நடந்திருக்கிறார்.

====================
தாத்தா, ஊரின் நாட்டாமைக்காரர்களில் ஒருவர்.அது திருவிழா சமயம் கோயிலுக்கு வாங்க வேண்டிய பொருட்களை எழுதி வைப்பதற்காக,ஏழாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த தனது பேரனை அழைக்க, பேரனும் பேப்பர் பேனா சகிதம் வர, ”பூ,பழம் என்று ஒவ்வொன்றாய் நான் சொல்லச் சொல்ல எழுதிக்கொண்டே வா” என்றுவிட்டு முதலில் ”பூ” என்று சொல்லியிருக்கிறார். பேரனும் ’பூ’ என்று எழுதிவிட்டு ”அப்புறம்” என்க. ”அதுக்குள்ள எழுதிட்டியா” என்றபடியே பேப்பரைப் பார்த்த தாத்தா ஒரே ஒரு எழுத்து மட்டும் இருந்ததைக் கண்டு செம்ம கடுப்பாகி “இதான் உங்க வாத்தி சொல்லிக்கொடுத்ததா” என்று பேரனின் காதைத் திருகியபடியே உள்ளூரில் இருக்கும் வாத்தியார் வீட்டிற்கே இழுத்துச் சென்று, ”யோவ் வாத்தி என்னய்யா பாடம் சொல்லிக் கொடுக்குற” என்று கூறிவிட்டு நடந்தவற்றைச் சொல்ல, வாத்தியாரும் ”அவன் சரியாத்தான் எழுதியிருக்கான்” என்றதும், ”என்னய்யா கோயிலுக்கு பூ வாங்குறது உங்களுக்கு பொசுக்குன்னு ஒத்த எழுத்துல எழுதுற விசியமா போச்சா, உங்கிட்ட படிச்சு இவன் உருப்பட்ட மாதிரிதான்” என்று வாத்தியாரையும் திட்டியபடியே பேரனை அழைத்துச் சென்றார்.

======================
அப்போதெல்லாம் கிராமங்களில் முடிவெட்டும் தொழிலாளர்களுக்கு கூலியாய் வருடத்திற்கு இவ்வளவு என்று நெல் கொடுப்பதுதான் வழக்கம். எங்க ஊரின் முடிவெட்டும் கடை வைத்திருப்பவர் சரியான நக்கல் பேர்வழி. யாரையும் எளிதாய் நக்கலடிப்பார். ஒரு முறை தாத்தா முடி வெட்டிக் கொண்டிருந்தபோது முதல் நாளின் மொச்சைப் பயிர் வேலை செய்ய காற்று சற்று சத்தமாகவே பிரிந்துவிட,”ஐயையோ,இவன் சும்மாவே நக்கலடிப்பான், இதை வைத்து மானத்தை வாங்கிட போறான்” என்று பயந்த தாத்தா பேச்சை மாற்றும் விதமாக ”என்னடா ராமா, கூலியெல்லாம் ஒழுங்கா கொடுக்குறாய்ங்களா?” என்றதும்,அமைதியாய் முடிவெட்டிக்கொண்டிருந்த ராமனோ ரொம்பவும் கேஷுவலாக, ”ப்ச் என்னத்த, கொடுத்தவுக கொடுத்தவுகதான் உங்கள மாதிரி கு-வுனவுக கு-வுனவுகதான்” என்று தாத்தாவை டரியலாக்க, முடிவெட்டக் காத்திருந்த மற்றவர்கள் அடக்க மாட்டாமல் சிரிக்க,ஷேவ் பண்ணிக்கொள்ளாமல் தெறித்து ஓடிவந்திருக்கிறார் தமாஷ் தாத்தா.

==================

கடும் காய்ச்சலால் அவதியுற்ற தாத்தாவை முதன் முறையாக லோக்கல் டாக்டரிடம்(RMPH என்று ஏதோ ஒரு படிப்பு படித்தவர். பரம்பரைத் தொழிலாக வாரிசுகளும் இப்போது டாக்டர்ஸ்) அழைத்துச் சென்றார்கள். ஊசி என்றாலே பயப்படும் தாத்தா,மருத்துவரை அனுகுவதே இல்லை.இந்த முறை வேறுவழியின்றி உயிர்பயம்கொண்டு வந்துவிட்டார். டாக்டரின் அறைக்குள் சென்ற பெரியவரை அங்கிருந்த குஷன் சேரில் அமரச் சொன்னதும், அதுவரை அப்படியான சேரில் அமர்ந்திராத தாத்தா மிகவும் பயந்து சீட்டின் நுனியில் பட்டும் படாமலும் உட்கார, டாக்டர் அதிவேக செக் அப் செய்துவிட்டு, ஒன்றும் பயப்பட வேண்டாம்,இந்த மாத்திரைகளை சாப்பிட்டா ரெண்டு நாளில் சரியாகிடும்” என்றபடியே பிரிஸ்கிரிப்ஷனை கொடுத்துவிட்டு, ஃபீஸ் இருபது ரூபாய் கேட்க,அவ்வளவு பெரிய தொகையை ஃபீஸாக எதிர்பார்த்திராத தாத்தா, ”ஏன் டாக்டர்,வந்த உடனே உக்காரச் சொன்ன, கையபுடிச்சுப் பாத்த,சீட்டுல என்னமோ கிறுக்குன, இதுக்குபோயி இருபது ரூவாயா?, இப்படி பட்டும் படாமலும் உக்காந்ததுக்கே இருபது ரூவாய்னா கொஞ்சம் அழுத்தி உக்காந்தா அம்பது ரூவா கேப்ப போலிருக்கே?,படிக்காத பயன்னு ஏமாத்த பாக்குறியா” என்று கலாட்டா செய்ய ஃபீஸே வேண்டாம் என்று டரியலானார் டாக்டர்.

இவரைப் பற்றி இன்னும் சில ரகளையான நினைவுகள் உண்டு. பிறிதொரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன்

Friday, December 11, 2009

போட்டோ கலாட்டா

டிஸ்கி:முற்றிலும் நகைச்சுவைக்காக மட்டுமே.