Wednesday 4 November 2009

பிடித்த/பிடிக்காத 10

தோழர் மாதவராஜ் ஆரம்பித்த இத்தொடர் விளையாட்டு நண்பர் ஈரோடு கதிர் மூலமாக என்னிடமும் வந்திருக்கிறது.

இத்தொடர் இடுகையின் விதிகள்:

1. நம் பிடித்தவர், பிடிக்காதவர் பட்டியலில் வருபவர் தமிழகத்தைச் சார்ந்த, பிரபலமாக இருக்க வேண்டும்.

2. இதைத் தொடர இரண்டு முதல் ஐந்து பதிவர்களை அழைக்க வேண்டும்

3. ஏழு முதல் பத்துக் கேள்விகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

அரசியல்வாதி

பிடித்தவர் : யாருமில்லை என்று சொல்ல நினைச்சேன் ஸ்டாலினை கொஞ்சம் பிடிக்கும்.

பிடிக்காதவர் : வை.கோ(ஒரு காலத்தில் இவரை ரொம்ப நம்பினேன்).

எழுத்தாளர்

பிடித்தவர் : எஸ்.ரா,கி.ரா

பிடிக்காதவர் : பாலகுமாரன்(கல்லூரி நாட்களில் இவரின் சில புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்தேன் அப்போது புரியவில்லை,இப்போது படித்து பார்ப்போமே என்று முயற்சித்தேன் இப்போதும் முடியவில்லை,பெரிய பெரிய பத்தியாக வேறு எழுதுகிறார்,ஒரு வேளை இன்னும் மெச்சூர்ட் ஆகி படித்தால் விளங்குமோ என்னவோ)

கவிஞர்

பிடித்தவர் : மு.மேத்தா,வைரமுத்து,ந.முத்துக்குமார்

பிடிக்காதவர் : கபிலன்(நல்ல சிந்தனையாளர் ஆனால் ஓவரா குத்துப்பாட்டு எழுதவதால் இவர் மேல் ஒரு வெறுப்பு).

இயக்குனர்

பிடித்தவர் : மணிரத்னம்,அமீர்

பிடிக்காதவர் : தங்கர்பச்சான்(கடலூரைத் தாண்டி வெளியில் வந்தா பார்க்கலாம்), பேரரசு(உங்க டைரக்‌ஷனில் சிம்பு,எஸ்.ஜே.சூர்யா,நமிதா நடிக்க, ஸ்ரீகாந்த் தேவா இசைக்க,டீ.ஆர் வசனத்தில் ஒரு படம் கொடுங்க ஸார்), சமீபமாக சேரன்(இவர் மாயக்கண்ணாடியில மட்டுதான் முகம் பார்ப்பார் போல).

நடிகர்

பிடித்தவர் : மோகன்லால்,கார்த்தி(க்)

பிடிக்காதவர் : சேரன்,பிரசாந்த்,விஷால்

நடிகை

பிடித்தவர் : அமலா,கோவை சரளா(திறமைக்கேற்ற அங்கீகாரம் இன்னும் கிடைக்காத நடிகை).

பிடிக்காதவர் : த்ரிஷா(பாருங்க நேற்று வந்த தமனா மொழி தெரியாமல் நடிப்பில் பின்னுகிறார் இவரோ நடிப்பைப் பற்றி யோசிப்பதாகவே தெரியவில்லை).

இசையமைப்பாளர்

பிடித்தவர் : இளையராஜா,ஏ.ஆர்.ரகுமான்

பிடிக்காதவர் : ஸ்ரீகாந்த் தேவா(இவங்க அப்பா கானா பாட்டால் காணாமல் போனது போல் இவருக்கு குத்து பாட்டு),எஸ்.ஏ.ராஜ்குமார்(இவரின் ஆரம்பகால பாடல்களை கேட்கும்போதெல்லாம் இப்படி அருமையான பாடல்களைத் தந்துவிட்டு ஏன் லாலாலா.. போட்டு ஒற்றை ட்யூனையே பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கிறார் என்று தோன்றும்).

பட்டிமன்ற பேச்சாளர்

பிடித்தவர் : அறிவொளி,பாரதி பாஸ்கர்

பிடிக்காதவர் : லியோனி குரூப்பில் பேசுபவர்கள் அத்தனை பேரும்


செய்தி வாசிப்பாளர்

பிடித்தவர் : ஜெயஸ்ரீ சுந்தர்(தெளிவான உச்சரிப்பு).

பிடிக்காதவர் : ஃபாத்திமா பாபு(சீரியலை விட செய்தி வாசிக்கும்போது இவரின் நடிப்பு நன்றாக இருக்கும்,ஓவர் மேக்கப் போட்டு கவனத்தை சிதறடிப்பார்).


ஓவியர்

பிடித்தவர் : மணியம் செல்வன்(இவரின் ஓவியங்களில் கண்கள் குறிப்பாய் பெண்களின் கண்கள் பார்த்துக்கொண்டே இருக்கத் தோன்றும்),ஷ்யாம்(குவிந்த உதட்டோடு இருக்கும் சுருள் முடி பெண்கள் இவரின் ஓவியங்களில் எனக்குப் பிடிக்கும்)

பிடிக்காதவர் : அரஸ்


அழைக்க விரும்புவது

ஊர்சுற்றி

பீர்

ப்ரியமுடன் வசந்த்

டிஸ்கி:இதற்கு முன் பல தொடர் விளையாட்டுகளில் அழைக்கப்பட்டு திண்ணை என்ற ஒரே ஒரு தொடர் பதிவைத் தவிர எதையும் எழுதியதில்லை. சோம்பலன்றி வேறொன்றும் காரணமில்லை.மேலும் இந்தத் தொடர் மிகச் சிறியதாகவும் பெரிதாய் யோசிக்கத் தேவையில்லாததாகவும் தோன்றியாதால் எழுதிவிட்டேன்.

Monday 2 November 2009

உளறல்கள்

இரு நண்பர்களுக்குள் நடந்த ஏதோ கருத்து மோதலில் கருத்தைத் தாண்டி கருத்துரைப்பவரை விமர்சிக்கும் நம் கலாச்சார வழக்கத்தின்படி ஒருவர் இன்னொருவர் மீது தரக்குறைவான வார்த்தைப் பிரயோகம் செய்திருக்கிறார். இச்சம்பவம் நடந்து ஒரு வாரம் கழித்து தவறான வார்த்தை பேசிய நண்பர் மற்றொரு நண்பருக்கு போன் செய்கிறார். கோபத்திலும் வெறுப்பிலும் இருந்த நண்பரோ அட்டெண்ட் செய்யாமல் கட் செய்து கொண்டே இருந்தார். அருகில் இருந்த என்னிடம் அப்போதுதான் நடந்தவற்றைச் சொல்லிவிட்டு ”இனிமேல் அவனுக்கும் எனக்கும் ஒத்துவராது. என்ன பேச்சு பேசிட்டான். இவ்வளவையும் மனசில் வச்சுகிட்டே இவ்வளோ நாளா என்கிட்ட பழகிட்டு இருந்திருக்கான். இப்போ என்ன மயி... போன் பண்றான்” என்று ரொம்ப ஆவேசப்பட்டார்.

கருத்து மோதல் வருகிறபோது எந்தப் புள்ளி தனிமனித தாக்குதலுக்கு இட்டுச் செல்கிறது. நம்மில் அந்யோன்யமான உறவுகளிலிருந்து ஆத்மார்த்தமான நட்புகள் வரை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சிறிதாகவோ பெரிதாகவோ கருத்து வேறுபாடு என்று வருகிறபோது முடிந்த வரை நாம் கூறும் கருத்துக்கான நியாயத்தைச் சொல்கிறோம். முடியாத பட்சத்தில் எதிராளி மீதான கேரக்டர் ஆசாஸினேஷனை கட்டவிழ்த்துவிடுகிறோம். அது நம்மை பலவீனப்படுத்தும் செயல் என்பதை அறிவதில்லை.

பல நாள் இயல்பாய் பேசிச் சிரித்து,ரகசியங்கள் பறிமாறிக்கொண்டு இருக்கும் போது பெரிதாய் தெரியாத இருவரின் தவறுகளும் கருத்து வேறுபாடு என்று வரும்போது அடுத்தவரின் அந்தரங்கத்தை பொதுவில் சொல்லக் கூட தயங்குவதில்லை. நம்பிக்கை துரோகத்தை எளிதாக செய்து விடுவோம் இது மாதிரி சந்தர்ப்பங்களில். நம்மிடம் ரகசியம் பரிமாறிக்கொண்டவனுக்கு எதிராக சூழ்நிலை நம்மை ஆக்கிவிட்டாலும் அவனின் ரகசியத்தைக் கடைசி வரை காப்பதே மனிதத்தின் உச்சம். அதைவிடுத்து அவனை அசிங்கப்படுத்துவதோ, பலி வாங்குவதோ கேவலமான செயல் இதை நம்மில் பலரும் பல சந்தர்பங்களில் யோசிக்காமல் செய்துவிடுகிறோம்.

நண்பருக்கு மீண்டும் மீண்டும் போன்கால் வந்துகொண்டே இருந்தும் அட்டெண்ட் செய்யாமல் இருந்தார்.இப்போ அவரைத் திட்டியவரின் மனநிலை என்னவாக இருக்கும் என்பதை அறிந்து, ”கோபத்தில் வார்த்தைகள் தாறுமாறாய் வெளிப்படுவது இயல்புதாங்க, கோபத்தில் திட்டுகிற வார்த்தைகளுக்கு எப்போதும் அர்த்தம் கற்பித்து கொள்ளக் கூடாது, அது அந்த நேரத்தின் உணர்ச்சியின் வெளிப்பாடு அவ்வளவுதான்,நீங்க சொல்வது போல் இத்தனை நாளும் இவ்வளவையும் மனதில் வைத்துக் கொண்டுதானே பழகியிருக்கான் என்றெல்லாம் யோசிக்காதீங்க, இப்போ அவர் உங்களுக்கு போன் செய்வதிலேயே தெரியலையா அன்று உங்களை திட்டியதெல்லாம் பெரிய குறையாக அவர் பார்ப்பாரானால் இன்று உங்களை அழைக்கவே மாட்டார், எதுவாக இருப்பினும் உங்க நட்பு அவருக்கு வேண்டும் என்பதால்தானே அழைக்கிறார், அவர் தனது தவறை உணர்ந்திருப்பார் தயவு செய்து பேசுங்க” என்றேன்.

உடன் பழகுபவர்களிடத்து அவ்வப்போது சில மைனஸ்களை அல்லது நமக்குப் பிடிக்காத விஷயங்களைக் காண்போம்.அதே போன்று மற்றவர்களும் நம்மீதும் காண்பது இயல்பு.இருப்பினும் அதை மென்மையா சுட்டிக்காட்டியோ அல்லது பெரிய விஷயமாகக் கருதாமலோ நட்பைத் தொடர்வோம் காரணம் மைனஸ்களைத் தாண்டிய பிளஸ்கள் அவரிடத்தில் இருக்கும். இப்படி கண்டும் காணாமல் இருக்கும் சின்ன சின்ன விஷயங்களைத்தான் கருத்து வேறுபாடு என்று வரும்போது எதிராளியை பலவீனப்படுத்த ஆயுதமாய் பெரிது படுத்துகிறோம். அப்படி பெரிது படுத்தி மனக்கஷ்டத்தைக் கொடுப்பதில் கிடைக்கும் திருப்தி எத்தனை வக்கிரமானது என்பதை அறிவதே இல்லை நம்மில் பலரும். அறிமுகமில்லாதவர்கள் பேசும் கடுமையான வார்த்தைகளை விட பழகியவர்கள் பேசும் சாதாரண வார்த்தைகளும் தீவிர வலியைக் கொடுப்பதற்குக் காரணம் இடையில் இருந்த அன்பு, நம்பிக்கை ஆகியவை கேள்விக்குறியாகும்போதுதான்.

இங்கே இன்னொரு விஷயம் கோபத்தில் வார்த்தைகளை வீசிவிட்ட அந்த நண்பர் இவரிடம் மன்னிப்பு கேட்கலாம், இவரும் மன்னிக்கலாம். ஆனாலும் உதிர்த்துவிட்ட வார்த்தைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் அவரை எந்த அளவிற்கு வாட்டியிருக்கும். இது போன்ற சூழலில் முடிந்த வரை நாவடக்குவது நல்லது. நட்பிற்குள் கருத்து வேறுபாடு வருகிறதா உங்களின் கருத்தை ஆழமாகச் சொல்லுங்கள், புரிய வைக்க இயலாத பட்சத்தில் அமைதியாகிவிடுங்கள் அல்லது அவ்விடத்தைவிட்டு அகன்றுவிடுவது சிறப்பு.

Saturday 31 October 2009

அது என்னண்ணே மீசை வச்ச பிறகும்....

நான்:மணி, மரத்துக்கு எவ்வளவுடா?

மணி:10 ரூவாண்ணே,47 மரம் ஏறியிருக்கேன்.

நான்:முன்னெல்லாம் மரத்துக்கு ஒரு காய்தானே பேச்சு.நீ என்ன மரத்துக்கு 10 ரூபாய் கேக்குற.

மணி:நீ எந்த காலத்திலண்ணே இருக்க,ரெண்டு வருஷமாவே 10 ரூவாதான் வாங்கிட்டு இருக்கேன்,இந்தா காலையில் அம்பலார் வீட்டுக்கு 30 மரம் ஏறினேன் 300 ரூவா கையோடு வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு.வேணா 47ல ரெண்டு மரத்த தள்ளிகிட்டு 450 கொடுண்ணே.

நான்:சரி சரி சாயங்காலம் 6 மணிக்கு வந்து வாங்கிக்க,ஆமா ஒரு நாளைக்கு இவ்வளவு சம்பாதிக்குறியே எதாவது சேமிச்சு வச்சிருக்குறியாடா, இல்ல எல்லாத்தயும் குடிச்சிடுவியா?

மணி:நீ ஒரு ஆளுண்ணே,எல்லாத்துக்குமா குடிப்பாக,5000 ரூவாய் சம்பாதிச்சு வீட்டுல கொடுத்துட்டு அப்புறமா சின்ன சின்ன வேலையா செஞ்சிகிட்டு ஜாலியா இருப்பேன். மறுபடியும் வீட்டுக்கு எப்போ தேவையோ அப்போ மரம் ஏறுவேன்.

நான்: ஏன்டா ஒரு நாளைக்கு இவ்வளவு சம்பாதிக்க வாய்ப்பு இருக்கும்போது சம்பாதிச்சு சேமிப்புல வச்சுக்க வேண்டியதுதானே.

மணி:அதெல்லாம் உங்க ஆளுங்களுக்குத்தானே சரிப்பட்டு வரும். காச சேமிச்சு வச்சா பெருசா வீடு கட்டத் தோனும்,நிலம்,தோப்பு தொறவுன்னு சொத்து சேக்க புத்தி போகும்.

நான்:ஏன்டா சொத்து சேர்த்து வச்சா உன் எதிர்காலத்துக்கு நல்லதுதானே.

மணி: ஆமாண்ணே, இந்தா அஞ்சு நாளா தேங்காய் பறிக்க ஆளு கிடைக்காம என் பின்னாலயே சுத்திக்கிட்டு இருக்க. நான் இப்போ உன்கிட்ட பணம் வாங்கிட்டு கிளம்பிடுவேன், நீ இனி இந்த தேங்காய வித்து காசாக்குறதுக்குள்ள ஒரு வழியாயிடுவ, இதெல்லாம் எனக்குத் தேவையா? எங்க ஆளுங்க எல்லாம் தெனமும் உடலை வருத்தி உழைக்கிறோம் அதனால ஒம்போது மணிக்கெல்லாம் அசந்து தூங்கிடுறோம்.உங்க தெருவுல பாருங்க ராத்திரி ஒரு மணிக்கு தூக்கம் வராம கட்டையில் ஒக்காந்து வெட்டி நாயம் பேசிட்டு இருப்பாக.

நான்:வாஸ்தவம்தான்டா.

மணி:என்னைவிட நீ நாலஞ்சு வயசு பெரியவர்,ஆனா உனக்கு இன்னும் கல்யாணம் ஆகல, என் பையன் ஸ்கூலுக்கு போகப்போறான். கிட்டத்தட்ட அரைக்கிழவானா ஆகும்போதுதான் உங்கள்ள கல்யாணம் பண்றீங்க, நாங்க 20 வயசுலேயே கல்யாணம் பண்ணிக்கிடுறோம், எனக்கு 40 வயசாகும்போது எம்மவன் ஆளாயிறுவான்.அதுதாண்ணே சந்தோஷம். அப்புறமா இன்னொன்னு அது என்னண்ணே மீசை வச்ச பின்னாடியும் படிச்சிட்டே இருக்கிய?

நான்: ?????

Thursday 29 October 2009

பாடல் வரிகளில் ஒரே சிந்தனை....

1.”சிவப்பான ஆண்கள் இங்கே சிலகோடி உண்டு
கறுப்பான என்னைக் கண்டு கண் வைத்ததென்ன”

2.”பலகோடி பெண்களிலே எதற்கு என்னை தேடினாய்
நான் தேடும் பெண்ணாக நீ தானே தோன்றினாய்”

3.”இடது விழியில் தூசு விழுந்தால்
வலது விழியும் கலங்கி விடுமே”

4.”ஒரு விழியில் காயம் என்றால்
மறு விழியும் கண்ணீர் சிந்தும்”

5.“கற்கண்டு சக்கரையெல்லாம் இப்பத்தான் கசக்குறதா”

6.”மாமன் பேசும் பேச்சக் கேட்டு வேப்பங்குச்சி இனிக்குது”

7.“கடலிலே மழை வீழ்ந்த பின் எந்தத் துளி மழைத்துளி”

8.”கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்”

9.“இருதயத்தின் உள்ளே உலை ஒன்று கொதிக்க”

10.“ரத்தம் கொதிகொதிக்கும் உலை கொதித்திடும் நீர்க்குமிழ் போல”

Friday 23 October 2009

நொறுக்குத் தீனி சும்மா கொறிக்க 24/10/09

நீண்ட நாட்கள் கழித்து சந்தித்துக்கொண்ட இரு நண்பர்கள் பழைய கதையெல்லாம் பேசி முடித்து சகஜ நிலைக்குத் திரும்பியதும் பேசிய டயலாக்,

நண்பர் 1:மாப்ள உன்னையெல்லாம் மறுபடியும் பார்க்க முடியுமான்னு பல தடவை ஏங்கியிருக்கேண்டா.

நண்பர் 2: விடுடா அதான் இப்போ பார்த்தாச்சுல்ல.

நண்பர் 1: அதில்லடா உன்னை பார்த்த பிறகுதானே புரியுது பேசாம ஏங்கிக்கிட்டே இருந்திருக்கலாம்னு.

நன்பர் 2:??????

@@@@@@@@@@@@

ஆயுத பூஜையன்று ஊருக்குச் சென்றிருந்தேன்.நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்த போது அருகில் கோயில் கட்டி விளையாடிக் கொண்டிருந்த சிறுவர் கூட்டம் என்னிடம், ”அண்ணே எங்க கோயில் நல்லாயிருக்கான்னு வந்து பாருங்க” என்றனர். என் நண்பர்களில் ஒருத்தன் "போங்கடா போயி விளையாடுங்க பேசிட்டிருக்கோம்ல" என்றான். நானோ "இருடா ஆசையா கூப்பிடுறானுங்க போய் பார்த்துட்டு வறேன்" என்று கிளம்பினேன். கூடவே என் நண்பர்களும் வருவதற்காக எத்தணிக்க அத்தனை சிறுவர்களும், ”அண்ணன் மட்டும் வந்தா போதும் பெரிய ஆளுங்க வேண்டாம்” என்றனர். இவ்வளவுக்கும் அந்த கூட்டத்தில் வயதில் மூத்தவன் நான் தான். அது என்னவோ தெரியல சின்ன பசங்க என்னை அவர்களில் ஒருவராகவே நினைக்கிறார்கள். நானும் பெரிதாய் வித்தியாசம் தெரியாமல் அவர்களோடு விளையாடுவேன். அன்று என்னை அழைத்த சிறுவர்களின் சிலரின் தந்தைகள் எனக்கு ஒரு சில வருடங்களே சீனியர்கள், அவர்களுடனும் நான் விளையாடியிருக்கேன். இப்போ என் வயது நண்பர்களின் வாரிசுகளும் வந்துவிட்டார்கள் இன்னும் ஓரிரு வருடங்களில் அவர்களுடனும் விளையாடுவேன்னு நினைக்கிறேன் பார்க்கலாம்.(சின்ன பசங்க சகவாசம் எனக்கு மட்டும் இது வரை பிரச்சனையில்லை).

@@@@@@@@@@@@@@@@

பதிவுலகில் நாளுக்கு நாள் ஜால்ரா பதிவுகளும், குழுமனப்பான்மையும்(இது தவறு கிடையாது இருப்பினும் அக்குழுவில் இல்லாதவர்களும் தொடர்பவர்களாக இருப்பதால் சில விஷயங்களை குறைத்துக் கொள்வது நல்லது, மற்றபடி அவரவர் விருப்பம்) நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைப் போன்றே நல்ல புதிய எழுத்துக்களோடும் பலர் பதிவுலகில் இணைந்த வண்ணம் இருப்பது ஆறுதல். அவ்வகையில் எனக்குப் பிடித்த சில புதிய பதிவர்கள்,

ஆரூரன் விசுவநாதன்:தங்கமணி பதிவில் இருந்து திராவிட சிந்தனை வரை எல்லாவிதமான இடுகைகளும் எழுதுவது இவரின் ஸ்பெஷாலிடி.இவரின் சில இடுகைகளில் நகைச்சுவை நடையில் கலக்கியிருப்பார் .

நாகா:இவரின் பதிவுகளை மிகச் சமீபமாகத்தான் வாசிக்க ஆரம்பித்தேன். பெரும்பாலும் அனுபவ பகிர்வுகள் ஆனாலும் ரசனையான நடையில் வசிகரிக்கிறார். கவிதையிலும் அசத்துகிறார்.

இவர்களை நீங்களும் படித்து உற்சாக படுத்துவீர்கள் என்று நம்புகிறேன். மேலும் சில பதிவர்கள் அடுத்த நொறுக்குத்தீனியில் .

@@@@@@@@@@@@@@@@@

சென்னையின் திருவல்லிக்கேணியில் மேன்ஷனில் தங்கியிருந்த நாட்களில் எனக்கு ஜாவா சொல்லிக் கொடுத்து ஒரு குருவாக அறிமுகமான நண்பர் அர்ஜுனின் அறையில் கதாவிலாசம், துணையெழுத்து என எஸ்.ராவின் புத்தகங்களாக இருப்பதைப் பார்த்து ஜாவாவைத் தாண்டியும் எங்களிடம் நிறைய ஒற்றுமை இருப்பதை அறிந்து குரு ஸ்தானத்தில் பார்த்த அவர் நெருங்கிய நண்பரானார். அவசரத் தேவைக்கு பைனான்ஸ் பண்ணும்போது ஒரு அண்ணன் ஸ்தானத்திலும் இருந்திருக்கிறார்.சில வருடங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் சிக்கி அவருடைய நினைவுகளை சில நாட்கள் இழந்திருந்தார். அப்போது அம்மா அப்பாவையே அடையாளப்படுத்திக் கொள்வதில் சிரமப்பட்டவர் எங்களின் மேன்ஷன் நட்புகளின் பெயர்களை ஞாபகம் வைத்திருந்தார். டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் அவரோடு தினமும் போனில் பேசுவேன். அப்போது அவரை ஒரு குழந்தையாகவும் பார்த்திருக்கிறேன், அந்த நேரத்திலும் எஸ்.ராவின் எழுத்துக்களை அவரோடு என்னால் சகஜமாக பேசமுடிந்தது. எஸ்.ராவைப் பற்றிப் பேசும்போது உற்சாகமாகிவிடுவார். வலையுலகிற்கு புதியவனாக இருந்தபோது வெறும் காதல் கவிதைகளாக எழுதிக்கொண்டிருந்தவனை,”கவிதைகளோடு மற்ற விஷயங்களையும் எழுதுங்க உங்களால் முடியும்” என தடம் மாற்றியதும் அர்ஜுன்தான். சங்கடமோ, சந்தோஷமோ எதுவாகினும் நான் மனம் விட்டு பேசக்கூடியவர்களில் அர்ஜுன் முக்கியமானவர். தற்போது பிராஜெக்ட் மேனஜராக ஒரு ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிகிறார். எங்களின் நட்பு இறுகக் காரணமாயிருந்த எஸ்.ராவின் முன்பாக என்னை கொண்டுபோய் நிறுத்தினார் ஈரோடு புத்தகக் கண்காட்சியில் நண்பர் வெயிலான். எதிர்பாரா சந்திப்பால் என்னால் எதுவுமே பேச இயலாது ஆட்டோகிராஃப் மட்டும் வாங்கிக்கொண்டு வந்துவிட்டேன். இந்த மனிதரா இப்படியெல்லாம் எழுதறாருன்னு ஆச்சர்யப்படுத்தும் வகையில் அவ்வளவு எளிமையாக இருந்தார்.

@@@@@@@@@@@@@@

விஜய் டி.வியில் ஒளிபரப்பான கமலின் பாராட்டு விழாவில் நடிகை ராதிகாவின் பேச்சு நல்ல சுவாரஸ்யம்.அதில் கமலுடன் அவர் நடித்த சிப்பிக்குள் முத்து படத்தின் ”துள்ளி துள்ளி நீ பாடம்மா” பாடலை படமாக்கிய விதத்தைப் பற்றி சொன்ன விஷயங்கள் ரசிக்கும் படி இருந்தது.ராதிகா சொன்னது போல் எப்போது அப்பாடலை கேட்டாலும் தாளம் விட்டு கமல் ஆடும் அந்த நடன அசைவுகள் தான் கண்முன்னே வரும். கமல் ஸார் யூ ஆர் ரியலி கிரேட்.

Monday 28 September 2009

எங்க ஊருக்கு தொலைக்காட்சி வந்த கதை

எண்பதுகளின் மத்தியில் எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் எங்கள் ஊர் பகுதிகளில் விடுதலைப் புலிகள் நிறைய இடங்களில் தங்கி ஆயுதப் பயிற்சி எடுத்து வந்தனர். அவர்கள் தங்களது அன்றாடச் செலவுகளுக்காக VCR மூலமாக அருகில் இருக்கும் கிராமங்களில் புதுப்புது படங்களை ஓட்டுவார்கள். டிக்கெட் ஒரு ரூபாய். முதன் முதலில் தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்க்கும் பாக்கியம் எங்கள் ஊருக்கு அவர்களின் மூலமாகவேக் கிடைத்தது.

அப்போது எங்கள் ஊரில் மூன்று வீடுகள் மட்டும்தான் மாடி வீடுகள். பள்ளி அருகிலேயே ஒரு மாடி வீடு இருக்கும், மாடிப் படிகளில் ஏறமுடியாதவாறு முட்களைக்கொண்டு அடைத்து வைத்திருப்பார்கள், திருட்டுத் தனமாக அவ்வீட்டின் மாடிப்படியின் பக்கவாட்டு சுவரில் சறுக்கி விளையாடுவது எங்கள் சிறுபிராயத்தின் சாகச விளையாட்டுகளில் ஒன்று. அந்த வீட்டு பாட்டி பார்த்துவிட்டால் அவ்வளவுதான் மனித குலம் தோன்றிய காலத்தைய முன்னோரில் ஆரம்பித்து எங்களுக்கு பிந்தைய தலைமுறைக்கெல்லாம் சேர்த்து சாபம் விடுவார். இன்னொரு மாடி வீடு எனது நண்பனின் வீடு என்பதால் அங்கே அடிக்கடி மாடியில் ஏறிப்பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த மூன்றாவது வீட்டு மாடியின் அமைப்பு எப்படி இருக்குமென்றே தெரியாத அளவிற்கு எப்போதும் பூட்டியே வைத்திருப்பார்கள். அந்த வீட்டு மாடியில்தான் முதல் வீடியோ அரங்கேற்றம் நிகழ்ந்தது.

படம் பார்ப்பதைக் காட்டிலும் அந்த வீட்டின் மாடியையும் பார்க்கப் போகிறோம் என்கிற ரெட்டைச் சந்தோஷமெனக்கு. ”பூக்களைப் பறிக்காதீர்கள்”, ”வளையல் சத்தம்” மற்றும் ”முத்துக்கள் மூன்று” ஆகிய மூன்று படங்களை அப்போது ஓட்டினார்கள். கொடுத்த ஒரு ரூபாய்க்கு ஆசைத்தீர அந்த மாடிப்படிகளில் ஏறி இறங்கினேன்.மற்றபடி படத்தின் தலைப்பைத் தாண்டி கதை பற்றியெல்லாம் நினைவில் வைத்துக் கொள்ளும் வயதில்லை.ஏதோ படம் தெரிந்தது அவ்வளவுதான்.

என் கூட்டாளிப் பசங்களின் சொந்தக்காரர் வீடுகள் பெரும்பாலும் பக்கத்து ஊர்களாகவே இருக்கும். ஆனால் எனது பாட்டி வீடு கொஞ்சம் தூரத்தில் உள்ள ஒரு சிறு நகரமென்பதால் அடிக்கடி பஸ் ஏறி பார்ப்பவன் என்கிற ரேஞ்சில் நிறைய பெருமைகள் எனக்கிருந்ததால் நான் சொல்வதே அவர்களுக்கு வேதவாக்கு. எங்க பாட்டியின் ஊர்ல ரோட்டுல கப்பல் போகும்டான்னு சொன்னாக் கூட நம்பும் வெள்ளந்தி பயமக்க. பாட்டியின் வீட்டிற்குச் செல்லும்போது சில வீடுகளில் ஆண்ட்டெனாவைப் பார்த்திருப்பதால் தொலைக்காட்சிப் பெட்டியில் படம் தெரிய ஆண்ட்டெனா அவசியமென சொல்லியிருந்தேன். ஆனால் அன்று ஆண்டெனா இல்லாமல் படம் ஓடியதைக் கண்டு எப்படி இது சாத்தியமென்று எனக்கோ ஒரே குழப்பம். மற்ற பசங்களின் முன் முதன் முறையாக என் ரீல் அந்து போனது அப்போதுதான். அதன் பின் நான் என்ன சொன்னாலும் கையால் ரீல் சுற்றுவதைப் போல் சைகை செய்து கமுக்கமாய் சிரித்து வெறுப்பேற்றுவானுங்க.

விடுதலைப் புலிகள் போட்டு வைத்த பிள்ளையார் சுழியைத் தொடர்ந்து எங்கள் ஊர் இளைஞர் மன்றத்தினர் விடுமுறை நாட்களில் தஞ்சையிலிருந்து வீடியோ டெக் வாடகைக்கு எடுத்து வந்து பள்ளிக்கூடத்தில் வைத்து வருடத்திற்கு இரண்டு மூன்று முறை படம் ஓட்ட ஆரம்பித்தார்கள். நாயகன், கரகாட்டக்காரன் போன்ற படங்களை ஓட்டியபோது தியேட்டரைப் போன்றே பெரும்கூட்டம் திரண்டது.

சில பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு இலவச அனுமதி வேண்டியும், சிலர் அவர்கள் வீட்டிலிருந்து ஒரு பள்ளிக்கூடத்தையே அழைத்து வந்து ஐம்பது காசைக்கொடுத்து பேரம் பேசுவதெல்லாம் வேறு நடக்கும். அப்படி டிக்கெட் எடுக்க காசில்லாமல் வெளியில் நிற்பவர்கள் பள்ளிக்கூடத்தைச் சுற்றிச் சுற்றி வந்து ஜன்னல் வழியாக உள்ளே பார்க்க என்னன்னவோ வித்தைகளெல்லாம் செய்வார்கள். ஆனாலும் ஒவ்வொரு ஜன்னலிலும் ஒருத்தர் தாழ்ப்பாள் இல்லாத ஜன்னல் கதவுகளை உள்பக்கமா இழுத்து பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பார். முதல் படம் ஓடிக்கொண்டிருக்கும் வரைதான் ஏகப்பட்ட கெடுபிடிகளாக இருக்கும். பிறகு ஒன்னுக்கடிக்க வெளியில் வருபர்களோடு சேர்ந்து டிக்கெட் எடுக்காதவர்களும் நைசாய் வந்து அமர்ந்து விடுவார்கள். ஓரளவு முதலுக்கு மோசமில்லாத வசூல் வந்ததும் வெளியில் நிற்பவர்களை மன்றத்து அண்ணன்களே இலவசமாக அனுமதித்துவிடுவார்கள். காசு கொடுத்து வந்தவனெல்லாம் முதல் படம் முடிந்ததும் தூங்கிவிடுவான், பிளாக்கில் வந்தவர்கள் விடியவிடிய படம் பார்த்துவிட்டு விடிந்ததும் டிக்கெட் எடுத்த பார்ட்டிகளுக்கு கதை சொல்லிக்கொண்டிருப்பார்கள்.

சில தடவை எங்க அப்பா படம் பார்க்க அனுமதி கொடுக்காமல் கிராமர் எடுக்க ஆரம்பித்து விடுவார். அன்றைக்கு காலையில் இருந்தே சும்மாதான் திரிந்து கொண்டிருந்திருப்பேன் ஆனால் படம் போடும் நேரத்தில்தான் பாடம் நடத்த ஆரம்பிப்பார். பள்ளிக்கூடமும் எங்க வீடும் அடுத்தடுத்து இருப்பதால் அங்கே படம் ஓடிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். இவரோ இங்கே ”ராமு இஸ் ஸ்மாலர் தேன் ராஜா” இதை பாஸிடிவ் டிகிரியா மாத்து என்பார். துக்கம் தொண்டையை அடைக்கும், கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு நிற்கும். பிறகு கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு ”போய்த்தொல” என்று காசு கொடுத்து விரட்டிவிடுவார். சில தடவை அழிச்சாட்டியமாய் அனுப்பவே மாட்டார். அப்போதெல்லாம் நினைத்துக்கொள்வேன் பொறந்தாலும் வாத்தியார் பிள்ளையா மட்டும் பொறக்கக் கூடாதென்று.

1990 ல் எங்கள் ஊருக்கு பஞ்சாயத்துத் தொலைக்காட்சியின் வருகை நிகழ்ந்தது . டீ.வி வந்த அன்று ஊரே பள்ளிக்கூடத்தின் முன்பு திரண்டு விழாக்கோலம் பூண்டு வரவேற்றது அந்த பிளாக் அண்ட் ஒயிட் சாலிடர் டீ.வியை. ஆண்டெனாவை ஃபிட் செய்து இப்படியும் அப்படியுமாய் திருப்பி சிக்னலைப் பிடித்து ஒரு வழியாய் ஏதோ ஹிந்தி நிகழ்ச்சி ஓட ஆரம்பித்தது. கலைக்கு மொழியில்லை என்பதை முழுதாய் உணர்ந்த நாள் அது. ஊர் மொத்தமும் அசையாமல் பார்த்து ரசித்தது அன்றைய ஹிந்தி நிகழ்ச்சிகள் முழுவதையும்.

ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை படத்திற்கும், வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் நிகழ்ச்சிக்கும் தவமாய் தவமிருந்ததெல்லாம் இப்போது நினைத்தாலும் பசுமையான காட்சிகளாக நினைவில் விரிகிறது. ஞாயிற்றுக் கிழமை ஐந்து மணிக்கு ஒளிபரப்பாகும் படத்திற்கு மூன்று மணிக்கே பள்ளியை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். அன்றைய எல்லா வேலைகளும் படம் பார்ப்பதை மனதிற்கொண்டே பக்கா பிளானிங்கா முன்கூட்டியே நடக்கும். இது சிறுவர்கள்,பெண்கள் தொடங்கி ஊரின் அத்தனை பேருக்கும் பொருந்தும். அப்படி இருக்கும் சமயத்தில் பவர் கட் ஆகிவிட்டால் துக்க வீடு கணக்கா யாரோடும் பேசும் மனநிலையற்று பித்து பிடித்ததைப் போன்று அமர்ந்திருப்பார்கள். பவர் வருவதற்கு முன்பாகவே எவனாவது “ஹைய்யா கரண்ட் வந்திடுச்சு ” என்று கத்தி கொலைவெறியை கிளப்புவானுங்க. அப்படிக் காத்துக் கிடந்து பார்ப்பது அரதப் பழசான ஒரு பூலோக ரம்பையோ, மாகாக்கவி காளிதாசோவோதான் இருக்கும். எப்போதாவது ”மூன்றாம் பிறை”, ”வேலைக்காரன்” போன்ற ரிலிஸாகி ஐந்தாறு வருடங்களேயான புதுப்படங்களை ஆச்சர்யமாய் ஒளிபரப்புவார்கள்.

தூர்தர்ஷனைத் தவிர வேறு சானல்களும் இல்லாததால் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் இடையே ஒளிபரப்பாகும் விளம்பரங்களைக் கூட ஆர்டராக மனப்பாடம் செய்து ஒப்பித்த காலமது. ரொம்ப பிரசித்திப் பெற்ற விளம்பரம் ”என்ன ஆச்சு குழந்த அழுது” என்று ஆரம்பிக்கும் கிரிப் வாட்டருக்கான விளம்பரம்தான்.
இது போன்ற விளம்பரங்களைப் பார்க்கையில் மண்வாசனையோடு பசங்க உதிர்க்கும் கமெண்ட்ஸ், தடங்கலுக்கு வருந்தும்போது வரும் கூஊ...ஊ சவுண்டுக்கு கோரஸ் பாடுவது என ரகளையான நாட்கள் அவை.

பஞ்சாயத்து டீ.விதானே என்று ஆளாளுக்கு உரிமை கொண்டாடியதில் சீக்கிரமாகவே பல்லிளித்தது அந்த சாலிடர். ஸ்கிரினில் ”ஷ்ஷ்ஷ்” என்ற சத்தத்தோடு தெரியும் மங்களான காட்சிகளைக் கூட விடாமல் பார்க்க ஆரம்பித்து வீடியோ இல்லாமல் வெறும் ஆடியோவை மட்டுமே கேட்கும் ரேடியோவாகவும் பரிணாமத் தேய்வு அடைந்து பல பரிமாணங்களில் வேலை செய்தது அந்த சாலிடர். பிறகு ஒரு நாள் யார் ஆப்பரேட் செய்வது என்ற சண்டையில் ஒன்றுக்கும் உதவாத ஜடமானது. சண்டையின் உச்சத்தில் அதுவரை அமைதியாக இருந்த ஒரு அண்ணன் ”எனக்கும் இந்த டீவியில் ஒரு நெட்டாவது பங்குண்டு” என்று சொல்லியபடியே பூஸ்டரை தூக்கி உடைத்துவிட்டு எழுந்து சென்றார். ஒரு வழியாய் பஞ்சாயத்து டீ.விக்கு ஆப்பு வைத்துவிட்டார்கள். அந்த சமயம்தான் ராஜிவ்காந்தி அஸாசினேஷன் நடந்தது. எங்க ஊரில் டீ.வி ஓடாததால் ராஜிவ் காந்தி அவர்களின் இறுதி ஊர்வலக் காட்சிகளைப் பார்ப்பதற்காக பக்கத்து ஊருக்கு குறுக்குப் பாதையில் காட்டாற்றில் இறங்கி கொளுத்தும் வெயிலில் கருவேலங்காட்டினுள் புகுந்து சென்று பார்த்ததெல்லாம் மறக்கமுடியாத நினைவுகள்.

இரண்டு வருடங்களாக தொலைக்காட்சியில் செய்திகள் பார்த்து பழகிவிட்ட எங்க அப்பா எங்கள் வீட்டிற்கு ஒனிடா 21 இன்ச் கலர் டீவியை 92ம் வருடம் திபாவளி அன்று வாங்கிவந்து எங்களை ஆச்சர்யப்படுத்தினார். அதுதான் எங்கள் பகுதிக்கே முதல் வண்ணத்தொலைக்காட்சி. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் வீட்டின் வாசலில் டீ.வியை எடுத்து வைத்து விடுவோம் ஊரே அன்று எங்கள் வீட்டின் வாசலில் இருக்கும். நான்கு ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பக்கத்து ஊர் இளைஞர்கள் சிலர் சைக்கிளில் எங்கள் வீட்டிற்கு வேல்ட்கப் ஃபுட்பால், கிரிக்கெட் பார்க்க வந்த கதையெல்லாம் உண்டு. படம் பார்க்க வரும் மக்கள் எங்கள் வீட்டு வாசலையே டாய்லெட்டாக்கி அசிங்கம் செய்து வைத்ததால் என்னென்னவோ ரூல்ஸ் போட்டும் யாரும் மதிக்காததால் சில மாதங்களுக்குப் பிறகு டீ.வியை வெளியில் எடுத்து வைப்பதை நிறுத்த வேண்டியதாகிவிட்டது.

இலங்கை சேனல்களான ரூபவாஹிணியும், ஐ.டி.என்னும் அவ்வப்போது கிராஸ் ஆகும். அதில் ஐ.டி.என்னில் புத்தம் புது தமிழ் படங்கள் ஒளிபரப்புவார்கள். பாதி படம் வரை நன்றாகத் தெரியும் திடீரென சிக்னல் கட்டாகிவிடும் அந்த சமயத்தில் ஆண்டெனாவை திருப்பித் திருப்பியே நாளெல்லாம் மண்வெட்டி பிடித்து வெட்டுபவனைப் போல கடுமையாய் கை காய்த்துப் போய்விடும்.

இப்போது வீடு தவறாமல் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியும், கேபிள் இணைப்பும் இருக்கிறது ஆனாலும் அளவோடு இருந்ததால் அமுதாய் தெரிந்த அந்த ஒலியும் ஒளியும் காத்திருப்பின் சுகமே தனிதான்.

Friday 25 September 2009

நொறுக்குத் தீனி சும்மா கொறிக்க...

சென்ற மாதம் நண்பர் ஒருவரின் திருமண விழாவில் வந்திருந்தவர்கள் எல்லோருக்கும் மணமக்களின் பெயர்கள் அச்சிடப்பட்ட கைக்குட்டையை வழங்கினார்கள். அந்தக் கைக்குட்டை அநியாயத்திற்கு சின்னதா இருந்தது. வழக்கம் போல என்னோட குசும்பு பிடித்த நண்பன் (அந்த டீக்கடை பையனிடம் லந்து அடித்தாரே அவரேதான்) கைகுட்டை வழங்கிக்கொண்டிருந்த இன்னொரு நண்பரிடம்,
நண்பர் 1: ஆமா என்ன கொடுத்திட்டு இருக்க
நண்பர் 2: கர்சிஃப் தாண்ணே
நண்பர் 1: அப்படின்னா, தமிழில் சொல்லுய்யா
நண்பர் 2: (சிரித்துக்கொண்டே) கைக்குட்டைண்ணே
நண்பர் 1:ம்ம்,இதுக்கு பேரு கைக்குட்டையா ? விரல்குட்டைன்னு வேணா சொல்லிக்க.
நண்பர்2:??????
*************************
பதிவுலகில் சில நண்பர்கள் ரொம்ப அவசியமான சிந்திக்க வைக்கக் கூடிய விஷயங்களைப் பற்றிய டாப்பிக்கை எடுக்கிறார்கள்.ஆனால் அந்த விஷயத்தைப் பற்றிய ஆழ்ந்த புரிதல்கள் இல்லாமலேயே எழுதுகிறார்கள்.சில விஷயங்கள் வயதின் ஓட்டத்திலும்,அனுபவ ரீதியாகவும் தான் புரிந்துகொள்ள இயலும் என்பது என் எண்ணம், வாசிப்பனுவத்திலேயே எல்லாத்தையும் அனுகிவிட முடியாது. அப்படியொரு நண்பர் தொடர்ந்து ஆழமான விஷயங்களை மேம்போக்காக என்று கூட சொல்ல முடியாதபடிக்கு எழுதிக்கொண்டிருக்கிறார். ஊடகங்களில் வரும் செய்திகளில் சுவாரஸ்யத்திற்காக சேர்க்கப்படும் யூகத்தின் அடிப்படையிலான செய்திகளையும் அப்படியே நம்புபவர் போல் இருக்கும் அவரின் தர்க்கங்கள். இந்த மாதிரி எழுதுபவர்களைப் பார்க்கும் போது பயமாக இருக்கிறது. அதைவிட இந்த இடுகைகளுக்கு வரும் ’அருமையாச் சொன்னீங்க’ என்பது போன்ற டெம்பிளேட் பின்னூட்டங்கள் இன்னும் பயமுறுத்தும் விஷயங்களா என் அளவில் தோன்றுகிறது.
*************************
சிறுகதை பட்டறையில் டீ இடைவேளையில் சில நண்பர்களிடம் பேசிக்கொண்டிருக்கையில் சிறுகதை எழுதும்போது வாசிப்பாளனுக்கு கதையின் நம்பகத் தன்மையை கூட்ட ஒரு சின்ன டிப்ஸ் சொன்னார் சுந்தர்ஜி , எடுத்துக்காட்டாக,”அவன் கையில் சிகரெட் புகைந்து கொண்டிருந்தது” என்பதைக் காட்டிலும் ”அவன் கையில் கிங்ஸ் புகைந்து கொண்டிருந்தது” ,அணிந்திருந்த புதுச் சட்டை கசங்கியது என்பதைக் காட்டிலும் அந்த சேர்ட்டின் பிராண்ட் நேம் யூஸ் பண்ணலாம் அப்படி எழுதும் போது கதைக்கு எதார்த்தம் கூடும் என்றார். இது பலருக்கும் தெரிந்திருக்கலாம் ஆனால் என்னைப் போன்ற ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு உதவும் என்று நினைக்கிறேன்.
*************************
பிளாஸ்டிக் கப்பின் உபயோகத்தை தடைசெய்ய உத்தரவு பிறப்பித்தும் இன்னும் நிறைய டீக்கடைகளில் பிளாஸ்டி கப் பயன்படுத்துகிறார்கள்.நாட்டில் எவ்வளோ பிரச்சனை இருக்கு இப்போ இதுதான் முக்கியமான்னு நானும் சராசரியா யோசிச்சிட்டு போயிடுவது வழக்கம். சமீபத்தில் ஒரு மாவட்டத்தின் தலைநகர நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் டீக்கடையிலேயே போலிஸாரும் வழக்கறிஞர்கள் சிலரும் பிளாஸ்டிக் கப்பில் டீ அருந்திக்கொண்டிருப்பதைப் பார்த்து சராசரிக்கும் சராசரி மனுஷனாய் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு வந்தேன்.
*************************
பிரபல பதிவர் ஒருத்தர் என்னிடம் சாட்டில் ” உறுபசின்னா என்ன தல” என்றார். ”தெரியலையே நண்பா” என்று நான் அனுப்பிய அடுத்த நொடியில் துள்ளி வந்தது அவரிடமிருந்து அடுத்த மெஸேஜ் ”அப்போ உங்க பேரின் பின் பாதியை கட் பண்ணிடுங்க” என்று.அதற்கு பதிலாக நான் டைப்பி அனுப்பாமல் விட்டது இங்கே ”நான் என் பேரின் பின்பாதியை கட் பண்ணிக்கிறேன் .நீங்க உங்க பேரின் முன் பாதியை கொஞ்சம் கட் பண்ணிக்கோங்க” . யாரந்த பி.ப ?