நாளை என்னும் நாளை எண்ணி என்ன கவலை , நல்லபடி வாழ்ந்தால் என்ன இந்தப் பொழுதை...
Friday, July 30, 2010
புரியாத புதிர்...
Tuesday, July 27, 2010
மம்முட்டியின் படங்களும் இயக்குனர் பாலாவும் ..
Thursday, July 15, 2010
நான் ரசித்த களவாணி...
* இப்படத்தின் வட்டாரப் பேச்சு வழக்கு அவ்வளவு இயல்பாக வந்திருக்கிறது. "போகனும்ல", "சொல்றோம்ல" என்ற மதுரையின் ஸ்லாங்கும் "ஏனுங்", "சொல்றேனுங்" என்ற கொங்கு தமிழையும் வட்டார வழக்காக்கியே கிராமத்தை கதைக்களமாகக் கொண்டிருக்கும் திரைப்படங்கள் அதிக அளவில் வெளிவந்திருக்கின்றன. ஆனால் முதன் முதலாக தஞ்சை மாவட்டத்தின் ஒரத்தநாட்டைச் சுற்றியுள்ள கிராமங்களில் பேசப்படும் "இங்கர்ள கேக்குறன்ன"("இங்கே பாரு புள்ள கேட்கிறேன்ல"), "அவனும் போட்டா எடுக்கனும்ன", "அண்ணாந்து பார", "அய்யனார் கோயிலுக்கெல்லாமா மால போடுவோ", "அவ்வோ ரெண்டு பேரும் சேர்ந்து ஏதோ களவாணித்தனம் பண்றவோ" மேலும் கணவன்மார்கள் மனைவிகளை "ஏட்டி"(ஏன்டி)என அழைப்பது என இப்படியான வட்டார வழக்கை அப்படியே கொண்டுவந்திருப்பதை பார்த்து ஆச்சர்யப்பட்டேன். காரணம் நானும் இதே ஸ்லாங்கை பேசும் ஒரத்தநாட்டுக்காரன்.
"அவய்ங்க","வராய்ங்க","போறாய்ங்க" என்பது மதுரையின் வட்டார வழக்கு அதை இந்தப் படத்திலும் பேசுகிறார்கள் என்று சில விமர்சனங்களில் படித்தேன். இந்த "வந்துட்டாய்ங்க", "போயிட்டாய்ங்க" என்பது ஒரத்தநாட்டு வட்டார வழக்கிலும் உண்டு. எங்கள் பகுதியில் பெண்பிள்ளைகளை "ஆயி", "ஆத்தா", "புள்ள" என்று அழைப்பது வழக்கம். அதையும் இப்படத்தில் அழகாய் பயன்படுத்தியிடுக்கிறார் இயக்குனர்.
* "கட்டிக்கிறேன்னு சொல்லு" என பார்க்கும் பொண்ணுங்களிடமெல்லாம் லந்தடிக்கும் ஹீரோ விமல், பஸ்ஸில் அமர்ந்திருக்கும் இரண்டு பெண்களுக்கு ஒரே நேரத்தில் ரூட் விடுமிடத்தில் இளைஞர்களிடம் கிளாப்ஸை அள்ளுகிறார். ஹீரோயின் ஓவியாவிடம் நிறைய ரிப்பீட்டட் எக்ஸ்பிரஷன்களாகவே இருந்தாலும் பரவாயில்லாமல் நடித்திருக்கிறார். குறிப்பாய் விமலிடம் "அறிவழகன்" என சொல்லுமிடத்தில் நன்றாகவே செய்திருக்கிறார்.
* கதாபாத்திரங்களின் படைப்பும் தேர்வும் மிகவும் ரசிக்கும்படி இருந்தது. "இந்தா வந்திட்டாரு அறிக்கி" என பொருப்பில்லா மகனை கடிந்துகொள்ளும் அப்பாவாக இளவரசன், ஹிரோ என்ன களவாணித்தனம் பண்ணாலும் "அவனா பண்றான் அவன் கெரகம் அப்படியிருக்கு"என மகனை விட்டுக்கொடுக்காத அம்மாவாக வரும் சரண்யா,நெல்வியாபாரியாக வரும் கதாநாயகியின் அப்பா,சில காட்சிகளிலேயே வந்தாலும் இயல்பாய் நடித்திருக்கும் கதாநாயகியின் அம்மா,வண்டல் மண்ணின் மைந்தனாகவே முறுக்கித் திரியும் கதாநாயகியின் கோபக்கார அண்ணன்,பஞ்சாயத்தாக வரும் கஞ்சா கருப்பு என இன்னும் நிறைய சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள் அழகாய் உலாவருகிறார்கள்.மகன் திடீர் கல்யாணம் செய்து கொள்ளும்போதும் கூட அசால்ட்டாய் மகனுக்கு சப்போர்ட் பண்ணும் சரண்யா கேரக்டர் மற்ற எல்லா துணைக் கதாபாத்திரங்களை விடவும் முந்தி நிற்கிறது. ராம்,தவமாய் தவமிருந்து,எம்டன் மகன் என விதவிதமான கேரக்டர்களில் அசத்திய சரண்யா இந்தப் படத்தில் அசால்ட்டான நடிப்பில் பின்னியிருக்கிறார்.
*ஹிரோ விமல் ஹீரோயினை காதலிக்கச் சொல்லி கலாட்டா செய்யும் "அறிக்கி LCII2 கூட்டு "காட்சிகள் கவிதையென்றால் ஹீரோயின் நட்டு வைக்கும் நாற்றுகள் செழித்து வளரும் காட்சிகள் வண்டல் மண் ஹைக்கூ. அறிவழகன் என்னும் பேரை "அறிக்கி" என நண்பர்கள் அழைப்பதைப் பிடிக்காத ஹீரோயின்,"அறிவழகன் என்றுதான் கூப்பிடணும்" என்பதைத் தொடர்ந்து நண்பர்கள் ஹீரோவை கலாய்க்கும் காட்சி கிச்சு கிச்சு.
* ஃபிளக்ஸ் பேனரில் வித்தியாசமான கோணங்களில் போஸ் கொடுப்பதுத் தொடங்கி கஞ்சா கருப்பை காணுமிடத்திலெல்லாம் கலாட்டா செய்து காலியாக்குவது என ஹீரோவின் நண்டபர்களாக வருபவர்கள் ரசிக்க வைத்திருக்கிறார்கள் சில காட்சிகளில் சொதப்பினாலும் .
* "மல்லியே மெல்ல வந்து கிள்ளி போ","மாடி மாடி ஒன்னு" போன்ற மெல்ல மெல்ல தொலைந்து கொண்டிருக்கும் வண்டல் மண் விளையாட்டுகளை திரைக்கதையின் ஓட்டத்தில் இயல்பாய் தொட்டுச் சென்றது ரசனை.
* மினிபஸ்ஸில் ஹீரோயினின் சைக்கிளை ரன்னிங்கிலேயே ஹீரோ தூக்கும் காட்சி,கஞ்சா கருப்பு இறந்துவிட்டதாக அனொன்ஸ் பண்ணுமிடம், ஹீரோயினிடமிருந்து ஹீரோவிற்கு போன் கால் வரும்போது சிக்னல் கிடைக்காமல் ஹீரோ மாட்டு வண்டியை அப்படியே ரோட்டிலேயே விட்டு விட்டு சிக்னல் தேடுமிடம் என படம் நெடுக படு சுவாரஸ்யமான காட்சிகள் ரசிக்கும்படி கையாளப்பட்டிருக்கிறது.
* ஒரத்தநாட்டின் பசுமைக் காட்சிகளை களவாடி வந்திருக்கும் ஓம்பிரகாஷின் கேமராவிற்கு ஒரு பெரிய சபாஷ். மிக அழகாய் ஒவ்வொரு காட்சியையும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தின் இன்னொரு பெரிய பிளஸ் மண்வாசம் வீசும் யதார்த்தமான வசனங்கள் .
* குறையென்று பார்த்தால் பள்ளிக்கூட மாணவியை காதல் செய்வது போன்ற காட்சிகள். மேலும் ஹீரோ விமல் தனது கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக உள்வாங்கி நடித்திருந்த போதும் என்னதான் ஒரத்தநாட்டின் வட்டார வழக்கை உச்சரித்தாலும் அவரின் வாய்ஸ் மாடுலேஷன் மதுரைக்கே இழுத்துச் செல்கிறது. அதே போன்று மற்றவர்களின் ஸ்லாங்கிலிருந்து மாறுபட்டு "பருத்தி வீரன்" சுஜாதாவின் வாய்ஸும் ஒட்டவில்லை. ரீட்டா டான்ஸ் இடம்பெறும் திருவிழாக் காட்சிகளை கொஞ்சம் குறைத்திருக்கலாம். எப்படா முடியுமென நினைக்கும்படி வெகு நீளம். நேட்டிவிட்டிக்காக பயன்படுத்தப்பட்டிருக்கும் சில கதாபாத்திரங்களின் முகத்தில் கேமரா பயத்தினால் செயற்கைத் தனம் தெரிவதையும் கொஞ்சம் கவனித்திருக்கலாம். இம்மாதிரியான சின்னச் சின்ன குறைகளைத் தாண்டி ரகளையாய் மனதை களவாடுகிறான் இந்தக் களவாணி.
* பஞ்ச் டயலாக்,குத்துப்பாட்டு இவற்றையெல்லாம் நம்பாமல் அழகான திரைப்படத்தைத் தந்த இயக்குனர் சற்குணத்திற்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
டிஸ்கி:இப்படத்தில் ஓரிரு காட்களில் நடித்திருக்கும் சிலரை படம் பார்த்த அன்றே ஒரத்தநாட்டில் பார்க்க நேர்ந்தது."நீங்கதானே களவாணியில..." என்று கேட்கும்போது அவர்களின் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தைப் பார்த்திருக்கணும் ....