Monday 6 February 2012

பல்பு

”மச்சி , ஈவ்னிங் ஃப்ரி பண்ணிக்கோ சரக்கு இருக்கு”.

“டேய் இன்னைக்கு வேண்டாண்டா ஒர்க் இருக்கு, ஆஃபிஸ்லேருந்து கிளம்ப லேட்டாகும்”

”அப்படி என்னதாண்டா ஆணி புடுங்குவீங்க இந்த சாஃப்ட்வேர் கம்பெனிகள்ல” என்றவன், ”கிளென்ஃபிடிச் ஃப்ரம் யூகே யோசிச்சுக்க. வச்சிடட்டுமா” என்றான்.

“டேய் டேய் மச்சி பொறுடா ..ம்ம்ம் ஹி ஹி வறேன்டா”

”ஹா ஹா ... சரி நானே உங்க ஆஃபிஸ்ல வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்” என்றுவிட்டு போனை கட் பண்ணியவன் என்னுடைய பால்ய கால நண்பன் ரகு.

பெங்களூருவில் அஞ்சு வருஷம் குப்பை கொட்டிவிட்டு போன மாசம்தான் சென்னைக்கு வந்திருக்கான். ரொம்ப நாளா டச்சில் இல்லாமல் இருந்தவன் எப்படியோ முகநூலின் வழியா பிடிச்சிட்டான். இதோ இங்கு வந்து மூன்றாவது முறையாக சந்திக்க போறோம்.

காலையிலே இந்த புளு கலர் செக்டு ஷேர்ட் போடும்போதே தோணுச்சு இன்னிக்கு ரகு கால் பண்ணிட போறான்னு. நான் இதே ஷேர்ட் அணிந்திருந்த நாட்களில்தான் இதற்கு முன்பான இரு சந்திப்புகளுமே நடந்தன. ஆச்சர்யம் என்னென்னா அவனும் கூட பிஸ்தா கலரிலான செக்டு ஷேர்ட்தான் அந்த இரு சந்திப்புகளிலுமே அணிந்திருந்தான். இன்றைக்கும் அவன் அதே ஷேர்ட்டில் வரானான்னு பார்க்கணும்.

சரியா ஆறு மணிக்கு போன் பண்ணினான்,

“ டேய் மச்சி நான் உங்க ஆஃபிஸ் வெளியேதாண்டா நிக்குறேன் ”

”ரெண்டே நிமிஷம்டா ஷட் டவுன் பண்ணிட்டு வறேன்”

வாட் எ கோஇன்ஸிடெண்ட், சொன்னா நம்ப மாட்டீங்க அவன் இன்றைக்கும் அதே ஷேர்ட்டில்தான் இருந்தான். யுனிகானில் அமர்ந்து ரோட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவனை நோக்கி,

“டேய் மச்சி” என்றதுதான் தாமதம்.

திரும்பியவன் யோசிக்காமல் கேட்டான்,“டேய் உங்க ஆஃபிஸ்லயும் யூனிஃபார்ம்தானா?”

Thursday 19 January 2012

காணாமல் போன இசையமைப்பாளர்கள்:

ரொம்ப நாளைக்குப் பிறகு வேதம் புதிது படத்தின் பாடல்களை கேட்டுக் கொண்டிருந்தேன்.இவ்வளவு அற்புதமான பாடல்களை தந்த இசையமைப்பாளர் தேவேந்திரன் ஏன் பெரிதாக அங்கீகரிக்கப்படவில்லை என்ற எண்ணம் தோன்றியதன் விளைவு இப்பதிவு.

"கண்ணுக்குள் நூறு நிலவா","புத்தம் புது ஓலை வரும்" - வேதம் புதிது,
"பொங்கியதே காதல் வெள்ளம்",”இதழோடு இதழ் சேர்க்கும் நேரம்- மண்ணுக்குள் வைரம் போன்ற அற்புதமான மெலடிகளை தந்த தேவேந்திரன் 90 களின் ஆரம்பத்தில் வெளியான புதிய தென்றல் திரைப்படத்திற்குப் பிறகு என்னவானார் என்பது தெரியவில்லை.இப்படத்தின் பாடல்களும் கூட நன்றாக இருக்கும். குறிப்பாக "தென்றலிலே மிதந்து வந்த தேவமங்கை வாழ்க" பாடலைச் சொல்லலாம்.

சௌந்தர்யன், நல்ல திறமையிருந்தும் ஏனோ இவரால் முன்னணி இசையமைப்பாளர் பட்டியலில் இடம்பிடிக்க முடியவில்லை.இவரது முதல் படமான சேரன் பாண்டியன் படத்தின் "சின்னத் தங்கம் ", "வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே" தொடங்கி அனைத்து பாடல்களுமே மிகப் பெரிய ஹிட்டானவையே என்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்தின் பாடல்களில் ஒன்றான "காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு" பாடலை எழுதியதும் இவரே. இவரின் அடுத்த படமான சிந்து நதி பூவின் "மத்தாளம் கொட்டுதடி மனசு" இன்றும்கூட கிராமப்புறங்களில் அடிக்கடி ஒலிக்கக் கேட்கலாம் .கோபுர தீபம் படத்தின் ’உள்ளமே உனக்குத்தான்’ பாடலுக்கு கிராமத்து இசைப்பிரியர்களிடம் பெரும் வரவேற்புக் கிடைத்தது.

"உன்னை தொட்ட தென்றல் இன்று " என்ற அற்புதமான மெலடியோடு தலைவாசலைத் திறந்த பால பாரதி அமராவதியில் "தாஜ்மஹால் தேவையில்லை","புத்தம் புது மலரே", "உடலென்ன உயிரென்ன" என்ற எளிதில் மறக்க முடியாத பாடல்களை தந்து,"யாருப்பா இந்த இசையமைப்பாளர்" என்று இசைப்பிரியர்களின் புருவங்களை உயர்த்தவைத்து அத்தோடு காணாமல் போனவர்தான்.சில வருடங்களுக்கு முன்பு மெர்குரிப் பூக்கள் படத்திற்கு பிண்ணனி இசை மட்டும் அமைத்ததாக ஞாபகம்.

வி.எஸ்.நரசிம்மன்,ஒரு காலத்தில் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் இரண்டு மூன்று படங்களுக்கு தொடர்ச்சியாய் இசையமைத்தவர்.அச்சமில்லை அச்சமில்லை படத்தின் "ஆவாரம் பூவு","ஓடுகிற தண்ணியிலே" பாடல்கள் இன்றும்கூட தொலைக்காட்சி நேயர்களால் விரும்பி கேட்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்பாடல்களை முதன் முதலில் கேட்டபோது இசைஞானி இளையராஜாதான் இசையமைத்திருக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். வி.எஸ்.நரசிம்மன் இசையில், சுரேஷ் மேனன் இயக்கத்தில் வெளியான பாசமலர்கள் படத்தின் " செண்பகப் பூவைப் பார்த்து" பாடலும் அவரது இசைத் திறமையை எடுத்துக் காட்டிய ஹிட் பாடலே.

"என்ன அழகு எத்தனை அழகு","ஏன் பெண்ணென்று பிறந்தாய்" என்று அசத்தலான பாடல்களோடு லவ் டுடேவில் அறிமுகமாகி ,"மலரே ஒரு வார்த்தை பேசு","சின்ன வெண்ணிலவே" என்று பூமகள் ஊர்வலத்திற்காக இசைவிருந்து படைத்து “நீ மலரா மலரா” என்று அற்புதம் நிகழ்த்திவிட்டு மௌனமான ஷிவா . அச்சு வெல்லமே அச்சு வெல்லமே” என்று சக்தியோடு தொடங்கிமுந்தானைச் சேலை முட்டுதா ஆளைஎன்று அரிச்சந்திராவோடு காணாமல்போன ஆகோஷ்(ஆனந்த்,கோபால் சர்மா,ஷ்யாம்), வி.ஐ.பி மூலம் அறிமுகமாகி "மின்னல் ஒரு கோடி" பாடலைத் தந்து ஆச்சர்யபடுத்தி சமீபத்தில் உற்சாகத்தில் அவரா இவர் என்று நினைக்கவைத்த ரஞ்சித் பரோட். கௌரி மனோகரியில் "அருவிகூட ஜதி இல்லாமல் ஸ்வரங்கள் பாடுது" பாடலைத் தந்த இனியவன் போன்ற இசையமைப்பாளர்கள் அறிமுகமான படங்களிலே எல்லோரது கவனத்தையும் ஈர்த்து, பிறகு ஒரு சிலருக்கு சரியான வாய்ப்பு கிடைக்காமலும், சிலருக்கு கிடைத்தும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமலும் காணாமல் போயிருக்கிறார்கள்.

இவர்களைத் தவிர இன்னும் இரண்டு இசையமைப்பாளர்களின் கதை சற்று வித்யாசமாய் இருக்கும். இவர்களை காணாமல் போனவர்கள் லிஸ்டிலும் சேர்க்க முடியாது, பிசியானவர்களின் வரிசையிலும் சேர்க்க முடியாது. திடீரென காணாமல் போவார்கள்,திடீரென நான்கைந்து படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருப்பார்கள். ஒருவர் "ஓ பொன்மாங்குயில் சிங்காரமாய்"(மனசுக்குள் மத்தாப்பு),"சின்னப் பூவே மெல்ல பேசு" (சின்னப் பூவே மெல்ல பேசு) என்று ஆரம்பத்தில் அசத்தலான பாடல்களை தந்து பிறகு விக்ரமன் படத்தில் ஒரே டியூனை வைத்து ஏகப்பட்ட படங்களுக்கு "லாலாலா" போட்ட எஸ்.ஏ.ராஜ்குமார் மற்றொருவர் அன்னை வயல் மூலம் "மல்லிகை பூவழகில்" என்று நல்ல பாடலோடு ஆரம்பித்து "செவ்வந்தி பூவெடுத்தேன்" என்று கோகுலத்தில் தனது திறமையை நிரூபித்து, உள்ளத்தை அள்ளித்தா என்று மிகப் பெரிய ஹிட்டெல்லாம் கொடுத்து பிறகு சில காப்பி&பேஸ்ட் போட்டுவிட்டு இப்போது தொலைக்காட்சியில் பாட்டுப் போட்டி நடுவராக இருக்கும் சிற்பி.

இப் பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருக்கும் இசையமைப்பாளர்கள் அறிமுகமான காலத்தில் இளையராஜா என்ற மிகப்பெரிய இசை சாம்ராஜ்யத்திற்கு ஈடுகொடுக்க முடியாமலும் அல்லது தனக்கான தனி இசை அடையாளம் இலாமல் இளைராஜாவின் இசைப்பாணியை அப்படியே தொடர முயன்றதாலும் கூட அவர்களால் தொடர்ந்து நிலைத்து நிற்க முடியாமல் போயிருக்கலாம். முன்னவர்களுக்கு இசைஞானி என்றால் பின்னவர்களுக்கு இசைப்புயல்.

"ஏதோ நடக்கிறது","தோடிராகம் பாடவா","மல்லிகைப் பூ பூத்திருக்கு" போன்ற அழகான மெலடிகளையும், ரஜினி படங்கள்(மனிதன்,ராஜா சின்ன ரோஜா) உட்பட சொல்லிக்கொள்ளும்படியான எண்ணிக்கையில் பல படங்களுக்கு இசையமைத்து சமீபத்தில் மறைந்த திரு.சந்திரபோஸ், பாலைவனச் சோலை("மேகமே மேகமே"),பெண்மணி அவள் கண்மணி("மூங்கிலிலை காடுகளே"), சம்சாரம் அது மின்சாரம்("சம்சாரம் அது மின்சாரம்","ஜானகி தேவி") என்று எண்பதுகளின் மத்தியில் நிறைய படங்களுக்கு இசையமைத்த சங்கர் கணேஷ் மற்றும் செந்தூரப் பூவே,ஊமை விழிகள்,உரிமை கீதம்(மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம்),வெளிச்சம்("துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே") போன்ற வசீகரிக்கும் பாடல்களைக் கொண்ட படங்களுக்கு இசையமைத்த மனோஜ் கியான் போன்ற ஒரு காலக்கட்டத்தில் மிகப்பிரபலமாக இருந்த இவர்களும் கூட காணாமல் போன லிஸ்ட்டில் இடம்பிடித்தது ஏனோ தெரியவில்லை.

அழகன்,வானமே எல்லை,ஜாதி மல்லி போன்ற படங்களுக்கு இசையமைத்த மரகதமணி(கீரவாணி),கொடிபறக்குது,கேப்டன் மகள் போன்ற படங்களுக்கு இசையமைத்த ஹம்சலேகா, ரசிகன் ஒரு ரசிகை(”பாடி அழைத்தேன்”,”ஏழிசை கீதமே”) படத்திற்கு இசையமைத்த அமரர் ரவீந்திரன் மற்றும் பூவுக்குள் பூகம்பம்("அன்பே ஒரு ஆசை கீதம்") படத்திற்கு இசையமைத்த சங்கீத ராஜன் ஆகியோரை காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்க்க முடியாது, காரணம் அவர்கள் தெலுங்கு மற்றும் மளையாளத்தின் முண்ணனி இசையமைப்பாளர்கள்.தமிழுக்கு அவ்வப்போது விருந்தாளிகளாய் வந்த இசையமைத்தவர்கள்.

கங்கை அமரன்,எஸ்.பி.பி மற்றும் டீ.ராஜேந்தர் ஆகியோர் இசையமைப்பதை முதன்மையான தொழிலாக எடுத்துக்கொள்ளாததால் அவர்களை இந்த பட்டியலில் சேர்க்கவில்லை.

டிஸ்கி:இது ஒரு மீள்ஸ்

Sunday 22 May 2011

கண்ணே கட்டிக்க வா..






விக்ரம் படத்தின் ”வனிதாமணி வனமோகினி” மெட்டுக்கு எனது முயற்சி...


கயலோ விழி

கரும்போ மொழி
கொல்லாதே..

குறும்பாய் சிரி
உடும்பாய் பிடி
தள்ளாதே..

ஏகாந்தமடி என்னை ஏதோ செய்யுதடி
ஏராளமாய் எண்ணம் வந்து கொல்லுதடி
ஏகாந்தமடி என்னை ஏதோ செய்யுதடி
ஏராளமாய் எண்ணம் வந்து கொல்லுதடி
என்னைச் சேரடி..

ரசிக்கிறான்
கண்ணில் வலை விரிக்கிறான்..ஓஓஓ..

சிரிக்கிறாள்
கன்னம் ரெண்டில் சிவக்கிறாள் ஓ ஓ ஓ..

கனலாய் கனா தினம் எனை வாட்டாதோ..
புனலாய் வரும் வெள்ளம் வெப்பம் தீர்க்காதோ..

அதரம் வழி
மதுரம் சுவை
வகையாய் எனை அணை

அணைத்தால் உனை
திறக்கும் அணை
இனி நான் உந்தன் துணை..

போதும் போதும்
போதையேறும்
பேதை தாங்காது.. (கயலோ விழி..)


இளமையாய்.
எங்கும் இனிமையாய்.. ஓஓஓ..

திறமையாய்
எல்லாம் திருடினாய்..ஓஓஓ

அடியே என்னில் என்ன புது பூகம்பம்
அடடா பொறு இது வெறும் ஆரம்பம்

இடம் வலம் எது
புரியா நிலை
புதிராய் இன்று
பெண்ணே..

தினம் தினம் இனி
இதுதான் நிலை
புலரி வரை
அன்பே..

ஏழை தேகம்
வேளை பார்த்து
சொர்க்கம் சேராதோ.... (கயலோ விழி..)

Friday 6 May 2011

திரையில் கிராமத்து மெட்டுகள் 2

சிறிய இடைவெளிக்குப் பிறகு நண்பர் தமிழ்ப்பறவையின் நட்பிற்காக மீண்டும் பாடல் தொகுப்பு. இதுவும் 90 களின் பாடல்களே. திரையில் கிராமத்து மெட்டுகளின் தொடர்ச்சியாய் இத்தொகுப்பு.

1. படம்:பார்வதி என்னை பாரடி
இசை:இளைய ராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பி,ஜானகி.

2. படம்:சாமி போட்ட முடிச்சு
இசை:இளைய ராஜா
பாடியவர்கள்:மலேசியா வாசுதேவன்,சித்ரா.


3. படம்:சின்னத்தாயி
இசை:இளையராஜா
பாடியவர்கள்:எஸ்.பி.பி,ஜானகி.


4. படம்:தங்கமனசுக்காரன்
இசை:இளையராஜா
பாடியவர்கள்:மனோ,ஜானகி


5. படம்:புது நெல்லு புது நாத்து
இசை:இளையராஜா
பாடியவர்கள்:எஸ்.பி.பி,ஜானகி

6. படம்:என் உயிர் தோழன்
இசை:இளையராஜா
பாடியவர்கள்:மலேசியா வாசுதேவன்,சித்ரா

7. படம்:சாமுண்டி
இசை:தேவா
பாடியவர்கள்:எஸ்.பி.பி,ஜானகி

8. படம்:காவல் கீதம்
இசை:இளையராஜா
பாடியவர்கள்:எஸ்.பி.பி,ஜானகி


கொசுறு: வா அருகில் வா பட பாடலான ”மானா மதுரையில் பார்த்தேன் உன்னைக் கண்ட நாளா மதிகெட்டுப் போனேன்” சுட்டி கிடைத்தால் நட்புகள் பகிரவும்.

Friday 15 April 2011

ஏதோ மோகம் ஏதோ தாகம்...

”ஏதோ மோகம் ஏதோ தாகம் ” - கோழி கூவுது பாடலின் மெட்டுக்கு வரிகள் எழுத முயன்றதன் விளைவு கீழே.

மாலை வேளை
வ‌ந்தான் காளை
தேக‌மெங்கும் தென்ற‌ல் தொட‌
தேவியிவ‌ள் நெஞ்ச‌ம் சுட‌
மோக‌ம் மெல்ல‌..
என்ன‌ சொல்ல‌....

மாலை வேளை
வ‌ந்தாள் பாவை
க‌ன்னியிவ‌ள் க‌ண்க‌ளிலே
காம‌ன‌வ‌ன் அம்புக‌ளை
க‌ண்டேன் நானே
சொர்க்க‌மிங்கே..!

அந்தி வானம் மஞ்சள் பூசும்
ஆளை எங்கோ கொண்டு சேர்க்கும்
அந்தி வானம் மஞ்சள் பூசும்
ஆளை எங்கோ கொண்டு சேர்க்கும்

வாடை மேய்ந்த வாழை தேகம்
வாகை சூட வேளை பார்க்கும்
வாடை மேய்ந்த வாழை தேகம்
வாகை சூட வேளை பார்க்கும்

பருவ‌ ராக‌ம் பாடும் நேரம்
இர‌வு ஏனோ நீளமாகும்
பருவ‌ ராக‌ம் பாடும் நேரம்
இர‌வு ஏனோ நீளமாகும்

செண்டு ம‌ல்லி பூவின் வாச‌மே
ரெண்டு நெஞ்சிலே பார‌மேற்றுமே

(மாலை வேளை...)
ஆளைக் கொல்லும் தேக‌ம் பார்த்து
ஆடிப் போனேன் உச்சி வேர்த்து
ஆளைக் கொல்லும் தேக‌ம் பார்த்து
ஆடிப் போனேன் உச்சி வேர்த்து

கன்ன‌ல் வில்லை கண்ணில் பார்த்து
என்னுள் எங்கும் காம‌ன் கூத்து
கன்ன‌ல் வில்லை கண்ணில் பார்த்து
என்னுள் எங்கும் காம‌ன் கூத்து

உன்னைக் க‌ண்ட‌ அந்த‌ நேர‌மே
த‌ந்தை தாயும் ரொம்ப‌ தூர‌மே
உன்னைக் க‌ண்ட‌ அந்த‌ நேர‌மே
த‌ந்தை தாயும் ரொம்ப‌ தூர‌மே

அந்தித் தென்ற‌ல் மெல்ல‌ வீசுதே
வ‌ஞ்சி நெஞ்சிலே ஆசை பூக்குதே..
(மாலை வேளை...)

குறிப்பு:இப்படியான விபரீத முயற்சி இன்னும் தொடரும்.

Monday 24 January 2011

போகிற‌ போக்கில்...

ம‌ச்சான்:என்ன‌ய்யா மாமா பொங்க‌ல் வேலையெல்லாம் ரொம்ப‌ சுறுசுறுப்பா பாக்குற‌ மாதிரி தெரியுது?

மாமா:ஏதோ என்னால‌ முடிஞ்ச‌தை செய்றேன்

ம‌ச்சான்:யோவ் முடிஞ்ச‌தை ஏய்யா திருப்பியும் செய்யிற முடியாம‌ இருக்கிற‌ வேலைய‌ பாப்பியா

மாம‌ன்:????

*****************************
ஃபைனான்ஸ் பார்ட்டி:அண்ணே, தேதி ப‌த்தாச்சு இன்னும் உங்க‌ வீட்டில‌ ப‌ண‌ம் க‌ட்ட‌ல‌..

மாமா:ரெண்டு நாள் பொறுத்துக்க‌ப்பா க‌ட்டிடுறேன்.

ம‌ச்சான்:யோவ் மாமா அவ்வ‌ள‌வோ பெரிய‌ ஆளாய்யா நீ, ப‌ண‌ம் க‌ட்ட‌ ரெண்டு நாள் ஆகுமா?அவ்வ‌ளோ ப‌ண‌மாய்யா வ‌ச்சிருக்க‌ ஊர் ப‌ய‌லுவ‌ க‌ண்ணு ப‌டுற‌துக்குள்ள‌ எல்லாத்தையும் க‌ட்டி வ‌ச்சிருய்யா.

மாமா:????

***************************
மாமா:சாப்பிட்ட‌திலேர்ந்து வ‌யித்த‌ வ‌லிக்கிற‌ மாதிரியே இருக்கு

ப‌ங்காளி:அதுக்குத்தான் சொன்னேன் நைட்டுல‌ முட்ட‌(முட்டை) சாப்பிடாதேன்னு.

ம‌ச்சான்:முட்ட‌(முட்டை) சாப்பிட்டதால‌ இருக்காது, வ‌யிறு முட்ட‌ சாப்பிட்டுருப்பாரு அதான் வ‌லிக்குது.

மாமா:????

******************************
ம‌ச்சான்:இந்த‌ சுப்ர‌ம‌ணி எத்த‌ன‌ சுவ‌ரேறி குதிச்சிருப்பான், அவ‌னுக்கு பாருய்யா அருமையான‌ பொண்டாட்டி , இப்ப‌டி திரியிற‌வ‌ய்ங்க‌ளுக்குதாய்யா ந‌ல்ல‌ புள்ள‌ய‌ளா சிக்கிருது ம்ஹீம்..தான் உண்டு சோலி உண்டுன்னு அமைதியா இருக்குற‌வ‌ய்ங்க‌ளுக்கு பாரு இத்து போன‌து நொந்து போன‌து ஓட்ட‌ ஒட‌ச‌லா வ‌ந்து அமையும்..

மாமா:ஆமாமா, நீயும் தான் எந்த‌ வ‌ம்பு தும்புக்கும் போகாம‌ இருக்குற‌, உன‌க்கு எந்த‌ ஓட்ட‌ ஒட‌ச‌லோ..

ம‌ச்சான்:யோவ் ஒந்த‌ங்க‌ச்சியாதான் க‌ட்டிக்க‌லாம்னு இருக்கேன் நீ இப்ப‌டி சொல்ற‌.

மாமா:?????

Thursday 23 September 2010

பன்றி வேட்டையும் பாக்குத் திருவிழாவும்

எங்கள் ஊர்ப் பகுதியில் நடக்கும் சில வேடிக்கையான சம்பிரதாயங்களில் பெண் கேட்டல் என்ற நிகழ்வை எழுதியதைத் தொடர்ந்து இன்று பன்றி வேட்டையும் பாக்குத் திருவிழாவும் என்ற சுவாரஸ்யத் திருவிழாவைப் பற்றிப் பார்ப்போம்.

கிராமப் புறங்களில் நாட்டுத் திருவிழா என்று ஒன்று நடக்கும். பதினெட்டு கிராமங்கள் சேர்ந்தது ஒரு நாடு.(சோழர்களின் ஆட்சிக் காலத்தின் உள்ளாட்சிப் பிரிவுகளில் ஒன்றுதான் இந்த நாடுகள் எனும் அமைப்பு). கோனூர் நாடு, குளத்தூர் நாடு, காசவள நாடு, மெய்சொல்லி நாடு என ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு பெயருண்டு.

தஞ்சை மாவட்டத்தின் ஒரத்தநாடு தாலுக்காவின் கீழ் வரும் கோனூர் நாட்டில் வருடா வருடம் ஒரு வாரத்திற்கு மேலாக நடக்கும் நாட்டுத் திருவிழாவின் ஒரு சுவராஸ்யமான பகுதியே ”பன்றி வேட்டை பாக்குத் திருவிழா” .

பெரும்பாலான திருமண சம்பந்தங்கள் எல்லாமே இந்த பதினெட்டுப் பட்டிகளிலேயே இருக்கும்.(இப்போது பரவலா வெளியிலும் சம்பந்தம் பேசுகிறார்கள்) .இந்த பாக்குத் திருவிழாவன்று பதினெட்டு கிராம மக்களும் தங்கள் நாட்டிற்கென்று பொதுவாக இருக்கும் ஒரு கோயிலின் முன்பு கூடிவிடுவர்.

திருமணமானப் பெண்களுக்கு அவர்களின் தாய் வீட்டிலிருந்து சீதனமாக கொட்டப் பாக்குகளை கொடுப்பர்.இந்த பாக்குகளில் எண்ணிக்கை குறைந்த பட்சம் இருபத்தைந்திலிருந்து அதிக பட்சமாக ஆயிரக்கணக்கிலும் அவரவர் வசதிக்கேற்ப கொடுப்பார்கள்.(மக்கள் இப்போது நிஜாம் பாக்கிற்கு மாறி விட்டார்கள்).

இதில் முதல் பாக்கு என்று ஒன்று உண்டு. புதுமணப் பெண்ணிற்கு கொடுப்பதுதான் முதல் பாக்கு. பெண்ணின் உறவுக்காரர்கள் அனைவரும் புதுமணத் தம்பதியருக்கு தாம்பூலத்தில் பாக்கு, பணம் வைத்துக் கொடுப்பார்கள், பதிலுக்கு மாப்பிள்ளை வீட்டார் இனிப்பு வகைகளை கொடுப்பார்கள். எங்கெங்கு காணினும் நிறைய புதுமணத் தம்பதியரை பட்டுடைகளோடு காண்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

இந்த 18 பட்டிகளில் உள்ளவர்கள் பெரும்பாலும் ஒரே பள்ளியில் படித்தவர்களாக இருப்பார்கள். திருமணமாகி திருவிழாவில் கணவனோடு நிற்கும் பெண்கள் தங்களோடு கூடப் படித்தப் பசங்களைப் பார்க்கும்போது ஒரு மாதிரி நாணிக் கோணுவாங்க பாருங்க அடடா அழகான கவிதை தருணம்ங்க அது.

இன்னும் சில பெண்கள் பார்த்தும் பாராதது போல பந்தாவாக கணவனின் கைகோர்த்தபடியே நின்று கொண்டிருப்பார்கள், அந்த மாதிரி பொண்ணுங்களைத்தான் ரௌண்டு கட்டுவானுங்க பசங்க, ”டேய் ஊள மூக்கு”, ”சுருட்டை” ,”கௌதாரி” என பள்ளி நாட்களில் வைத்த பட்டப் பெயர்களை வேறு யாரையோ கூப்பிடுவதுபோல் உரக்கச் சொல்லி டரியலாக்குவானுங்க. பதறி கையை உதறி யாரும் அறியாத வண்ணம் “சீ போ” என்று அந்த பொண்ணுங்க செல்லமாய் திட்டுவதையெல்லாம் ஒரு வாரத்திற்கு கதை கதையாய் பேசித் திரிவாய்ங்க.

இன்னொரு பக்கம் பழைய காதலிகளை கண்களாலேயே நலம் விசாரித்த படியே மென்சோகத்தோடு நகர்ந்து போகும் நடுத்தர வயது மனிதர்களையும் இங்கே காணமுடியும்.

பாக்கு கொடுக்கும் வழக்கம் உறவுகளை புதுப்பித்துக் கொள்வதற்காக கொண்டாடப் படுவதாகும். பிறந்த வீட்டோடு என்ன பிரச்சனை இருந்தாலும் பாக்கு திருவிழாவில் ஒன்று கூடிவிடுவார்கள். என்ன சண்டை இருந்தாலும் இந்த பாக்கு கொடுப்பதை தொடர்வதற்குக் காரணம் பாக்கு கொடுக்கப் படவில்லை என்று தெரிந்தால் சம்பந்தப் பட்ட பெண்மணியின் ஊரில் நடக்கும் குழாயடிச் சண்டையில்“போடி சொத்த பாக்குக்கு வக்கத்தவள” என்ற ஏச்சு பேச்சுக்கு ஆளாகி பிறந்த வீட்டின் மானம் கப்பலேற்றப்படும் அபாயம் இருப்பதே. அதே போன்று ”கூடப் பொறந்தவளுக்கு பத்து ரூவாய்க்கு பாக்கு வாங்கிக் கொடுக்க துப்பு இல்ல இவனெல்லாம் தோளில் துண்டு போட்டுகிட்டு திரியிறான்” என்று அண்ணன்,தம்பிகளும் அட்டாக்கிற்கு ஆளாக நேரிடும். அந்த கௌரவப் பிரச்சினைக்காகவே விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.

புது மணப் பெண்ணிலிருந்து பாக்கின் அவசியம் உணர்ந்த பழைய குமரிகள் வரை திருமணமான அனைவருக்கும் பாக்கு அவரவர் பிறந்த வீட்டிலிருந்து வந்துவிடும். சகோதரர்கள் இருவரைக் கொண்ட பெண்கள் என்றால் இரண்டு தனித் தனிப் பாக்குகள் வரும், அதே பெண்ணின் கணவருக்கு இரு சகோதரிகள் என்றால் சகோதரர்களிடம் வாங்கிய பாக்குகளை கணவரின் சகோதரிகளிடம் கொடுத்துவிட்டு செலவை மிச்சப் படுத்திவிடுவார்கள்.

அலைபேசி இல்லாத காலத்தில் பாக்கை கையில் வைத்துக் கொண்டு அவரவர் உறவினர்களை கூட்டத்தில் அலைந்துத் தேடிக் கண்டிபிடித்து
” யுரேகா யுரேகா” என்று கத்தாத குறையாக பாக்கை கொடுப்பார்கள். அந்த கண்ணாமூச்சி விளையாட்டு இப்போது இல்லை.

தன் பிறந்த ஊரின் மக்களைப் பார்த்ததும்”பெரியம்மா”, ”தம்பிகளா”, ”சித்தப்பா” என எதாவது ஒரு உறவுமுறையை கொண்டு அழைத்தபடியே ஓடி வந்து நலம் விசாரிக்கும் பெண்களைப் பார்க்கும் போது பசங்களுக்கும் கூட கண் கலங்கிவிடும்.

இளந்தாரிக் கூட்டம் அடுத்த வருட புதுப் பாக்கிற்கு ஏற்பாடு செய்யும் விதமாக அவரவர்களுக்கேற்ற ஜில், ஜங், ஜக்கிற்குப் பின்னால் ரூட் விட்டபடியே திரிவது ஆண்டாண்டு காலமாக தொடரும் மரபுக் கவிதையின்
நீட்சிகள். சில ஜக்கெல்லாம்கூட தாவணியில் அன்று ஜில்லாகக் காட்சியளிக்கும், அதே மாதிரி பொருந்தா சுடிதாரில் ஜில்லும் ஜக்காக திரிந்து கொண்டிருக்கும்.

”பாம் பாம்” ஓசையை குழந்தைகள் இருக்கும் இடமாகப் பார்த்து அழுத்தும் ஐஸ் வண்டிக்காரர்,கலர் பலூனை குழந்தைகளிடம் காட்டி கண்ஜாடையில் வாங்கச் சொல்லும் பலூன் கடைக்காரர், வெரைட்டி ஸ்வீட் என்ற பெயரில் வித விதமான வடிவங்களில் ஒரே சுவையுடைய சக்கரைப் பாகு கட்டிகளை அழகாக அடுக்கி வைத்திருக்கும் திருவிழா ஸ்வீட் ஸ்டால்கள், ரங்கராட்டினம் என சிறுவர்களை கவர்ந்திழுக்கும் ஒரு தனி உலகத்தில் பெரியவனாகியும் பலமுறை தொலைந்திருக்கிறேன்.

மாமன்,மச்சானெல்லாம் ஒதுக்குப்புற இடத்தில் கள்ளத்தனமாக விற்கப்படும் சோமபானங்களில் மூழ்கி,கிங்,குயின்,ஜாக் என்ற வேத மந்திரங்களை ஓதி மகிழவென்று விழா சார்பாகவே ஒதுக்கப் பட்டிருக்கும் தனியிடத்தில் சமத்தாக அடைந்திருப்பர்.

இத்திருவிழாவின் இன்னொரு அங்கம்தான் ”பன்றி வேட்டை”. பால்குடம், காவடி எடுப்பதாக வேண்டிக்கொள்வதைப்போல பன்றி வேடமிடுவதாக வேண்டிக் கொண்டு அக்கோயிலின் அருகே இருக்கும் சிறு குட்டையின் சேற்றை உடலெங்கும் பூசியபடியே கோயிலின் முன்பு படுத்திருப்பார்கள். இதில் எல்லோரும் கலந்து கொள்வதில்லை இவ்விழா நடக்கும் ஊரைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரில் பதிமூன்று வயதுவரைக்கும் உள்ள சிறுவர்கள் மட்டுமே இப்படி பன்றி வேடமிடுவார்கள்.

உடலெங்கும் சேற்றைப் பூசியபடி இருக்கும் இச்சிறுவர்கள் பாக்குத் திருவிழாவிற்கு வந்திருக்கும் மக்களின் மேல் சேற்றுடம்போடு ஓடிவந்து உரசுவார்கள். இதனால் இந்த பன்றி வேடமிட்ட பசங்களைப் பார்த்ததும் மக்கள் தெரித்து ஓடுவதைப் பார்க்க ரகளையாக இருக்கும். பளிச்சென்று உடை தறித்தவர்களாகப் பார்த்து இந்த பன்றி பசங்க சேற்றை பூசிவிட்டு ஓடிவிடுவார்கள். அழுக்கான சட்டையோடு அசடு வழிந்து நிற்கும் சில மைனர் குஞ்சுகளைப் பார்க்க பரிதாபமாக இருக்கும்.

பல அம்சங்களை உள்ளடக்கிய இத்திருவிழாவின் முக்கிய நோக்கம் உறவை புதுப்பித்தலே. பிரச்சனைகள் நிலவும் உறவினர்களுக்கிடையே பகை மறந்து உறவாட நினைக்கும் நேரத்தில் மூன்றாவது நபர் சமரசம் தேவையிராமல் இயல்பாகவே அவர்கள் கூடிக் குலவவே இத்திருவிழா என்பது என் எண்ணம்.

Tuesday 17 August 2010

வாழ்க்கைப் ப‌ய‌ண‌த்தில்....

தெருவின் துவக்கத்தில்
ஒயின்ஸை நோக்கி தொடங்கிய பயணம்
இடவலமாய் மாறிமாறி குலுக்கியும்
இடைஇடையே இறக்கும் சரக்கில்
இறுதிவரை நிகழவே இல்லை
எதிர்பார்த்த போதை..!


முதல் ரவுண்டின் துவக்கத்தில்
நட்பின் மேல்
துளிர்க்கும் பாசமும் பிடிப்பும்
பற்றுதலும் பிரியமும்
மூன்றாவது ரவுண்டில்
முற்றிலும் நீர்த்துபோகிறது
எந்த மரியாதையுமின்றி....


எல்லா ஒயின்ஸின் வாசலிலும்
வாங்குவதில் பரபரப்பு வியாதியாய்
இந்த முறையாவது எல்லோரும்
வாங்கும் முன் வாங்க வேண்டும்
சங்கல்பம் நினைவிற்கு வருகிறது
வழக்கம் போல் முட்டிமோதி
வாங்க யத்தனிக்கும் நேரத்தில்..!


ஒரிஜின‌ல் இங்கே
:

ந‌ன்றி க‌திர்.

Friday 13 August 2010

ச‌ங்க‌த்தில் பாடாத‌ க‌விதை

ஆட்டோ ராஜா பட‌ பாட‌லான‌ ச‌ங்க‌த்தில் பாடாத‌ க‌விதை மெட்டுக்கு வ‌ரிக‌ள் எழுத‌ முய‌ன்ற‌த‌ன் விப‌ரீத‌ விளைவு கீழே.

ஆண்:என்செய்தாய் ஏதேதோ செய்தாய்
என்னைத்தான் நீ சொல்லடி.
கண்வைத்தேன் கண்ணுக்குள் வைத்தேன்
உன்னெஞ்சில் எனைத் தள்ளடி (எனை என்செய்தாய்)

ச‌ர‌ண‌ம் 1
பொன் தேகம் நான் தீண்டும் வேளையில்
வெட்கப்பூ நீ சூடுவாய்
சிறு கோபம் நான் கொண்டு திரும்பினால்
ஒரு தாயாய் எனைக் கொஞ்சி அணைக்கிறாய்
பொன்னந்தி .... நிறம் அள்ளி
நானத்தால் புதுக் கோலம் பூணுவாய்..
பாவத்தால் எதிர் காலம் காட்டுவாய்..

ச‌ர‌ண‌ம் 2:
பெண்:என்னை நீ பார்க்கின்ற‌ வேளையில்
என்னுள் தீ எழுகின்ற‌தேன்
பின்னால் நீ தொட‌ர்கின்ற‌ வேளையில்
என் கால்க‌ள் ந‌டை ம‌ற‌ந்து போவ‌தேன்?
அன்பே உன்........ பொன்மார்பில்....
நான் சாயும் நாள் பார்த்துச் சொல்லிடு
மஞ்சத்தில் எனைச் சேர்த்துக் கொன்றிடு..

கண்ணோடு கண் பேசும்போது
மௌனம்தான் மொழியானதோ
பூவைதான் பூவைக்கும்போது
பூவாய்த்தான் நான் மாறவோ

கொசுறு:பாட‌லில் மூன்று ச‌ர‌ண‌ம் இருக்கும் இந்த‌ இர‌ண்டு ச‌ர‌ண‌த்திற்கே உங்க‌ளுக்கு க‌ண்ணைக் க‌ட்டியிருக்கும் என்ப‌தால் இத்தோடு ரூமை காலிசெய்து வ‌ந்துவிட்டேன்.:))‌

Wednesday 11 August 2010

திரையில் கிராமத்து மெட்டுகள் பாகம் 1

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாடல்களைப் பற்றிய பதிவு .

ராஜாவின் இசையில் 90களில் வெளிவந்த மெலடி பாடல்களின் தொகுப்புகளை இரவில் கேட்க இதமான காதல் பாடல்கள் பாகம் 1, பாகம் 2 என கொடுத்ததை அடுத்து இம்முறை சில கிராமத்து மெட்டுகளை தொகுத்திருக்கிறேன். இதுவும் கூட வழக்கம் போல் 90 களின் தொகுப்பே.

தாமர பூவுக்கும் தண்ணிக்கும் - பசும்பொன் - வித்யாசாகர்:

துள்ளலான இசை, குறும்பான வரிகள், நடனம் எல்லாவற்றும் மேலாக யுவராணியின் இளமை என எப்போதும் மயக்கும் பாடலிது. க‌ன்ன‌ங்க‌ளை வ‌ருடும் நாய‌க‌னின் கைக‌ள் மெல்ல‌ க‌ழுத்துக்குக் கீழே வ‌ரும்போது அவ‌னிட‌மிருந்து வில‌கி ஓடும் நாய‌கியைப் பார்த்து நாய‌க‌ன் பாடுவ‌தாக‌ வ‌ரும் "இந்த‌ நாட்டில் தீண்டாமைதான் இன்னும் உள்ள‌தா?" என்ற‌ குறும்பு வ‌ரிக்காக‌வே இப்பாட‌லை ப‌ல‌முறை பார்த்தும் கேட்டும் ர‌சித்திருக்கிறேன்.




ஆத்தங்கர மரமே - கிழக்குச் சீமையிலே - ஏ.ஆர்.ரஹ்மான்:
ரஹ்மான் இன்னும் கூட நிறைய கிராமத்து மெட்டுகளை தந்திருக்கலாமென கேட்கும் போதெல்லாம் ஏங்க வைக்கும் பாடல். "அத்தைக்குப் பிற‌ந்த‌வ‌ளே" என‌ ர‌க‌சிய‌மாய் ஆர‌ம்பித்து த‌ட‌த‌ட‌த்து ஓடும் ர‌யிலின் வேக‌மாய் ப‌ய‌ணித்து ஹைபிட்சில் முடியும் ம‌னோவின் குர‌லை ரொம்ப‌ நாட்க‌ளாய் எஸ்.பி.பி.யின் குர‌லென‌ நினைத்துக் கொண்டிருந்தேன்.



நான் ஏரிக்கரை மேலிருந்து - சின்னத்தாயி - இசைஞானி:
பள்ளிநாட்களில் பலமுறை கேட்டு ரசித்த பாடலிது. இப்பாடலில் வரும் ’கையேந்தும் ஆட்டுக்குட்டி கன்னிப் பெண்ணா மாறாதோ’என்ற வரியை இப்போதும் கூட அடிக்கடி முணுமுணுத்துக் கொண்டே இருப்பேன்.


என்னைத்தொட்டு அள்ளிக்கோண்ட - உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன் - இசைஞானி:
பள்ளிநாட்களில் நான் கார்த்திக் ரசிகன் அந்த வகையில் இப்பாடலை அடிக்கடி கேட்டுக்கொண்டே இருப்பேன். ராஜாவின் இசை, எஸ்.பி.பி., சுவர்ணலதாவின் குரல்கள் , மோனிஷாவின் அழகு என எல்லாமே இந்த பாடலில் அசத்தலாய் இருக்கும். பாட‌லின் ஆர‌ம்ப‌த்தில் சொர்ண‌லாதாவும் இடையில் எஸ்.பி.பியும் பாடும் ஆலாப‌னை இப்பாட‌லுக்கு கூடுத‌ல் வ‌சீக‌ர‌ம்.



மல்லிக மொட்டு - சக்திவேல்- இசைஞானி:
அருண்மொழி மற்றும் சொர்ணலதா பாடிய இப்பாடலின் ஆரம்பத்தில் வரும் இசை அருமையாக‌ இருக்கும். எப்போது ஊருக்கு போனாலும் மினிபஸ்ஸில் கேட்க கிடைக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.



சிவகாமி நெனப்பினிலே - கிளிப்பேச்சு கேட்க வா- இசைஞானி:
வார்த்தைக்குகொரு மாடுலேஷனோடு கலக்கியிருப்பார் எஸ்.பி.பி . டான்ஸில் மம்முட்டி பாக்யராஜை ஓவர்டேக் செய்த பாடலிது.



மத்தாளம் கொட்டுதடி மனசு - சிந்துநதி பூ - சௌந்தர்யன்:
பூவரச இலை பீபீ, எறுமை படகு, புளியங்கா அடித்தல், அய்யனாரு வெள்ளைக் குதிரை என இப்பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் கிராமத்தில் பால்யம் அமைய பெற்றவர்களின் மலரும் நினைவுகளை கிளரிவிடக் கூடியவை. பாடலின் தொடக்கத்தில் வரும் இசை ஆடாதவனையும் ஆடவைக்கும் என்பது போல் இருக்கும்.




சின்னப்பொண்ணுதான் வெட்கப்படுது - வைகாசி பொறந்தாச்சு- தேவா:

வெளிவந்த காலத்தில் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பிய இப்பாடலின் மூலம்தான் தேனிசை தென்றலுக்கு முதன் முதலாய் தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருது கிடைத்தது.


கொசுறு:
தங்கமனசுக்காரன் பட பாடலான ’பூத்தது பூந்தோப்பு ’ பாடலின் சுட்டி கிடைத்தால் நட்புகள் பகிரவும்.