நாளை என்னும் நாளை எண்ணி என்ன கவலை , நல்லபடி வாழ்ந்தால் என்ன இந்தப் பொழுதை...
Thursday, September 23, 2010
பன்றி வேட்டையும் பாக்குத் திருவிழாவும்
கிராமப் புறங்களில் நாட்டுத் திருவிழா என்று ஒன்று நடக்கும். பதினெட்டு கிராமங்கள் சேர்ந்தது ஒரு நாடு.(சோழர்களின் ஆட்சிக் காலத்தின் உள்ளாட்சிப் பிரிவுகளில் ஒன்றுதான் இந்த நாடுகள் எனும் அமைப்பு). கோனூர் நாடு, குளத்தூர் நாடு, காசவள நாடு, மெய்சொல்லி நாடு என ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு பெயருண்டு.
தஞ்சை மாவட்டத்தின் ஒரத்தநாடு தாலுக்காவின் கீழ் வரும் கோனூர் நாட்டில் வருடா வருடம் ஒரு வாரத்திற்கு மேலாக நடக்கும் நாட்டுத் திருவிழாவின் ஒரு சுவராஸ்யமான பகுதியே ”பன்றி வேட்டை பாக்குத் திருவிழா” .
பெரும்பாலான திருமண சம்பந்தங்கள் எல்லாமே இந்த பதினெட்டுப் பட்டிகளிலேயே இருக்கும்.(இப்போது பரவலா வெளியிலும் சம்பந்தம் பேசுகிறார்கள்) .இந்த பாக்குத் திருவிழாவன்று பதினெட்டு கிராம மக்களும் தங்கள் நாட்டிற்கென்று பொதுவாக இருக்கும் ஒரு கோயிலின் முன்பு கூடிவிடுவர்.
திருமணமானப் பெண்களுக்கு அவர்களின் தாய் வீட்டிலிருந்து சீதனமாக கொட்டப் பாக்குகளை கொடுப்பர்.இந்த பாக்குகளில் எண்ணிக்கை குறைந்த பட்சம் இருபத்தைந்திலிருந்து அதிக பட்சமாக ஆயிரக்கணக்கிலும் அவரவர் வசதிக்கேற்ப கொடுப்பார்கள்.(மக்கள் இப்போது நிஜாம் பாக்கிற்கு மாறி விட்டார்கள்).
இதில் முதல் பாக்கு என்று ஒன்று உண்டு. புதுமணப் பெண்ணிற்கு கொடுப்பதுதான் முதல் பாக்கு. பெண்ணின் உறவுக்காரர்கள் அனைவரும் புதுமணத் தம்பதியருக்கு தாம்பூலத்தில் பாக்கு, பணம் வைத்துக் கொடுப்பார்கள், பதிலுக்கு மாப்பிள்ளை வீட்டார் இனிப்பு வகைகளை கொடுப்பார்கள். எங்கெங்கு காணினும் நிறைய புதுமணத் தம்பதியரை பட்டுடைகளோடு காண்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
இந்த 18 பட்டிகளில் உள்ளவர்கள் பெரும்பாலும் ஒரே பள்ளியில் படித்தவர்களாக இருப்பார்கள். திருமணமாகி திருவிழாவில் கணவனோடு நிற்கும் பெண்கள் தங்களோடு கூடப் படித்தப் பசங்களைப் பார்க்கும்போது ஒரு மாதிரி நாணிக் கோணுவாங்க பாருங்க அடடா அழகான கவிதை தருணம்ங்க அது.
இன்னும் சில பெண்கள் பார்த்தும் பாராதது போல பந்தாவாக கணவனின் கைகோர்த்தபடியே நின்று கொண்டிருப்பார்கள், அந்த மாதிரி பொண்ணுங்களைத்தான் ரௌண்டு கட்டுவானுங்க பசங்க, ”டேய் ஊள மூக்கு”, ”சுருட்டை” ,”கௌதாரி” என பள்ளி நாட்களில் வைத்த பட்டப் பெயர்களை வேறு யாரையோ கூப்பிடுவதுபோல் உரக்கச் சொல்லி டரியலாக்குவானுங்க. பதறி கையை உதறி யாரும் அறியாத வண்ணம் “சீ போ” என்று அந்த பொண்ணுங்க செல்லமாய் திட்டுவதையெல்லாம் ஒரு வாரத்திற்கு கதை கதையாய் பேசித் திரிவாய்ங்க.
இன்னொரு பக்கம் பழைய காதலிகளை கண்களாலேயே நலம் விசாரித்த படியே மென்சோகத்தோடு நகர்ந்து போகும் நடுத்தர வயது மனிதர்களையும் இங்கே காணமுடியும்.
பாக்கு கொடுக்கும் வழக்கம் உறவுகளை புதுப்பித்துக் கொள்வதற்காக கொண்டாடப் படுவதாகும். பிறந்த வீட்டோடு என்ன பிரச்சனை இருந்தாலும் பாக்கு திருவிழாவில் ஒன்று கூடிவிடுவார்கள். என்ன சண்டை இருந்தாலும் இந்த பாக்கு கொடுப்பதை தொடர்வதற்குக் காரணம் பாக்கு கொடுக்கப் படவில்லை என்று தெரிந்தால் சம்பந்தப் பட்ட பெண்மணியின் ஊரில் நடக்கும் குழாயடிச் சண்டையில்“போடி சொத்த பாக்குக்கு வக்கத்தவள” என்ற ஏச்சு பேச்சுக்கு ஆளாகி பிறந்த வீட்டின் மானம் கப்பலேற்றப்படும் அபாயம் இருப்பதே. அதே போன்று ”கூடப் பொறந்தவளுக்கு பத்து ரூவாய்க்கு பாக்கு வாங்கிக் கொடுக்க துப்பு இல்ல இவனெல்லாம் தோளில் துண்டு போட்டுகிட்டு திரியிறான்” என்று அண்ணன்,தம்பிகளும் அட்டாக்கிற்கு ஆளாக நேரிடும். அந்த கௌரவப் பிரச்சினைக்காகவே விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.
புது மணப் பெண்ணிலிருந்து பாக்கின் அவசியம் உணர்ந்த பழைய குமரிகள் வரை திருமணமான அனைவருக்கும் பாக்கு அவரவர் பிறந்த வீட்டிலிருந்து வந்துவிடும். சகோதரர்கள் இருவரைக் கொண்ட பெண்கள் என்றால் இரண்டு தனித் தனிப் பாக்குகள் வரும், அதே பெண்ணின் கணவருக்கு இரு சகோதரிகள் என்றால் சகோதரர்களிடம் வாங்கிய பாக்குகளை கணவரின் சகோதரிகளிடம் கொடுத்துவிட்டு செலவை மிச்சப் படுத்திவிடுவார்கள்.
அலைபேசி இல்லாத காலத்தில் பாக்கை கையில் வைத்துக் கொண்டு அவரவர் உறவினர்களை கூட்டத்தில் அலைந்துத் தேடிக் கண்டிபிடித்து
” யுரேகா யுரேகா” என்று கத்தாத குறையாக பாக்கை கொடுப்பார்கள். அந்த கண்ணாமூச்சி விளையாட்டு இப்போது இல்லை.
தன் பிறந்த ஊரின் மக்களைப் பார்த்ததும்”பெரியம்மா”, ”தம்பிகளா”, ”சித்தப்பா” என எதாவது ஒரு உறவுமுறையை கொண்டு அழைத்தபடியே ஓடி வந்து நலம் விசாரிக்கும் பெண்களைப் பார்க்கும் போது பசங்களுக்கும் கூட கண் கலங்கிவிடும்.
இளந்தாரிக் கூட்டம் அடுத்த வருட புதுப் பாக்கிற்கு ஏற்பாடு செய்யும் விதமாக அவரவர்களுக்கேற்ற ஜில், ஜங், ஜக்கிற்குப் பின்னால் ரூட் விட்டபடியே திரிவது ஆண்டாண்டு காலமாக தொடரும் மரபுக் கவிதையின்
நீட்சிகள். சில ஜக்கெல்லாம்கூட தாவணியில் அன்று ஜில்லாகக் காட்சியளிக்கும், அதே மாதிரி பொருந்தா சுடிதாரில் ஜில்லும் ஜக்காக திரிந்து கொண்டிருக்கும்.
”பாம் பாம்” ஓசையை குழந்தைகள் இருக்கும் இடமாகப் பார்த்து அழுத்தும் ஐஸ் வண்டிக்காரர்,கலர் பலூனை குழந்தைகளிடம் காட்டி கண்ஜாடையில் வாங்கச் சொல்லும் பலூன் கடைக்காரர், வெரைட்டி ஸ்வீட் என்ற பெயரில் வித விதமான வடிவங்களில் ஒரே சுவையுடைய சக்கரைப் பாகு கட்டிகளை அழகாக அடுக்கி வைத்திருக்கும் திருவிழா ஸ்வீட் ஸ்டால்கள், ரங்கராட்டினம் என சிறுவர்களை கவர்ந்திழுக்கும் ஒரு தனி உலகத்தில் பெரியவனாகியும் பலமுறை தொலைந்திருக்கிறேன்.
மாமன்,மச்சானெல்லாம் ஒதுக்குப்புற இடத்தில் கள்ளத்தனமாக விற்கப்படும் சோமபானங்களில் மூழ்கி,கிங்,குயின்,ஜாக் என்ற வேத மந்திரங்களை ஓதி மகிழவென்று விழா சார்பாகவே ஒதுக்கப் பட்டிருக்கும் தனியிடத்தில் சமத்தாக அடைந்திருப்பர்.
இத்திருவிழாவின் இன்னொரு அங்கம்தான் ”பன்றி வேட்டை”. பால்குடம், காவடி எடுப்பதாக வேண்டிக்கொள்வதைப்போல பன்றி வேடமிடுவதாக வேண்டிக் கொண்டு அக்கோயிலின் அருகே இருக்கும் சிறு குட்டையின் சேற்றை உடலெங்கும் பூசியபடியே கோயிலின் முன்பு படுத்திருப்பார்கள். இதில் எல்லோரும் கலந்து கொள்வதில்லை இவ்விழா நடக்கும் ஊரைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரில் பதிமூன்று வயதுவரைக்கும் உள்ள சிறுவர்கள் மட்டுமே இப்படி பன்றி வேடமிடுவார்கள்.
உடலெங்கும் சேற்றைப் பூசியபடி இருக்கும் இச்சிறுவர்கள் பாக்குத் திருவிழாவிற்கு வந்திருக்கும் மக்களின் மேல் சேற்றுடம்போடு ஓடிவந்து உரசுவார்கள். இதனால் இந்த பன்றி வேடமிட்ட பசங்களைப் பார்த்ததும் மக்கள் தெரித்து ஓடுவதைப் பார்க்க ரகளையாக இருக்கும். பளிச்சென்று உடை தறித்தவர்களாகப் பார்த்து இந்த பன்றி பசங்க சேற்றை பூசிவிட்டு ஓடிவிடுவார்கள். அழுக்கான சட்டையோடு அசடு வழிந்து நிற்கும் சில மைனர் குஞ்சுகளைப் பார்க்க பரிதாபமாக இருக்கும்.
பல அம்சங்களை உள்ளடக்கிய இத்திருவிழாவின் முக்கிய நோக்கம் உறவை புதுப்பித்தலே. பிரச்சனைகள் நிலவும் உறவினர்களுக்கிடையே பகை மறந்து உறவாட நினைக்கும் நேரத்தில் மூன்றாவது நபர் சமரசம் தேவையிராமல் இயல்பாகவே அவர்கள் கூடிக் குலவவே இத்திருவிழா என்பது என் எண்ணம்.
Tuesday, August 17, 2010
வாழ்க்கைப் பயணத்தில்....
Friday, August 13, 2010
சங்கத்தில் பாடாத கவிதை
ஆண்:என்செய்தாய் ஏதேதோ செய்தாய்
என்னைத்தான் நீ சொல்லடி.
கண்வைத்தேன் கண்ணுக்குள் வைத்தேன்
உன்னெஞ்சில் எனைத் தள்ளடி (எனை என்செய்தாய்)
சரணம் 1
சிறு கோபம் நான் கொண்டு திரும்பினால்
ஒரு தாயாய் எனைக் கொஞ்சி அணைக்கிறாய்
பொன்னந்தி .... நிறம் அள்ளி
நாணத்தால் புதுக் கோலம் பூணுவாய்..
பாவத்தால் எதிர் காலம் காட்டுவாய்..
மௌனம்தான் மொழியானதோ
பூவைதான் பூவைக்கும்போது
பூவாய்த்தான் நான் மாறவோ
Wednesday, August 11, 2010
திரையில் கிராமத்து மெட்டுகள் பாகம் 1
ராஜாவின் இசையில் 90களில் வெளிவந்த மெலடி பாடல்களின் தொகுப்புகளை இரவில் கேட்க இதமான காதல் பாடல்கள் பாகம் 1, பாகம் 2 என கொடுத்ததை அடுத்து இம்முறை சில கிராமத்து மெட்டுகளை தொகுத்திருக்கிறேன். இதுவும் கூட வழக்கம் போல் 90 களின் தொகுப்பே.
தாமர பூவுக்கும் தண்ணிக்கும் - பசும்பொன் - வித்யாசாகர்:
துள்ளலான இசை, குறும்பான வரிகள், நடனம் எல்லாவற்றும் மேலாக யுவராணியின் இளமை என எப்போதும் மயக்கும் பாடலிது. கன்னங்களை வருடும் நாயகனின் கைகள் மெல்ல கழுத்துக்குக் கீழே வரும்போது அவனிடமிருந்து விலகி ஓடும் நாயகியைப் பார்த்து நாயகன் பாடுவதாக வரும் "இந்த நாட்டில் தீண்டாமைதான் இன்னும் உள்ளதா?" என்ற குறும்பு வரிக்காகவே இப்பாடலை பலமுறை பார்த்தும் கேட்டும் ரசித்திருக்கிறேன்.
ஆத்தங்கர மரமே - கிழக்குச் சீமையிலே - ஏ.ஆர்.ரஹ்மான்:
ரஹ்மான் இன்னும் கூட நிறைய கிராமத்து மெட்டுகளை தந்திருக்கலாமென கேட்கும் போதெல்லாம் ஏங்க வைக்கும் பாடல். "அத்தைக்குப் பிறந்தவளே" என ரகசியமாய் ஆரம்பித்து தடதடத்து ஓடும் ரயிலின் வேகமாய் பயணித்து ஹைபிட்சில் முடியும் மனோவின் குரலை ரொம்ப நாட்களாய் எஸ்.பி.பி.யின் குரலென நினைத்துக் கொண்டிருந்தேன்.
நான் ஏரிக்கரை மேலிருந்து - சின்னத்தாயி - இசைஞானி:
பள்ளிநாட்களில் பலமுறை கேட்டு ரசித்த பாடலிது. இப்பாடலில் வரும் ’கையேந்தும் ஆட்டுக்குட்டி கன்னிப் பெண்ணா மாறாதோ’என்ற வரியை இப்போதும் கூட அடிக்கடி முணுமுணுத்துக் கொண்டே இருப்பேன்.
என்னைத்தொட்டு அள்ளிக்கோண்ட - உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன் - இசைஞானி:
பள்ளிநாட்களில் நான் கார்த்திக் ரசிகன் அந்த வகையில் இப்பாடலை அடிக்கடி கேட்டுக்கொண்டே இருப்பேன். ராஜாவின் இசை, எஸ்.பி.பி., சுவர்ணலதாவின் குரல்கள் , மோனிஷாவின் அழகு என எல்லாமே இந்த பாடலில் அசத்தலாய் இருக்கும். பாடலின் ஆரம்பத்தில் சொர்ணலாதாவும் இடையில் எஸ்.பி.பியும் பாடும் ஆலாபனை இப்பாடலுக்கு கூடுதல் வசீகரம்.
மல்லிக மொட்டு - சக்திவேல்- இசைஞானி:
அருண்மொழி மற்றும் சொர்ணலதா பாடிய இப்பாடலின் ஆரம்பத்தில் வரும் இசை அருமையாக இருக்கும். எப்போது ஊருக்கு போனாலும் மினிபஸ்ஸில் கேட்க கிடைக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.
சிவகாமி நெனப்பினிலே - கிளிப்பேச்சு கேட்க வா- இசைஞானி:
வார்த்தைக்குகொரு மாடுலேஷனோடு கலக்கியிருப்பார் எஸ்.பி.பி . டான்ஸில் மம்முட்டி பாக்யராஜை ஓவர்டேக் செய்த பாடலிது.
மத்தாளம் கொட்டுதடி மனசு - சிந்துநதி பூ - சௌந்தர்யன்:
பூவரச இலை பீபீ, எறுமை படகு, புளியங்கா அடித்தல், அய்யனாரு வெள்ளைக் குதிரை என இப்பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் கிராமத்தில் பால்யம் அமைய பெற்றவர்களின் மலரும் நினைவுகளை கிளரிவிடக் கூடியவை. பாடலின் தொடக்கத்தில் வரும் இசை ஆடாதவனையும் ஆடவைக்கும் என்பது போல் இருக்கும்.
சின்னப்பொண்ணுதான் வெட்கப்படுது - வைகாசி பொறந்தாச்சு- தேவா:
வெளிவந்த காலத்தில் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பிய இப்பாடலின் மூலம்தான் தேனிசை தென்றலுக்கு முதன் முதலாய் தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருது கிடைத்தது.
கொசுறு:தங்கமனசுக்காரன் பட பாடலான ’பூத்தது பூந்தோப்பு ’ பாடலின் சுட்டி கிடைத்தால் நட்புகள் பகிரவும்.
Friday, July 30, 2010
புரியாத புதிர்...
Tuesday, July 27, 2010
மம்முட்டியின் படங்களும் இயக்குனர் பாலாவும் ..
Thursday, July 15, 2010
நான் ரசித்த களவாணி...
* இப்படத்தின் வட்டாரப் பேச்சு வழக்கு அவ்வளவு இயல்பாக வந்திருக்கிறது. "போகனும்ல", "சொல்றோம்ல" என்ற மதுரையின் ஸ்லாங்கும் "ஏனுங்", "சொல்றேனுங்" என்ற கொங்கு தமிழையும் வட்டார வழக்காக்கியே கிராமத்தை கதைக்களமாகக் கொண்டிருக்கும் திரைப்படங்கள் அதிக அளவில் வெளிவந்திருக்கின்றன. ஆனால் முதன் முதலாக தஞ்சை மாவட்டத்தின் ஒரத்தநாட்டைச் சுற்றியுள்ள கிராமங்களில் பேசப்படும் "இங்கர்ள கேக்குறன்ன"("இங்கே பாரு புள்ள கேட்கிறேன்ல"), "அவனும் போட்டா எடுக்கனும்ன", "அண்ணாந்து பார", "அய்யனார் கோயிலுக்கெல்லாமா மால போடுவோ", "அவ்வோ ரெண்டு பேரும் சேர்ந்து ஏதோ களவாணித்தனம் பண்றவோ" மேலும் கணவன்மார்கள் மனைவிகளை "ஏட்டி"(ஏன்டி)என அழைப்பது என இப்படியான வட்டார வழக்கை அப்படியே கொண்டுவந்திருப்பதை பார்த்து ஆச்சர்யப்பட்டேன். காரணம் நானும் இதே ஸ்லாங்கை பேசும் ஒரத்தநாட்டுக்காரன்.
"அவய்ங்க","வராய்ங்க","போறாய்ங்க" என்பது மதுரையின் வட்டார வழக்கு அதை இந்தப் படத்திலும் பேசுகிறார்கள் என்று சில விமர்சனங்களில் படித்தேன். இந்த "வந்துட்டாய்ங்க", "போயிட்டாய்ங்க" என்பது ஒரத்தநாட்டு வட்டார வழக்கிலும் உண்டு. எங்கள் பகுதியில் பெண்பிள்ளைகளை "ஆயி", "ஆத்தா", "புள்ள" என்று அழைப்பது வழக்கம். அதையும் இப்படத்தில் அழகாய் பயன்படுத்தியிடுக்கிறார் இயக்குனர்.
* "கட்டிக்கிறேன்னு சொல்லு" என பார்க்கும் பொண்ணுங்களிடமெல்லாம் லந்தடிக்கும் ஹீரோ விமல், பஸ்ஸில் அமர்ந்திருக்கும் இரண்டு பெண்களுக்கு ஒரே நேரத்தில் ரூட் விடுமிடத்தில் இளைஞர்களிடம் கிளாப்ஸை அள்ளுகிறார். ஹீரோயின் ஓவியாவிடம் நிறைய ரிப்பீட்டட் எக்ஸ்பிரஷன்களாகவே இருந்தாலும் பரவாயில்லாமல் நடித்திருக்கிறார். குறிப்பாய் விமலிடம் "அறிவழகன்" என சொல்லுமிடத்தில் நன்றாகவே செய்திருக்கிறார்.
* கதாபாத்திரங்களின் படைப்பும் தேர்வும் மிகவும் ரசிக்கும்படி இருந்தது. "இந்தா வந்திட்டாரு அறிக்கி" என பொருப்பில்லா மகனை கடிந்துகொள்ளும் அப்பாவாக இளவரசன், ஹிரோ என்ன களவாணித்தனம் பண்ணாலும் "அவனா பண்றான் அவன் கெரகம் அப்படியிருக்கு"என மகனை விட்டுக்கொடுக்காத அம்மாவாக வரும் சரண்யா,நெல்வியாபாரியாக வரும் கதாநாயகியின் அப்பா,சில காட்சிகளிலேயே வந்தாலும் இயல்பாய் நடித்திருக்கும் கதாநாயகியின் அம்மா,வண்டல் மண்ணின் மைந்தனாகவே முறுக்கித் திரியும் கதாநாயகியின் கோபக்கார அண்ணன்,பஞ்சாயத்தாக வரும் கஞ்சா கருப்பு என இன்னும் நிறைய சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள் அழகாய் உலாவருகிறார்கள்.மகன் திடீர் கல்யாணம் செய்து கொள்ளும்போதும் கூட அசால்ட்டாய் மகனுக்கு சப்போர்ட் பண்ணும் சரண்யா கேரக்டர் மற்ற எல்லா துணைக் கதாபாத்திரங்களை விடவும் முந்தி நிற்கிறது. ராம்,தவமாய் தவமிருந்து,எம்டன் மகன் என விதவிதமான கேரக்டர்களில் அசத்திய சரண்யா இந்தப் படத்தில் அசால்ட்டான நடிப்பில் பின்னியிருக்கிறார்.
*ஹிரோ விமல் ஹீரோயினை காதலிக்கச் சொல்லி கலாட்டா செய்யும் "அறிக்கி LCII2 கூட்டு "காட்சிகள் கவிதையென்றால் ஹீரோயின் நட்டு வைக்கும் நாற்றுகள் செழித்து வளரும் காட்சிகள் வண்டல் மண் ஹைக்கூ. அறிவழகன் என்னும் பேரை "அறிக்கி" என நண்பர்கள் அழைப்பதைப் பிடிக்காத ஹீரோயின்,"அறிவழகன் என்றுதான் கூப்பிடணும்" என்பதைத் தொடர்ந்து நண்பர்கள் ஹீரோவை கலாய்க்கும் காட்சி கிச்சு கிச்சு.
* ஃபிளக்ஸ் பேனரில் வித்தியாசமான கோணங்களில் போஸ் கொடுப்பதுத் தொடங்கி கஞ்சா கருப்பை காணுமிடத்திலெல்லாம் கலாட்டா செய்து காலியாக்குவது என ஹீரோவின் நண்டபர்களாக வருபவர்கள் ரசிக்க வைத்திருக்கிறார்கள் சில காட்சிகளில் சொதப்பினாலும் .
* "மல்லியே மெல்ல வந்து கிள்ளி போ","மாடி மாடி ஒன்னு" போன்ற மெல்ல மெல்ல தொலைந்து கொண்டிருக்கும் வண்டல் மண் விளையாட்டுகளை திரைக்கதையின் ஓட்டத்தில் இயல்பாய் தொட்டுச் சென்றது ரசனை.
* மினிபஸ்ஸில் ஹீரோயினின் சைக்கிளை ரன்னிங்கிலேயே ஹீரோ தூக்கும் காட்சி,கஞ்சா கருப்பு இறந்துவிட்டதாக அனொன்ஸ் பண்ணுமிடம், ஹீரோயினிடமிருந்து ஹீரோவிற்கு போன் கால் வரும்போது சிக்னல் கிடைக்காமல் ஹீரோ மாட்டு வண்டியை அப்படியே ரோட்டிலேயே விட்டு விட்டு சிக்னல் தேடுமிடம் என படம் நெடுக படு சுவாரஸ்யமான காட்சிகள் ரசிக்கும்படி கையாளப்பட்டிருக்கிறது.
* ஒரத்தநாட்டின் பசுமைக் காட்சிகளை களவாடி வந்திருக்கும் ஓம்பிரகாஷின் கேமராவிற்கு ஒரு பெரிய சபாஷ். மிக அழகாய் ஒவ்வொரு காட்சியையும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தின் இன்னொரு பெரிய பிளஸ் மண்வாசம் வீசும் யதார்த்தமான வசனங்கள் .
* குறையென்று பார்த்தால் பள்ளிக்கூட மாணவியை காதல் செய்வது போன்ற காட்சிகள். மேலும் ஹீரோ விமல் தனது கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக உள்வாங்கி நடித்திருந்த போதும் என்னதான் ஒரத்தநாட்டின் வட்டார வழக்கை உச்சரித்தாலும் அவரின் வாய்ஸ் மாடுலேஷன் மதுரைக்கே இழுத்துச் செல்கிறது. அதே போன்று மற்றவர்களின் ஸ்லாங்கிலிருந்து மாறுபட்டு "பருத்தி வீரன்" சுஜாதாவின் வாய்ஸும் ஒட்டவில்லை. ரீட்டா டான்ஸ் இடம்பெறும் திருவிழாக் காட்சிகளை கொஞ்சம் குறைத்திருக்கலாம். எப்படா முடியுமென நினைக்கும்படி வெகு நீளம். நேட்டிவிட்டிக்காக பயன்படுத்தப்பட்டிருக்கும் சில கதாபாத்திரங்களின் முகத்தில் கேமரா பயத்தினால் செயற்கைத் தனம் தெரிவதையும் கொஞ்சம் கவனித்திருக்கலாம். இம்மாதிரியான சின்னச் சின்ன குறைகளைத் தாண்டி ரகளையாய் மனதை களவாடுகிறான் இந்தக் களவாணி.
* பஞ்ச் டயலாக்,குத்துப்பாட்டு இவற்றையெல்லாம் நம்பாமல் அழகான திரைப்படத்தைத் தந்த இயக்குனர் சற்குணத்திற்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
டிஸ்கி:இப்படத்தில் ஓரிரு காட்களில் நடித்திருக்கும் சிலரை படம் பார்த்த அன்றே ஒரத்தநாட்டில் பார்க்க நேர்ந்தது."நீங்கதானே களவாணியில..." என்று கேட்கும்போது அவர்களின் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தைப் பார்த்திருக்கணும் ....
Wednesday, June 16, 2010
சின்னு .
"நிறுத்துடி,காலையிலேயே ஒ ராமாயணத்தை ஆரம்பிக்காத நா என்ன சும்மாவா இருக்கே நாலு இடத்திலே சொல்லிவச்சிருக்கேன் பாப்போம்"
"ஆமா கிழிச்ச இன்னேரம் ஒ அக்கா தங்கச்சி வூட்டு தேவைன்னா என்னா பரபரப்ப, இன்னும் நாலு நாளுதா கெடக்கு ஏ அண்ண புள்ளயக் காதுகுத்து அதுக்குள்ள எதுனா தோது பண்ணல அப்பற நா மனுஷியாவே இருக்க மாட்டே"
ஒரு வாரமா இந்த பஞ்சாயத்துதான் ஓடிக்கிட்டு இருக்கு, சங்கரனும் பட்டாளத்தார் வீடு, கிட்டங்கிக்கார வீடு, காரவீட்டு அய்யாத்தொரன்னு பலபேருகிட்டக் கேட்டுப் பாத்துட்டான் ஒன்னும் வேலைக்காகல.
விஜயா இன்னும் ஏதோத் திட்டிக்கிட்டே இருக்குறாங்றது வீட்டுக்குள்ள பாத்திரங்கள் உருளும் சத்தத்திலேயேத் தெரிந்தது, இனியும் இங்கே உட்கார்ந்திருந்தா இருக்கிற மானத்தையும் ஏலம் போடுவான்னு நினைத்து கொடியில் கிடந்தக் காசித்துண்டைத் தோளில் போட்டுக்கொண்டு கூரையில் சொருகி வைத்த கணேஷ் பீடி கட்டில் பீடி ஒன்றையெடுத்துப் பத்த வைத்தபடியேக் கட்டிய லுங்கியோடு வெளியேக் கிளம்பினான் சங்கரன்.
சங்கரன் நல்ல பாட்டாளி,விவசாய சம்பந்தமான அத்தனை வேலைகளையும் செய்வான். வேலையில் படுசுத்தம், வாங்குற காசுக்கு வஞ்சகமில்லாம உழைப்பான்.ஆனா சம்பாதிக்கிற காசுல சாராயத்துக்கும், பீடிக்குமே பாதியைச் செலவழிச்சிடுவான்.
சங்கரனுக்கு சொத்துன்னு பார்த்தா நாலு செண்ட் இடமும், ஒரு சின்னக் குடிசையும், நாலு பசுமாடுகளும்தான்.மாடுகளை கவனித்துக் கொள்வது சங்கரனின் அம்மா சொர்ணம். சொர்ணத்திற்கு அந்த மாடுகள்தான் உசுரு.
வீட்டிலிருந்துக் கிளம்பிய சங்கரன் கறம்பக்குடியான் டீக்கடையில் நுழைந்தான். எட்டுக்கு ஆறு அளவில் மூனுபக்கம் களிமண்ணால் எழுப்பப்பட்டக் கட்டைச் சுவரும், சிமெண்ட்டால் பூசப்பட்ட ஒரு அடுப்பு மேடையும், கறம்பக்குடியான் எந்த காலத்து இளைஞன்றத காட்டிக் கொடுக்கும் "காதல் பரிசு" ராதாவின் புகைப்படம் ஒட்டிய கல்லாப் பெட்டியுமாக இருப்பதுதான் கறம்பக்குடியான் டீக்கடை.
உள்ளூர் பெரியசாமி மக ஓடிப் போனதிலிருந்து உலக அரசியல் வரை கறம்பக்குடியானுக்கு அத்துப்படி. டீ குடிக்க வர்ற பெருசுங்க கறம்பக்குடியான் பேசுறத, கறம்பக்குடியான் பொண்டாட்டி,சானம் தெளிச்சு மெழுகி பச்சையா வச்சிருகிற வாசலை "பொளிச் பொளிச்"சுன்னு வெத்லாக்கு எச்சியைத் துப்பி சிவப்பாக்கிக்கொண்டேக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.
"அண்ணே ஒரு டீ" என்ற சங்கரனிடம் டீயை நீட்டியக் கறம்பக்குடியான், "சங்கரா, ஒன்னயப் பாத்தா வீட்டுக்கு வரச் சொல்லுன்னு பச்சத்துண்டுக்காரு சொன்னாரப்பா" என்றார்.
ரெண்டு நாளைக்கு முன்னாடி பச்சத்துண்டுக்காரிடம் பணம் கேட்டிருந்தது ஞாபகம்வர அவசர அவசரமாகக் கறம்பக்குடியானின் சக்கரத் தண்ணிய வாயில ஊத்திக்கிட்டு "கணக்குல வச்சுக்கண்ணே" என்று சொல்லியபடியே பச்சத்துண்டுக்காரர் வீட்டிற்குச் சென்றான்.
பச்சத்துண்டுக்காரர் எப்போதுமேத் தோளில் பச்சைக் கலர் சால்வையை அணிந்தபடியேதான் இருப்பார். ஊரில் எல்லோரும் காசித்துண்டோடு இருக்கையில் குஞ்சமெல்லாம் வச்ச சால்வையை அணிந்து செல்வதைப் பெரிய கௌரவமாக நினைப்பார். மெட்ராஸ்ல வேல பாக்குற அவரு மகன் சுரேசு வந்தா அந்தத் துண்டை போட்டுக்க மாட்டாரு. அவனுக்கு அது புடிக்காது. "யேம்ப்பா இத போட்டுக்கிட்டு எம் மானத்த வாங்குற ஃபிரண்ஸ்ஸெல்லாம் கிண்டல் பண்றாங்க" என்பான். சுரேசுக்குத் தெரியாது ஊருக்குள்ள நிறைய பேர் பச்சத்துண்டுக்காரு மாதிரி ஒரு சால்வ வாங்கணும்னு பெரிய லட்சியத்தோட இருக்கிறது.
"வாய்யா சங்கரா,காசு கேட்டிருந்தில்ல,ஒரு ஆயிர்ரூவா சாயங்காலமா வாங்கிக்க" என்றவர் கூடவே " கொஞ்சம் நெல்லு இருக்குது டி.என்.சியில போட்டுட்டு வந்திடு" என்றார். ஆத்திர அவசரத்திற்கு ஆயிரமோ ஐநூறோ பச்சத்துண்டுகாரருதான் கொடுத்து உதவுவாரு அதனால இப்படிச் சின்ன சின்ன வேலைகளும் அவருக்கு அப்பப்போ ஓசியாச் செய்ய வேண்டியிருக்கும்.
ஆயிர்ரூவாப் பொறட்டியாச்சு இன்னும் ஆயிரந்தான் எப்படியாவது தேத்திடலாம்னு மனதிலேயெ நினைத்தவன், சொன்ன வேலையை முடித்துவிட்டு வீட்டிற்குச் சென்றான்.
"என்னாச்சு" என்றாள் விஜயா.
"ஆயிர்ருவா சாயங்காலமாப் பச்சத்துண்டுக்காரு கொடுக்குறேன்னிருக்காரு"
"ஆயிரம் ஓவாயா,அத வச்சு என்னாத்தப் பண்றது. ஏற்கனவே ஏ அண்ணிக்காரி சாட பேசுறா, நீ சபையில ஏ மானத்த வாங்காம விடமாட்ட போலிருக்கு" என்று மறுபடியும் ஆரம்பித்தவளிடம்,
"ஏண்டி எழவெடுத்தவளே, எந்தலய அடமானம் வச்சாவது பணத்துக்கு ஏற்பாடு பண்ணிர்றேன்,செத்த நொய் நொய்யிங்காம வவுத்த பசிக்குது சோத்தப் போடுறியா" என்று சங்கரன் கோபமாய் சீறியபோது,
"ம்ம்ம்ம்....மா"அலறியது பசுமாடு.
"யம்மோவ்,சின்னு கத்துது பாரு அதுக்கு ரெண்டு எரயெடுத்துப் போடு"என்று தன் தாய் சொர்ணத்திடம் கூறினான் சங்கரன்.
"ம்ம்ம் சின்ன்ன்னு" என்று அழுத்தி இழுத்த விஜயா,"ஏய்யா இந்தக் கிழட்டு மாட்ட எதுக்கு இன்னமும் வச்சுக்கிட்டு இனிமேல் அது கன்னு ஈனப் போறதில்ல எதுக்கு தீனிக்குத் தெண்டமா கெடக்கு,பேசாம அத வித்துடலாம். நீயும் யார்கிட்டயும் காசுக்காகக் கையகட்டி நிக்கவேண்டாம்"என்றாள். மேலும் "மாட்டுயாவாரி கோயிந்தன வரச்சொல்லி சட்டுப்புட்டுன்னு தள்ளிவுட்ற வழியப் பாரு" என்றாள்.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த சொர்ணத்திற்குத் தூக்கிவாரிப் போட்டது. பெத்தப் புள்ளயாட்டமா வளத்த மாட்ட அடிமாட்டுக்கு விக்கச் சொல்றாளே என எண்ணிக்கொண்டே சங்கரன் என்ன சொல்ல போறானோன்னு ஏற்கனவே தட்டி முடித்த ராட்டிக்கு ஒத்தடம் கொடுப்பதுபோல் மெதுவா தட்டியவாறே காதைத் தீட்டினாள்.
ஒரு வாரமா பணத்துக்காகக் கிடந்து அலைந்ததை நினைத்துப் பார்த்த சங்கரன் விஜயாவின் யோசனைக்கு சரியென்று தலையாட்டினான்.
அன்னிக்கி ராத்திரி முச்சூடும் சொர்ணத்தாலத் தூங்க முடியல, பதினஞ்சு வருசத்துக்கு முந்தி சின்னுவை ஈன்ற மூனாவது நாளே அதன் தாய், பாம்பு கடித்து இறந்து போக, சொர்ணந்தான் புட்டி பால் கொடுத்து சின்னு என்று பேர் வைத்து புள்ள மாதிரி வளர்த்து வந்தாள். சொர்ணம் கிணத்துக்குத் தண்ணி எடுக்கப் போறப்பவெல்லாம் கூடவே சின்னுவும் ஒவ்வொரு நடைக்கும் சொர்ணத்தோடவே போய் வந்துக் கொண்டிருக்கும். தண்ணியெடுக்க வரும் மற்ற பொம்பளைங்க "என்ன சொர்ணத்தக்கா ஒம்மவ ஒன்னிய விட்டு பிரியமாட்டாளா" என்று கிண்டலடிப்பார்கள். அப்போவெல்லாம் "ஆமாண்டி சொன்னாலுஞ் சொல்லாட்டியும் எம்மவதான்" என்று கூறியபடியே சின்னுவின் முகத்தை வருடி திருஷ்டி முறிப்பாள்.
சின்னு முதல் கன்றை ஈன்ற போது நல்லபடியாகக் கன்றை ஈன்றுவிட்டால் பாலத்தளி செல்லியம்மனுக்கு மொட்டை போடுறதா வேண்டிக்கிட்டு மொட்டை போட்டுக் கொண்டது, சின்னுவின் பால் காசில் தன் மகள் செல்வியை கட்டிக் கொடுத்தது, ஒரு முறை சங்கரன் குடித்துவிட்டு வந்தபோது சொர்ணம் அவனை ஏதோத் திட்டிவிட,சங்கரன் கோபத்தில் சொர்ணத்தைக் கீழேத் தள்ளிவிட்டபோது பக்கத்தில் நின்ற சின்னு சங்கரனை ஆக்ரோஷமாக முட்டியது என ஒன்னு ஒன்னா நினைவுக்கு வந்து அவளைத் தூங்கவிடாமல் செய்தது. பாதி ராத்திரியில் எழுந்துக் கொட்டடியில் கட்டிக்கிடந்த சின்னுவின் அருகில் போய் சின்னுவின் தாடையை மெதுவாகத் தடவிக் கொண்டிருந்தாள்,அவளின் இடுக்கியக் கண்ணில் கண்ணீர் வழிந்துக்கொண்டேயிருந்தது.
காலையிலேயே மாட்டுயாவாரி கோயிந்தன் வந்து நின்னதை எதிர்பார்க்காத சங்கரன், "என்னய்யா கோயிந்தா, நானே ஒன்னய பாக்கனும்னுட்டு இருந்தேன்,நீயே வந்து நிக்குற" என்றான்.
"மாடு நிக்குதாம்ல,அதா பாத்துட்டு போலாம்னு வந்தேன்" என்ற கோவிந்தன் அதே ஊரைச் சேர்ந்த மாட்டு வியாபாரி, கேரளாவிற்கு மாடுகளை வாங்கி அனுப்புவதுதான் அவனுக்குத் தொழில்.
"கொப்ப மவளே என்னா வேகமா வேலப் பாத்திருக்கா" என்று விஜயாவை மனசுக்குள்ளேயேத் திட்டிக்கொண்டு, சின்னு கட்டிக் கிடக்கும் கொட்டடிக்கு கோவிந்தனை அழைத்துச் சென்றான் சங்கரன்.
படுத்துக்கிடந்த சின்னுவின் முதுகில் கோவிந்தன் தட்டியதும்,சோம்பல் முறித்தபடி எழுந்து நின்ற சின்னுவைச் சுற்றி வந்துப் பார்த்த கோவிந்தன், "டங்கரா இத ரெண்டு வருடத்துக்கு முன்னாடியே வித்துருக்கணுமப்பா" என்றான். கோவிந்தனுக்கு ’ச’ வரிசை உச்சரிக்க வராது, 'ச'வுக்கு பதில 'ட' சவுண்ட்தான் வரும். இதில என்ன கொடுமைன்னா அவன் பொண்டாட்டி பேரு சரசு. கல்யாணமான புதுசுல இவன் "டரடு டரடு" சொன்னதக் கேட்டு மெரண்டுபோன சரசு தன் பேரையே இவனுக்காக ராணின்னு மாத்திக்கிட்டா.
"டங்கரா மாட்டுல வெறுந்தோலுதான் இருக்கு" என்று தன் யாவார புத்தியோடப் பேசிக்கிட்டே"என்ன வெல சொல்ற?" என்றான்.
"நீயே சொல்லுய்யா,என்ன கொடுக்கலாம்"
"இல்லப்பா ஒனக்கு ஒரு கணக்கு இருக்குமுல்ல"
"சரி ரெண்டாயிரத்தைனூறு கொடுத்துட்டு ஓட்டிக்க"
"என்ன நக்கலா பண்ற, ஆயிரத்தைனூறுதான் எங்கணிப்பு. அதுக்கு மேல இதில ஒன்னுமில்ல"
"யோவ் ஒ மாட்டுயாவாரி புத்தியக் காட்டாம உள்ளூருகார மாதிரி பேசு, கொஞ்சம் பாத்து சொல்லுய்யா"
"டரி உனக்கு வேண்டா எனக்கு வேண்டா, ஆயிரத்தி எண்ணூறு இதுக்குமேல பிடிறாதே" என்று கூறிக்கொண்டே சங்கரன் கையில் நூறு ரூபாய் அட்வான்ஸையும் திணித்துவிட்டு இரண்டு நாள் கழித்து மாட்டை ஓட்டிக் கொள்வதாகச் சொல்லிவிட்டுச் சென்றான்.
சங்கரன் வாங்கிய அட்வான்ஸைப் பார்த்தும் விஜயாவும்,சொர்ணமும் எதிரெதிர் உணர்ச்சிகளின் விளிம்பில் இருந்தார்கள்.
அடுத்த ரெண்டு நாளும் சொர்ணத்தால் இயல்பாய் இருக்க முடியவில்லை. இதற்கு முன் எத்தனையோ மாடுகளை விற்றிருக்கிறாள்,ஆனால் சின்னு விஷயத்தில் மட்டும் அவளால் ஏதோ மாடுதானேன்னு இருக்க முடியவில்லை. வழக்கம் போல் மாடு மேய்க்கப் போனவளின் அருகிலேயே நின்று மேய்ந்து கொண்டிருந்த சின்னு, சொர்ணத்தின் கையை முகர்ந்துப் பார்த்தது, எப்போதும் எதாவது தீனி கொறித்துக்கொண்டே இருக்கும் சொர்ணம் சின்னுவுக்கும் ஊட்டிவிடுவது வழக்கம். இன்றைக்கும் அந்த நினைப்பில் கையை முகர்ந்துப் பார்த்த சின்னுவை,"சனியன போ அங்கிட்டு " என்று கையில் வைத்திருந்தக் குச்சியால் அடித்து விரட்டி தன் ஆற்றாமையை சின்னுவிடம் காட்டினாள்.இதை எதிர்பாராத சின்னு சற்று மிரண்டு சிறிது ஓடித் திரும்பி சொர்ணத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தது.
இரண்டு நாள் கழித்து அந்தப் பகுதியில் வாங்கிய நிறைய மாடுகளை லாரியில் ஏற்றியபடியே வந்து இறங்கிய கோவிந்தனையும், லாரியில் விழிபிதுங்கி நிற்கும் மாடுகளையும் பார்த்த சொர்ணத்திற்கு சின்னுவை நினைத்துத் துக்கம் தொண்டையை அடைத்தது.
லாரியைவிட்டு இறங்கி வந்த கோவிந்தன் சங்கரனிடம்,"இந்தாப்பா மீதி பணம் டரியா இருக்கான்னு பாத்துக்க, அப்படியே மாட்டையும் கயிறு மாத்தி புடிட்டுக் கொடு" என்றான்.
"கோயிந்தா, ரெண்டு நாளா மனசேச் சரியில்லப்பா, இந்த மாட்ட பெத்தப் புள்ளயாட்டமா வளத்துட்டோம், அதப் போயி அறுப்புக்குக் கொடுக்க மனசு ஒப்பல, சாவுற வரைக்கும் அது இங்கனயே கெடந்துட்டு போகட்டும், எம் பொண்டாட்டிதான் ஏதுனா திட்டுவா அவ என்ன புதுசாவா திட்டப்போறா. இந்தா நீ கொடுத்த அட்வான்ஸ், கோச்சுக்காதப்பா" என்றபடியே சங்கரன் அட்வான்ஸைத் திருப்பிக் கொடுத்ததைப் பார்த்தச் சொர்ணம் சின்னுவின் கழுத்தை இறுகக் கட்டிக்கொண்டு " எம் மக்க்க்...கா" என்று விம்மி வெடித்து அழத் தொடங்கினாள்.
Tuesday, June 1, 2010
நொறுக்குத் தீனி
Monday, May 31, 2010
டூரிங் டாக்கீஸ் நினைவுகள்
எண்பதுகளின் மையத்தில் தமிழக அரசின் குடும்பக் கட்டுப்பாட்டு பிரச்சாரங்களைத் தாங்கிய கார்டூன் படங்களை அப்போதெல்லாம் கிராமங்கள் தோறும் 35 mm திரையில் ஓட்டுவார்கள், அதையே ஒன்ஸ்மோர் கேட்டுப் பார்த்த பயமக்கள் நாங்களெல்லாம். பஞ்சாயத்துத் தொலைக்காட்சிக்கூட எங்கள் ஊருக்கு எட்டிப் பார்த்திராத நேரத்தில்தான் பக்கத்து ஊர்களான இன்னான்விடுதியிலும், செல்லம்பட்டியிலும் அதிரடியாக இந்த டூரிங் டாக்கீஸ்கள் அவதரித்தன.
வருஷத்துக்கு ஒரு தரம் பொங்கல்,தீபாவளிக்கு தஞ்சாவூருக்குப் போறப்போ பெரிய பெரிய சினிமா போஸ்டர்களையெல்லாம் பார்த்ததையே ஒரு வாரத்துக்குக் கதைக் கதையா பேசித் திரிவோம். அப்படி வாய்பிளந்துப் பார்த்த போஸ்டர்களை எங்க ஊரிலேயே பார்க்கும் பாக்கியம் இந்த டூரிங் டாக்கீஸ்களால் கிடைத்தது யாம் பெற்ற பேறு.
ஒரு ஊருக்கு இரண்டு போஸ்டர்கள் என்று கணக்கிட்டு ஒவ்வொரு ஊரிலும் ஆட்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் போஸ்டர்களை ஒட்டுவார்கள். போஸ்டர் ஒட்ட வருபவர் மைதா மாவை சுவரில் பூசி பிறகு கொண்டு வந்திருக்கும் போஸ்டரின் பின்பக்கமும் பூசி (அவ்வளவு சஸ்பென்ஸாக பூசுவார்) திருப்பி ஒட்டுவதற்குள் "ரஜினி படம்டா", "இல்ல விசியாந்து படம்தான் எவ்வளவு பந்தயம்" என்று அங்கே கூடியிருக்கும் விஸ்கான்களிடையே பெரிய பட்டிமன்றமே நடக்கும்.
ஒரு படம் அதிகபட்சமாக ஒரு வாரம் ஓடும். ஒரு வாரத்திற்கு மேல் ஓடினால் ஆட்டோவில் விளம்பரமெல்லாம் செய்து கொண்டு வருவார்கள். எனக்குத் தெரிந்து பத்து நாட்களைக் கடந்து இரண்டு படங்கள் ரெங்கம்மாவில் ஓடியிருக்கிறது ஒன்று "கரகாட்டக்காரன்" மற்றொன்று "மைதிலி என்னைக் காதலி" (இந்தப் படத்தை சமீபத்தில்தான் பார்த்தேன் உஸ்ஸ் முடியல, சரி வேண்டாம் ஆட்டய கவனிங்க) .
ஒவ்வொரு வாரமும் என்ன படம்னு தெரிஞ்சிக்க போஸ்டர் ஒட்டியிருக்கும் இடத்திற்கு அவனவன் கார், பைக் எல்லாம் எடுத்துகிட்டு(பசங்க படத்தில பார்திருப்பீங்கல்ல அந்த மாதிரியான கார்களும்,பைக்கும்தான்) ஓ(ட்)டிவந்து பார்த்ததையெல்லாம் இப்போது நினைத்தாலும் கண்முன்னே காட்சியாகிறது.
போஸ்டர்கள் ஒட்டியிருக்கும் சுவற்றின் சொந்தக்காரர்கள் அந்த போஸ்டரை வேறு யாரும் கிழித்து விடாமல் பார்துக் கொண்டால் அடுத்தப் படத்திற்கு அவர்களுக்கு இலவச அனுமதி கிடைக்கும்.அதனால் எப்போதும் யாராவது ஒருத்தர் அங்கே காவல் இருப்பர் . அவர்கள் அசரும் நேரம் பார்த்து போஸ்டரைக் கிழித்துக் கொண்டு ஓடிவிடுவோம்.அப்படி கிழிக்கப்பட்ட போஸ்டர்களில் இருக்கும் தலைவர்கள் அடுத்தநாள் எங்கள் புத்தகத்தின் அட்டைகளாகிச் சிரிப்பார்கள்.
ரெங்கம்மாவில் பெரும்பாலும் பழைய படங்களாகவே ஓடும், மாறாக துரையில் புதுப்புது படங்களாக ரிலீஸ் செய்வார்கள்.(இங்கே பழைய படங்கள் என்று சொல்வது "லவகுசா" காலத்துப் படங்கள்,புதுப் படங்கள் என்று சொல்வது முரட்டுக் காளை ரேஞ்ச் படங்கள். துரையில் முரட்டுக்காளை ரிலீஸ் ஆகியிருந்த சமயத்தில் தஞ்சையில் "அண்ணாமலை" ஓடிக்கொண்டிருந்தது).
பொங்கல்,தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் "மாப்பிள்ளை","கேப்டன் பிரபாகரன்" போன்ற ரிலீஸ் ஆகி இரண்டு மூன்று வருடங்களேயான ரொம்பப் புதுப்படங்களையெல்லாம் போட்டு அசத்துவார்கள். இதிலும் துரையில் ரஜினி படம் ஓடினால், ரெங்கம்மாவில் விஜயகாந்த் படம்தான் ஓடும் என்று கண்மூடிக்கொண்டுச் சொல்லிவிடலாம். அந்த அளவிற்கு எங்க ஏரியாவில் இந்த இருவருக்கும் ரசிகர்கள் உண்டு. இதில் இன்னொரு விஷயம் என்னவெனில் ரஜினிக்கோ, விஜயகாந்துக்கோ கிடைக்காத வரவேற்பு அப்போதைய ராமராஜன் படங்களுக்கு இந்த டூரிங் டாக்கீஸ்களில்(குறிப்பாக ரெங்கம்மா) கிடைத்தது. மேளதாளம்,தோரணம் என முழக்கி எடுத்து விடுவார்கள். வருடத்திற்கு இருமுறை "கரகாட்டக்காரனும்", "நம்ம ஊரு நாயகனும்" ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஓட்டுவார்கள். அதே மாதிரி டி.ராஜேந்தர் படங்களுக்கும் பெரிய வரவேற்பு இருந்தது.
டீ.ஆரின் "எங்க வீட்டு வேலன்" ஓடியபோது சினிமா கொட்டாயின்(அப்படித்தான் சொல்வோம்) முன்புறம் பெரிய வேப்பங்கிளையை வெட்டி வைத்து அதன்கீழ் ஒரு அம்மன் படமும், ஒரு குடத்தில் மஞ்சள் துணியைக் கட்டி உண்டியலாகவும் வைத்திருந்தார்கள். படத்தில் வரும் சாமி சிலைகளை இரண்டு முறை கேமராவில் முன்னும் பின்னும் ஜூம் செய்து காட்டிவிட்டால் போதும் நிறைய அம்மணிகளுக்கு சாமி வந்து ஆட ஆரம்பித்துவிடுவார்கள். பிறகு அங்கே இந்த மாதிரி படங்களுக்கென்றே ஸ்பெஷல் அப்பாயின்ட்மென்ட் பூசாரி ஒருத்தர் இருப்பார் அவர் இவர்களையெல்லாம் வெளியேற்றி கொட்டாயின் முன்புறம் இருக்கும் அம்மன் படத்தின் முன்பு ஆடவிடுவார். "டேய் ம்ம்ஹூம்" என வினோத சத்தங்களையெல்லாம் அரங்கெற்றும் இந்த சாமியாடி அம்மணிகள், வாங்கி திங்க என கொண்டு வந்திருக்கும் ஐம்பது காசு, ஒரு ரூபாய்களை புசாரியின் கட்டளைப்படி உண்டியலில் போட்டுவிட்டு பூசாரி கொடுக்கும் உச்சந்தலை அடியையும், திறுநீரையும் வாங்கியபடி மீண்டும் ஆட்டைக்கு வந்துவிடுவார்கள். அதுவரை படம் நிறுத்தப் பட்டிருக்கும். "ஆடி வெள்ளி","வெள்ளிக்கிழமை விரதம்" போன்ற பக்தி படங்களுக்கு இந்த சாமியாட்ட கும்பலின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
இவர்கள் சாமியாடி முடிக்கும்வரை கேண்டீன் வியாபாரம் சூடுபிடிக்கும், கடலை மிட்டாய், முறுக்கு,ஆரஞ்ச் கலர் என ஹைகிளாஸ் ஐட்டங்களயெல்லாம் வாங்கும் அளவிற்கு எங்களிடம் காசு இருக்காது. தரை டிக்கெட்டுக்கு எழுபத்தைந்து பைசா தேற்றுவதே பெரிய காரியமாக இருக்கும். எனவே தியேட்டருக்கு வெளியே விற்கும் நாவப்பழம், கொடுக்காப் புளி, நெல்லிக்காய், வேர்க் கடலை ஆகியவற்றை ஆரம்பத்திலேயே வாங்கிச் சென்றுவிடுவோம். அதிக பட்சமாக எங்களின் ஸ்னாக்ஸ் செலவை ஐம்பது பைசாவில் முடித்துக் கொள்வோம். ஒன்னார்ரூவாய் பெஞ்ச் டிக்கெட்டும், ரெண்டு ரூவா தேங்காய் நார் குஷன் சீட்டிலும் உட்கார்ந்துப் படம் பார்க்க வேண்டுமென்பது அப்போதெல்லாம் பெரிய லட்சியமாக இருந்தது.
பண்டிகை நாட்களில் மட்டும் நான்கு காட்சிகள் ஓட்டுவார்கள். மற்ற நாட்களில் இரண்டு காட்சிகள் மட்டும்தான். பண்டிகை நாட்களில்தான் படம் பார்க்க பர்மிஷன் கிடைக்கும், அதுவும் காலைக் காட்சி அல்லது மேட்னி ஷோவுக்கு. இந்த மாதிரி பகல் நேரக் காட்சிகளைப் பார்க்க நேரிடும்போது புரஜெக்டர் ரூமிலிருந்து வரும் ஒளியைவிட சூரிய ஆப்பரேட்டர் அடிக்கும் ஒளிதான் திரையை அதிகம் ஆக்ரமிக்கும். அத்தனை ஓட்டைகள் இருக்கும் சினிமாக் கொட்டாய்களின் கூரையில். மழைக் காலத்தில் பெரும்பாலும் காட்சிகளை ரத்து செய்துவிடுவார்கள்.
இரவு காட்சிகள் செல்வதுதான் பயங்கரத் திரில் நிறைந்தது. துரையும், ரெங்கம்மாவும் எங்க ஊரிலிருந்து தலா நான்கு கிலோமீட்டர் தூரத்தில் எதிரெதிர்த் திசையில் அமைந்திருக்கும். பெரும்பாலும் இரவுக் காட்சிகளுக்கு செல்லும்போது வீட்டாருக்குத் தெரியாமல் திருட்டுத் தனமாகவே போவோம்.
செல்லம்பட்டித் துரைக்கு செல்லும் வழி ஒன்னும் பிரச்சனை இருக்காது. மெயின் ரோட்டிலேயே சென்றுவிடலாம்.ஆனால் ரெங்கம்மாவிற்கு செல்லும் வழிதான் நிறைய அட்வென்சர்களை செய்ய வேண்டியிருக்கும். முழுவதும் வயல் காடுகளும், சவுக்குத் தோப்புகளும் நிறைந்து இருக்கும். இந்த சவுக்குத் தோப்புகளுக்கிடையில் ஒரு முனியன் கோவில் இருக்கும், அங்கே ஒரு ஹாஃப் சைஸ் 'சரவண பெலகுலா' ரேஞ்சுக்கு பெரிய முனியன் சிலை கையில் பெரிய அரிவாளோடு வீற்றிருக்கும், பக்கத்தில் ஒற்றை பனை மரம் ஒன்று இருக்கும். படம் பார்க்கச் செல்லும்போது ஓரளவிற்கு வெளிச்சத்திலேயே சென்று விடுவோம், ஆனால் திரும்பி வரும்போதுதான் "ஜெகன் மோகினி" எபெஃக்டெல்லாம் கேட்கும், அதுவும் காற்றடிக்குபோது சவுக்குத் தோப்பிலிருந்து ஒரு சத்தம் வரும் பாருங்க டி.டி.எஸ் எபெஃக்டெல்லாம் தோற்றுப் போகும். கரக்டா முனியன் கோவில் நெருங்கும் சமயத்தில் எல்லோரும் எடுப்போம் ஓட்டம், சவுக்குத் தோப்பை கடக்கும் வரை "ஆய் ஊய் குத்தி புடுவேன், வெட்டிப் புடுவேன்" என்று எங்களது பயங்களை வீரமாக மாற்றியபடி கத்திக்கொண்டே தூரமாய் வந்த பிறகே ஓட்டத்தை நிறுத்துவோம். இந்த டூரிங் டாக்கீஸில் நான் கடைசியாகப் பார்த்தப் படம் விஜய் நடித்த "விஷ்ணு". இதுவும் கூட திருட்டுதனமாகப் பார்த்த படம்தான்.
இப்படி எத்தனையோ நினைவுகளை என்னைப் போன்ற பலரிடம் விதைத்து வைத்திருக்கும் இந்த டூரிங் டாக்கீஸ்களில் ஒன்று இன்று டி.என்.சி நெல் அடுக்கும் குடோனாகவும், மற்றொன்று பாழடைந்து புதர்களும்,கரையான் புற்றுகளுமாக காட்சியளிக்கிறது.எத்தனை ஆர்ப்பாட்டம், விசில்கள், கால்தடங்கள் பதிந்த இடம் இன்று பொலிவிழந்து, மனுஷ பயலுக்கு எதையோ உணர்த்தியபடியே அமைதியாக காட்சியளிக்கிறது.
இன்று சத்யம்,ஐனாக்ஸ் தொடங்கி வெளிநாட்டு திரையரங்கில் கூட படம் பார்த்துவிட்ட போதும் மனசு ஏனோ அந்த ஆறு மணி தேய்ந்த ரெக்கார்ட் சவுண்டுக்கு ஏங்குகிறது.
Friday, May 21, 2010
அவனுக்கென்ன குடிகாரன்...
நிறமிழந்த பாத்ரூம் ஸ்டிக்கர் பொட்டு,
ஃபேன் காற்றில் படபடக்கும் ஜக்கிவாசுதேவ்,
பிரிக்கப்படா உணவுப் பொட்டலம்,
டீப்பாயில் முளைத்த நெப்போலியன்,
கையில் புகையும் கிங்ஸ்,
எங்கிருந்தோ கேட்குமொரு சேவலின் கூவல்,
உறக்கம் தொலைத்த விழிகளோடு
மூலையில் சுருண்டுகிடக்கும் அவன்
உங்களின் பார்வைக்கு
வேண்டாமென்பாய்
மாறன் தொடுத்த
மயங்கி முயங்கி
பழகிய பொழுதொன்றில்
எனது வேண்டும்களுக்கும்
உனது வேண்டாம்களுக்கும்
அர்த்தம் ஒன்றேயென
அறிந்து தெளிந்தபின்
நான் கெஞ்சுவதுமில்லை
நீ மிஞ்சுவதுமில்லை
நடந்தேறிக்கொண்டிருக்கின்றன
மதனோற்சவங்கள்...!
வம்பாய் வந்தமர்ந்து
வாட்டி வதைக்கும்
முறுக்கேறிய காலையில்,
ஒழுக்கச் செயற்கைக்கும்
உள் இயற்கைக்குமான
இடையிலா பெருஞ்சமரில்
வெல்வது இயற்கையெனத் தெரிந்தும்,
சிதறிக் கிடக்கும்
வாராந்திரிகளில் கண்ணும்,
ஐபாட்டுக்கு காதும்
கொடுத்து முடியாது,
ஒழுங்கிலா அறையை
சுத்தம் செய்கிறேன்....
ஏதேதோ செய்தும்
எதற்கும் பணியா
காட்டாற்று வெள்ளமென
பொங்கும் பிரவகிப்பை
அடக்குவதென
இயற்கையை ரசிக்க முயல்கிறேன்,
திமில் பெருத்த காளையென
விரட்டுமதற்கு
ஆரம்பத்திலேயே
அடிப்பணிந்திருந்தாலாவது
மற்ற வேலைகளில்
மூழ்கியிருக்கலாம்......!
இப்பாதையின்
இதே இடத்தில்தான்
முன்பொருமுறை
முக்கியப் பொருளொன்றைத்
தொலைத்தேன்,
ராசியில்லா இவ்விடத்தைக்
கடக்கும் போதெல்லாம்
இருக்கும் பொருட்களை
அனிச்சையாய்
சரிபார்த்துக் கொள்கிறேன்,
பொருளைக் கண்டெடுத்தவனும்
இப்பாதையை
வழக்கமாக்கிக் கொண்டவனாயிருப்பின்,
இதே இடத்தை
நன்றியோடு நினைவு கூர்ந்து
நகர்ந்து போகக் கூடும்,
எனக்கான பிரச்சனை என்னவெனில்
தொலைந்தப் பொருள் தொலைந்ததுதான்,
இவ்விடத்தைக் கடக்கயில் வரும்
இப்படியான நினைவுகளை
எப்படித் தொலைப்பது?!
Thursday, May 13, 2010
பாஸான கூட்டமுங்க....
9014,
ஒன்பதாம் வகுப்பு,
அ.உ.பள்ளி,
கே.கே.பட்டி.
பெறுதல்:
திரு.அமேரிக்க சுதந்திரப் போர் அதிகாரி,
ஒரத்தநாடு வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம்,
ஐயா,
எங்கள் ஊரில் கடந்த ஒரு மாத காலமாக அமேரிக்க சுதந்திரப் போர் மிகச் சிறப்பாக நடைபெற்று வருவதால் தாங்கள் அதை முடித்து வைக்குமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஊர் மக்கள் சார்பாக
தங்கள் கீழ்படிந்துள்ள மாணவி,
9014.
ஒன்பதாம் வகுப்பு படித்தபோது அரையாண்டுத் தேர்வில் `அமேரிக்க சுதந்திரப்போர் பற்றி ஒரு கடிதம் வரைக` என்று வினாத்தாளில் கட்டுரை என்பதிற்குப் பதிலாக கடிதமென தவறுதலாய் அச்சாகியிருந்ததால் ஒரு மாணவியால் எழுதப்பட்ட பதில்தான் மேலே நீங்கள் வாசித்தது.
இப்படியான மாணவக் கண்மணிகள் நிறைந்த பள்ளியில் பத்தாம் வகுப்புவரை பயின்றதால் ”ஆலையில்லா ஊருக்கு இலுப்பப்பூ சர்க்கரை” யாக முதலிரண்டு ரேங்குக்குள் வந்துகொண்டிருந்தேன்.எனவே பத்தாம் வகுப்புவரை தேர்வு குறித்து பெரிதாக பயம் இருந்ததில்லை.மற்ற பாடங்களைவிட ஆங்கிலத்திலும் சமூக அறிவியலிலும் முதல் மதிப்பெண்கள் எடுப்பதிலேயே அதிகக் கவனம் இருக்கும்.காரணம் அந்த இரண்டு பாடங்களையும் எடுத்த என்.ஏ ஸார். மனுஷன் சரியான கண்டிப்பு. ஆங்கிலத்தில் பெரிய போட்டியின்றி முதல் மதிப்பெண் எடுத்தபோதும் ஐமுனை போட்டி நிலவிய சமூக அறிவியலில் பெரும்பாலும் முதல் மதிப்பெண்ணை தவறவிட்டு விடுவேன்.ஒவ்வொரு முறை பேப்பர் திருத்திக் கொடுக்கும் போதும் உயிர் போய் உயிர் வரும்.மற்ற பசங்க சின்ன சின்ன தவறுகள் செய்திருந்தால் பெரிதாய் மதிப்பெண் குறைக்க மாட்டார் ஆனால் எனக்கு மட்டும் அப்படியே குறுக்கே ஒரு சிவப்புக் கோடிட்டு மூஞ்சில தூக்கி வீசுவார் பேப்பரை. அதனால் சமூக அறிவியலில் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டுமே என்ற பயம் இருந்துகொண்டே இருக்கும் . என்னை கடுமையாகத் திட்டினாலும் எனது ஒவ்வொரு வளர்சிக்கும் மிகவும் பாடுபட்டவர் என்.ஏ.ஸார். அவரில்லாமல் நானில்லை என்றே சொல்லலாம் ஏனெனில் அவர்தான் என்னுடைய அப்பா. பிதாவே குருவாகும் பாக்கியம் எத்தனை பேருக்கு வாய்க்கும்.(ஆனாலும் கொஞ்சம் கஸ்டம்தான் அவ்வ்வ்வ்வ்வ்வ்).
+1,+2 தஞ்சையின் அரசர்(Rajah's) மேநிலைப் பள்ளியில். கழுதை கட்டெறும்பாகிய இடம். சினிமாத் தியேட்டர்களில் அட்டெண்டென்ஸ் வைத்திருந்தால் அந்த இரு வருடங்களின் வருகைப் பதிவு விருது எனக்குத்தான் கிடைத்திருக்கும். +1 அரையாண்டு பரிட்சையில்தான் பிட் அடிப்பதற்கான முதல் முயற்சி. முன்னாள் குடியரசுத் தலைவர் ஜானி ஜெயில்சிங்கின் மறைவால் கெமிஸ்ட்ரி எக்ஸாம் ஒத்திவைக்கப்பட்டது. ஆனாலும் சில பள்ளிகளில் குறிப்பிட்ட தேதியிலேயே எக்ஸாம் நடத்திவிட்டபடியால் கொஸ்டின் பேப்பர் அவுட்டாகிவிட்டது. அதில் கிட்டத்தட்ட 90 சதவிகித கேள்விகள் படிக்காதவை (மீதியும் கூட கேள்விபட்டதாய் ஞாபகம்தான்). புதிதாய் மடமடன்னு பிரிக்கப் படாமலேயிருந்த புத்தகத்தை ஒரு நாள் இரவுக்குள் படிக்க முடியுமா? இந்தச் சூழலில் ஒரு அப்பாவி என்னதான் செய்வான்.ஆமாம் நானும் அதைத்தான் செய்தேன்.விடிய விடிய பிட் பிரிப்பரேஷன்.
பிட் அடிச்சு மாட்றவனுங்களை அடித்து துவைப்பதற்கென்றே அவதாரம் எடுத்தவர் போல் நடந்து கொள்ளும் ஆசிரியர்தான் ஹாலின் என்ட்ரன்ஸிலேயே வரவேற்றார். அவரைப் பார்ததுமே வியர்க்க ஆரம்பித்துவிட்டது. இருப்பினும் ”அவ்வளோ கஷ்டப்பட்டு எழுதிட்டு வந்தத தூக்கியா வீச முடியும், பிட் அடிச்சே ஆகணும்” என்கிற வைராக்கியத்தோட ஹாலுக்குள் நுழைந்து டெஸ்கில் அமர்ந்தால் வயிற்றை கலக்குவது போல் அவஸ்தை. வினாத்தாள் கொடுக்கும் முன்பாக “எவனாவது பிட் வச்சிருந்தா மரியாதையா கொடுத்திடுங்க, நீங்களா கொடுத்திட்டா ..” என்று அவர் சொல்லிமுடிக்கும் முன்பாகவே முதல் ஆளாக எல்லாத்தையும் அவரிடம் கொடுத்துவிட்டு நிம்மதியானேன்.
+2வில் எந்த ஒரு பாடப் புத்தகத்தையும் திருப்புதல் தேர்வுவரை திருப்பாததால் மொத்தத்தில் 300 மதிப்பெண்கள்கூட எடுக்காமல் இருந்த என்னின் ஒரிஜினல் பிராக்ரஸ் ரிப்போர்ட் அப்பாவிடம் மாட்டிக்கொள்ள பெரிதாய் கோபப்படாமல் என் மீதான அவரின் நம்பிக்கையை அன்பாய் வெளிப்படுத்தியதும் தவறையுணர்ந்து படிக்க ஆரம்பித்தபோது காலம் கடந்துவிட்டிருந்ததால் எந்த ஒரு சப்ஜெக்டையும் முழுதாய் கவர் செய்ய முடியாமல் ஜஸ்ட் ஃபர்ஸ்ட் கிளாஸில்தான் தேர்வானேன். “ இம்ப்ரூவ்மெண்ட் எழுதுகிறேன்” என்றபோது ”யானை பெருசா குசுவப்போவுதுன்னு பின்னாடியே பார்த்துகிட்டிருந்தா அது சீத்துன்னு குசுவுச்சாம்” என்ற பழமொழியை சொல்லிய எங்க அப்பா ”போதும்பா நீ எழுதினது” என்றபடியே கல்லூரியில் பி.எஸ்.ஸி கணிப்பொறி அறிவியலில் சேர்த்துவிட்டார்.
+2 வரை தமிழ் வழிக் கல்வியென்பதால் கல்லூரியில் பாடங்களை புரிந்து கொள்வதில் சிரமம். எக்ஸாமில் எதை வேண்டுமானாலும் எழுதாலாமென்பது முதலில் தெரியாததால் பத்து நிமிடங்களிலேயே ஹாலைவிட்டு வெளியேறிவிடுவேன். `புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது` என்பதுபோல் அரியர் விழுந்தாலும் பிட் அடிக்கக் கூடாதென்று ஆரம்ப நாட்களில் இருந்தேன். மாட்டிக்கொண்டால் மூன்று வருடம் டீபார்ட் பண்ணிவிடுவார்கள். அதுக்கூட பரவாயில்லை பெரிய போர்டில் `இன்று பிட்டடித்து பிடிபட்டவர்கள்` என்று கொட்டையெழுத்தில் எழுதி கல்லூரியின் எண்ட்ரென்ஸிலேயே வைத்து விடுவார்கள். இதற்கு பயந்தே பிட் அடிப்பதில்லையெனினும் அடுத்தடுத்த செமெஸ்டர்களில் சில நீக்குபோக்குகள் அறிந்து பஸ்டிக்கெட்டில் குறிப்பெடுத்துக்கொண்டு போவதில் ஆரம்பித்து அடுத்தவனின் பேப்பரை பிடுங்கி எழுதுகிறவரை முன்னேற்றம்.
பிராக்டிகல் எக்ஸாமில் பிட் அடிப்பதென்பது அங்கீகரிக்கப்பட்டதைப் போல் இருந்ததால் எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இருக்காது.கோபாலின்(COBOL) எலக்ட்ரிசிட்டி பில் மாதிரியான இருப்பதிலேயே மிகப்பெரிய புரோகிராம்தான் எப்போதுமே எனக்கு வந்துத் தொலைக்கும். அதையெல்லாம் பிட் பேப்பரில் எழுதுவதற்கே இரண்டு நாட்களாகும். அதனால் பிட் எழுதிவரும் எவனிடமாவது வாங்கி நோகாமல் நொங்கு சாப்பிடுவது வழக்கம்.
எழுபது சதவிகித மதிப்பெண்களோடு எம்.சி.ஏ வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் விண்டோசைப் பற்றிய தெளிவே கல்விக் கூடங்களைவிட்டு வெளியில் வந்த பிறகே என்னைப் போன்றே பலருக்கும் கிடைத்ததென்றால் அது எங்களுடைய தவறு மட்டுமா என்றால் நீங்கள் தான் சொல்ல வேண்டும்.
பள்ளி முதல் கல்லூரி வரையிலான தேர்வு பயம் குறித்த தொடர் பதிவிற்கு ஆதி அவர்களால் அழைக்கப்பட்டிருந்ததை ஏற்று இப்பதிவு.
இத்தொடரைத் தொடர நான் அழைக்கும் நண்பர்கள்,
பிரபாகர்.
தமிழ்ப்பறவை.
சே.குமார்.
Saturday, May 8, 2010
புரியாத புதிர்..
புறநகர் பகுதியில் உங்களை அன்புடன் அழைத்துக்கொண்டிருந்த காவேரி நகர் ஆர்ச்சினுள் நுழைந்து ”சாமிநாதன் எம்.காம்,நகராட்சி வருவாய் துறை ஆய்வாளர்” என்று பெயர் பொறிக்கப்பட்டிருந்த அந்த இளம் பச்சை நிற காம்பவுண்ட் சுவர் வீட்டினருகே வந்து நின்ற டாட்டா சுமோவிலிருந்து இறங்கியவருக்கு ஐம்பதை கடந்த அரசாங்க உத்தியோகஸ்தர் தோற்றம். அனேகமாய் சாமிநாதன். அவரைத் தொடர்ந்து கசங்கிய பட்டுச் சேலையில் கணத்த சரீரத்தில் ஏகப்பட்ட நகைகளணிந்து கையில் தாம்பூலப் பையோடு மிகவும் களைப்பாய் இறங்கினார் ஒரு நடுத்தர வயது பெண்மணி. பார்த்ததுமே தெரிந்தது அவரின் மனைவியென்பது . ஏதோ திருமணத்திற்கு போய்விட்டு வருகிறார்கள்போல.
கேட்டை திறக்கச் சொல்லும் விதமாக ட்ரைவர் காரிலிருந்தபடியே ஹாரன் ஒலியை பலமுறையடித்தும் உள்ளிருந்து யாரும் வராததால், ”வள்ளி வள்ள்ள்ளீளீ..” என்று வீட்டிற்குள் இருக்கும் யாரையோ உரக்க அழைத்துக்கொண்டிருந்தார் அப்பெண்மணி.
மீண்டும் வீட்டிலிருந்து அமைதி,”சனிய இவ்வளோ சத்தம் போட்டும் அப்படியென்ன தூக்கம் அவளுக்கு” என்று அப்பெண்மணி களைப்பில் வெறுப்பாய் முணகியதிலிருந்தே வள்ளி வேலைக்காரியாய் இருக்கக் கூடுமென்பதை ஊகிக்க முடிந்தது,
“திவாகர்...திவ்யா டேய் யாராவதும் கேட்ட திறந்து விடுங்கடா” என்று சாமிநாதனும் குரல் கொடுத்தார். ம்ஹும்,எந்தப் பலனுமில்லை. மொபைல் போனில் இரண்டு மூன்று தடவை டயல் செய்துவிட்டு “சுச் ஆஃப் பண்ணி வச்சிருக்கான், லேண்ட் லைனும் போக மாட்டேங்குது” என்றுவிட்டு, டிரைவரிடம் ”பழனி, காம்பவுண்ட் சுவரேறிக் குதித்து காலிங் பெல்லை அடி” என்றார்.
டிரைவர்,காம்பவுண்ட் சுவரில் ஏறுகையில் அருகில் படுத்திருந்த தெருநாய் குரைக்கத் தொடங்கியது.”ச்சூ போ ” என்றபடியே கீழே குனிந்து கல்லை எடுப்பதாய் டிரைவர் பாவனை செய்ததுதான் தாமதம் பெரிதாய் அடிவாங்கிய மாதிரி ”வீல்” என்றலரியபடியே ஓடத்தொடங்கிய அந்நாய்,` நானும் எரிகிறேன்` என்பதாய் சன்னமாய் எரிந்துகொண்டிருந்ததொரு தெருவிளக்கு கம்பத்தினருகே நின்றுகொண்டு மீண்டும் குரைத்துக்கொண்டிருந்தது.
பலமுறை காலிங் பெல்லை அழுத்தியும் உள்ளிருந்து பெரும் அமைதியே நிலவியதால் கதவினை வேகமாய் தட்டியபடியே “தம்பி திவா கதவ திறங்கய்யா” என்று கத்திய டிரைவர் மெல்ல திரும்பி இப்போ நான் என்ன பண்ணட்டும் என்பதாய் தனது முதலாளியை நோக்க,” ஜன்னல் வழியா பாருப்பா” என்ற முதலாளியின் முகம் குழப்பத்தில் ஆழ்ந்தது.
திறந்தே இருந்த ஜன்னல் வழியாய் எட்டிப்பார்த்த டிரைவர் உள்ளே லைட் எரியாததால் தனது செல்போன் வெளிச்சத்தை வீட்டினுள் பாய்ச்சிய அடுத்த நொடியில் ”ஸாஆஆ...ர் அந்த பொண்ணு வள்ளி ஃபேன்ல தொங்கிட்டுருக்கு” என்று பெரிதாய் அலறியபடியே தெரித்து ஓடிவந்தார்.
”அடிப்பாவி” என்று அலறிய அப்பெண்மணி தொடர்ந்து “என்னங்க உள்ளே நம்ம பசங்க “ என்று பயத்தில் நடுங்கியபடியே தனது கணவனின் கையை இறுகப்பற்றிக்கொண்டு சத்தமாய் அழ ஆரம்பித்துவிட்டாள்.