இசைஞானி இளையராஜாவின் 90 ஹிட்ஸ்

Monday, 13 July, 2009

1990 களில் இசைஞானி இசையமைப்பில் வெளிவந்த சில அசத்தலான டூயட் பாடல்களை ஏற்கனவே இரவில் கேட்க இதமான காதல் பாடல்கள் பகுதி 2 ,பகுதி 1 ஆகிய பதிவுகளில் கொடுத்ததை அடுத்து இப்பதிவில் Female solo வகையில் அமைந்த பாடல்களில் எனது தேர்வாக சில பாடல்கள்.

1
.ஓஹோஹோ காலைக் குயில்களே - உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்
http://www.youtube.com/watch?v=0f4mZcPvtl0

2.
வண்ணப் பூங்காவனம் சின்ன பிருந்தாவனம் - ஈரமான ரோஜாவே

http://www.youtube.com/watch?v=Lmuag_vG2EE

3.
விளக்கு வெப்போம் விளக்கு வெப்போம் - ஆத்மா

http://www.youtube.com/watch?v=-SgXKzHhFwI

4.
அடி ஆடி வரும் பல்லாக்கு - ஐ லவ் இந்தியா

http://www.megavideo.com/?v=P2CZNDS4

5.
இவளொரு இ
ங்குருவி - பிரம்மா
http://www.youtube.com/watch?v=CztV3oi4aGc

6.
என்னுள்ளே என்னுள்ளே - வள்ளி

http://www.youtube.com/watch?v=IFuzKsLrWvk

7.
மாலையில் யாரோ - சத்ரியன்

http://www.youtube.com/watch?v=_NRxA_HR8Us

8.
வந்ததே ஓ ஓ - கிழக்கு வாசல்

பாடல் இங்கே:

9. தாலாட்டும் பூங்காற்று - கோபுர வாசலிலே
http://www.youtube.com/watch?v=326Usof7ZOQ&feature=related

10.ராசாவே உன்னை விட மாட்டேன் - அரண்மனைக் கிளி
http://www.youtube.com/watch?v=88lmdr7KSFo

இளையராஜாவின் இசையமைப்பில் இல்லாத கீழே இருக்கும் இந்த இரண்டு பாடல்களும் பிடித்தமானதே.

11.அதிகாலைக் காற்றே நில்லு - தலை வாசல்

1
2.தத்தித்தோம் - அழகன்
http://www.youtube.com/watch?v=BOf4APQQ2hc


ஓரிரு வாரங்களுக்கு இப்படியான மொக்கை பதிவுகள்தான் வருமென எச்சரிக்கை விடுத்துக் கொள்கிறேன்.

Read more...


டயலாக்ஸ் : கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க

Friday, 10 July, 2009

சென்னையில் வேலை தேடும் வேலையில் இருந்த இரண்டு நண்பர்களிடையே நடந்த மேன்ஷன் உரையாடல்.

நண்பர்1:டேய் எறுமை எழுந்திரிடா மணி பத்தாச்சு இப்படித் தூங்கதான் தஞ்சாவூரிலிருந்து வந்திருக்கியா?

(தூக்கத்தில் இருந்த நண்பர் 2 மிகுந்த டென்ஷனோடு)

நண்பர்2:ஏன்டா பன்னி, இப்படி டெய்லியும் என்னை எழுப்பிவிடத்தான் நீ கோயம்புத்தூரிலிருந்து வந்திருக்கியா?

நண்பர்1:?????


சாலையோரத்தில் நடந்து போகும் நண்பர் மீது டூ வீலர் ஓட்டி வரும் ஒரு டீன் ஏஜ் பையன் பேலன்ஸ் தவறி மோதியதும் நடந்த உரையாடல்.

பையன்:அண்ணே புது வண்டி இன்னிக்குத்தாண்ணே எடுத்துட்டு வந்தேன்,சாரிண்ணே இப்போதான் ஓட்டக் கத்துக்கிறேன் அதான் தெரியாம...

நண்பர்:என்னைப் பார்த்தா உனக்கு எலுமிச்சம்பழம் மாதிரி இருக்கா? எலுமிச்சம்பழம் ரவுண்டா மஞ்சளா சின்னதா இருக்கும் அதுல ஏத்து.

பையன்:?????

இரண்டு நன்பர்கள் ஷேர்ட் பர்சேஸ் செய்தபோது,சேல்ஸ்மேன் 600 ரூபாய் ஷேர்ட்டில் ஆரம்பித்து படிப்படியாகக் குறைந்து இருனூற்றைம்பது ரூபாய் ஷேர்ட்டைக் காட்டியதும்,அதில் ஒன்றை செலக்ட் செய்த நண்பரிடம் மற்றொரு நண்பர் கிசுகிசுப்பான குரலில்,

நண்பன் 1: ஏன்டா நாதாரி கடைசியா உங்கிட்ட இரனூற்று ஐம்பது ரூபாய்தான் இருந்திச்சா?

நண்பன் 2:கடைசியா இல்லடா, கடையில் நுழைஞ்சப்பலேருந்தே அவ்வளவுதான்டா இருந்துச்சு.

நண்பர் 1:?????

விடுதியில் தங்கிப் படிக்கும் மூன்று மாணவர்களுக்குள் தங்களின் தேர்வு முடிவுகளைப் பற்றி பேசிக்கொண்டது,

நண்பர் 1 :என்னடா ரிசல்ட் என்னாச்சு?

நண்பர் 2:ச்சே ஒரு பேப்பர்ல ஜஸ்ட் நாலு மார்க்குல போச்சுடா.

(அறையில் படுத்திருக்கும் மற்றொரு நண்பணிடம் நண்பர் 1)

நண்பர்1:உன்னோட ரிசல்ட் என்னாச்சுடா?

(மூன்றாவது நண்பர் பதில் சொல்வதற்குள் இரண்டாவது நண்பர் முந்திக்கொண்டு)

நண்பர் 2:எனக்காவது நாலு மார்க்குல போச்சு,அவன் எடுத்ததே நாலு மார்க்தாண்டா.(என்று சொல்லியபடியே ஹா ஹாவென சிரிக்க,டென்ஷனான மூன்றாவது நண்பர்)

நண்பர் 3:செத்தவன் காலு வடக்கே இருந்தா என்ன,தெற்கே இருந்தா என்ன?
மொத்தத்தில் ரெண்டு பேரும் ஃபெயிலு இதில என்ன உனக்கு கம்பேரிஷன் வேண்டிக்கிடக்கு.

(நண்பர் 1 சிரிக்க ,நண்பர் 2 முறைக்க நண்பர் 3 இழுத்து போர்த்திக் கொண்டு தூக்கத்தைக் கண்டினியூ செய்கிறார்.)

Read more...


இரவில் கேட்க இதமான காதல் பாடல்கள்----2

Monday, 6 July, 2009

90 களில் இளையராஜாவின் இசையமைப்பில் எனக்குப் பிடித்த காதல் பாடல்களின் முதல் தொகுப்பை இரவில் கேட்க இதமான காதல் பாடல்கள் என்ற தலைப்பில் பதிவிட்டதைத் தொடர்ந்து இரண்டாவது தொகுப்பாக இந்தப் பாடல்கள். இவையும் இரவில் கேட்க இதமான பாடல்களே.முதல் தொகுப்பில் கொடுத்திருந்தவை முன்னமே உங்களுக்கு பரிச்சையமான பாடல்கள்தான் என்றாலும், நான் கொடுத்திருக்கும் வரிசையில் பதிவு செய்து கேட்டுப் பார்த்துவிட்டு எப்படி இருக்கிறது அந்த அனுபவம் என்றுச் சொல்லுங்கள்.

இந்த இடுகையில் கொடுத்திருக்கும் பாடல்களும் முதல் பதிவைப் போன்றே டூயட் பாடல்களே.


கண்ணே இந்த கல்யாணக் கதை கேளடி - ஆணழகன்

ஒரு போக்கிரி ராத்திரி பார்க்கிற பார்வைதான் - இது நம்ம பூமி
http://www.youtube.com/watch?v=ycJ3XgRoh60

காத்திருந்தேன் தனியே - ராசா மகன்


நினைத்த வரம் கேட்டேன் - காதல் ரோஜாவே
http://www.youtube.com/watch?v=CuBWK4F3RWc

அல்லா உன் ஆணைப்படி - சந்திரலேகா

http://www.youtube.com/watch?v=b0vFRWTjY-4

உடல் தழுவ தழுவ நழுவிப் போகுதே - கண்மணி


இது மானோடு மயிலாடும் காடு - எங்க தம்பி

காதல் வானிலே காதல் வானிலே - ராசைய்யா
http://www.youtube.com/watch?v=ZzK8LykLHcU

வருது வருது இளங்காற்று - பிரம்மா
http://www.youtube.com/watch?v=J_ByjeAahck

வா காத்திருக்க நேரமில்லை - காத்திருக்க நேரமில்லை
http://www.youtube.com/watch?v=9SbWpTCJLik

வெண்ணிலவில் மல்லிகையில் - அதிரடிப்படை

எனது பதின்மம் 90களில் அமைந்ததாலோ என்னவோ எப்போதும் இந்த சமயத்தில் வந்த பாடல்கள்தான் மனதிற்கு நெருக்கமாக இருக்கிறது.மேலும் 80 களில் வெளிவந்தப் பாடல்களின் தொகுப்பு பெரும்பாலான இளையராஜாவின் ரசிகர்களிடம் இருக்கும், ஆனால் நான் கொடுத்திருக்கும் பாடல்கள் பெரும்பாலானோரிடம் இருப்பதில்லை. அவர்களின் கலக்ஷனிலும் இந்தப் பாடல்கள் இருந்தால் நன்றாக இருக்குமே என்பதற்காகவே இந்தப் பதிவு.

முதல் தொகுப்பு யூ டியூப் இணைப்புடன் இங்கே:
இரவில் கேட்க இதமான காதல் பாடல்கள்

Read more...


டூரிங் டாக்கீஸ் நினைவுகள்...

Friday, 3 July, 2009

"இன்னான்விடுதி ரெங்கம்மா","செல்லம்பட்டி துரை" பத்து பதினைந்து வருடங்களுக்கு முன் எங்கள் பகுதியில் இந்த பெயர்கள் அத்தனைப் பிரபலம். எங்க ஏரியாவின் சத்யம்,ஐனாக்ஸ் இந்த இரண்டு டூரிங் டாக்கீஸ்கள்தான்.

எண்பதுகளின் மையத்தில் தமிழக அரசின் குடும்ப
க் கட்டுப்பாட்டு பிரச்சாரங்களைத் தாங்கிய கார்டூன் படங்களை அப்போதெல்லாம் கிராமங்கள் தோறும் 35 mm திரையில் ஓட்டுவார்கள், அதையே ஒன்ஸ்மோர் கேட்டுப் பார்த்த பயமக்க நாங்கல்லாம். பஞ்சாயத்து தொலைக்காட்சிகூட எங்கள் ஊருக்கு எட்டிப் பார்த்திராத அந்த நேரத்தில்தான் பக்கத்து ஊர்களான இன்னான்விடுதியிலும், செல்லம்பட்டியிலும் அதிரடியாக இந்த டூரிங் டாக்கீஸ்கள் அவதரித்தன.

வருஷத்துக்கு ஒரு தரம் பொங்கல்,தீபாவளிக்கு தஞ்சாவூருக்கு போறப்போ பெரிய பெரிய சினிமா போஸ்டர்களையெல்லாம் பார்த்ததையே ஒரு வாரத்துக்குக் கதைக் கதையா பேசித் திரிவோம். அப்படி வாய்பிளந்துப் பார்த்த போஸ்டர்களை எங்க ஊரிலேயே பார்க்கும் பாக்கியம் இந்த டூரிங் டாக்கீஸ்களால் கிடைத்தது யாம் பெற்ற பேறு.

ஒரு ஊருக்கு இரண்டு போஸ்டர்கள் என்று கணக்கிட்டு ஒவ்வொரு ஊரிலும் ஆட்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் போஸ்டர்களை ஒட்டுவார்கள். போஸ்டர் ஒட்ட வருபவர் மைதா மாவை சுவற்றில் பூசிப் பிறகு கொண்டு வந்திருக்கும் போஸ்டரின் பின்பக்கமும் பூசி (அவ்வளவு சஸ்பென்ஸாக பூசுவார்) திருப்பி ஒட்டுவதற்குள் "ரஜினி படம்டா", "இல்ல விசியாந்து படம்தான் எவ்வளவு பந்தயம்" என்று அங்கே கூடியிருக்கும் விஸ்கான்களிடையே பெரிய பட்டி மன்றமே நடக்கும்.

ஒரு படம் அதிகப் பட்சமாக ஒரு வாரம் ஓடும். ஒரு வாரத்திற்கு மேல் ஓடினால் ஆட்டோவில் விளம்பரமெல்லாம் செய்து கொண்டு வருவார்கள். எனக்குத் தெரிந்து பத்து நாட்களைத் தாண்டி இரண்டு படங்கள் ரெங்கம்மாவில் ஓடியிருக்கிறது ஒன்று "கரகாட்டக்காரன்" மற்றொன்று "மைதிலி என்னைக் காதலி" (இந்த படத்தை சமீபத்தில்தான் பார்த்தேன் உஸ்ஸ் முடியல, சரி வேண்டாம் ஆட்டய கவனிங்க) .

ஒவ்வொரு வாரமும் என்ன படம்னு தெரிஞ்சிக்க போஸ்டர் ஒட்டியிருக்கும் இடத்திற்கு அவனவன் கார், பைக் எல்லாம் எடுத்துகிட்டு(பசங்க படத்தில பார்திருப்பீங்கல்ல அந்த மாதிரியான கார்களும்,பைக்கும்தான்) ஓ(
ட்)டிவந்து பார்ததையெல்லாம் இப்போது நினைத்தாலும் கண்முன்னே காட்சியாகிறது.
போஸ்டர்கள் ஒட்டியிருக்கும் சுவற்றின் சொந்தக்காரர்கள் அந்த போஸ்டரை வேறு யாரும் கிழித்து விடாமல் பார்துக் கொண்டால் அடுத்தப் படத்திற்கு அவர்களுக்கு இலவச அனுமதி கிடைக்கும்.அதனால் எப்போதும் ஒருத்தர் அங்கே காவல் இருப்பார்கள். அவர்கள் அசரும் நேரம் பார்த்து போஸ்டரைக் கிழித்துக் கொண்டு ஓடிவிடுவோம்.(அப்படி கிழிக்கப்பட்ட போஸ்டர்களில் இருக்கும் தலைவர்கள் அடுத்தநாள் எங்கள் புத்தகத்தின் அட்டைகளாகச் சிரிப்பார்கள்).

ரெங்கம்மாவில் பெரும்பாலும் பழைய படங்களாகவே ஓடும், மாறாக துரையில் புதுப்புது படங்களாக ரிலீஸ் செய்வார்கள்.(இங்கே பழைய படங்கள் என்று சொல்வது "லவகுசா" காலத்துப் படங்கள்,புதுப் படங்கள் என்று சொல்வது முரட்டுக் காளை ரேஞ்ச் படங்கள். துரையில் முரட்டுக்காளை ரிலீஸ் ஆகியிருந்த சமயத்தில் தஞ்சையில் "அண்ணாமலை" ஓடிக்கொண்டிருந்தது).

பொங்கல்,தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் "மாப்பிள்ளை","கேப்டன் பிரபாகரன்" போன்ற ரிலீஸ் ஆகி இரண்டு மூன்று வருடங்களேயான ரொம்பப் புதுப்படங்களையெல்லாம் போட்டு அசத்துவார்கள். இதிலும் துரையில் ரஜினி படம் ஓடினால், ரெங்கம்மாவில் விஜயகாந்த் படம்தான் ஓடும் என்று கண்மூடிக் கொண்டுச் சொல்லிவிடலாம். அந்த அளவிற்கு எங்க ஏரியாவில் இந்த இருவருக்கும் ரசிகர்கள் உண்டு. இதில் இன்னொரு விஷயம் என்னவெனில் ரஜினிக்கோ, விஜயகாந்துக்கோ கிடைக்காத வ
வேற்பு அப்போதைய ராமராஜன் படங்களுக்கு இந்த டூரிங் டாக்கீஸ்களில்(குறிப்பாக ரெங்கம்மா) கிடைத்தது. மேளதாளம்,தோரணம் என முழக்கி எடுத்து விடுவார்கள். வருடத்திற்கு இரண்டு முறை கண்டிப்பாக "கரகாட்டக்காரனும்", "நம்ம ஊரு நாயகனும்" ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஓட்டுவார்கள். அதே மாதிரி டி.ராஜேந்தர் படங்களுக்கும் பெரிய வரவேற்பு இருந்தது.

டீ.ஆரின் "எங்க வீட்டு வேலன்" ஓடியபோது சினிமா கொட்டாயின்(அப்படித்தான் சொல்வோம்) முன்புறம் பெரிய வேப்பங் கிளையை வெட்டி வைத்து அதன்கீழ் ஒரு அம்மன் படமும், ஒரு குடத்தில் மஞ்சள் துணியைக் கட்டி உண்டியலாகவும் வைத்திருந்தார்கள். படத்தில் வரும் சாமி சிலைகளை இரண்டு முறை கேமராவில் முன்னும் பின்னும் ஜூம் செய்து காட்டிவிட்டால் போதும் நிறைய அம்மணிகளுக்கு சாமி வந்து ஆட ஆரம்பித்துவிடுவார்கள். பிறகு அங்கே இந்த மாதிரி படங்களுக்கென்றே ஸ்பெஷல் அப்பாயின்ட்மென்ட் பூசாரி ஒருத்தர் இருப்பார் அவர் இவர்களையெல்லாம் வெளியேற்றி கொட்டாயின் முன்புறம் இருக்கும் அம்மன் படத்தின் முன்பு ஆடவிடுவார். "டேய் ம்ம்ஹூம்" என வினோத சத்தங்களையெல்லாம் அரங்கெற்றும் இந்த சாமியாடி அம்மணிகள், வாங்கி திங்க என கொண்டு வந்திருக்கும் ஐம்பது காசு, ஒரு ரூபாய்களை புசாரியின் கட்டளைப்படி உண்டியலில் போட்டுவிட்டு பூசாரி கொடுக்கும் உச்சந்தலை அடியையும், திறுநீரையும் வாங்கியபடி மீண்டும் ஆட்டைக்கு வந்துவிடுவார்கள். அதுவரை படம் நிறுத்தப் பட்டிருக்கும். "ஆடி வெள்ளி","வெள்ளிக்கிழமை விரதம்" போன்ற பக்தி படங்களுக்கு இந்த சாமியாட்ட கும்பலின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

இவர்கள் சாமியாடி முடிக்கும்வரை கேண்டீன் வியாபாரம் சூடுபிடிக்கும், கடலை மிட்டாய், முறுக்கு,ஆரஞ்ச் கலர் என ஹைகிளாஸ் ஐட்டங்களயெல்லாம் வாங்கும் அளவிற்கு எங்களிடம் காசு இருக்காது. தரை டிக்கெட்டுக்கு எழுபத்தைந்து பைசா தேற்றுவதே பெரிய காரியமாக இருக்கும். எனவே தியேட்டருக்கு வெளியே விற்கும் நாவப்பழம், கொடுக்காப் புளி, நெல்லிக்காய், வேர்க் கடலை ஆகியவற்றை ஆரம்பத்திலேயே வாங்கிச் சென்றுவிடுவோம். அதிக பட்சமாக எங்களின் ஸ்னாக்ஸ் செலவை ஐம்பது பைசாவில் முடித்துக் கொள்வோம். ஒன்னார்ரூவாய் பெஞ்ச் டிக்கெட்டும், ரெண்டு ரூவா தேங்காய் நார் குஷன் சீட்டிலும் உட்கார்ந்து படம் பார்க்க வேண்டுமென்பது அப்போதெல்லாம் பெரிய லட்சியமாக இருந்தது.

பண்டிகை நாட்களில் மட்டும் நான்கு காட்சிகள் ஓட்டுவார்கள். மற்ற நாட்களில் இரண்டு காட்சிகள் மட்டும்தான். பண்டிகை நாட்களில்தான் படம் பார்க்க பர்மிஷன் கிடைக்கும், அதுவும் காலைக் காட்சி அல்லது மேட்னி ஷோவுக்கு. இந்த மாதிரி பகல் நேரக் காட்சிகளைப் பார்க்க நேரிடும்போது புரஜெக்டர் ரூமிலிருந்து வரும் ஒளியைவிட சூரிய ஆப்பரேட்டர் அடிக்கும் ஒளிதான் திரையை அதிகம் ஆக்ரமிக்கும். அத்தனை ஓட்டைகள் இருக்கும் சினிமாக் கொட்டாய்களின் கூரையில். மழைக் காலத்தில் பெரும்பாலும் காட்சிகளை ரத்து செய்துவிடுவார்கள்.

இரவு காட்சிகள் செல்வதுதான் பயங்கர திரில் நிறைந்தது. துரையும், ரெங்கம்மாவும் எங்க ஊரிலிருந்து தலா நான்கு கிலோமீட்டர் தூரத்தில் எதிரெதிர்த் திசையில் அமைந்திருக்கும். பெரும்பாலும் இரவுக் காட்சிகளுக்கு செல்லும்போது வீட்டாருக்குத் தெரியாமல் திருட்டுத் தனமாகவே போவோம். செல்லம்பட்டித் துரைக்கு செல்லும் வழி ஒன்னும் பிரச்சனை இருக்காது. மெயின் ரோட்டிலேயே சென்றுவிடலாம்.ஆனால் ரெங்கம்மாவிற்கு செல்லும் வழிதான் நிறைய அட்வென்சர்களை செய்ய வேண்டியிருக்கும். முழுவதும் வயல் காடுகளும், சவுக்குத் தோப்புகளும் நிறைந்து இருக்கும். இந்த சவுக்குத் தோப்புகளுக்கிடையில் ஒரு முனியன் கோவில் இருக்கும், அங்கே ஒரு ஹாஃப் சைஸ் 'சரவண பெலகுலா' ரேஞ்சுக்கு பெரிய முனியன் சிலை கையில் பெரிய அருவாளோடு வீற்றிருக்கும், பக்கத்தில் ஒற்றை பனை மரம் ஒன்று இருக்கும். படம் பார்க்கச் செல்லும்போது ஓரளவிற்கு வெளிச்சத்திலேயே சென்று விடுவோம், ஆனால் திரும்பி வரும்போதுதான் "ஜெகன் மோகினி" எபெஃக்டெல்லாம் கேட்கும், அதுவும் அந்த சவுக்குத் தோப்பில் காற்றடிக்குபோது ஒரு சத்தம் வரும் பாருங்க டி.டி.எஸ் எபெஃக்டெல்லாம் தோத்துப் போகும். கரக்டா முனியன் கோவில் நெருங்கும் சமயத்தில் எல்லோரும் எடுப்போம் ஓட்டம் அந்த சவுக்குத் தோப்பை கடக்கும் வரை "ஆய் ஊய் குத்தி புடுவேன், வெட்டிப் புடுவேன்" என்று எங்களது பயங்களை வீரமாக மாற்றியபடி கத்திக் கொண்டே ஒருகிலோ மீட்டர் தூரம் வந்த பிறகே ஓட்டத்தை நிறுத்துவோம். இந்த டூரிங் டாக்கீஸில் நான் கடைசியாகப் பார்த்தப் படம் விஜய் நடித்த "விஷ்ணு". இதுவும் கூட திருட்டுதனமாகப் பார்த்த படம்தான்.

இப்படி எத்தனையோ நினைவுகளை என்னைப் போன்ற பலரிடம் விதைத்து வைத்திருக்கும் இந்த டூரிங் டாக்கீஸ்களில் ஒன்று இன்று டி.என்.சி நெல் அடுக்கும் குடோனாகவும், மற்றொன்று பாழடைந்து புதர்களும்,கரையான் புற்றுகளுமாக காட்சியளிக்கிறது.எத்தனை ஆர்ப்பாட்டம், விசில்கள், கால்தடங்கள் பதிந்த இடம் இன்று பொலிவிழந்து, மனுஷ பயலுக்கு எதையோ உணர்த்தியபடியே அமைதியாக காட்சியளிக்கிறது.

இன்று சத்யம்,ஐனாக்ஸ் தொடங்கி வெளிநாட்டு திரையரங்கில் கூட படம் பார்த்துவிட்ட போதும் மனசு ஏனோ அந்த ஆறு மணி தேய்ந்த ரெக்கார்ட் சவுண்டுக்கு ஏங்குகிறது.(ஒரு வேளை வயசாயிடுச்சோ).


இந்த பதிவிற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து,அடுத்தப் பதிவில் எங்க ஊருக்கும் தொலைக்காட்சி வந்த கதையைப் பற்றி எழுதலாம் என்றிருக்கிறேன்.

Read more...


டயலாக்ஸ்: கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க....

Thursday, 2 July, 2009

பணி நிமித்தம் சென்னையில் இருக்கும் நண்பர் ஒருவர் தனது ஊர்த் திருவிழாவைப் பற்றி ஊரில் இருக்கும் தனது நண்பரிடம் தொலைபேசியில் பேசியது.

சென்ற வருடம்:

நண்பர் 1:என்னடா பங்ஸ்(பங்காளி) திருவிழாவெல்லாம் எப்படி போச்சு?

நண்பர் 2:அத ஏண்டா கேக்குற இந்த வருஷமும் வடக்கித் தெருவாய்ங்களுக்கும் ,தெக்கித் தெருவாய்ங்களுக்கும் சண்ட,கரகாட்டக்காரிகள கையப் புடிச்சு இழுத்து பெரிய ரகள பண்ணிட்டாய்ங்கடா.

நண்பர் 1:காட்டுமிராண்டி கூட்டம்டா,இந்த மயித்துக்குத்தான் நான் ஊர் பக்கமே வாரதில்ல..

இந்த வருடம்:

நண்பர் 1: என்னடா பங்ஸ் திருவிழாவெல்லாம் எப்படி போச்சு?

நண்பர் 2: யப்பா எனக்குத் தெரிஞ்சு இந்த வருஷந்தாண்டா ஒரு சண்ட சச்சரவு இல்லாம திருவிழா நடந்துச்சு.நீயும் வந்திருக்கலாம்டா.

நண்பர் 1: ஆமா,அங்க என்ன அமைதி மாநாடா நடத்துறிய.ஒரு திருவிழான்னா நாலு சண்ட சத்தமுன்னு இருந்தாத்தானடா பாக்க நல்லா இருக்கும்.

நண்பர் 2:?????

காலை நேரத்தில் நிறைய கல்லூரி மாணவ,மாணவிகளை ஏற்றியபடியே வந்து கொண்டிருக்கும் பஸ்ஸில் தங்களுடைய நிறுத்தத்தில் இறங்க எத்தணிக்கும் இரு மாணவிகள் படியில் ஜொள்ளுவிட்டபடியே நிற்கும் மாணவர்களிடம்,

மாணவி 1:கொஞ்சம் வழிய விடுங்க இறங்கணும்

மாணவி 2:அதான் ஏற்கனவே லிட்டர் லிட்டரா வழியுதே இன்னுமா வழியணும். அதற்கு மாணவர்கள் சொன்னது சென்ஸார்(யூகிக்க முடியுதா?).


பையனின் அரையாண்டுத் தேர்வின் மதிப்பெண் பட்டியலைப் பார்த்த அவனது தந்தை அடி பிரித்து எடுத்துக் கொண்டிருக்கையில் அங்கே வந்த பக்கத்து வீட்டுக்காரர்,

பக்கத்து வீட்டுக்காரர்:எதுக்கு அவன இப்படி போட்டு அடிக்குறீங்க?

அப்பா:பாருடா முப்பத்தாறு மார்க்குதான் வாங்கியிருக்கான்.

பக்கத்து வீட்டுக்காரர்:சரி சரி விடுங்க,அடுத்த பரிச்சையிலே நிறைய மார்க் எடுப்பான். ஆமா எந்த சப்ஜெக்டுல மாப்ள இவ்வளவு கொறச்சலா எடுத்திருக்க(பையனைப் பார்த்துக் கேட்கிறார்).


அப்பா:ஏலேய் அவன் மொத்தமாவே எல்லா பாடத்திலேயும் சேர்த்தே அவ்வளவுதாண்டா எடுத்திருக்கான்.

இதைக் கேட்ட பக்கத்து வீட்டுக்காரர் கொஞ்சம் டரியலாகி பின் சொன்ன டயலாக்கில் டரியலானார் பையனின் அப்பா.

பக்கத்து வீட்டுக்காரர்:அப்போ உம்ம புள்ள டோட்டலா(total) பாஸாகிட்டான்னு சொல்லுங்க.

Read more...


நாடோடிகள் என் பார்வையில்..........

Monday, 29 June, 2009


நண்பனின் காதலுக்கு உதவும் மூன்று நண்பர்களைப் பற்றிய கதை. பெரும்பாலும் இந்த மாதிரிக் கதைகளில் காதலர்களைப் பற்றி இடைவேளை வரையிலும், அதன் பிறகு காதலர்களுக்கு வரும் பிரச்சனைகளை சாமாளித்து, நண்பர்கள் அவர்களைப் பத்திரமாக ட்ரெயினிலோ, பஸ்ஸிலோ அல்லது நெடுஞ்சாலைகளில் செல்லும் ஏதோ ஒரு வாகனத்திலோ பல கஷ்டங்களுக்கிடையே வழியனுப்பிவிட்டு டாட்டா காட்டுவதோடு படம் முடிவடையும். ரசிகனும் நட்புன்னா இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே வெளியே வருவான்.ஆனால் இயக்குனர் சமுத்திரகனி காதலுக்கு உதவும் நண்பர்களை முக்கிய கதாப்பாத்திரங்களாக்கி காதலர்களைச் சேர்த்து வைத்தபிறகு நண்பர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களையும்,நட்பு என்றப் பெயரில் இளமை வேகத்தில் பின்விளைவுகள் எதையும் யோசிக்காத இளைஞர்களுக்கு ஒரு பாடத்தையும் இந்தப் படத்தின் மூலம் மிக அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்.அறிவுரைக் காட்சிகளை நேரடியாக வைக்காமலேயே இளைஞர்களும் ஏற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தியிருப்பது இயக்குனரின் சாமர்த்தியம்.

சிறந்த இயக்குனராக, நல்ல தயாரிப்பாளராக ஏற்கனவே வெற்றிப் பெற்றிருக்கும் சசிக்குமார், தான் ஒரு சிறந்த நடிகர் என்பதையும் இப்படத்தின் மூலம் நிறுபித்திருக்கிறார். சுப்ரமணியபுரத்திலேயே அவரின் நடிப்பு நன்றாக இருந்தது அதைவிட இந்தப் படத்தில் நிறைய ஸ்கோப் நடிப்பில் ஸ்கோர் செய்ய. ரொமான்ஸ், காதலர்களைச் சேர்த்து வைக்க எடுக்கும் முயற்சிகளில் காட்டும் வேகம், குடும்பத்தாரிடம் காட்டும் பாசம், நண்பர்களோடு அடிக்கும் லூட்டி என எல்லா ஏரியாவிலும் பட்டாசாய் இருக்கும் சசி, டான்ஸ் மூவ்மென்ட்ஸ்களில் நிறையவே சிரமப்படுகிறார், எனினும் நல்ல முயற்சியே. (ஆட்டோகிராஃப் படத்தில் சேரன் நன்றாக நடித்திருப்பதாக சொல்லப்போய் அவர் அதையே விடாப்பிடியாக பிடித்துக் கொண்டு தான் இயக்கும் எல்லாப் படங்களிலும் அவரே நடித்து எப்படி சேரன் படமென்றாலே அலறும் அளவிற்கு கொண்டுவந்து விட்டாரோ, அதுமாதிரி ஏதும் செய்துவிடாதீர்கள், உங்களின் இயக்கத்தில் நிறையப் படங்களை எதிர்ப்பார்க்கிறோம்).

சசியின் நண்பர்களாக வரும் விஜயும், பரணியும் தத்தம் கதாப் பாத்திரங்களை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக பரணியின் நடிப்பை ஒற்றை வரியில் சொல்லிவிட்டு போக முடியாது. தான் வரும் அத்தனைக் காட்சிகளிலும் தூள் கிளப்பியிருக்கிறார். காமெடிக் கலந்த குணச்சித்திர வேடங்களுக்கு நல்லதொரு நடிகராக பரணி கிடைத்திருக்கிறார்.

கதாநாயகிகளில் சசியின் ஜோடியாக நடித்திருப்பவர் கொஞ்சம் "தூள்" ஜோதிகாவையும், கோபிகாவையும் நினைவூட்டும்படியான முகவெட்டு. குறைவான காட்சிகளில் வந்தாலும் அழகிலும், நடிப்பிலும் நம் மனதில் நிறைகிறார். சசியின் தங்கையாக நடித்திருக்கும் அந்த அழகுப் பெண் உண்மையில் காது கேட்காத வாய் பேச இயலாதவராம். ஆனால் இது ஒரு மேட்டரே இல்லை என்பதுபோல் அத்தனை அசத்தலாய் நடித்திருக்கிறார். அவரை வசனம் பேச வைத்து சிறப்பான நடிப்பையும் வாங்கியிருக்கும் இயக்குனர் சமுத்திரகனிக்கு ஒரு பெரிய சல்யூட்.

கஞ்சா கருப்புக்கு இது இன்னொரு டக்ளஸ் கேரக்டர்.அவரும் பரணியும் பேசிக் கொள்ளும் இடத்திலெல்லாம் தியேட்டரே குலுங்கிச் சிரிக்கிறது. காதலர்களின் பெற்றோர்களாக வரும் ஜெயப்பிரகாஷ் மற்றும் அந்த அரசியல் பெண்மணியும் நிறைவாகவே செய்திருக்கிறார்கள்.

படத்தின் மிகப்பெரிய பலம் கதிரின் கேமரா.காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்க நடக்கும் அந்த சேஸிங் காட்சிகளில் ஒளிப்பதிவில் மிரட்டியிருக்கிறார். கண்ணுக்கு குளிர்ச்சியாக புதுப்புது லொகேஷன்களை அருமையாக காட்சிப் படுத்தியிருக்கிறார்.

பின்னணி இசையில் கலக்கியிருக்கும் சுந்தர்.சி பாபு பாடல்களில் கோட்டை விட்டிருக்கிறார். இருப்பினும் இந்த படத்திற்கு பாடல்களே தேவையில்லை என்பது என் கருத்து.

படத்தின் இன்னொரு பெரிய பலம் வசனங்கள் குறிப்பாக ஜெயப்பிரகாஷ் சசியிடம் சொல்லும் "நட்புன்னா அதற்குள் எல்லா உறவும் அடங்கிடும்னு சொன்ன, இப்போ என்னாச்சு" என ஆரம்பித்து பேசும் வசனங்களும், காதலர்களுக்கு காவலாக இருக்கும் நபர், பப்ளிக் டாய்லெட்டைக் காட்டி "அவனுங்க காதலிக்க இந்த இடம் போதும்டா" என பேசும் வசனங்களும் ரொம்ப ஷார்ப்.

விளம்பர விரும்பி அரசியல்வாதி,எதற்கெடுத்தாலும் தற்கொலை மிரட்டல் விடுத்துக் காரியம் சாதிக்கும் கதாநாயகியின் அப்பா, இளைய மனைவிக்குப் பயந்து மூத்த மனைவியின் மகனை திட்டுவதுபோல் நடிக்கும் பரணியின் அப்பா மற்றும் விஜயின் அப்பாவாக வரும் எக்ஸ் மிலிட்டரிமேன் கேரக்டர் என ரசனையான கேரக்டர்களை செதுக்கியதில் இயக்குனரை பாராட்டலாம் என்றாலும் அந்த கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களிடம் ஒரு செயற்கைத்தனம் படம் நெடுக தெரிந்ததையும் மறுப்பதற்கில்லை. அதற்கு அவர்களை குறை சொல்ல முடியாது, நடிப்பை பற்றியும் கேமராப் பற்றியும் அறிந்திராத அவர்களை படத்தின் நேட்டிவிட்டிக்காக பயன்படுத்த நினைக்கும்போது இயக்குனர்தான் மிகுந்த சிரத்தையோடு வேலை வாங்கியிருக்க வேண்டும். (பருத்தி வீரனில் இந்த மாதிரியான கதாப்பாத்திரங்களிடம் அமீர் வேலை வாங்கியிருந்த நேர்த்தி இப்படியெல்லாம் யோசிக்க வைக்கிறது).

இயக்குனர் சமுத்திரகனி படத்தை ரொம்பவும் எதார்த்தமாக எடுக்க நினைத்த இன்னும் சில காட்சிகளிலும் செயற்கைத்தனம் தெரிகிறது குறிப்பாக சசியின் நண்பன் தற்கொலைக்கு முயலும் காட்சியிலும், கதாநாயகியின் அப்பா தற்கொலைக்கு முயலும் காட்சியிலும் காப்பாற்ற ஓடிவருபர்கள் ரெடியாக நிறுத்தி வைக்கப்பட்டு ஓடிவருவது அப்பட்டமாகவேத் தெரிகிறது. விளம்பர விரும்பி அரசியல்வாதியிடம் சமையல் கான்ட்ராக்ட் கேட்கபோய் திரும்பும் சசி டீம் திரும்பிச் செல்லும்போது அவர்கள் நடையின் வேகமே திரும்பவும் அரசியல்வாதி கூப்பிடப் போகிறார் என்பதை உணர்த்திவிடுகிறது.

படம் ஆரம்பித்து முதல் பத்து நிமிடங்கள் கொஞ்சம் மொக்கையாகவே செல்வது, நண்பனின் காதலை அவ்வளவு ரிஸ்க் எடுத்து சேர்த்து வைக்கும் சசியின் கேரக்டர் தனது காதலை எளிதாக விட்டுக் கொடுப்பது, படம் சூடுபிடிக்க ஆரம்பிக்கும் நேரத்தில் வரும் அந்த குத்துப் பாடல் என சில குறைகளும் இருப்பினும் மேற்சொன்ன நல்ல விஷயங்களில் இவை காணாமல் போகின்றன.

'சுப்ரமணியபுரம்' சசிக்குமார் நடித்தப் படம் என்ற பெரிய எதிர்ப்பார்ப்பில் செல்லாமல் "உன்னைச் சரணடைந்தேன்","நெறஞ்ச மனசு" படங்களை இயக்கிய சமுத்திரகனியின் படம் என்று நினைத்து பார்த்தால் கண்டிப்பாக நெறஞ்ச மனசோடுத் திரும்பலாம்.

பொதுவாக நல்ல படங்கள் ரிலிஸாகும்போது, "ரொம்ப நாள் கழித்து நல்லதொரு படம் பார்த்தேன்" என்று சொல்வார்கள், ஆனால் "பசங்க" என்ற அற்புதமான படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் தமிழ் சினிமா நல்லதொரு பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறது என்பதை நிறுபிக்கும் விதத்தில் அடுத்ததாய் வந்திருக்கிறது இந்த நாடோடிகள்.

நாடோடிகள் - நிரந்தர முகவரியோடு.

Read more...


நான்.... அவள்..... நட்பு....!

Thursday, 25 June, 2009

பாலின வேறுபாடுகள் கூட அறிந்திராத வயதிலிருந்தே நமக்குள் அறிமுகம். காக்காக்கடி கல்கோனாவிலிருந்து காடையன் தோட்டத்தில் திருடித் தின்ற மாங்காய்வரை உன்னுடனான எத்தனையோ நினைவுகள் என்னோடு பயணித்துக் கொண்டே இருக்கின்றது.

ஆரம்பப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த அன்று மருதப்பன் ஆசிரியர், "ஆம்பள பசங்க தனியாகவும், பொம்பள புள்ளைங்க தனியாகவும் உட்காருங்க" என்று ஒன்றாக அமர்ந்திருந்த நம்மை பிரித்து உட்கார வைத்தபோது ஏனென்றுப் புரியாமல் விழித்தது, ஓணாங்கொடி பஸ் விளையாட்டில் ஓட்டுனராய் இருந்த நான் எனது சட்டைப் பொத்தான்களை அவிழ்த்துவிட்டு வேகமாய் பஸ் ஓட்டியபோது காற்றில் படபடக்கும் எனது சட்டையில் ஒரு குட்டி ரஜினியாய் என்னைப் பார்த்ததும், பின்பக்கம் பொத்தான் வைத்து காலர் இல்லாத பெண்பிளைகள் சட்டையில் இருந்த நீ, ஒரு உப்பு மாங்காய் கீற்றை லஞ்சமாகக் கொடுத்து என்னுடைய சட்டையை ஓசியில் வாங்கி அணிந்து நீயும் ரஜினியானது என என்னின் பால்யத்தின் மலரும் நினைவெங்கும் ஆக்ரமித்துச் சிரிப்பவள் நீ.

ஆறாம் வகுப்பு வந்ததும் உன்னை வெளியூர் பள்ளியில் தங்கும் விடுதியில் சேர்த்தபோது, ஒவ்வொரு விடுமுறை நாட்களுக்காகவும் காத்திருந்து உன் வருகையைக் கொண்டாடும் மனது. நீ உனது புதிய பள்ளியின் கதைகளைச் சொல்லச் சொல்ல ஆசையாய்க் கேட்டுக் கொண்டிருப்பேன். "எங்க பள்ளிக்கொடத்துல காரு, பஸ்ஸு, ஏரோப்பிளேனு, எலியாப்டருலெயெல்லாம் பிள்ளைங்க படிக்க வருவாங்க" என்று நீ விட்ட புருடாக்களை ஆச்சரியமாய் கேட்டுக் கொண்டிருந்ததையெல்லாம் இப்போது அடிக்கடி நினைத்துச் சிரித்துக் கொள்வேன்.

கால ஓட்டத்தில் நான் கட்டவிழ்ந்த காளையாகவும், நீ மொட்டவிழ்ந்து மலராகவும் ஆன பின்பு எப்போதும் போல் நானிருக்க, உன்னிடமோ நிறைய மாற்றங்கள். கொஞ்சம் வெட்கம்,கொஞ்சம் தயக்கமுமாய் என்னிடமிருந்து மெல்ல விலக ஆரம்பித்த உனது நட்பு "நல்லாயிருக்கியா?" என்ற சம்பிரதாய விசாரிப்புகளாய், ஒன்றிரண்டு வார்த்தைகளாய் சுருங்கி பின் கடந்து போன ரயிலின் ஓசையாய் மெல்ல மெல்ல சிறு புள்ளியாய் தேய்ந்து மறைந்தே போனது.

என்னிடமிருந்து உன்னின் விலகலுக்கான காரணம் உன்னையும் என்னையும் நம்பிய உனது வீட்டாருக்கு அச்சுறுத்தியது நமது வயதே என்பதை நான் அறிந்து கொண்டபோது கல்லூரியில் அடி வைத்திருந்தேன்.

நீ என்னிடம்தான் பேசுவதை நிறுத்திவிட்டாலும் எனது தங்கையிடம் என்னைப் பற்றி விசாரித்துக் கொள்வதை நான் அறிந்தே இருந்தேன். கல்லூரிப் பேச்சு போட்டிக்கு நான் தாயாராகும் போது இலக்கியத்தில் அப்போதே ஆர்வமாய் இருந்த உன்னிடம் குறிப்புகள் கேட்டு என் தங்கையை அனுப்பும்போதெல்லாம் அவ்வளவு ஆர்வமாய் எனக்காக பல புத்தகங்களில் இருந்து குறிப்புகள் எடுத்து உன் கையாலேயே எழுதிக் கொடுப்பாய்.குண்டு குண்டாய் கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம் போலிருக்கும் உனது கையெழுத்து.

விடுமுறை நாட்களில் ஊரில் இருக்கும்போதும் கூட சில சமயம் உன்னை நேரில் காண நேரிடும்போதும் காணாதது போலவே சென்றுவிடுவாய். எனக்குத் தெரியும், சிறு வயதில் சுற்றித் திரிந்த அதே ஊர், அதே மக்கள்தான் என்றாலும் அதே பார்வை இருக்குமா? லேசாக சிரித்துவிட்டால் கூடப் போதுமே எனது மீசையும், உனது தாவணியும் அவர்களுக்கு ஆயிரம் புனைவுகளுக்கான 'கரு'க் களஞ்சியமாகிவிடுமே. ஆனால் எந்த ஒரு சூழலிலும் சிறுவயதில் உன்னை எப்படிப் பார்த்தேனோ அதே பார்வைதான் என்னிடத்தில். உனக்கும் அப்படித்தான் என்பதையும் அறிவேன்.

நான், பட்ட மேற்படிப்பை படித்துக் கொண்டிருந்த போதே உனக்குத் திருமணம் நிச்சயமாகிவிட்டது.திருமணக் கோலத்தில் உன் கணவருடன் மேடையில் நின்ற உன்னருகே நானும் எனது தங்கையும் பரிசுப் பொருட்களோடு வந்தபோது, "இவங்க பக்கத்து வீட்டு பசங்க" என்றபடியே எளிதாக முடிந்துபோனது நம் ஏரோப்பிளேன் கதைகள்.

கால ஓட்டத்தில் என் வாழ்விலும் ஒருத்தி, இதோ இன்று வேண்டியவங்க வீட்டுத் திருமணத்திற்கு ஊருக்கு வந்திருக்கிறோம் நான் என்னவளோடும், நீ உன்னவனோடும். இப்போதும் பார்த்தும் பார்க்காத மாதிரியே போய்க் கொண்டிருக்கிறாய், அன்று ஊர்க் கண்களுக்காய்த் தவிர்த்தாய்,இன்று யார் கண்களுக்காய்த் தவிர்க்கிறாய் என்பதையும் அறிவேன். சின்ன சின்ன குழந்தைகள் பந்தலில் அங்கும் இங்கும் பாலின வேறுபாடின்றி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள், நம் பால்யத்தை நினைவூட்டியபடியே. இப்படி நிறையச் சந்தர்ப்பங்களில் உன்னை நான் நினைத்துக் கொள்வேன், ஆனால் உனக்கு அப்படி இருக்காதோ என்று நான் நினைத்துக் கொண்டிருந்தபோது என் தங்கையிடம் சேட்டை செய்துகொண்டிருந்த என் மகனை, யாரும் அறிமுகப் படுத்தாமலே, "இது உன் அண்ணன் மகன் தானே அப்படியே அவனை மாதிரியே இருக்கான்,அதே சேட்டை" என்று கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டபடியே நகர்ந்து செல்கிறாய். எனக்கு கண்கள் லேசாய் கலங்குவது போல் உணர்ந்து அவசரமாய்த் துடைக்க முற்படுகையில் கையில் தட்டுப்பட்டது நீ சிலேட்டால் வெட்டிய கன்னத் தழும்பு.


"பள்ளித் தோழர்களின் நட்பு
அப்படியே இருக்க,
தோழிகளின் நட்போ
நினைவில் ஏதேதோவாய்
எதிரிலே ஏதுமற்றதாய்
..!"

Read more...


  © Blogger template Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP