Friday, July 31, 2009

பதிவர்களை கண்டுபிடியுங்கள் (week end விளையாட்டு).

1.தன் பெயரின் தொடக்கத்திலியே தொடக்கத்தை வைத்திருக்கும் இந்த பதிவரின் முதல் இரண்டெழுத்தில் நெடிலை குறிலாக்கி மூன்றாவதாக ஒரு எழுத்தைச் சேர்த்தால் கிடைப்பது இன்னொரு பிரபல பதிவர்.

2.மூவேந்தர்களில் சேரர்களை மட்டும் ஏனோ இந்த பதிவரின் பெயரோ , வலைப்பக்கமோ ஞாபகப் படுத்துவதில்லை .

3.இரு பாகங்களாக இருக்கும் இந்த பதிவரின் இரண்டாம் பாகத்தின் பெயரில் ஒரு எழுத்தை மாற்றினால் விஜயின் அடுத்தப் படப் பெயரின் சுருங்கிய வடிவம் .

4.இந்த பதிவரின் பெயரும் இரண்டு பகுதிகளாகவே இருக்கும் முதல் பகுதியின் முதல் எழுத்தையும் ,இரண்டாம் பகுதியின் கடைசி எழுத்தையும் சேர்த்தால் இரண்டாம் பகுதி முழுவதும் கிடைக்கும்.

5.பெயரின் முதல் பாதியில் உண்மையையும் இரண்டாம் பாதியில் விஜயகாந்த் நடித்த படத்தின் பெயரையும் கொண்ட பதிவர்.

6.புல்லாங்குழல் கடவுளின் பெயரைக் கொண்ட பதிவர். இவரின் முன் பாதியில் ஒரு எழுத்தைச் சேர்த்தால் ஆலயத்தோடு காட்சித் தருவார்.

7.குழந்தைகளின் ஃபேவரிட் கார்ட்டூன் கேரக்டரின் பெயரை தன் பயரில் கொண்டிருக்கும் செய்தி பரப்பும் பதிவர்.

8.இந்த பதிவரின் முதல் எழுத்தை மட்டும் மாற்றினால் கொஞ்ச காலங்களுக்கு முன்பு சிறிது பிரபலமாய் இருந்து காணாமல் போன ஒரு நடிகரின் பெயர் கிடைக்கும்.

9.கடைகளுக்கு ரொம்ப அவசியமான பதிவர்,இவரின் பெயரில் ஒரு பத்திரிகைக் கூட வெளிவந்து கொண்டிருந்தது(இப்போதும் வருகிறதா தெரியவில்லை).

10.ரட்சகன் நாயகிக்கும்,ஆயிரத்தில் ஒருவன் நாயகிக்கும் உள்ள ஒற்றுமையையும் ,ஆங்கில அவளையும் சேர்த்தால் கிடைப்பது இந்த பதிவரின் பெயர்.

Thursday, July 23, 2009

சினிமா பாடல் க்விஸ் (சும்மா டைம் பாஸ் மச்சி)

இன்றைய திரைப் பாடல்களில் கவிதை நயம் குறைந்து கொண்டே வரும் வேளையில், சில பல வருடங்களுக்கு முன்பு வெளிவந்த கவிதை நயமிக்க சில பாடல் வரிகளை இங்கே கொடுத்திருக்கிறேன். எந்த பாடல்களில் இடம் பெற்ற வரிகள் இவை என்பதுதான் போட்டி.

1.
"இதயம் ராத்திரியில் இசையால் அமைதிபெறும்

இருக்கும் காயமெல்லாம் இசையால் ஆறிவிடும்
கொதிக்கும் பாலையிலும் இசையால் பூ மலரும்
இரும்புப் பாறையிலும் இசையால் நீர்க் கசியும்
பழி வாங்கும் பகை நெஞ்சும் இசையால் சாந்தி பெறும்"


2."எப்பொழுதும் உன் சொப்பனங்கள்
முப்பொழுதும் உன் கற்பனைகள்
சிந்தனையில் நம் சங்கமங்கள்
ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள்"

3."சுற்றிலும் மூங்கில் காடுகள்
தென்றலும் தூங்கும் வீடுகள்
உச்சியின் மேலே பார்க்கிறேன்
பச்சிகள் வாழும் கூடுகள்
கண்ணில் காணும் யாவும் என்னைத் தூண்டுதே
எந்தன் கைகள் நீண்டு வின்னைத் தீண்டுதே"

4."ஆற்று நீரில் ஆட்டம் போட்டு ஆடி வந்த நாட்களும்
நேற்று வந்த காற்றைப் போலே நெஞ்சை விட்டு போகுமா
அந்தி வந்து சேர்ந்த பின்னே நாள் முடிந்து போனதா
சந்தனம்தான் காய்ந்த பின்னே வாசமின்றிப் போனதா"

5."கட்டில் ஆடாமல் தொட்டில்கள் ஆடாது
கண்ணே வெட்கத்தை விட்டுத் தள்ளு
என் தேகம் எங்கெங்கும் ஏதோ ஓர் பொன்மின்னல்
நடந்து போகின்றது"

6."நாயகன் மேலிருந்து நூலினை ஆட்டுகின்றான்
நாமெல்லாம் பொம்மையென்று நாடகம் காட்டுகின்றான்
காவியம் போலொரு காதலை தீட்டுவான்
காரணம் ஏதுமின்றி காட்சியை மாற்றுவான்"


7."மனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்"

8."பறவைகள் பறந்து செல்ல
பள்ளம் மேடு வானில் இல்லை
நீயும் நானும் பறவை ஜாதியே
நிம்மதிக்கு தடைகள் இல்லையே"

9."கல்லூரி வாழ்க்கையில்
காதல் ஏன் வந்தது?
ஆகாயம் எங்கிலும்
நீலம் யார் தந்தது ?
இயல்பானது"

10."நேற்றொரு கோலமடி
நேசமிது போட்டது பாலமடி
ஏற்றுது பாரமடி
இரு விழிகள் எழுதிய கோலமடி"

Tuesday, July 21, 2009

நம்மிடையே எனக்குப் பிடித்த 10

1.என்னதான் நெருக்கமாக இருப்பினும் அதைத் தாண்டியும் ஒவ்வொருத்தருக்கும் ஒரு அந்தரங்கம் இருப்பதை மறந்து,"எப்படி எங்கிட்ட நீ மறைக்கலாம், நாம அப்படியா பழகினோம்" என்றபடியே நண்பன், சொந்தம், சுற்றம் இப்படி எதாவது ஒன்றைப் பற்றிக்கொண்டு அடுத்தவரின் அந்தரங்கங்களில் தலையிடுவோமே அது மிகப் பிடிக்கும்.

2.படர்வதற்குப் பிடி கிடைக்காமல் அலைபாயும் கொடியினைப் போல துக்கத்திலோ, பெரும் இழப்பிலோ,மன உளைச்சலிலோ அல்லாடி ஆதரவு கரத்துக்கு ஏங்குபவர்களிடம் சம்பந்தமே இல்லாமல் அறிவுரை கூறுவோமே அதுவும் மிக பிடித்த ஒன்றே.

3.வறுமை நிலையிலிருந்து உயர்ந்தவர்களைப் பார்க்கும் போது, "இவன் அந்த காலத்தில" என்று ஆரம்பித்து அவர்களின் இறந்த காலத்தை எள்ளி நகையாடுவோமே அது எவ்வளவு ஆனந்தமான விஷயம்.

4.திருந்தி வாழ முற்படுகிறவனின் பழைய வாழ்க்கையை குத்திக் காட்டியே அவர்களை உயிரோடு கொல்வோமே அதில் இருக்கும் சந்தோஷம் எதில் வரும்.(எப்போதும் பிளாக் அண்ட் ஒய்ட் ஃபோட்டோவப் பார்க்காதீங்கப்பா, கலர் ஃபோட்டோவ பாருங்க என்று நீங்க சொன்னது ஞாபகம் வருது சஞ்சய்).

5.சக மனிதர்களை பணத்தை அளவீடாக வைத்து மரியாதை/அவமரியாதை செய்வோமே அதுக் கூட நம்மிடையே இருக்கும் மிகச் சிறந்த பண்பே.

6.மகனாக/மகளாக அல்லது தம்பி/தங்கையாக பிறந்து விட்ட காரணத்திற்காக அவர்களுக்கென்று ஒரு விருப்பம்,சிந்தனை இருக்கும் என்பதை பற்றி யோசிக்காமல் அவர்களின் வாழ்க்கையை நாம வாழ்வோமே அது ரொம்பப் பிடிக்கும்.

7.அடுத்தவர் இடத்தில் நம்மை கொஞ்ச நேரம் யோசித்துப் பார்க்காமல் அவர்களைப் பற்றிப் புரளியை பரப்பி விடும் குணத்தை, தும்மலைப் போன்று அனிச்சை செயலாக்கி வைத்திருக்கிறோமே அதுக் கூட ரொம்பப் பிடிக்கும்.

8.எப்போதோ எதற்கோ சொல்கிற விஷயங்களை, "என் கண்ணாலப் பார்த்தேன்","எனக்கு அப்போதேத் தெரியும்" என்று சம்பந்தமே இல்லாத இன்னொரு நிகழ்விற்கு அழகாக மொட்டை தலைக்கும், முழங்காலுக்கும் கச்சிதமாக முடிச்சிப் போட்டுப் பார்க்கும் சி.பி.சி.ஐ.டி மூளையை எப்படி பிடிக்காமல் போகும்.

9.ஒரு சின்ன விஷயமாகக் கூட இருக்கலாம் ஆனால் அதைப் பற்றி அறிந்திராமல், அறிந்து கொள்ளும் நோக்கத்தோடு அனுகுபவர்களை," இதுக் கூடத் தெரியாதா" என்று ஆனந்தத்தின் எல்லையில் நின்று சிரித்து மற்றவரின் தாழ்வு மனப்பான்மைக்கு அஸ்திவாரம் போடுவோமே அந்த அழகை ஆஹா என்னவென்றுரைப்பேன்.அது அவ்வளோ பிடிக்கும்.

10.குறிப்பா இந்த விஷயத்திற்கு என்றில்லாமல், எங்கும் எதிலும் நிரம்பி வழியும் நமது தனித்திறன்களான ஈகோ,அலட்சியம்,பொறாமை இப்படி நீளும் இன்னும் சில விஷயங்களும் நம்மிடையே எனக்குப் பிடித்த விஷயங்களே.

Monday, July 20, 2009

எங்க ஊரில் கிளிக்கியவை---- 3

நட்டு சில நாட்களில் இருக்கும் சோளப் பயிர்.


குன்றிமணிச் செடி(பேச்சு வழக்கில் குண்டுமணி,எலக்ஷன் சமயத்தில் தி.மு.க வுக்கு இயற்கை பிரச்சாரம் செய்யும் செடி,கருப்பு பாதியும், சிவப்பு பாதியுமாக இருக்கும் இந்த குண்டுமணிகளை உதய சூரியன் வடிவில் ஒட்டி வைப்பார்கள், முன்பு நிறைய இடங்களில் காணக் கிடைக்கும் இச்செடி இப்போது ஆபூர்வமாகிவிட்டது)

நடப்பட்டு சில நாட்களான இளம் சவுக்குக் கன்றுகள்


தூக்கணாங் குருவிக் கூடு,தொங்க கண்டேன் மரத்திலே

காட்டாமணக்குச் செடி(இதன் இலையை கிள்ளி அதன் காம்பில் வடியும் பாலை ஊக்கின்(சேஃடி பின்) நுணியில் நிரப்பி ஊதினால் அழகான குமிழ்களை பறக்க விடலாம்,சோப்பு நுறையைப் போல அவ்ளோ கலர்புஃல்லா இருக்கும்)



இதனை 'சம்பு' என்று அழைப்போம்(கோரைப் புல் வகையைச் சேர்ந்தது,நீரில் வாழக்கூடியது, இதன் தோகையை கூரை வேய்வதற்கு பயன்படுத்திக் கொள்வர்,இங்கே படத்தில் இருக்கும் அதன் பூக் காம்பை நாட்டு வெடி தயாரிப்பில் ராக்கெட் மாதிரி செல்லும் வெடிகள் தயாரிப்பிற்கு இந்தக் குச்சிகளை பயன்படுத்திக் கொள்வர்).




இதன் பேரைச் சொல்வதற்கே ஒரு மாதிரி இருக்குங்க (மயிர் மாட்டிக் காய்),இந்தக் காயை தலையில் அடித்துவிட்டால் முடிகளில் சிக்கிக் கொண்டு பிரித்தெடுப்பது படு சிரமமாக இருக்கும்.பள்ளி நாட்களில் இதுதான் எங்களுக்கு பழிவாங்கும் கேடயம்.



கருவக்காய்( மாடுகளின் ஆல்டைம் ஃபேவரைட் டிஷ், கட்டுத் தறியை அறுத்துக் கொண்டு சன்டித்தனம் பண்ணுகிற மாடுகளைக் கூட இந்தக் காயை வைத்து எளிதாக மடக்கி விடலாம்).




துவரைச் செடி(இதன் பயன்பாடு அனைவரும் அறிந்ததே).


வளர்ந்து விட்ட பருவப் பெண்போல் உனக்கு வெட்கமா?உன்னை வளர்த்துவிட்ட தாய்க்குத் தரும் அன்பு முத்தமா?(அறுவடைக்கு காத்திருக்கும் நெல் வயல்).

Wednesday, July 15, 2009

அண்ணாச்சியும்,வெயிலானும் பின்னே நாங்களும்

வார இறுதிக்கு எங்காவது போய்வரலாமென நண்பர் வெயிலான் அலை பேசியதைத் தொடர்ந்து சென்ற சனிக்கிழமை மதியம் திருப்பூரிலிருந்து கோவைக்கு நண்பர் தேவாவின் காரில் கிளம்பினோம்.கோவையில் அண்ணாச்சி வடகரை வேலன், கடற்கரைக்காரன் சிவா மற்றும் சஞ்சய் ஆகியோருடன் இணைந்து பிக்னிக் செல்வதாகப் பிளான்.
 


 கோவை செல்லும் வரை நண்பர் தேவாவின் அப்பா தனது காவல்துறை அனுபவங்களை சுவாரஸ்யமாக பகிர்ந்து கொண்டு வந்தார்.அப்போது அங்கிளும் பிளாக் ஒன்றை ஆரம்பித்தால் கலக்குவார் போலிருக்கிறதே என நான் மனதுக்குள் நினைத்துக் கொண்டிருக்அதையே வெயிலானும் தேவாவின் தந்தையிடம் கூறினார்.இவர்களின் பேச்சில் காவல் துறை சார்ந்த வார்த்தைகளை புரிந்து கொள்வதில் எனக்கு கொஞ்சம் சிரமம் இருந்தது. ஆனால் வெயிலான் காவல் துறை சார்ந்த நிறைய விஷயங்களை தெரிந்து வைத்திருந்தார். அதுமட்டுமல்ல இன்னும் நிறைய துறைகளைப் பற்றிய அறிவும் வெயிலானுக்கு உண்டு. சுவையான இவர்களின் உரையாடலில் லயித்தபடியே கோவை வந்ததும் தேவாவும் அவரது தந்தையும் விடைபெற்றுக்கொள்ள நானும் வெயிலானும் எங்களுக்காகக் காத்திருந்த அண்ணாச்சி மற்றும் சிவாவோடு இணைந்து கொண்டு அண்ணாச்சியின் காரில் சஞ்சய் வெயிட்டிக் கொண்டிருக்கும் இடத்திற்கு விரைந்தோம்.

சஞ்சய் வெயிட் செய்வதாக சொல்லியிருந்த இடத்திற்கு நாங்கள் சென்ற பின் சிறிது நேரம் கழித்தே சஞ்சய் வந்தார்.நாங்கள் நால்வரும் காரிலேயே அமர்ந்துக் கொண்டு சஞ்சய் எங்களைத் தேடுவதை ரசித்துக் கொண்டிருந்தோம். காரின் முன்னாலேயே நின்று கொண்டு அண்ணாச்சியின் அலைபேசிக்கு தொடர்பு கொண்டார், அவரின் அழைப்பை அட்டெண்ட் செய்யாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தோம், அப்போதும், எங்களைப் பார்த்தப் பிறகும் சஞ்சயின் எக்ஸ்பிரஷன்கள் ரசனையான விஷுவல் ஹைக்கூ.

பிறகு "உம்பா உம்பா" என்ற மியூசிஸிக் இல்லாத பஞ்ச தந்திரர்களாய் பாலக்காடு செல்லும் ரோடில் மஞ்சு துஞ்சும் மலைகளை ரசித்தபடியே பயணித்துக் கொண்டிருந்தபோது அருகில் இருந்த சிவாவிடம் மெல்ல ,"நண்பா நாம இப்போ எங்கே போறோம்" என நான் கேட்க, "யாருக்குத் தெரியும்" என சிவா சொல்ல இதைக் கேட்ட அண்ணாச்சி எங்கே போறோம்னே தெரியாம கிளம்பிட்டீங்களாடா" என்று கூறிச் சிரிக்க முதல் சந்திப்பில் இருக்கும் ஒரு சிறிய தயக்கம் மெல்ல மெல்ல மறைந்து பல நாட்கள் பழகிய நண்பர்களைப் போல் ஒருவரை ஒருவர் கிண்டலடித்துக் கொண்டே கேரளாவின் நெல்லியம்பதியை நான்கு மணி நேர பயணத்தில் அடைந்தோம்.

நெம்மாரா என்னும் இடத்திலிருந்து நெல்லியம்பதிக்கு செல்லும் மலைப்பாதை ஆரம்பமாகி விடுகிறது. மலைப்பாதையில் நாங்கள் சென்றுக் கொண்டிருந்தபோது மெல்ல இருட்டத் தொடங்கிவிட்டது. மலைப்பாதையின் இருபுறமும் ஓங்கி உயர்ந்திருந்த மரங்களில் சில எப்போது வேணாலும் விழுவோம் என பயமுறுத்தியபடி நின்றுக் கொண்டிருந்தன.சாலை ஓரத்திலேயே அருவியில் கொட்டும் நீரின் சலசலப்பு கேட்டு கொண்டே இருந்தது.கொஞ்சம் நேரத்தோடு வந்திருந்தால் அருவிகளை ரசித்திருக்கலாம் என்று சொல்லியபடியே நாங்கள் புக் செய்திருந்த ரிஸார்ட்டுக்கு இரவு ஒன்பது மணிக்கு சென்று சேர்ந்தோம்.



எட்டு பேர் தங்குவதற்காக புக் செய்திருந்த விசாலமான அறையில் ஐவரும் அடைக்கலமாகி உடைமாற்றி பிறகு ரிஸார்ட்டின் முன்புறம் ஒரு சிறிய சதுர மேஜை குறுநாடு (மாநாட்டிற்கு எதிர்பதம் குறுநாடுதானே வரும்?) நடத்தினோம்.இந்த குறுநாட்டில் இலக்கியம், அரசியல், பதிவுலகம், சினிமா என பல சுவராஸ்யமான விஷயங்கள் அலசப்பட்டது. இங்கே வேலன் அண்ணாச்சியைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும். எல்லோருக்குள்ளும் இருக்கும் நிறை,குறை கடந்து மனிதர்களை மனிதர்களாகப் பார்க்கும்,நேசிக்கும் அருமையான மனிதர் அண்ணாச்சி. ஒருவன் தவறானவன் என சமுதாயம் அடையாளப் படுத்தினாலும் தவறே செய்யாமல் சூழ்நிலை யாரை வேண்டுமானாலும் சமுதாயத்தின் பார்வைக்கு குற்றவாளியாகக் காட்டும் என்ற உண்மையை நன்கு அறிந்திருக்கும் அண்ணாச்சியின் நட்பு கிடைத்தது பதிவுலகம் எனக்குக் கொடுத்த மிகப் பெரிய கொடை. நம்மில் எத்தனை பேர் தீர விசாரித்தலின் அவசியத்தை புரிந்தவர்களாய் இருக்கிறோம். கண்ணால் பார்ப்பதையும், காதால் கேட்பதையும் (blog படிப்பதையும் சேர்த்துக்கலாமோ) வைத்துத்தானே பல நேரங்களில் அடுத்தவர்களின் பிம்பத்தைக் கட்டமைக்கிறோம். மனிதர்களை புரிந்து கொள்ளும் கலையை அண்ணாச்சியிடம் கற்றுக் கொள்ளலாம். இப்படியெல்லாம் சொல்வதால் அண்ணாச்சியை பெருசோ என்று நினைத்து விடாதீர்கள் நமது கல்லூரி காலத்து நட்புகளையும், அரட்டைகளையும் நினைவுபடுத்தும்படி படு ஜாலியான மனிதர்.

இந்த குறுநாட்டின் இறுதியில் சஞ்சய் ஒரு கேள்வியைக் கேட்டார்.அதாவது தற்போது நாம் பேசும் தமிழும் தற்கால இலக்கியங்களில் இருக்கும் தமிழும் ஒரே மாதிரியாக இருக்கிறது,அப்படியானால் சங்க இலக்கியங்களில் இருக்கும் வார்தைகளைத் தான் அப்போதிருந்த மக்கள் பேசியிருக்கக் கூடும். அப்படி இருக்கும் பட்சத்தில் தற்காலத் தமிழுக்கும் சங்கத் தமிழுக்கும் இருக்கும் இத்தனை பெரிய வேறுபாடு எப்படி வந்தது? என்றார்.இதற்கு சில நல்ல விளக்கங்கள் அண்ணாச்சி மற்றும் சிவாவும் தர சில நொல்ல விளக்கங்கள் என்னால் தரப்பட இதில் எந்த பதிலும் சஞ்சய்க்கு திருப்தியை தரவில்லை. (யாராவது தெரிஞ்சா சொல்லிட்டு போங்கப்பா). பிறகு இரவு உணவை அங்கேயே வரவழைத்து உண்டு மகிழ்ந்து உறங்கச் செல்கையில் மணி ஒன்றாகிவிட்டது.

காலையில் வெயிலான்,சிவா மற்றும் நான் மூவரும் எழுந்து சிறிது தூரம் காலைப்பனியூடாக மலைச்சாலையில் உறையவைக்கும் குளிரில் நடக்கலானோம். வெயிலான் சில பல கோணங்களில் மலைகளின் அழகை தனது கேமராவில் அள்ளிக்கொண்டிருந்தார். அங்குள்ள காஃபி எஸ்ட்டேட்டைப் பற்றியும்,குறு மிளகுச் செடிகளையும் பற்றியும் வெயிலான் சொல்ல ஆர்வமாக கேட்டுக் கொண்டே மீண்டும் எங்களது அறைக்கு திரும்புகையில் அடுத்தாகச் செல்லவிருக்கும் மாம்பாறா என்ற இடத்திற்குச் செல்ல ஜீப் எட்டரைக்கெல்லாம் வந்துவிடும் என்று ரூம் சர்வெண்ட் சொல்ல அவசரமாகக் கிளம்பத் தயாரானோம். (இந்த ரிஸார்ட்டுக்குள் வந்த உடன் எங்களது மலையாளப் புலமையைக் காட்ட ஓட்டை மலையாளத்தில் ரூம் சர்வண்ட்டிடம் ஏதோ கேட்க, அவரோ தெளிவான தமிழில் பேசி எங்களை டரியலாக்கினார்.)

"குளிக்காமல் கிளம்பி விடலாமா" என வெயிலான் கேட்க எல்லோருக்கும் அந்தக் குளிரில் அது சரியெனப் பட்டாலும் யாரும் ஓங்கிச் சொல்லாததால் வெயிலானே முதல் குளியலைப் போட்டு மற்ற எல்லோரும் குளித்தே ஆக வேண்டிய இக்கட்டான சூழலை உருவாக்கியதால் எல்லோரும் வேறு வழியின்றி குளித்துவிட்டு காலை உணவாக கொண்டுவரப்பட்ட புட்டை, புட்டு புட்டு சாப்பிட்டு விட்டு மாம்பாறாவை நோக்கி பயணித்தோம்.


வழி நெடுக இருந்த தேயிலைத் தோட்டங்களும்,சிறு சிறு ஓடைகளும்,சின்ன சின்ன நீர்த் தேக்கங்களும்,வண்ண வண்ணப் பூக்களுமாய் எத்தனை அற்புதக் காட்சிகள். அந்த ஜீப் பயணமும் மலைக்காட்சிகளும் "மலையின் காட்சி இறைவன் ஆட்சி" என்ற முள்ளும் மலரும் பாடல் வரிகளை நினைவு படுத்தியது. வானம், விட்டு விட்டுத் தூறிக் கொண்டிருந்தது. தார்ச் சாலையிலேயே சென்றுக் கொண்டிருந்த ஜீப் திடீரென மண் சாலைக்குத் தாவியது. மண் சாலை என்பதுக் கூடத் தவறு மேடு பள்ளங்களாய் கற்களும் மர வேர்களுமாய் இருக்கும் மண்தடம் என்றால் சரியாக இருக்கும். இப்படியான பாதையில் சென்று கொண்டிருந்த ஜீப், நின்ற நிலையில் கிட்டத் தட்ட செங்குத்தாக இறங்கத் தொடங்கியது.இறங்கத் தொடங்கியது என்பதைவிட வழுக்கத் தொடங்கியது என்றால் மிகையில்லை.அண்ணாச்சி எங்களை ஜாக்கிரதையாக கம்பியை இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளுங்கப்பா என்றதும், "இது கூட எங்களுக்கு பயமாக இல்லை அண்ணாச்சி, இவர் ஜீப்பை ஜீப்பாகத்தான் ஓட்டுறார்,நேற்று நீங்க காரை ஃபிளைட்டாக்கினீங்களே அதை நெனச்சாத்தான் உதறுது" என்றேன் அடியேன்.

எங்களுக்கு முன்பாகச் சென்றுக் கொண்டிருந்த மற்றொரு ஜீப், கொண்டை ஊசி
வளைவைப் போன்றதொரு இடத்தில் சேற்றில் மாட்டிக் கொண்டு மேலே செல்ல முடியாமல் நின்றுக் கொண்டிருந்தது. அதில் பயணம் செய்த கேரள இளைஞர்கள் அந்த ஜீப்பை மேலேற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். பல நிமிட போராட்டங்களுக்குப் பிறகு மேலேற்றியதைத் தொடர்ந்து அதே இடத்தில் நாங்கள் சென்ற ஜீப்பும் மாட்டிக் கொண்டது.பிறகு அதே முயற்சி, இந்த முறை சிவாவும், சஞ்சயும் கயிற்றின் உதவியோடு தங்களது புஜ பராகிரமங்களைக் காட்டியதில் எங்கள் ஜீப்பும் மேலேறியது. எங்களுக்கு பின் வந்த அத்தனை ஜீப்பிற்கும் அதே நிலைதான்.இதே மாதிரி இரண்டு இடங்களில் செய்ய வேண்டியதாய் இருந்தது. எங்களுக்கு அது பயங்கர என் ஜாய்மென்ட்டாக இருந்தது. அடுத்ததாக இந்த மண்பாதையும் முடிவுற்று பாறைகளில் தாவி ஏறியது ஜீப்.


கரடு முரடான பாறையில் அசால்ட்டாக வண்டி ஓட்டிய ஜீப் டிரைவரை பார்க்க அப்போது என் கண்களுக்கு பெரிய சாகச நாயகனாகத் தெரிந்தார்.அதேப் பாறையில் செங்குத்தாக ஏறத் தொடங்கி ஒரு பத்து நிமிடத்தில் மலை உச்சியான மாம்பாறையை அடைந்தோம். "இறைவா எத்தனைக் கோடி இயற்கை வைத்தாய் இந்த கேரளாவில்" என்று கத்தனும் போல் தோன்றியது நாங்கள் அங்கு கண்ட காட்சி.

உலகமே எங்கள் காலடியில் இருப்பது போன்றதொரு உயரம்."காற்று மேலே ஏறி மேகத்தையெல்லாம் தாண்டி" என்று ஒரு பாடலில் வருமே அப்படி உண்மையிலேயே மேகத்திற்கு மேலே நின்று கீழே வெண்பஞ்சாய் பறக்கும் மேகக் கூட்டத்தை ரசித்ததை வார்த்தைகளில் வர்ணிப்பது சிரமம்.

கரணம் தப்பினால் மரணம் என்று சொல்லக் கூடிய உயரத்தில் இருக்கும் அந்த மாம்பழ வடிவப் பாறையில் அமர்ந்து ஏரியல் வியூவில் தெரிந்த காட்சிகளை ரசித்துப்படியே அரட்டையடித்துக் கொண்டிருந்த போது மெல்ல எங்களை மூடிச் சென்றது ஒரு பெரிய மேகக் கூட்டம்.மூடிய மேகம் விலகியதும் சிவா தனது காலில் ஏதோ ஊர்வதாகணர்ந்து பார்த்ததில் சில மில்லி லிட்டர் ரத்தத்தை உறிஞ்சி விட்டு ஹாயாக ஊர்ந்து கொண்டிருந்த காட்டு அட்டை, சிவாவின் சந்தோஷத்தையும் சேர்த்து உறிஞ்சிவிட்டு பாறையிடுக்கில் அடைக்கலமானது. இதைப் பார்த்த நாங்கள் முதலில் பதறி பிறகு சிரித்தோம், காரணம் "இவ்வளோ ரத்தத்தை உறிஞ்சும் வரைக்கும் உனக்குத் தெரியவே இல்லையா" என்று கேட்ட சஞ்சய் எதார்த்தமாய் தனது காலைப் பார்க்க அங்கே ஏற்கனவே ரத்தம் உறிஞ்சப்பட்டு உறைந்து போயிருந்ததுதான்.

பிறகு எல்லோரும் அவரவர் உடைகளை பதறி உதறிக் கொண்டிருக்கையில் மெல்ல சிறு தூரலும் இல்லாமல் பெரு மழையாகவும் இல்லாமல் சன்னமான மழை பெய்யத் தொடங்கியது.அப்படியே நனைந்து களித்தோம்,களித்தே நனைந்தோம்.
சிவா தனது கைகளை விரித்து,கண்களை மூடியபடியே நனைந்ததைப் பார்த்தபோது எனக்கு பிரேசிலின் மலையுச்சி ஜீஸஸ் சிலை ஞாபகம் வந்தது. இன்னொரு புறம் சஞ்சய் சிறு குழந்தைகளின் நடன அசைவை ஒத்தபடி ஆடிக்கொண்டும், நர்சரி குழந்தைகளின் ரைம்ஸ் போல் ஏதோ பாடியபடியே நனைந்து கொண்டிருந்தார். முந்தின நாள் இரவு, டாம் அன்ட் ஜெர்ரியை தொலைக்காட்சியில் பார்த்து ரசித்ததிலிருந்து இதோ இப்போது இந்த மலை உச்சியில் சில கேரள இளைஞர்கள், நம்ம ஊர் பெண்கள் சுற்றி நின்று கும்மியடிப்பதுபோல் வட்டமா நின்றுக்கொண்டு டான்ஸ் மாதிரி ஏதோ ஆடிக்கொண்டிருந்ததை சிறு குழந்தையின் ஆச்சர்யத்தோடு அவர்களின் அருகில் சென்று பார்த்துக் கொண்டிருந்ததுவரை கவனித்ததில் சஞ்சயை 100% மீசை வைத்தக் குழந்தையென்பேன்.(சஞ்சய் உன்னோட ஐஸ்பைஸ் பதிவை அவ்வளவு நேர்த்தியாக நீ எழுதியிருப்பதன் காரணம் புரியுதுப்பா,உனக்குள் இருக்கும் அந்த குழந்தைத்தனம் எப்போதுமே இருக்கட்டும்).




சில நிமிடங்களில் மழை நின்று ஜில்லென காற்று வீசத் தொடங்கியது, அப்போது சஞ்சய் தூரத்தில் தெரிந்த ஏரி ஒன்றைக் காட்டி, "அதோ ஏரி பாருங்க" என்றார். "ஏறி பார்க்க முடியாது,இறங்கித்தான் பார்க்கனும்" என்று மொக்கினேன் நான்.ஒரு மணி நேரம் போனதேத் தெரியாமல் சொர்கமே இதுதானோங்கிற மாதிரி இருந்த அந்த மலையும் மழையும் காட்சி எனக்குள் இனி பசுமரத்தாணி.பிறகு அதே "ஏற்றிவிடப்பா, தூக்கிவிடப்பா" பாதையில் மீண்டும் சாகசப் பயணத்தைத் தொடர்ந்து ரிஸார்ட்டுக்கு வந்தடைந்ததும் சுடச்சுட வந்த மதிய உணவை ஒரு வெட்டு வெட்டிவிட்டு எல்லோரும் சிறிது நேரம் உறங்கி விழித்து மாலை மூன்று மணிக்கு கோவைக்கு புறப்பட்டோம். திரும்ப வரும்போதுதான் தெரிந்தது முதல் நாள் எத்தனை அற்புதமானக் காட்சிகளை மிஸ் செய்திருக்கிறோம் என்பது. ஒவ்வொரு நூறு மீட்டருக்கும் குறைந்தது இரண்டு அருவிகளை காண முடிந்தது.செங்குத்தாய்,கிடைமட்டமாய் பெரிதும், சிறிதுமாக மனதை அள்ளும் பல வித அருவிகளை ஒவ்வொரு இடத்திலும் நின்று ரசித்துக் கொண்டே வந்ததில் மேலும் ஒரு முறை சிவாவும்,சஞ்சயும் அட்டையின் அட்டாக்கிற்கு ஆளானார்கள்.


நேரத்தோடு கோவை சென்றுவிட வேண்டும் என்றபடியே காரை விரட்டிய அண்ணாச்சி திடீரென வேக வேகமாக கார் கண்ணாடிகளை ஏற்றிய படியே காரை நிறுத்திவிட்டு மெல்ல சொன்னார், முன்பக்க கண்ணாடியில் நெளிந்து கொண்டிருந்த பச்சைப் பாம்பை அடிக்கும்படி. காரில் இருந்து வேகமாக இறங்கிய சஞ்சய் ஒரு சிறு குச்சியால் அந்த பாம்பை எடுத்து அருகில் இருந்த செடிகளின் மேல் வீசிவிட்டு,"அடிகிடி பட்டிருக்குமோ, பாவம் சின்னக் குட்டிதான் பொழச்சு போகட்டும்" என்றார். சஞ்சயின் அந்த பாம்பாபிமானத்துக்கு ஒரு ராயல் சல்யூட்.
இந்த இனிமையான பயணத்தில் அண்ணாச்சி,வெயிலான்,சிவா மற்றும் சஞ்சய் என ஒவ்வொருத்தரிடமும் ஒரு சில விஷயங்களில் என்னையே பார்க்க முடிந்தது. இப்படியான ஒத்த ரசனையுள்ளவர்களின் நட்பிற்கு பலநாள் ஏங்கியிருக்கிறேன். ஏதாவது ஒரு கவிதையையோ, கதையையோ யோசித்துவிட்டு "நல்லாயிருக்கா" என நண்பர்களிடம், "டேய் நீ கேளேன்,மச்சி நீ கேளேன்" என கெஞ்சத் தேவையிராத நட்பு வட்டத்தை எனக்குக் கொடுத்த இணையத்திற்கு இத்தருணத்தில் ஒரு பெரிய நன்றி.

எப்போதும் போல்
weak end ஆக செல்ல இருந்த week end ஐ மறக்க முடியாத நாட்களாக மாற்றிய நண்பர் வெயிலானுக்கு நன்றிகள் பல.(வெயிலான், வார இறுதியை வர இறுதியாக மாற்றிவிட்டீங்க நண்பா தேங்க்ஸ்).

இதே பயணத்தைப் பற்றி மேலும் தகவலுக்கு நண்பர் வெயிலானின் பக்கத்திற்கு இங்கே அழுத்தவும்.

நெல்லியம்பதி பற்றி மேலும் தகலுக்கு: இங்கேயும்
, இங்கேயும் அழுத்தவும்.

Tuesday, July 14, 2009

ஒரே சாயலைக் கொண்ட தமிழ் திரைப் பாடல்கள்

தமிழ் திரைப் பாடல்களில் ஒரே ராகத்தில் அல்லது கேட்பதற்கு ஒரே மாதிரி தோனுகிற சில பாடல்களைப் பற்றிப் பார்க்கலாம்.(ராகம் பற்றிய அறிவெல்லாம் எனக்குக் கிடையாதுங்க,நிறைய பாடல்கள் கேட்கும் பழக்கம் இருப்பதால் சும்மா தோனியதைச் சொல்கிறேன்).

1."என்னதான் சுகமோ நெஞ்சிலே" என்ற மாப்பிள்ளை பட பாடலும் "கண்ணா வருவாயா" என்ற மனதில் உறுதி வேண்டும் பாடலும் ஒன்றின் பல்லவியின் தொடர்ச்சியாக இன்னொரு பாடலின் சரணத்தைப் பாடிப்பாருங்கள் இரண்டு பாடல்கள் போலவே தெரியாது.

2."பிறையே பிறையே" பிதாமகன் பாடலும் "புத்தம் புது பூ பூத்ததோ" தளபதி பாடலையும் ஒப்பிட்டுக் கேட்டுப் பாருங்கள், ராகமா அல்லது பிண்ணனி இசையா என்ன ஒற்றுமை என்று சொல்லத் தெரியவில்லை, ஆனால் கேட்பதற்கு ஒரே மாதிரியே இருக்கும்.

3."குண்டு மல்லி குண்டு மல்லி" சொல்ல மறந்த கதையின் பாடல், "மனசுல என்ன நெனச்ச மழலையில் சொல்லிடய்யா" மற்றும் "தெற்குத் தெரு மச்சானே" ஆகிய இரண்டு பாடல்களை நினைவுபடுத்தும்.

4."உத்தம புத்திரி நானு" என்ற குரு சிஷ்யன் பாடல், "சிங்காரக் காத்து" என்றுத் தொடங்கும் நம்ம ஊரு நாயகன் பாடலை ஒத்திருக்கும்.

5.மாப்பிள்ளைப் படப் பாடலான "மானின் இரு கண்கள்கொண்ட மானே" பாடலின் சரணம் எவ்வித மாற்றமும் இன்றி, தேவாவின் இசையில் வெளிவந்த சோலையம்மா படப் பாடலான "தாமிரபரணி ஆறு" பாட்டின் சரணத்தில் வார்த்தைகள் மட்டும் மாறி இருக்கும்.

6."யாமினி யாமினி" ஏய் நீ ரொம்ப அழகா இருக்க என்ற படப் பாடலின் சரணமும், "நெஞ்சாங்கூட்டில் நீயே" டிஷ்யூம் படப் பாடலின் சரணமும் அப்படியே ஒரே மாதிரி இருக்கும்.

7."தவமின்றிக் கிடைத்த வரமே"பாடலைக் கேட்கிறபோது, "தூரத்தில் நான் கண்ட உன் முகம்" நிழல்கள் படப் பாடலின் சாயலிலேயே இருப்பதாகத் தோன்றும்.

8."கத்தாழங் காட்டு வழி" பாடலின் சரணமும்,"சந்திரனைத் தொட்டது யார்" பாடலின் சரணமும் ஒரே சாயலிலேயே அமைதிருப்பார் எ.ஆர்.ரகுமான்.

9.தெனாலியின் "ஜன்னல் காற்றாகி வா" பாடலின் "இடது கண்ணாலே" என ஆரம்பிக்கும் சரணமும்,12B படத்தின் "பூவே வாய் பேசும் போது" பாடலின் "நீ ஒரு வார்த்தை" என ஆரம்பிக்கும் சரணமும், பாடலை இடையில் இருந்துக் கேட்டால் எந்த பாடல் என்ற குழப்பம் வருமளவிற்கு ஒரே மாதிரியாகவே இருக்கும்.

10."தூங்காத விழிகள் ரெண்டு" அக்னி நட்சத்திரம் பாடலும்,"தங்க மகன் என்று" பாட்ஷா படப் பாடலும் ஏதோ சம் ரிஸம்புலன்ஸ் தெரிவது போல் தோன்றும்.

இங்கே கொடுத்திருப்பது கொஞ்சமே, இன்னும் இப்படியான ஒரே சாயல்களைக் கொண்ட பாடல்கள் நிறைய இருக்கிறது. உங்களுக்கு தெரிந்தவற்றைக் சொல்லிட்டு போங்க மக்கா.

(மேலே இருக்கும் பாடல்களை காப்பி அடித்திருக்கிறார்கள் என்ற அடிப்படையில் இங்கே நான் கொடுத்திருக்கவில்லை.)

எங்க ஊரில் கிளிக்கியவை- - -2






கன்னலும் தென்னையும் கொஞ்சும் ஒரு இளந்தென்றல் நேரம்(இது மாதிரியான கரும்புக் கொல்லைகளில்தான் சில குறும்பு கொள்ளைகளும் நடக்கும்)


கட்டு கட்டு கதிரு கட்டு(களத்து மேட்டுக்கு காத்திருக்கும் கதிர் கட்டுகளில் கருப்பாய் தெரிவது கரிச்சாங்குருவி)


எருக்கம் பிஞ்சும், பஞ்சும்(வெடித்துப் பறக்கும் எருக்கம் பஞ்சு பார்ப்பதற்கு அத்தனை அழகாக இருக்கும்)

ஆறுமுகக் கள்ளி(படத்தில் தெரிவது போல் சுற்றிலும் ஆறு முள் தொடர்களை கொண்டிருப்பதால் இப்பெயர்,இதன் பூ வெண்மை நிறத்தில் மனதைக் கொள்ளைக் கொள்ளும் விதத்தில் இருக்கும்,தடித்து நீண்ட இதன் காம்பிலிருந்து பூவை கிள்ளிவிட்டால் காம்பைப் பார்ப்பதற்கு ஷேவ் பிரஷ் மாதிரி இருக்கும்)





வண்டிச் சுவடு (ஒரு சுவடு நீ, மறு சுவடு நான் , இடையில் பசுமையாய் நம் காதல்..! ஆஹா கவித கவித)

( பெண் பனை)


ஆண் பனை.


சென்ற மாதம் ஆனந்தவிகடனில் மதன் பதில்களில் கேட்டிருந்த கேள்வி ஒன்றில் தாவரங்களில் ஆண்?பெண் உண்டா என்று ஒருவர் கேட்டிருந்தார்,அதற்கான பதிலாக "இல்லை" என்று சொல்லியிருந்தார்.இங்கே இருக்கும் பனை மரங்களில் நொங்கோடு இருப்பதை பெண் பனையென்றும் மற்றொன்றை ஆண் பனையென்றும் எங்க ஊரில் சொல்வாங்க.(யாருக்காவது அறிவியல் விளக்கம் தெரிஞ்சா சொல்லிட்டுப் போங்க மக்கா).



கிலுகிலுப்பைச் செடி,கிளுகிளுப்புச் செடி அல்ல(இதில் உள்ள விதைகள் கிலுகிலுப்பை போன்று சத்தம் கொடுக்கும்)






ஜோடித் தென்னை மரங்களைப் பார்த்து பொறாமையில் கருகியிருக்குமோ அந்த ஒற்றைத் தென்னை.(இடி தாக்கிய தென்னை)





திருமாங் கீரைச் செடியின் பூ(முதல்வனில் மனிஷா இந்த மாதிரிச் செடிகளின் நடுவில்தான் 'உளுந்து விதைக்கயிலே'ன்னு பாடுவார்)

எங்க ஊரில் கிளிக்கியவை- - - 1 இங்கே:

Monday, July 13, 2009

இசைஞானி இளையராஜாவின் 90 ஹிட்ஸ்

1990 களில் இசைஞானி இசையமைப்பில் வெளிவந்த சில அசத்தலான டூயட் பாடல்களை ஏற்கனவே இரவில் கேட்க இதமான காதல் பாடல்கள் பகுதி 1 , பகுதி 2 , ஆகிய பதிவுகளில் கொடுத்ததை அடுத்து இப்பதிவில் Female solo வகையில் அமைந்த பாடல்களில் எனது தேர்வாக சில பாடல்கள்.

பாடல்கள் மேல் கிளிக்கி கேளுங்கள்
.

1.ஓஹோஹோ - உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்
2. வண்ணப் பூங்காவனம் - ஈரமான ரோஜாவே
4.அடி ஆடி வரும் - ஐ லவ் இந்தியா
7.மாலையில் யாரோ - சத்ரியன்
8.வந்ததே ஓ ஓ - கிழக்கு வாசல் பாடல் இங்கே:
9. தாலாட்டும் பூங்காற்று - கோபுர வாசலிலே
10. ராசாவே உன்னை - அரண்மனைக் கிளி
இளையராஜாவின் இசையமைப்பில் இல்லாத கீழே இருக்கும் இந்த இரண்டு பாடல்களும் பிடித்தமானதே.

11. அதிகாலைக் காற்றே- தலை வாசல்
12. தத்தித்தோம் - அழகன்

ஓரிரு வாரங்களுக்கு இப்படியான மொக்கை பதிவுகள்தான் வருமென எச்சரிக்கை விடுத்துக் கொள்கிறேன்.

Friday, July 10, 2009

டயலாக்ஸ் : கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க

சென்னையில் வேலை தேடும் வேலையில் இருந்த இரண்டு நண்பர்களிடையே நடந்த மேன்ஷன் உரையாடல்.

நண்பர்1:டேய் எறுமை எழுந்திரிடா மணி பத்தாச்சு இப்படித் தூங்கதான் தஞ்சாவூரிலிருந்து வந்திருக்கியா?

(தூக்கத்தில் இருந்த நண்பர் 2 மிகுந்த டென்ஷனோடு)

நண்பர்2:ஏன்டா பன்னி, இப்படி டெய்லியும் என்னை எழுப்பிவிடத்தான் நீ கோயம்புத்தூரிலிருந்து வந்திருக்கியா?

நண்பர்1:?????


சாலையோரத்தில் நடந்து போகும் நண்பர் மீது டூ வீலர் ஓட்டி வரும் ஒரு டீன் ஏஜ் பையன் பேலன்ஸ் தவறி மோதியதும் நடந்த உரையாடல்.

பையன்:அண்ணே புது வண்டி இன்னிக்குத்தாண்ணே எடுத்துட்டு வந்தேன்,சாரிண்ணே இப்போதான் ஓட்டக் கத்துக்கிறேன் அதான் தெரியாம...

நண்பர்:என்னைப் பார்த்தா உனக்கு எலுமிச்சம்பழம் மாதிரி இருக்கா? எலுமிச்சம்பழம் ரவுண்டா மஞ்சளா சின்னதா இருக்கும் அதுல ஏத்து.

பையன்:?????

இரண்டு நண்பர்கள் ஷேர்ட் பர்சேஸ் செய்தபோது,சேல்ஸ்மேன் 600 ரூபாய் ஷேர்ட்டில் ஆரம்பித்து படிப்படியாகக் குறைந்து இருனூற்றைம்பது ரூபாய் ஷேர்ட்டைக் காட்டியதும்,அதில் ஒன்றை செலக்ட் செய்த நண்பரிடம் மற்றொரு நண்பர் கிசுகிசுப்பான குரலில்,

நண்பன் 1: ஏன்டா நாதாரி, கடைசியா உங்கிட்ட எர‌னூத்தி அம்ப‌து ரூபாதான் இருந்திச்சா?

நண்பன் 2:கடைசியா இல்லடா, கடையில் நுழைஞ்சப்பலேருந்தே அவ்வளவுதான் இருந்துச்சு.

நண்பர் 1:?????

விடுதியில் தங்கிப் படிக்கும் மூன்று மாணவர்களுக்குள் தங்களின் தேர்வு முடிவுகளைப் பற்றி பேசிக்கொண்டது,

நண்பர் 1 :என்னடா ரிசல்ட் என்னாச்சு?

நண்பர் 2:ச்சே ஒரு பேப்பர்ல ஜஸ்ட் நாலு மார்க்குல போச்சுடா.

(அறையில் படுத்திருக்கும் மற்றொரு நண்பணிடம் நண்பர் 1)

நண்பர்1:உன்னோட ரிசல்ட் என்னாச்சுடா?

(மூன்றாவது நண்பர் பதில் சொல்வதற்குள் இரண்டாவது நண்பர் முந்திக்கொண்டு)

நண்பர் 2:எனக்காவது நாலு மார்க்குல போச்சு,அவன் எடுத்ததே நாலு மார்க்தாண்டா.(என்று சொல்லியபடியே ஹா ஹாவென சிரிக்க,டென்ஷனான மூன்றாவது நண்பர்)

நண்பர் 3:செத்தவன் காலு வடக்கே இருந்தா என்ன,தெற்கே இருந்தா என்ன?
மொத்தத்தில் ரெண்டு பேரும் ஃபெயிலு இதில என்ன உனக்கு கம்பேரிஷன் வேண்டிக்கிடக்கு.

(நண்பர் 1 சிரிக்க ,நண்பர் 2 முறைக்க நண்பர் 3 இழுத்து போர்த்திக் கொண்டு தூக்கத்தைக் கண்டினியூ செய்கிறார்.)

Monday, July 6, 2009

இரவில் கேட்க இதமான காதல் பாடல்கள்----2

90 களில் இளையராஜாவின் இசையமைப்பில் எனக்குப் பிடித்த காதல் பாடல்களின் முதல் தொகுப்பை இரவில் கேட்க இதமான காதல் பாடல்கள் என்ற தலைப்பில் பதிவிட்டதைத் தொடர்ந்து இரண்டாவது தொகுப்பாக இந்தப் பாடல்கள். இவையும் இரவில் கேட்க இதமான பாடல்களே.முதல் தொகுப்பில் கொடுத்திருந்தவை முன்னமே உங்களுக்கு பரிச்சையமான பாடல்கள்தான் என்றாலும், நான் கொடுத்திருக்கும் வரிசையில் பதிவு செய்து கேட்டுப் பார்த்துவிட்டு எப்படி இருக்கிறது அந்த அனுபவம் என்றுச் சொல்லுங்கள்.

இந்த இடுகையில் கொடுத்திருக்கும் பாடல்களும் முதல் பதிவைப் போன்றே டூயட் பாடல்களே.

பாடல்களின் மேல் கிளிக்கி கேளுங்கள்,

ஒரு போக்கிரி ராத்திரி - இது நம்ம பூமி

காத்திருந்தேன் தனியே - ராசா மகன்

நினைத்த வரம் கேட்டேன்- காதல் ரோஜாவே

அல்லா உன் ஆணைப்படி - சந்திரலேகா

உடல் தழுவ தழுவ - கண்மணி



இது மானோடு மயிலாடும்- எங்க தம்பி

காதல் வானிலே காதல் - ராசைய்யா

வருது வருது இளங்காற்று- பிரம்மா

வா காத்திருக்க நேரமில்லை- காத்திருக்க நேரமில்லை

வெண்ணிலவில் மல்லிகையில் - அதிரடிப்படை


கண்ணே இந்த கல்யாண- ஆணழகன்


எனது பதின்மம் 90களில் அமைந்ததாலோ என்னவோ எப்போதும் இந்த சமயத்தில் வந்த பாடல்கள்தான் மனதிற்கு நெருக்கமாக இருக்கிறது.மேலும் 80 களில் வெளிவந்தப் பாடல்களின் தொகுப்பு பெரும்பாலான இளையராஜாவின் ரசிகர்களிடம் இருக்கும், ஆனால் நான் கொடுத்திருக்கும் பாடல்கள் பெரும்பாலானோரிடம் இருப்பதில்லை. அவர்களின் கலக்ஷனிலும் இந்தப் பாடல்கள் இருந்தால் நன்றாக இருக்குமே என்பதற்காகவே இந்தப் பதிவு.

முதல் தொகுப்பு யூ டியூப் இணைப்புடன் இங்கே:
இரவில் கேட்க இதமான காதல் பாடல்கள்

Friday, July 3, 2009

டூரிங் டாக்கீஸ் நினைவுகள்...

"இன்னான்விடுதி ரெங்கம்மா","செல்லம்பட்டி துரை" பத்து பதினைந்து வருடங்களுக்கு முன் எங்கள் பகுதியில் இந்தப் பெயர்கள் அத்தனை பிரபலம். எங்க ஏரியாவின் சத்யம்,ஐனாக்ஸ் இந்த இரண்டு டூரிங் டாக்கீஸ்கள்தான்.

எண்பதுகளின் மையத்தில் தமிழக அரசின் குடும்ப
க்
கட்டுப்பாட்டு பிரச்சாரங்களைத் தாங்கிய கார்டூன் படங்களை அப்போதெல்லாம் கிராமங்கள் தோறும் 35 mm திரையில் ஓட்டுவார்கள், அதையே ஒன்ஸ்மோர் கேட்டுப் பார்த்த பயமக்கள் நாங்களெல்லாம். பஞ்சாயத்துத் தொலைக்காட்சிக்கூட எங்கள் ஊருக்கு எட்டிப் பார்த்திராத நேரத்தில்தான் பக்கத்து ஊர்களான இன்னான்விடுதியிலும், செல்லம்பட்டியிலும் அதிரடியாக இந்த டூரிங் டாக்கீஸ்கள் அவதரித்தன.

வருஷத்துக்கு ஒரு தரம் பொங்கல்,தீபாவளிக்கு தஞ்சாவூருக்குப் போறப்போ பெரிய பெரிய சினிமா போஸ்டர்களையெல்லாம் பார்த்ததையே ஒரு வாரத்துக்குக் கதைக் கதையா பேசித் திரிவோம். அப்படி வாய்பிளந்துப் பார்த்த போஸ்டர்களை எங்க ஊரிலேயே பார்க்கும் பாக்கியம் இந்த டூரிங் டாக்கீஸ்களால் கிடைத்தது யாம் பெற்ற பேறு.

ஒரு ஊருக்கு இரண்டு போஸ்டர்கள் என்று கணக்கிட்டு ஒவ்வொரு ஊரிலும் ஆட்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் போஸ்டர்களை ஒட்டுவார்கள். போஸ்டர் ஒட்ட வருபவர் மைதா மாவை சுவரில் பூசி பிறகு கொண்டு வந்திருக்கும் போஸ்டரின் பின்பக்கமும் பூசி (அவ்வளவு சஸ்பென்ஸாக பூசுவார்) திருப்பி ஒட்டுவதற்குள் "ரஜினி படம்டா", "இல்ல விசியாந்து படம்தான் எவ்வளவு பந்தயம்" என்று அங்கே கூடியிருக்கும் விஸ்கான்களிடையே பெரிய பட்டிமன்றமே நடக்கும்.

ஒரு படம் அதிகபட்சமாக ஒரு வாரம் ஓடும். ஒரு வாரத்திற்கு மேல் ஓடினால் ஆட்டோவில் விளம்பரமெல்லாம் செய்து கொண்டு வருவார்கள். எனக்குத் தெரிந்து பத்து நாட்களைக் கடந்து இரண்டு படங்கள் ரெங்கம்மாவில் ஓடியிருக்கிறது ஒன்று "கரகாட்டக்காரன்" மற்றொன்று "மைதிலி என்னைக் காதலி" (இந்தப் படத்தை சமீபத்தில்தான் பார்த்தேன் உஸ்ஸ் முடியல, சரி வேண்டாம் ஆட்டய கவனிங்க) .

ஒவ்வொரு வாரமும் என்ன படம்னு தெரிஞ்சிக்க போஸ்டர் ஒட்டியிருக்கும் இடத்திற்கு அவனவன் கார், பைக் எல்லாம் எடுத்துகிட்டு(பசங்க படத்தில பார்திருப்பீங்கல்ல அந்த மாதிரியான கார்களும்,பைக்கும்தான்) ஓ(
ட்)
டிவந்து பார்த்ததையெல்லாம் இப்போது நினைத்தாலும் கண்முன்னே காட்சியாகிறது.

போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கும் சுவற்றின் சொந்தக்காரர்கள், அந்த போஸ்டரை யாரேனும் கிழித்து விடாமல் பார்துக்கொண்டால் அடுத்தப் படத்திற்கு டிக்கெட் இலவசம். அதனால் எப்போதும் யாராவது ஒருத்தர் அங்கே காவல் இருப்பர் . அவர்கள் அசரும் நேரம் பார்த்து போஸ்டரைக் கிழித்துக் கொண்டு ஓடிவிடுவோம்.அப்படி கிழிக்கப்பட்ட
போஸ்டர்களில் இருக்கும் தலைவர்கள் அடுத்தநாள் எங்கள் புத்தகத்தின் அட்டைகளாகிச் சிரிப்பார்கள்.

ரெங்கம்மாவில் பெரும்பாலும் பழைய படங்களாகவே ஓடும், மாறாக துரையில் புதுப்புது படங்களாக ரிலீஸ் செய்வார்கள்.(இங்கே பழைய படங்கள் என்று சொல்வது "லவகுசா" காலத்துப் படங்கள்,புதுப் படங்கள் என்று சொல்வது முரட்டுக் காளை ரேஞ்ச் படங்கள். துரையில் முரட்டுக்காளை ரிலீஸ் ஆகியிருந்த சமயத்தில் தஞ்சையில் "அண்ணாமலை" ஓடிக்கொண்டிருந்தது).

பொங்கல்,தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் "மாப்பிள்ளை","கேப்டன் பிரபாகரன்" போன்ற ரிலீஸ் ஆகி இரண்டு மூன்று வருடங்களேயான ரொம்பப் புதுப்படங்களையெல்லாம் போட்டு அசத்துவார்கள். இதிலும் துரையில் ரஜினி படம் ஓடினால், ரெங்கம்மாவில் விஜயகாந்த் படம்தான் ஓடும் என்று கண்மூடிக்கொண்டுச் சொல்லிவிடலாம். அந்த அளவிற்கு எங்க ஏரியாவில் இந்த இருவருக்கும் ரசிகர்கள் உண்டு. இதில் இன்னொரு விஷயம் என்னவெனில் ரஜினிக்கோ, விஜயகாந்துக்கோ கிடைக்காத வ
வேற்பு அப்போதைய ராமராஜன் படங்களுக்கு இந்த டூரிங் டாக்கீஸ்களில்(குறிப்பாக ரெங்கம்மா) கிடைத்தது. மேளதாளம்,தோரணம் என முழக்கி எடுத்து விடுவார்கள். வருடத்திற்கு இருமுறை "கரகாட்டக்காரனும்", "நம்ம ஊரு நாயகனும்" ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஓட்டுவார்கள். அதே மாதிரி டி.ராஜேந்தர் படங்களுக்கும் பெரிய வரவேற்பு இருந்தது.

டீ.ஆரின் "எங்க வீட்டு வேலன்" ஓடியபோது சினிமா கொட்டாயின்(அப்படித்தான் சொல்வோம்) முன்புறம் பெரிய வேப்பங்கிளையை வெட்டி வைத்து அதன்கீழ் ஒரு அம்மன் படமும், ஒரு குடத்தில் மஞ்சள் துணியைக் கட்டி உண்டியலாகவும் வைத்திருந்தார்கள். படத்தில் வரும் சாமி சிலைகளை இரண்டு முறை கேமராவில் முன்னும் பின்னும் ஜூம் செய்து காட்டிவிட்டால் போதும் நிறைய அம்மணிகளுக்கு சாமி வந்து ஆட ஆரம்பித்துவிடுவார்கள். பிறகு அங்கே இந்த மாதிரி படங்களுக்கென்றே ஸ்பெஷல் அப்பாயின்ட்மென்ட் பூசாரி ஒருத்தர் இருப்பார் அவர் இவர்களையெல்லாம் வெளியேற்றி கொட்டாயின் முன்புறம் இருக்கும் அம்மன் படத்தின் முன்பு ஆடவிடுவார். "டேய் ம்ம்ஹூம்" என வினோத சத்தங்களையெல்லாம் அரங்கெற்றும் இந்த சாமியாடி அம்மணிகள், வாங்கி திங்க என கொண்டு வந்திருக்கும் ஐம்பது காசு, ஒரு ரூபாய்களை புசாரியின் கட்டளைப்படி உண்டியலில் போட்டுவிட்டு பூசாரி கொடுக்கும் உச்சந்தலை அடியையும், திறுநீரையும் வாங்கியபடி மீண்டும் ஆட்டைக்கு வந்துவிடுவார்கள். அதுவரை படம் நிறுத்தப் பட்டிருக்கும். "ஆடி வெள்ளி","வெள்ளிக்கிழமை விரதம்" போன்ற பக்தி படங்களுக்கு இந்த சாமியாட்ட கும்பலின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

இவர்கள் சாமியாடி முடிக்கும்வரை கேண்டீன் வியாபாரம் சூடுபிடிக்கும், கடலை மிட்டாய், முறுக்கு,ஆரஞ்ச் கலர் என ஹைகிளாஸ் ஐட்டங்களயெல்லாம் வாங்கும் அளவிற்கு எங்களிடம் காசு இருக்காது. தரை டிக்கெட்டுக்கு எழுபத்தைந்து பைசா தேற்றுவதே பெரிய காரியமாக இருக்கும். எனவே தியேட்டருக்கு வெளியே விற்கும் நாவப்பழம், கொடுக்காப் புளி, நெல்லிக்காய், வேர்க் கடலை ஆகியவற்றை ஆரம்பத்திலேயே வாங்கிச் சென்றுவிடுவோம். அதிக பட்சமாக எங்களின் ஸ்னாக்ஸ் செலவை ஐம்பது பைசாவில் முடித்துக் கொள்வோம். ஒன்னார்ரூவாய் பெஞ்ச் டிக்கெட்டும், ரெண்டு ரூவா தேங்காய் நார் குஷன் சீட்டிலும் உட்கார்ந்துப் படம் பார்க்க வேண்டுமென்பது அப்போதெல்லாம் பெரிய லட்சியமாக இருந்தது.

பண்டிகை நாட்களில் மட்டும் நான்கு காட்சிகள் ஓட்டுவார்கள். மற்ற நாட்களில் இரண்டு காட்சிகள் மட்டும்தான். பண்டிகை நாட்களில்தான் படம் பார்க்க பர்மிஷன் கிடைக்கும், அதுவும் காலைக் காட்சி அல்லது மேட்னி ஷோவுக்கு. இந்த மாதிரி பகல் நேரக் காட்சிகளைப் பார்க்க நேரிடும்போது புரஜெக்டர் ரூமிலிருந்து வரும் ஒளியைவிட சூரிய ஆப்பரேட்டர் அடிக்கும் ஒளிதான் திரையை அதிகம் ஆக்ரமிக்கும். அத்தனை ஓட்டைகள் இருக்கும் சினிமாக் கொட்டாய்களின் கூரையில். மழைக் காலத்தில் பெரும்பாலும் காட்சிகளை ரத்து செய்துவிடுவார்கள்.

இரவு காட்சிகள் செல்வதுதான் பயங்கரத் திரில் நிறைந்தது. துரையும், ரெங்கம்மாவும் எங்க ஊரிலிருந்து தலா நான்கு கிலோமீட்டர் தூரத்தில் எதிரெதிர்த் திசையில் அமைந்திருக்கும். பெரும்பாலும் இரவுக் காட்சிகளுக்கு செல்லும்போது வீட்டாருக்குத் தெரியாமல் திருட்டுத் தனமாகவே போவோம்.


செல்லம்பட்டித் துரைக்கு செல்லும் வழி ஒன்னும் பிரச்சனை இருக்காது. மெயின் ரோட்டிலேயே சென்றுவிடலாம்.ஆனால் ரெங்கம்மாவிற்கு செல்லும் வழிதான் நிறைய அட்வென்சர்களை செய்ய வேண்டியிருக்கும். முழுவதும் வயல் காடுகளும், சவுக்குத் தோப்புகளும் நிறைந்து இருக்கும். இந்த சவுக்குத் தோப்புகளுக்கிடையில் ஒரு முனியன் கோவில் இருக்கும், அங்கே ஒரு ஹாஃப் சைஸ் 'சரவண பெலகுலா' ரேஞ்சுக்கு பெரிய முனியன் சிலை கையில் பெரிய அரிவாளோடு வீற்றிருக்கும், பக்கத்தில் ஒற்றை பனை மரம் ஒன்று இருக்கும். படம் பார்க்கச் செல்லும்போது ஓரளவிற்கு வெளிச்சத்திலேயே சென்று விடுவோம், ஆனால் திரும்பி வரும்போதுதான் "ஜெகன் மோகினி" எபெஃக்டெல்லாம் கேட்கும், அதுவும் காற்றடிக்குபோது சவுக்குத் தோப்பிலிருந்து ஒரு சத்தம் வரும் பாருங்க டி.டி.எஸ் எபெஃக்டெல்லாம் தோற்றுப் போகும். கரக்டா முனியன் கோவில் நெருங்கும் சமயத்தில் எல்லோரும் எடுப்போம் ஓட்டம், சவுக்குத் தோப்பை கடக்கும் வரை "ஆய் ஊய் குத்தி புடுவேன், வெட்டிப் புடுவேன்" என்று எங்களது பயங்களை வீரமாக மாற்றியபடி கத்திக்கொண்டே தூரமாய் வந்த பிறகே ஓட்டத்தை நிறுத்துவோம். இந்த டூரிங் டாக்கீஸில் நான் கடைசியாகப் பார்த்தப் படம் விஜய் நடித்த "விஷ்ணு". இதுவும் கூட திருட்டுதனமாகப் பார்த்த படம்தான்.

இப்படி எத்தனையோ நினைவுகளை என்னைப் போன்ற பலரிடம் விதைத்து வைத்திருக்கும் இந்த டூரிங் டாக்கீஸ்களில் ஒன்று இன்று டி.என்.சி நெல் அடுக்கும் குடோனாகவும், மற்றொன்று பாழடைந்து புதர்களும்,கரையான் புற்றுகளுமாக காட்சியளிக்கிறது.எத்தனை ஆர்ப்பாட்டம், விசில்கள், கால்தடங்கள் பதிந்த இடம் இன்று பொலிவிழந்து, மனுஷ பயலுக்கு எதையோ உணர்த்தியபடியே அமைதியாக காட்சியளிக்கிறது.

இன்று சத்யம்,ஐனாக்ஸ் தொடங்கி வெளிநாட்டு திரையரங்கில் கூட படம் பார்த்துவிட்ட போதும் மனசு ஏனோ அந்த ஆறு மணி தேய்ந்த ரெக்கார்ட் சவுண்டுக்கு ஏங்குகிறது.(ஒரு வேளை வயசாயிடுச்சோ).


இந்த பதிவிற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து,அடுத்த பதிவில் எங்க ஊருக்கு தொலைக்காட்சி வந்த கதையைப் பற்றி எழுதலாம் என்றிருக்கிறேன்.

Thursday, July 2, 2009

டயலாக்ஸ்: கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க....

பணி நிமித்தம் சென்னையில் இருக்கும் நண்பர் ஒருவர் தனது ஊர்த் திருவிழாவைப் பற்றி ஊரில் இருக்கும் தனது நண்பரிடம் தொலைபேசியில் பேசியது.

சென்ற வருடம்:

நண்பர் 1:என்னடா பங்ஸ்(பங்காளி) திருவிழாவெல்லாம் எப்படி போச்சு?

நண்பர் 2:அத ஏண்டா கேக்குற இந்த வருஷமும் வடக்கித் தெருவாய்ங்களுக்கும் ,தெக்கித் தெருவாய்ங்களுக்கும் சண்ட,கரகாட்டக்காரிகள கையப் புடிச்சு இழுத்து பெரிய ரகள பண்ணிட்டாய்ங்கடா.

நண்பர் 1:காட்டுமிராண்டி கூட்டம்டா,இந்த மயித்துக்குத்தான் நான் ஊர் பக்கமே வாரதில்ல..

இந்த வருடம்:

நண்பர் 1: என்னடா பங்ஸ் திருவிழாவெல்லாம் எப்படி போச்சு?

நண்பர் 2: யப்பா எனக்குத் தெரிஞ்சு இந்த வருஷந்தாண்டா ஒரு சண்ட சச்சரவு இல்லாம திருவிழா நடந்துச்சு.நீயும் வந்திருக்கலாம்டா.

நண்பர் 1: ஆமா,அங்க என்ன அமைதி மாநாடா நடத்துறிய.ஒரு திருவிழான்னா நாலு சண்ட சத்தமுன்னு இருந்தாத்தானடா பாக்க நல்லா இருக்கும்.

நண்பர் 2:?????

காலை நேரத்தில் நிறைய கல்லூரி மாணவ,மாணவிகளை ஏற்றியபடியே வந்து கொண்டிருக்கும் பஸ்ஸில் தங்களுடைய நிறுத்தத்தில் இறங்க எத்தணிக்கும் இரு மாணவிகள் படியில் ஜொள்ளுவிட்டபடியே நிற்கும் மாணவர்களிடம்,

மாணவி 1:கொஞ்சம் வழிய விடுங்க இறங்கணும்

மாணவி 2:அதான் ஏற்கனவே லிட்டர் லிட்டரா வழியுதே இன்னுமா வழியணும். அதற்கு மாணவர்கள் சொன்னது சென்ஸார்(யூகிக்க முடியுதா?).


பையனின் அரையாண்டுத் தேர்வின் மதிப்பெண் பட்டியலைப் பார்த்த அவனது தந்தை அடி பிரித்து எடுத்துக் கொண்டிருக்கையில் அங்கே வந்த பக்கத்து வீட்டுக்காரர்,

பக்கத்து வீட்டுக்காரர்:எதுக்கு அவன இப்படி போட்டு அடிக்குறீங்க?

அப்பா:பாருடா முப்பத்தாறு மார்க்குதான் வாங்கியிருக்கான்.

ப.வீட்டுக்காரர்:சரி சரி விடுங்க,அடுத்த பரிச்சையிலே நிறைய மார்க் எடுப்பான். ஆமா எந்த சப்ஜெக்டுல மாப்ள இவ்வளவு கொறச்சலா எடுத்திருக்க(பையனைப் பார்த்துக் கேட்கிறார்).


அப்பா:ஏலேய் அவன் மொத்தமாவே எல்லா பாடத்திலேயும் சேர்த்தே அவ்வளவுதாண்டா எடுத்திருக்கான்.

இதைக் கேட்ட பக்கத்து வீட்டுக்காரர் கொஞ்சம் டரியலாகி பின் சொன்ன டயலாக்கில் டரியலானார் பையனின் அப்பா.

ப.வீட்டுக்காரர்:அப்போ உம்ம புள்ள டோட்டலா(total) பாஸாகிட்டான்னு சொல்லுங்க.