Tuesday, March 11, 2008

இரவில் கேட்க இதமான காதல் பாடல்கள்:

இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் உருவான அனேக பாடல்கள் குறிப்பாக எண்பதுகளில் அவரது இசையில் வெளிவந்த பாடல்கள் அனைத்துமே ரசிகர்களை மதிமயங்க வைத்தவை.
என்னுடைய தெரிவுகளாக நான் இங்கே கொடுத்திருக்கும் பாடல்கள் ஒருசில பாடல்களைத் தவிர அனைத்துமே 90 களின் ஆரம்பத்தில் இளையராஜாவின் இசையில் வெளிவந்த பாடல்களே.இவை அனைத்துமே அதிராத இசையில் காதல் ரசம் சொட்டும் இனிமையான வரிகளை கொண்ட மெலடிகள்.இரவு நேரத்தில் கேட்டு மகிழ உகந்த பாடல்கள்.அனைத்து பாடல்களுமே இருவர் இணைந்து(duet) பாடும் வகையில் இருக்கும்.

1.ஓ பட்டர் ஃபிளை -மீரா
http://youtube.com/watch?v=vRohhh7k5x0

2.கண்ணாலே காதல் கவிதை -ஆத்மா

http://youtube.com/watch?v=nyHAw42NzT4

3.மழை வருது மழை வருது குடை கொண்டு வா -ராஜா கைய வெச்சா

http://youtube.com/watch?v=GT2GFeN6Pos

4.காதல் கவிதைகள் படித்திடும் நேரம்- கோபுர வாசலிலே

http://youtube.com/watch?v=lR8BrvAOK-g

5.சொர்க்கத்தின் வாசற்படி- உன்னைச் சொல்லி குற்றமில்லை

http://youtube.com/watch?v=SDj6mbu1mr0

6.சுந்தரி கண்ணால் ஒரு சேதி -தளபதி

http://youtube.com/watch?v=H_6WG2r5maI

7.கல்யாணத் தேனிலா -மௌனம் சம்மதம்

http://youtube.com/watch?v=XKbSmts29Y0

8.உன்னை எதிர் பார்த்தேன்- வனஜா கிரிஜா
http://youtube.com/watch?v=g5MaB3ofgVQ

9.வா வா அன்பே அன்பே- அக்னி நட்சத்திரம்
http://youtube.com/watch?v=DEL6MdpqtOg

10.தூங்காத விழிகள் ரெண்டு -அக்னி நட்சத்திரம்
http://youtube.com/watch?v=UBZNVcvCtcU&feature=related

11.ஆகாய வெண்ணிலாவே -அரங்கேற்ற வேளை
http://youtube.com/watch?v=oGFKxduCbB0

12.நீ பாதி நான் பாதி கண்ணே- கேளடி கண்மணி

http://youtube.com/watch?v=UnUlNrIAp94&feature=related

மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் வந்த இதே மாதிரி பாடல்களான கீழே குறிப்பிட்ட பாடல்களும் அதிராத இசையிலேயே இருக்கும்.

13.ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்- இதய தாமரை
http://youtube.com/watch?v=FbZ84XheNLQ

14.சங்கீத ஸ்வரங்கள்- அழகன்

http://youtube.com/watch?v=vmCi2HVQXr0&feature=related

15.தோடி ராகம் பாடவா- மாநகரக் காவல்
http://youtube.com/watch?v=adTVia0vbtk

இந்த மாதிரி இன்னும் நிறைய பாடல்கள் இருக்கிறது.உங்களுக்கு தெரிந்த இதே மாதிரியான பாடல்கள் இருந்தால் சொல்லிட்டு போங்க.

Thursday, March 6, 2008

தசரதம் - மலையாள சினிமா

சந்தரமுகி படம் வெளிவருவதற்கு முன்பு அப்படத்தைப் பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் அடிக்கடி வெளிவந்துகொண்டிருந்தன,அப்படி வெளியான செய்திகளில் முக்கியமானது ,பாசில் இயக்கத்தில் மோகன்லால், சுரேஷ்கோபி, ஷோபனா ஆகியோரது நடிப்பில் 1992ம் ஆண்டு வெளியான மணிச்சித்திரதாழு என்ற மலையாளப் படம்தான் தமிழில் சந்திரமுகியாகிறது என்பதாகும்.உடனே ஒரு ஆர்வக்கோளாறில் அந்தப் படத்தின் வி.சி.டி வாங்கிப் பார்த்தேன்.

அப்படத்தின் திரைக்கதை மற்றும் மோகன்லால்,ஷோபனாவின் நடிப்பு என்னை வியப்பில் ஆழ்த்தியது. இதற்கு முன்பு சிறைச்சாலை படம் பார்த்த பொழுதே மோகன்லாலின் நடிப்பின் மீது ஒரு மரியாதை இருந்தது. மணிச்சித்ரதாழ் பார்த்ததும் அவருடைய மற்ற படங்களையும் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது. இப்படித்தான் எனக்கு மலையாளத் திரைபடங்களின் அறிமுகம் கிடைத்தது.

அந்த வகையில் எனக்குப் பிடித்த சில படங்கள் இங்கே:



தசரதம்:

இயக்கம்:சிபி மலயில்

நடிகர்கள்:மோகன்லால்,நெடுமுடி வேணு,முரளி,ரேகா
வெளிவந்த ஆண்டு:1989

இப்படத்தில் ராஜீவ் மேனன் என்ற கதாபாத்திரத்தில் மோகன்லால் தனது மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.கதைப்படி சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து  மேனேஜரால் வளர்க்கப்படும் ராஜீவ் மேனன் ஒரு கோடீஸ்வரன். பொறுப்புன்றி எப்போதும்  குடித்துவிட்டு ஊதாரியாய் சுற்றுகிறான்.அவனின் குடித்துணை நெடுமுடி வேணு, இவர் ஒரு எல்.ஐ.சி ஏஜண்ட், ஆனால் முழுநேரமும் ராஜிவ் மேனனோடு சுற்றுவதுதான் முக்கிய வேலையாக வைத்திருக்கிறார். 


ஒரு முறை இவர்கள் குடித்துவிட்டு செய்யும் சில செயல்களால் போலீஸாரால் ராஜீவ் கைது செய்யப்படுகிறான். இந்த விஷயத்தில் மிகவும் மன வேதனை அடைகிற மேனேஜர்,"இனிமேல் என்னால் இங்கே இருக்க முடியாது, எனக்கு வயதாகிவிட்டது,உன்னுடைய சொத்துக்களை நீயே பார்த்துக்கொள்" என்று கூறுகிறார். அவரை சமாதனப்படுத்தும் ராஜீவிடம், கல்யாணத்தைப் பற்றி பேசுகிறார் மேனேஜர். கல்யாணம் என்பது என் வாழ்வில் கிடையாது என்று பிடிவாதமாக மறுக்கிறான் ராஜீவ். அவனின் அம்மா அவளின் பழையக் காதலனோடு சென்றதால் ஏற்படுத்திச் சென்ற ரணம்,அவன் பெண்கள் மீதும், கல்யாணத்தின் மீதும் வெறுப்பாக இருக்கக் காரணமாய் இருக்கிறது.


ஒரு சமயம் ஏதோ சிந்தனையில் இருக்கும் வேணுவிடம் என்னவென்று கேட்கிறான் ராஜீவ். அதற்கு தன் குழந்தைகளுக்கு ஒரு வாரம் விடுமுறை, அவர்களை எங்கேயாவது வெளியில் அழைத்துச் செல்வதாகக் கூறியிருந்தேன்,அதைப் பற்றிதான் யோசித்துக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார். அதற்கு தன் வீட்டிற்கு அழைத்து வாருங்கள் என்று ராஜீவ் சொல்வதைத் தொடர்ந்து  தன்  மூன்று குழந்தைகள் மற்றும் மனைவியோடு ராஜீவின் வீட்டில் தங்குகிறார் வேணு. அவர்கள் தங்கியிருக்கிற ஒரு வாரமும் குழந்தைகள் மூன்றும் ராஜீவிடம் நன்கு ஒட்டிக் கொள்கின்றன.குறிப்பாக வேணுவின் கடைசி மகனை மிகவும் பிடித்துவிடுகிறது ராஜீவிற்கு. விடுமுறை முடிந்து வேணுவின் குடும்பம் கிளம்பிச் சென்றுவிடுகிறது.அவர்கள் சென்ற பிறகான வீட்டின் அமைதி ராஜீவை மிகவும் டிஸ்ட்ரப் செய்கிறது. 

 மேனேஜரிடம் சொல்கிறான்,"சவம் விழுந்த வீடு மாதிரி இருக்குல்ல, அங்கிள்" என்று.



"நீயும் கல்யாணம் செய்திருந்தால் உனக்கும் குழந்தைகள் பிறந்திருக்கும், வீடே கலகலப்பாக இருந்திருக்கும்" என்று கூறுகிறார் மேனேஜர்.

அன்றிரவு அந்த குழந்தைகள் நினைவால் தூங்க முடியாமல் தவிக்கிறான்.
மறுநாள் வேணுவை சந்தித்து,"உன்னுடைய கடைசி மகனை எனக்கு தத்து கொடுப்பாயா?.என் சொத்து முழுவதும் அவன் பெயருக்கே எழுதி வைக்கிறேன்,அவனை நன்றாக படிக்க வைத்து பெரிய ஆளாக்குகிறேன்" என்கிறான்.

இதை சற்றும் எதிர்பார்க்காத வேணு,சிறிது அமைதிக்குப் பின்,தான் ஏழையா இருக்கலாம்,அதுக்காக பெற்ற குழந்தையை தத்துகொடுக்க முடியாதென்றும், அப்படி கொடுத்தால் தான் ஒரு அப்பன் என்று சொல்லிக்கவே தகுதிகிடையாது என்றும்,என் குழந்தைகள் அப்பான்னு கூப்பிடும்போது நான் அனுபவிவிக்கும் சுகம் உனக்கு சொன்னால் புரியாது,அதெல்லாம் அனுபவிச்சாத்தான் தெரியும்"என்று  சற்று கோபமாய் கூரிவிடுகிறார்.

அடுத்த நாளே தனது குடும்ப மருத்துவரைப் பார்த்து தான் ஒரு குழந்தையை தத்தெடுக்க விரும்புகிறேன், உங்களுக்கு தெரிந்து ஏதாவது குழந்தை இருந்தால் சொல்லுங்கள் என்கிறான்,அதற்கு "எதாவது ஒரு அனாதை குழந்தை விடுதிக்குத்தான் சென்று பார்க்க வேண்டும்" என்கிறார் டாக்டர்.

”எனக்கு அந்த மாதிரி குழந்தைங்க வேண்டாம்,பிறந்த உடனே தாயை இழந்த அனாதை குழந்தை இருந்தா சொல்லுங்க", என்கிறான்.

"அது மிகவும் கஷ்டம்" என்று சொல்லி "வாடகைத்தாய் முறையில் நீ குழந்தை பெற்றுக்கலாம்,அது உன்னுடைய சொந்த குழந்தையாகவும் இருக்கும்" என்று யோசனை கூறுகிறார் டாக்டர். அதைக் கேட்டு சந்தோஷப்படுகிற ராஜீவ் அதற்கான ஏற்பாடுகளை பண்ணச் சொல்கிறான்.

டாக்டரின் கிளினிக்கில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சந்திரதாஸின் (முரளி) மனைவி ஆனி(ரேகா),தன் கணவனின் அறுவை சிகிச்சைக்குத் தேவையான இரண்டு லட்சம் ரூபாய்க்காக வாடகைத் தாயாக சம்மதிக்கிறாள்.பரஸ்பரம் இருதரப்பினரும் எழுத்தின் மூலம் ஒப்பந்தம் செய்துகொள்கின்றனர்.
முரளியின் அறுவைசிகிச்சை வெற்றிகரமாக முடிகிறது, அதே சமயத்தில் ஆனியின் வயிற்றில் ராஜிவின் வாரிசு வளர்கிறது. 

முரளியும்,ஆனியும் சேர்ந்து இருந்தால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஆபத்து என்று வேணு,ராஜீவிடம் கூறுகிறார்,இதனால் ஆனியை ஒரு மலை பங்களாவில் இரு செவிலியர்,ஒரு ஹவுஸ் கீப்பர்(சுகுமாரி),ஒரு வாட்ச்மேன் சகிதம் தங்கவைக்கிறான்.மாதங்கள் உருண்டோட ஆனி ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள்.பிறகு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதற்காக டாக்டரின் அறிவுறுத்தலோடும், தன் கணவரின் சம்மதத்தோடும்
மேலும் சில நாட்கள்,ஆனி ராஜீவின் வீட்டில் தங்க நேரிடுகிறது. குழந்தை புட்டிப்பால் குடிக்க ஆரம்பித்தவுடன் ராஜிவ் ஆனியை வழியனுப்பத் தயாராகிறார்.அப்போது ஆனியின் செயலும்,அதைத் தொடர்ந்து வரும் இருபது நிமிடக் காட்சிகளும் படத்தின் உயிரோட்டமான பகுதிகள்.


இந்தப் படத்தில் வரும் ராஜீவ் மேனன் காதாபாத்திரத்தை மோகன்லாலைத் தவிர வேறு எந்த நடிகராலும் இவ்வளவு சிறப்பாக செய்திருக்கமுடியாது என்பது என் எண்ணம்.படத்தின் ஆரம்பத்தில் குடித்துவிட்டு அவர் நடந்துகொள்கிற விதமும்,வேணுவின் குழந்தைகளைப் பிரியும்போது அவர் படுகிற வேதனைகளும்,ஆனி கருவுற்ற செய்தி கிடைக்கும் வரையில் தவிக்கிற தவிப்பும், பிறகு செய்தி கேள்விப்பட்டு சந்தோஷத்தில் கூடை,கூடையாய் பழங்கள் வாங்கிக்கொண்டு ஆனியை பார்க்கச் செல்லும்போது, "தயவு செய்து இனிமேல் என்னை பார்க்க வாராதீர்கள்" என்று ஆனி கூறும் போது மனசொடிந்து திரும்பி செல்லும் போதும்,குழந்தை வளர்ப்பது பற்றிய புத்தகங்களை வாங்கி படிக்கும் போதும்,குழந்தை பிறந்தவுடன் "யார் குழந்தையின் அப்பா" என்று நர்ஸ் கேட்க்கும் போது அருகிலேயே முரளியும் இருக்க சந்தோஷமும்,சங்கடமுமாய் அவர் கொடுக்கும் அந்த உணர்ச்சியும்,"என்னுடைய குழந்தை இல்லையென்றாலும், இது என்னோட ஆனியின் குழந்தை,அதனால் எனக்கும் பாசமுண்டு" என்று முரளி கூறும்போது, சட்டென்று முளைக்கிற கோபமும்,குழந்தைக்கு வைத்திருக்கும் புட்டிப்பாலை எடுத்து குடிக்கும் போது பார்த்துவிடுகிற சுகுமாரியின் முன் ஒரு குழந்தையைபோல் நெளிவதும் என்று மனிதர் என்னமாய் அசத்துகிறார். படத்தின் ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை மோகன்லாலின் ராஜ்ஜியம்தான்,எந்த ஒரு இடத்திலும் மிகைநடிப்பை பார்க்கவே முடியாது.

இறுதிக்காட்சியில் அவர் ரேகாவிடமும்,சுகுமாரியிடமும் பேசும் வசனங்களும், நடிப்பும் கண்ணில் நீரை திரள வைக்கும்.
குறிப்பாக சுகுமாரியிடம்,"ஆண்ட்டி,எல்லா அம்மாவும் ஆனியை போலத்தான் இருப்பாங்களா?"எனும்போது,



"ஆமாம்"என்பார் சுகுமாரி.

"அப்போ,என் அம்மா?"என்று ஒரு குழந்தையின் ஏக்கத்தோடு அவர் கேட்கும்போது நமக்கு என்னமோபோல் ஆகிவிடுகிறது.

"உன் அம்மா உன்னை விட்டு சென்றிருந்தாலும்,அவளால் ஒரு நாளும் நிம்மதியாக இருந்திருக்க முடியாது" என்று சுகுமாரி கூறும் போது,

"ஆண்ட்டி,உங்க குழந்தைகளையும் நீங்க இப்படித்தான் நேசிப்பீங்களா?"என்று கேட்பதற்கு,

"ஆம்" என்று தலையசைப்பார் சுகுமாரி,

அதைத் தொடர்ந்து,"ஆண்ட்டி என்னையும் அது மாதிரி

நேசிப்பீங்களா?"என்று கேட்பதோடு படம் முடிவடையும்.


அடுத்தடுத்தப் பதிவுகளில் இன்னும் சில படங்களை பற்றி சொல்கிறேன்.