Tuesday, June 5, 2012

வண்டல் மண் கதைகள்-4

மேலக்காத்து சன்னமா வீசிக்கிட்டு இருந்தது. புள்ளயார் கோயில் அரசமரத்தடில துண்ட விரிச்சி ,ஒரு கைய தலைக்கு முட்டுக்கொடுத்து சீரங்கத்து பெருமாள் கணக்கா ஒருக்கலிச்சுப் படுத்துக் கெடந்த பொன்ராசு, கட்ட வெரலுக்கும், ஆக்காட்டி வெரலுக்கும் நடுவுல புறா எறக வச்சி, தயிறு கெடையிற மாதிரி இங்கிட்டும் அங்கிட்டுமா காதுக்குள்ள எதமா கொடஞ்சி அதுக்குத்தக்கன கண்ண சொருகி,வாயக் கோணி தன்னை மறந்து லயிச்சுப் போயிக் கெடந்தான்.
கருக்கல்லயே எந்திரிச்சு வெரசா கால வேலையெல்லாம் முடிச்சி, பழையக் கஞ்சியக் குடிச்சிட்டு நேரா கோயிலுக்குதான் வருவான். வந்ததும் மொத வேலையா கோபுரத்தில் இருந்து எறஞ்சு கெடக்குற புறா எறகுகல்ல நல்லதாப் பாத்து ஒண்ண எடுத்துக்குவான், எறக அவன் தேர்ந்தெடுக்கிறதே நல்ல வேடிக்கயா இருக்கும், தேங்காயத் தட்டிப்பாக்குற மாதிரி ரெண்டு கிடுத்தம் சுண்டிப் பாத்து,அதன் கெட்டிதன்மை திருப்தியா இருந்தா எடுத்து, நுனிய ஒதுக்கி, கொஞ்சம் கீழே யெறக்கி சர்ர்ர்...ருன்னு ஒரு இழு, அப்படியே அட்ட பூச்சி மாதிரி எறகு மசுரு சுருட்டிக்கிட்டு விழும், அதே மாரிக்க ரெண்டு பக்கமும் இழுத்துவிட்டு காது கொடைய ரெடி பண்ணிருவான். ”இதுமாரி கோழி எறகுல ஒட்ரே இழுப்புல இழுக்க வாய்க்காது, பொசுக்குன்னு ஒடஞ்சு போவும்”ன்னு அங்கன நிக்கிறவய்களுக்கு கேக்கேமயே வெளக்கம் வேற கொடுப்பான். விவசாய வேல ஆரம்பிக்கற வரைக்கும் இப்படி அரசமரத்தடிலதான் எவனாயாச்சும் புடிச்சு வெட்டி ஞாயம் பேசியபடி ஓடும் அவம் பொழப்பு .
”யோவ் பங்காளி, மினி பஸ்ஸு வந்திட்டு போயிருச்சா”ன்னு ராமூர்த்தியின் கொரல கேக்கவும், மெதுவா எறக காதவிட்டு வெளில எடுத்த பொன்ராசு, பீடி புடிக்கிறவன் கையில பீடிய வச்சிக்கிற மாதிரி, எறக கையில புடிச்சிக்கிட்டே, ”பத்தர வண்டியா ? இனிமேதான் வருவான்”ன்னு சொல்லிட்டு,”வாய்யா, குந்து போவலாம்”ன்னு ராமூர்த்திய கூப்ட்டான்.
”எனக்கு வேல கெடக்கு நா போறேன்,பொறய்க்கா பேசிக்குவோம்”ன்னு கெளம்பிய ராமூர்த்திய, “ஏலேய் இவன, விசியமாத்தான்டா குந்த சொல்றேன் வா”ன்னு மறுவத்ரியும் கூப்புட்டான் பொன்ராசு.
”அட என்னன்னுதான் சொல்லு, வெரசா போவனுங்கிறேன்”ன்னு அவசரப்பட்டான் ராமூர்த்தி.
“ஒண்ணுமில்ல..நம்ம கிட்டிண‌ ம‌வ‌ன் பெரிய‌வ‌னுக்கு பொண்ணு தெவ‌ஞ்சிருக்குன்னாய்ங்க‌ளே எந்த ஊரு, எவ்வடம்னு தெரியுமா?”
"அட‌ நீ வேற‌, அத‌த்தான் க‌ல‌ப்பு க‌ல‌ச்சு விட்டுட்டாய்ங்க‌ளே" ன்னு சொல்லிக்கிட்டே அவனும் கைலியை சூத்தாம்பட்டைக்கு மேல தூக்கிவிட்டு பச்சக் கலர் டவுசர் தெரியும்படி அங்கன கெடந்த முண்டுக் கல்லுல ஒக்காந்தான்.
“அடங்கொப்புரான”ன்னு படுத்திருந்தவன் பட்டுன்னு எந்திரிச்சு ஒக்காந்து “என்ன‌ய்யா இப்ப‌டி சொல்ற‌, க‌ட்டைக்கு க‌ட்ட‌ குந்தி எந்திரிச்சி, இல்லாத நட்டன அடிச்சவனுக்கெல்லாம் க‌ல்யாண‌மாயி போச்சு, இவ‌ன் ஒரு வம்பு தும்புக்கும் போவாம ப‌ம்ப‌ர‌ங்க‌ண‌க்கா வேல வெட்டின்னு சுத்திக்கிட்டு இருப்பான், இவ‌னுக்குப் போயி த‌ட்டிக்கிட்டே போவுத‌ய்யா”
“அதான் ஊருக்கு ரெண்டு பேரு கெடந்துக்கிட்டு கெளம்பிராய்ங்களேய்யா, இல்லாது பொல்லாதுமா சொல்லி கலப்புக் கலச்சுட”
“ ஊருக்கு ஊரு இதேதான் சொல்றாய்ங்க ,மெதுவா எவன் இந்த வேலய செய்யுறான்னு கண்டு சுளுக்கெடுத்துவுடணும்டா, தாயொலியல”.
“ எவனோ நம்ம ஊரு ஆளுவொ தானாம்யா, கெச்சலா ஒசரமான்னு அடையாளம் சொல்லியிருக்காய்ங்க” அதான் இன்னாருதான்னு யோசிக்க முடியல.
“ஏன்டா, ஒரு வேள மேப்படியானா இருக்குமோ” ன்னு மருதராசு வீட்டைக் கண்ணக் காட்டினான் பொன்ராசு.
“நான் என்னத்த ஒங்கிட்ட சொல்றதுன்னு நெனச்சேன், நீ பட்டுன்னு சொல்லிட்ட, அவந்தான்னு எல்லாரும் பேசிக்கிறாய்ங்க,கிட்டிணன் இதை லேசுல வுட மாட்டேனு சொல்லி, வெட்டிக்காட்டு ஒயின்சுக்கு போயிருக்காரு, இன்னைக்கு ரவளதான் நடக்கப் போவுது”
“நாஞ்சொல்றேன் இந்த மாதிரி குடி கெடுக்குற வேலய செய்ய இவன விட்டா நம்மூர்ல ஆளு இல்ல,அதுவும் அடையாளமும் பொருந்திப் போவுது” “ஆமாமா, அவனுந்தான் கல்யாண வயசுல ஆணும் பொண்ணும் வச்சிருக்கான், எல்லாம் நல்லதுக்கா”
இவய்ங்க இப்படி பேசுற மருதராசை, ஊருக்குள்ள எவனுக்குமே புடிக்காது. ஏன்னா அவன் டைப்பு அந்த மாதிரி. எந்த விசயமானாலும் எகனைக்கு மொகனையா பேசுறது, தேவ ,திருவிழான்னா ஆளுகளுக்குள்ள வம்பிழுத்துவிடுறது, ஏலம் விட்ட கொளத்துல திருட்டு மீனு புடிக்கிறதுன்னு கிராதகம் புடிச்ச வேலையாதான் பண்ணிக்கிட்டு இருப்பான். எவனாவது எதுத்துக் கேட்டான் செத்தான் ,அந்த மாதிரி நாராசமா பேசுவான், அவன் வாயிக்கு பயந்தே நரவல கண்டா ஒதுங்கன ஒதுங்கி போயிருவாய்ங்க.சரியான சிலுவுனிப்பய.
”சரிய்யா நான் கெளம்புறேன்”ன்னு கெளம்புன ராமூர்த்திக்கிட்ட அடுத்த கொக்கியப் போட்டான் பொன்ராசு,” பஸ்ஸு வந்திருச்சான்னுக் கேட்ட,அப்புறம் போறங்கிற, யாரும் விருந்தாடி வர்ரவொல”ன்னு பொன்ராசு கேட்டுக்கிட்டு இருக்கறப்பவே, “திருட்டு வக்காளிய, எங்கேயிருந்து எங்கடா போறிய கலப்பு கலய்க்க, நாறக் !@$!$, பொண்ணு கெடைகிறதே கடுசா இருக்குன்னு எம் மொவனுக்கு கீழச்சீமையில போயி நாயா அலஞ்சு பொண்ணு தெவச்சு, தேதி குறிக்கிறதோட இருந்தத, தேவடியா மொவய்ங்க, அங்க தெக்கே போயி கலச்சு விட்டுருக்காய்ங்க, கொப்ப மொவய்ங்களா அடையாளம் எல்லாம் சொல்லியிருக்காய்ங்க, அந்த #@டா மொவனுக்கு இன்னைக்கு இருக்கு, இந்த பொழப்பு பொழைக்கிறதுக்கு நாண்டுகிட்டு சாவலாம்” என்று தண்ணிய போட்டுவிட்டு ரோட்டுல அலப்பற பண்ணிக்கிட்டே வந்துக்கிட்டு இருந்தான் மேப்படியான் மருதராசு.