Friday, June 13, 2008

திண்ணையைப் பற்றிய எனது நினைவுகள்.....!

"அண்ணன் எப்போ போவான்,திண்ணை எப்போ காலியாகும்" என்று ஒரு சொல் உண்டு,ஆனால் இங்கே என் அண்ணனே (தஞ்சாவூரான்) மனமுவந்து, "இந்தாடா தம்பி திண்ணை" என்று கொடுத்திருக்கிறார்.திண்ணையைப் பற்றி ஆளாளுக்கு எழுதிய பிறகு, எழுத புதிதாக ஒன்றுமில்லையென்றாலும், என்னையும் மதிச்சு எழுத சொன்னதால, ஏதோ எனக்குத் தெரிந்த,அறிந்த திண்ணை நினைவுகள் இங்கே....

வீட்டில், திண்ணை இருந்தவரை சும்மா இருக்கும் நேரத்தில் அதில் அமர்ந்துதான் வெட்டி அரட்டைகள் அரங்கேற்றுவோம். இப்போ அலுவலகத்தில் ஒரு பத்து நாளாக, ஆணியேதும் இல்லாமல் சும்மாதான் இருக்கிறேன். சரி எதாவது பதிவு போடலாம்னு பார்த்தா இங்கேயும் திண்ணை. பத்து நாளா சும்மா இருந்த நேரத்திலும், நான் சும்மா இருக்காமல் திண்ணை இணைய இதழைத்தாங்க படிசிட்டு இருந்தேன்.

சரி விஷயத்துக்கு வரேன்,எங்கள் கிராமத்தில் அனேக வீடுகளில் சிறிதோ, பெரிதோ சம்பிரதாயத்துக்காவது ஒரு திண்ணை இருக்கும். பெரும்பாண்மையானவர்கள் வீட்டின் திண்ணை சாணம் மற்றும் வைக்கோல்கரி சேர்த்து மெழுகிவைத்திருப்பார்கள். கரும் பச்சை நிறத்தில் இருக்கும் அந்தத் திண்ணைகளில் அமர்ந்தால் குளிரூட்டி அறையைவிட(A.C Room) சில்லுன்னு இருக்கும்.

எங்கள் வீட்டிலும் இரண்டு திண்ணைகள் இருந்தது.ஒன்று பெரியதாகவும், மற்றொன்று கொஞ்சம் சிரியதாகவும் இருக்கும்.எனது ஆரம்பக் கல்வி எங்கள் ஊரின் தொடக்கப் பள்ளியில்தான்,எங்கள் வீட்டிற்கும்,பள்ளிக்கும் இடையே உள்ள தூரம் ஒரு முப்பது அடிக்குள்தான் இருக்கும், பத்து மணிக்குதான் பள்ளி ஆரம்பம் என்றாலும், மாணவர்கள் ஒன்பது மணியிலிருந்தே வரத்தொடங்கிவிடுவர். அந்த ஒரு மணிநேரத்தில் எங்கள் வீட்டுத் திண்ணைதான் எங்களுக்கு பிளேகிரவுண்ட்.

என்னுடைய நினைவில் இருக்கும் எங்கள் வீட்டின் திண்ணையை இங்கே வரைந்திருக்கிறேன்,(புகைப்படம் இல்லை).


எங்கள் வீட்டுத் திண்ணை சிமெண்ட்டினாலானது,நல்லா வழவழப்பாக இருக்கும்.சிலேட்டுக் குச்சி(பல்பம்) விளையாட்டு விளையாட ரொம்ப ஏதுவாக இருக்கும்.(சிலேட்டுக் குச்சி விளையாட்டுன்னா என்னண்ணு தெரியாதவங்களுக்கு விளக்கம் பின்னூட்டத்தில் தரப்படும்). நாங்கள் விளையாடி கொண்டிருக்கும் போது, எங்கள் பாட்டி சத்தம் போடுவார்,"ஏ பாளையங்களா இது என்ன சாவடியா?சத்திரமா? போயி எங்கிட்டாவது விளையாடுங்க?"என்று. அதை ஒரு நாளும் நாங்கள் காதில் வாங்கிக் கொண்டதாக நினைவில்லை .


எனது அப்பா ஆசிரியர் என்பதால், இரவு நேரத்தில் நிறைய மாணவர்கள் எங்கள் வீட்டில் வந்து படிப்பார்கள். இவ்வளவுக்கும் டியூஷன் மாதிரியெல்லாம் கிடையாது,வாத்தியார் வீட்டுக்கு போயி படிச்சா படிப்பு வரும்ங்கிறது எங்க ஊரில் சிலரது நம்பிக்கை. இரவு பத்து மணிவரை எங்கள் வீட்டுத் திண்ணையில் குருகுலம் நடக்கும். திண்ணையில் மரத்தினாலாண தூண்கள் இருக்கும், அதன் அருகில் இடம் பிடிப்பதற்கு மாணவர்களுக்கிடையே போட்டி நடக்கும்.


கோடைகாலங்களில் அனைவருக்கும் திண்ணையே படுக்கையறை, சாயங்காலமாக திண்ணையின் சூட்டைத்தணிக்க தண்ணீர் ஊற்றிவிடுவார்கள், பிறகு இரவு படுக்கும்போது வெறும் தரையிலேயே கட்டையை சாய்த்துவிடுவோம். திண்ணையின் ஜில்லிப்பில் தூக்கம் சுகமாக வரும்.


இவையணைத்தும் ஒரு திண்ணையில்தான் நடக்கும்,மற்றொன்றில் எப்போதுமே நெல் மூட்டைகளோ,உர மூட்டைகளோ அல்லது வேறேதேனும் விவசாய சம்பந்தமான பொருட்கள் அடைந்திருக்கும்.அறுவடை நேரத்தில் மழை வந்துவிட்டால்,ஈரப்பதம் உணர்வதற்காக இரண்டு திண்ணையிலும் நெல் கொட்டிவைக்கப்பட்டிருக்கும்.


சில சமயம் என் பாட்டியின் உடல்நிலை குறித்து யாராவது என்னிடம் விசாரிப்பார்கள், அப்போது பாட்டியின் உடல்நிலையின் உறுதியை விளக்குவதற்கு, "அதெல்லாம் நல்லாதான் இருக்கு, வேணா வீட்டுக்கு போயி பாருங்க இந்தத் திண்னையிலிருந்து, அந்தத் திண்ணைக்கு தாண்டிகிட்டு இருக்கும்"அப்படின்னு கூறுவேன்.உண்மைதாங்க,எங்க பாட்டி திண்ணையோடு சேர்ந்தார்போலிருக்கும் ஒரு அறையில்தான் இருப்பார்,அந்த அறைக்காண மின்விளக்கு பொத்தான்(ஸ்விட்ச்) மற்றொரு திண்ணையின் பகுதியில் இருக்கும்,இரு திண்ணைகளுக்கும் இடையில் ஒரு மூன்றரை அடி இடைவெளி இருக்கும்.எப்பொதுமே எங்க பாட்டி,இந்தத் திண்ணையிலிருந்து அந்தத் திண்ணைக்கு ஜம்ப் பண்ணிதான் ஸ்விட்ச் போடுவார்.மைக்கேல் மதன காமராஜன் பாட்டிக்கெல்லாம் அக்கா, எங்க பாட்டி.


நான் பள்ளிக்கு செல்ல ஆரம்பிக்கும் முன்பு இதே திண்ணையில்தான் எனது தாத்தா படுத்திருப்பார்,அவரோடு என்னையும் படுக்க வைத்துக் கொண்டு நிறைய கதைகள் சொல்லுவார். தாத்தா இறந்த பிறகு அவர் படுத்துக் கொண்டிருந்த இடத்தைப் பார்க்கும் போது கொஞ்ச காலத்திற்கு அவர் நினைவு வந்துகொண்டிருந்தது.இப்போ இல்லையான்னு கேக்கக் கூடாது, ஏன்னா இப்போ திண்ணையே இல்லை. அப்பாவிடம் புதிய வீடு கட்டச் சொல்லி போராடி பார்த்த அம்மா, அப்பா அசைந்து கொடுக்காததால் இருக்கிற வீட்டையே கொஞ்சம் மாற்ற முயன்றதில் 1999 ஆம் ஆண்டு பலியானது எங்கள் வீட்டுத் திண்ணை. இப்போ திண்ணை இருந்த இடத்தில் ஒரு புறம் ஒரு சிறிய அறையும், மறுபுறம் வரவேற்பு ஹாலாகவும் இருக்கிறது.இது மட்டுமல்ல இன்னும் வீட்டிற்குள் நிறைய மாற்றம் செய்து வைத்திருக்கிறார். ஒவ்வொரு முறை வீட்டிற்கு வரும்போதும் எதாவது ஒரு மாற்றம் இருக்கும். அப்பா,அம்மாவிடம் விளையாட்டாகச் சொல்லிக் கொண்டிருப்பார் பேசாமல் நம்ம வீட்டுக்கு ஒரு நிரந்தரக் கொத்தனாரை வேலையில் அமர்த்திவிடலாமென்று.


அம்மாவின் ஆசையை பிள்ளைகளாகிய நாங்கள், அண்ணன் தம்பி மூவரும் சேர்ந்து, இப்போதுதான் நிறைவேற்றியிருக்கிறோம்.ஆம் இன்றுதான் எங்கள் புதிய வீட்டின் புதுமனை புகுவிழா.


திண்ணையைப் பற்றி எழுதுவதற்கு நான் அழைக்கும் இருவர்,

காதல் முரசு அருட்பெருங்கோ மற்றும் அன்பு தம்பி ஸ்ரீ.

Thursday, June 5, 2008

தனிமை...!

தனிமை, எப்போதுமே எனக்கு நெருக்கமான தோழன். சோகத்திலோ, விரக்தியின் பிடியிலோ,மனம்கொள்ளாத மகிழ்ச்சியிலோ,என்னை நானே சுய அலசல் செய்துகொள்ளும்போதோ எனக்குத் துணையாக இருப்பது தனிமையே.

இந்த தனிமை நண்பன், எனக்கு என்னவெல்லாம் செய்திருக்கிறான்,கவிதை எழுதவும், விழித்துக்கொண்டே கனவுகள் காணவும்,நினைவுகளை மீட்டிச் சிரிக்கவும், கண்ணாடி முன் நின்று சில கதாநாயக சேட்டைகள் செய்து பார்க்கவும்,என்னை நானே பிரமிக்கவும், வெறுக்கவும் இன்னும் இப்படி எத்தனையோ.

எப்போதிலிருந்து நான் தனிமையை நேசிக்க ஆரம்பித்தேனென்று தெரியவில்லை. கல்லூரிவரை ஒரு சிறிய நகரத்திலே பயின்று வேலைத்தேடி சென்னை மாநகருக்கு வந்த பொழுது ,சென்னையின் பிரமாண்டமும், வாழ்க்கை முறையும் மிரள வைத்தபோதோ, கவிதை,கதை,இசை என கலைகள் சார்ந்த நாட்டமுடைய எனக்கு, எத்தனையோ நண்பர்கள் இருப்பினும், என் அலைவரிசையில் ஒரு நட்புகூட அமையாது இருந்த போதோ,அதிகமாய் கற்பனையில் சஞ்சரிக்குமெனக்கு எதார்த்த வாழ்க்கை அன்னியமாய் தெரிந்த ஒரு கணத்திலோ,சொந்தங்களின் அன்புப் பிடியில் சிக்கி, விருப்பமான வாழ்க்கையை தேர்ந்தெடுக்க தடுமாறியபோதோ இந்தத் தனிமை சிநேகமாகியிருக்கலாம். நட்பு வட்டத்தோடு கும்பலாக சென்றாலும்கூட மனம் எப்போதும் எதையோத் தேடி தனிமையிலேயே இருக்கும்.

இப்படியெல்லாம் நினைத்துக் கொண்டிருந்த எனக்கு எது தனிமை என்பதும்,அதன் வலி என்ன என்பதும் இப்போதுதான் புரிகிறது,இதுநாள்வரை நான் இருந்தது தனிமையே இல்லை.இப்போது அயல் நாட்டில் என்னைச் சுற்றி எத்தனையோ மனிதர்கள்,புரியாத மொழி,தனியாக வீடு, அதில் எனக்கு பிடித்ததாக நினைத்தத் தனிமையோடு நான்.

இந்தத் தனிமை பொல்லாதது.நட்பு வட்டத்தில் தனிமை தேடிய மனது இப்போது தனிமையில் நட்பைத் தேடுகிறது.அன்றாட நிகழ்வுகளை தனிமையில் அசைபோடுவது சுகம்,அன்றாட நிகழ்வுகளே தனிமையாய் இருந்தால் அது கொடுமை.

டிஸ்கி:இதன் மூலம் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் கூடி கும்மியடிப்பதில் உள்ள சுகம் எனக்கு இப்போதுதாணுங்கோ தெரிஞ்சிருக்கு...!