நீண்ட நாட்கள் கழித்து சந்தித்துக்கொண்ட இரு நண்பர்கள் பழைய கதையெல்லாம் பேசி முடித்து சகஜ நிலைக்குத் திரும்பியதும் பேசிய டயலாக்,நண்பர் 1:மாப்ள உன்னையெல்லாம் மறுபடியும் பார்க்க முடியுமான்னு பல தடவை ஏங்கியிருக்கேண்டா.நண்பர் 2: விடுடா அதான் இப்போ பார்த்தாச்சுல்ல.நண்பர் 1: அதில்லடா உன்னை பார்த்த பிறகுதானே புரியுது பேசாம ஏங்கிக்கிட்டே இருந்திருக்கலாம்னு.நன்பர் 2:??????@@@@@@@@@@@@
ஆயுத பூஜையன்று ஊருக்குச் சென்றிருந்தேன்.நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்த போது அருகில் கோயில் கட்டி விளையாடிக் கொண்டிருந்த சிறுவர் கூட்டம் என்னிடம், ”அண்ணே எங்க கோயில் நல்லாயிருக்கான்னு வந்து பாருங்க” என்றனர். என் நண்பர்களில் ஒருத்தன் "போங்கடா போயி விளையாடுங்க பேசிட்டிருக்கோம்ல" என்றான். நானோ "இருடா ஆசையா கூப்பிடுறானுங்க போய் பார்த்துட்டு வறேன்" என்று கிளம்பினேன். கூடவே என் நண்பர்களும் வருவதற்காக எத்தணிக்க அத்தனை சிறுவர்களும், ”அண்ணன் மட்டும் வந்தா போதும் பெரிய ஆளுங்க வேண்டாம்” என்றனர். இவ்வளவுக்கும் அந்த கூட்டத்தில் வயதில் மூத்தவன் நான் தான். அது என்னவோ தெரியல சின்ன பசங்க என்னை அவர்களில் ஒருவராகவே நினைக்கிறார்கள். நானும் பெரிதாய் வித்தியாசம் தெரியாமல் அவர்களோடு விளையாடுவேன். அன்று என்னை அழைத்த சிறுவர்களின் சிலரின் தந்தைகள் எனக்கு ஒரு சில வருடங்களே சீனியர்கள், அவர்களுடனும் நான் விளையாடியிருக்கேன். இப்போ என் வயது நண்பர்களின் வாரிசுகளும் வந்துவிட்டார்கள் இன்னும் ஓரிரு வருடங்களில் அவர்களுடனும் விளையாடுவேன்னு நினைக்கிறேன் பார்க்கலாம்.(சின்ன பசங்க சகவாசம் எனக்கு மட்டும் இது வரை பிரச்சனையில்லை).
@@@@@@@@@@@@@@@@
பதிவுலகில் நாளுக்கு நாள் ஜால்ரா பதிவுகளும், குழுமனப்பான்மையும்(இது தவறு கிடையாது இருப்பினும் அக்குழுவில் இல்லாதவர்களும் தொடர்பவர்களாக இருப்பதால் சில விஷயங்களை குறைத்துக் கொள்வது நல்லது, மற்றபடி அவரவர் விருப்பம்) நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைப் போன்றே நல்ல புதிய எழுத்துக்களோடும் பலர் பதிவுலகில் இணைந்த வண்ணம் இருப்பது ஆறுதல். அவ்வகையில் எனக்குப் பிடித்த சில புதிய பதிவர்கள்,
ஆரூரன் விசுவநாதன்:தங்கமணி பதிவில் இருந்து திராவிட சிந்தனை வரை எல்லாவிதமான இடுகைகளும் எழுதுவது இவரின் ஸ்பெஷாலிடி.இவரின் சில இடுகைகளில் நகைச்சுவை நடையில் கலக்கியிருப்பார் .
நாகா:இவரின் பதிவுகளை மிகச் சமீபமாகத்தான் வாசிக்க ஆரம்பித்தேன். பெரும்பாலும் அனுபவ பகிர்வுகள் ஆனாலும் ரசனையான நடையில் வசிகரிக்கிறார். கவிதையிலும் அசத்துகிறார்.
இவர்களை நீங்களும் படித்து உற்சாக படுத்துவீர்கள் என்று நம்புகிறேன். மேலும் சில பதிவர்கள் அடுத்த நொறுக்குத்தீனியில் .
@@@@@@@@@@@@@@@@@
சென்னையின் திருவல்லிக்கேணியில் மேன்ஷனில் தங்கியிருந்த நாட்களில் எனக்கு ஜாவா சொல்லிக் கொடுத்து ஒரு குருவாக அறிமுகமான நண்பர் அர்ஜுனின் அறையில் கதாவிலாசம், துணையெழுத்து என எஸ்.ராவின் புத்தகங்களாக இருப்பதைப் பார்த்து ஜாவாவைத் தாண்டியும் எங்களிடம் நிறைய ஒற்றுமை இருப்பதை அறிந்து குரு ஸ்தானத்தில் பார்த்த அவர் நெருங்கிய நண்பரானார். அவசரத் தேவைக்கு பைனான்ஸ் பண்ணும்போது ஒரு அண்ணன் ஸ்தானத்திலும் இருந்திருக்கிறார்.சில வருடங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் சிக்கி அவருடைய நினைவுகளை சில நாட்கள் இழந்திருந்தார். அப்போது அம்மா அப்பாவையே அடையாளப்படுத்திக் கொள்வதில் சிரமப்பட்டவர் எங்களின் மேன்ஷன் நட்புகளின் பெயர்களை ஞாபகம் வைத்திருந்தார். டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் அவரோடு தினமும் போனில் பேசுவேன். அப்போது அவரை ஒரு குழந்தையாகவும் பார்த்திருக்கிறேன், அந்த நேரத்திலும் எஸ்.ராவின் எழுத்துக்களை அவரோடு என்னால் சகஜமாக பேசமுடிந்தது. எஸ்.ராவைப் பற்றிப் பேசும்போது உற்சாகமாகிவிடுவார். வலையுலகிற்கு புதியவனாக இருந்தபோது வெறும் காதல் கவிதைகளாக எழுதிக்கொண்டிருந்தவனை,”கவிதைகளோடு மற்ற விஷயங்களையும் எழுதுங்க உங்களால் முடியும்” என தடம் மாற்றியதும் அர்ஜுன்தான். சங்கடமோ, சந்தோஷமோ எதுவாகினும் நான் மனம் விட்டு பேசக்கூடியவர்களில் அர்ஜுன் முக்கியமானவர். தற்போது பிராஜெக்ட் மேனஜராக ஒரு ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிகிறார். எங்களின் நட்பு இறுகக் காரணமாயிருந்த எஸ்.ராவின் முன்பாக என்னை கொண்டுபோய் நிறுத்தினார் ஈரோடு புத்தகக் கண்காட்சியில் நண்பர் வெயிலான். எதிர்பாரா சந்திப்பால் என்னால் எதுவுமே பேச இயலாது ஆட்டோகிராஃப் மட்டும் வாங்கிக்கொண்டு வந்துவிட்டேன். இந்த மனிதரா இப்படியெல்லாம் எழுதறாருன்னு ஆச்சர்யப்படுத்தும் வகையில் அவ்வளவு எளிமையாக இருந்தார்.
@@@@@@@@@@@@@@
விஜய் டி.வியில் ஒளிபரப்பான கமலின் பாராட்டு விழாவில் நடிகை ராதிகாவின் பேச்சு நல்ல சுவாரஸ்யம்.அதில் கமலுடன் அவர் நடித்த சிப்பிக்குள் முத்து படத்தின் ”துள்ளி துள்ளி நீ பாடம்மா” பாடலை படமாக்கிய விதத்தைப் பற்றி சொன்ன விஷயங்கள் ரசிக்கும் படி இருந்தது.ராதிகா சொன்னது போல் எப்போது அப்பாடலை கேட்டாலும் தாளம் விட்டு கமல் ஆடும் அந்த நடன அசைவுகள் தான் கண்முன்னே வரும். கமல் ஸார் யூ ஆர் ரியலி கிரேட்.