Saturday, November 28, 2009

எங்க‌ ஊர் 20 - 20

90களின் முதல் பகுதி,அப்போதுதான் எங்கள் ஊரிலிருந்து ஓரிருவர் கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்திருந்தனர்.அதற்கு முன்பு பத்தாவது தாண்டுவதே தம்பிரான் செயல்.ஓரிரு வருடங்களில் கல்லூரி செல்வோரின் எண்ணிக்கை கூடியது.அது B.E ஆக இருந்தாலும் B.A ஆக இருந்தாலும் எங்க கணக்குப்படி காலேஜ் படிப்பு பெரிய படிப்பு. வெளியூருக்கு ரொம்பதூரம் சென்று (25 கிலோமீட்டர் தூரமே உள்ள தஞ்சாவூரில்தான்) படிக்கச் சென்ற காலேஜ்கார அண்ணன்மாருங்கதான் எங்க ஊருக்கு கிரிக்கெட்டை அறிமுகப்படுத்தினவங்க.

ஆரம்பத்தில் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டாத சிறுவர் கூட்டம் தொடர்ந்து கிட்டி புல்லு,பம்பரம் என்றே விளையாடிக் கொண்டிருந்தோம்.ஆள் பற்றாக் குறையின் காரணமாக அண்ணன்மாருங்க எங்களையும் தங்கள் டீமில் ஐக்கியமாக்கிக் கொண்டார்கள்.எங்களுக்கு ஒன்லி ஃபீல்டிங் மட்டும்தான். ரொம்ப காலமாக பேட்டிங் எங்களுக்கு ஒரு பெரிய கனவாகவே இருந்தது, பட்டுன்னு சொன்னா எங்களை பந்து பொறுக்கி போட மட்டும் வச்சிருந்தாங்க.

கிரவுண்ட் பக்கமா எதாவது ஃபிகருங்க கிராஸ் பண்ணா(இப்போதான் ஃபிகரு அப்போ அக்காங்க) என்னைய மாதிரி ஒரு சின்ன பையன்கிட்ட பௌலிங் போடச் சொல்லி சிக்ஸ் அடித்து ஹிரோயிசம் காட்டுவார்கள். இதிலென்ன வேடிக்கையின்னா பலதடவை இப்படி சீன் போடும்போது கிளீன் போல்டாகிவிட்டு "பால்போட சொன்னா என்னடா மாங்கா அடிக்கிறியா, இப்படியெல்லாம் போடக்கூடாது இது 'நோ'பால்" என்று அவர்கள் சிக்ஸ் அடிக்கும்வரை எங்கள் பௌலிங்கை தொடரச் செய்வார்கள். சில சமயம் நாங்க பௌலிங் போடும்போது ஒய்டு ஆகிவிட்டால் இரண்டு ரன்கள் சேர்த்துக் கொள்வார்கள்,ஏன்னு கேட்டால் இது பெரிய ஒய்டுடா அதனாலதான்னு சொல்லுவாங்க. நாங்களும் அது நெஜம்னு நம்பி இனி ஒய்டு போட்டாலும் சின்ன ஒய்டா போடுங்கடான்னு சொல்லிகிட்டு விளையாடியிருக்கோம்.

இப்படியாக பந்து பொறுக்கி போடப்போயி கொஞ்சம் கொஞ்சமா கிரிக்கெட் எங்களை சில மாதங்களிலேயே முழுவதும் ஆக்ரமித்தது.அப்புறம் சின்ன பசங்க எல்லோரும் சேர்ந்து தனி டீம் ஃபார்ம் பண்ணி தென்னை மட்டையில் பேட்டும்,தேங்காய் நாரை சுருட்டி பேப்பரில் வைத்து டைட்டாக கட்டி பந்தும் செய்து (இதில் முத்துகுமாருதான் எக்ஸ்பர்ட், மத்தவய்ங்க செய்யும் பந்து ஒரு ஓவர்கூட தாங்காது,ஆனால் அவன் ஒரிஜினல் பந்து ஷேப்பில் அசத்தலாக செய்துவிடுவான்)வயல்வெளிகளில் தனியாக கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி பெரிய டீமில் பேட்டிங் புடிக்கிற அளவிற்கு முன்னேறினோம்(எப்போதாவது கடைசி ஓவர் முடிய ஒன்னு ரெண்டு பந்து இருக்கும்போது கொடுப்பாங்க).

எங்க ஊரைத் தொடர்ந்து ஆதனக்கோட்டை, கருக்காடிப்பட்டி, வெட்டிக்காடு, சில்லத்தூர் என அருகில் உள்ள எல்லா கிராமத்திலும் கிரிக்கெட் டீம் உருவாகி ஒவ்வொரு சனி ஞாயிறுகளிலும் கருக்காடிப்பட்டி பள்ளி மைதானத்தில் ஃபிரண்ட்லி மேட்ச் விளையாட ஆரம்பித்து அப்படியே ஒவ்வொரு ஊரிலும் டோர்ணமெண்ட் வைக்கும் அளவிற்கு அசுர வளர்ச்சி அடைந்து கில்லி,பம்பரம்,கோலி குண்டு போன்ற விளையாட்டுகளுக்கு ஆப்பு வைத்தது கிரிக்கெட்.

டோர்ணமெண்டுகள் பெரும்பாலும் கோடைவிடுமுறையில்தான் நடக்கும், இப்படி பக்கத்து ஊரில் நடக்கும் டோர்ணமெண்ட்டுக்கு செல்ல எல்லோர் வீட்டிலும் பெர்மிஷன் கிடைக்காது பிளேயர்ஸ் ஒவ்வொருத்தருக்கும் தேங்காய் பறிப்பு, தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சல்,வாழைக்கு கீங்கட்டை வெட்டுதல்,ஆடு மாடு மேய்த்தல் என ஏதாவது ஒரு வேலை இருக்கும்.இந்த மாதிரி வேலை இருக்கும் நேரத்தில் வீட்டில் உள்ளவர்களுக்கு டேக்கா கொடுத்துவிட்டு விளையாட கிளம்புவது ஒரு சிறுகதைக்குண்டான அத்தனை சுவராஸ்யம் அடங்கியது. உள்ளூர் போட்டியின்போது லுங்கி கட்டி விளையாடிடுவோம், ஆனால் டோர்ணமெண்ட் செல்லும்போது கண்டிப்பாக பேண்ட்,டீசேர்ட் அணிந்துதான் விளையாட வேண்டும்(நோட்டீஸ்லயே பெரிதாக அச்சடித்துவிடுவார்கள் கண்டிப்பாக லுங்கி அணிந்து விளையாடக் கூடாதென்று).ஒவ்வொருத்தரும் வீட்டிலிருந்து பேண்ட்டை லுங்கிக்குள் ஒளித்து வைத்து மெல்ல வீட்டிலிருந்து வெளியேறி,ஊரிலிருந்து ஒவ்வொருவராக தனித் தனியாக கிளம்பி ஊரின் வெளிப்புறத்தில்தான் ஒன்றுசேர்ந்து செல்வோம்.பிறகு அப்பா பாக்கெட்டிலும், அம்மாவின் அரிசிப்பானை சேகரிப்பிலும் சுட்ட காசுகளை ஒன்று சேர்த்து எண்ட்ரென்ஸ் ஃபீஸ் ரெடியாகிவிடும்.சில வீட்டில் பாட்டியின் சுருக்கு பைகளிலும் கைவைக்கப்படும்.

சின்ன பசங்களாகிய எங்களை, டீமில் இருந்தாலும் இல்லாவிடிலும் பௌண்டரி, சிக்ஸர்,விக்கெட் எடுக்கும் நேரங்களில் கைதட்டுவதற்காக கூடவே அழைத்து செல்வார்கள். சில அண்ணன்மார்கள் வீட்டு வேலைகளில் மாட்டிக்கொண்டு வரமுடியாத சந்தர்ப்பங்களில் சின்ன பசங்களுக்கு அடிக்கும் பெரிய டீமில் விளையாடும் யோகம். பெரும்பாலும் எங்க டீம்தான் முதல் பரிசை தட்டி வருவார்கள்.முதல் பரிசாக சுழற்கோப்பையுடன் வாங்கும் ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய்களை வைத்தே டீமிற்கு தேவையான பேட், கிளவுஸ், ஸ்டம்ப் போன்ற பொருட்களை வாங்கிவிடுவோம்.சரக்கு பார்ட்டியெல்லாம் இப்போதான், அப்போதெல்லாம் கிராமப்புறங்களில் பெரும்பாலான பசங்க குடிக்க மாட்டாங்க தவிரவும் ஒயின்ஸ் வசதி அப்போது எங்க ஏரியாவில் இல்லை.

நமக்கு அப்புறமா கிரிக்கெட் டீம் ஃபார்ம் பண்ணவங்கெல்லாம் டோர்ணமெண்ட் வைத்துக் கொண்டிருக்க, நாம் வைக்காமல் இருந்தால் மத்த டீமிடம் மரியாதை இருக்காது என்றெண்ணி எங்க ஊரிலும் டோர்ணமெண்ட் வைப்பதற்காக இளைஞர் நற்பணி மன்றத்தினர் ஒன்றுகூடி எப்படி செய்யலாம் என விவாதித்தபோது எங்களுக்கு பெரிய சவாலாக இருந்தது மைதானம், டோர்ணமென்ட் வைக்கும் அளவிற்கு பெரிய மைதானம் எங்க ஊரில் இல்லை,எங்கே வைக்கலாம் என்று பல இடங்களை தேர்வு செய்து இறுதியில் ஏரியின் உள்ளே(கோடையில்தாங்க) வைக்கலாம் என முடிவு செய்து அதற்கான வேலைகளிலும் துரிதமாக செயல்பட்டு ஒரு சுபயோக சுப தினத்தில் டோர்ணமெண்டுக்கான நாளும் குறிக்கப்பட்டது.

பஞ்சாயத்துத் தலைவர்,வாத்தியார் மற்றும் பெரும் மிராசுதார் முறையே முதல் மூன்று பரிசுகளுக்கும் ஸ்பான்சர் எளிதாக கிடைத்த போதும் நோட்டீஸ் அடிப்பதற்கு யாரை கேட்பது என புரியாமல் நின்றபோது வெளிநாடு சென்று வந்த அண்ணாச்சி ஆபத்பாந்தவனாக வந்து உதவினார், நோட்டீஸில் அவர் பெயரை கொட்டை எழுத்தில் போடவேண்டுமென்ற கண்டிஷனோடு.ஒலி ஒளி அமைப்பு ஏவிஎம் மணிமாறன் அண்ணன்கிட்ட கடன் சொல்லி ரெண்டு ஸ்பீக்கர்,ரெண்டு மைக்,ஐந்து ட்யூப் லைட் வாங்கி கட்டியாகிவிட்டது. இது ஆஃபிஸ் ரூம் யூசுக்கு,நான்கு மூங்கில் கால் ஊன்றி,பத்து கீற்று போட்டு சுற்றிலும் படுதாவால்(தார்ப்பாய்) சூழப்பட்டதுதான் ஆஃபிஸ் ரூம்.

டோர்ணமெண்ட் அன்று பௌண்டரி லைனில் குச்சி ஊன்றுவது,பிட்ச்சில் சுண்ணாம்பு கோடு போடுவது,வெளியூர் டீமிற்கு தண்ணீர் சப்ளை ஆகிய பொறுப்புகள் சின்ன டீமிற்கு வழங்கப்பட்டது.ரொம்ப சந்தோஷமா எல்லா வேலைகளையும் செய்தோம் காரணம் உள்ளூர் டோர்ணமெண்ட் என்பதால் சின்ன டீமையும் தனியா விளையாட அனுமதி கொடுத்ததுதான்.(அனுமதி கொடுக்காமல் இருந்திருந்தால் சீறும் சிங்கங்கள் 11 என்ற பெயரில் புது டீமை உருவாக்குவதாகத் திட்டம் இருந்தது).

வெளியூர் டீம் ஒவ்வொன்றாக வந்து டோர்ணமெண்ட் களைகட்டத் தொடங்கியது.நேர்முக வர்ணனை சுடர் அண்ணாச்சிதான் வர்ணனையில் பின்னி பெடலெடுப்பார். "சிக்ஸர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கருக்கை சரவணன், பூஜ்ஜியத்திலேயே தனது ராஜ்ஜியத்தை முடித்துக்கொண்டு பெவிலியன் திரும்புகிறார்" என்ற ரேஞ்சில் பட்டையை கிளப்புவார். இப்படியாக ஆரம்பித்த உள்ளூர் டோர்ணமெண்ட் வருடா வருடம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கையில் சீனியர் பிளேயர்ஸ் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு ஒவ்வொருவராக சென்றுவிட சின்ன பசங்களாக இருந்த நாங்க மெயின் பிளேயர்ஸ் ஆனபோது எங்களுக்கு பந்து பொறுக்கிபோட வேண்டிய எங்களது ஜூனியர்ஸை அப்போது எங்க ஊருக்குள் நுழைந்த கேபிள் டீ.வியின் வருகை எப்படி அவர்களை வீட்டிற்குள்ளேயே முடக்கியது என்பதனை நாளைய பதிவில் பார்ப்போம்.

(இது ஒரு மீள் இடுகை).

இந்த பதிவின் முதல் பகுதி : சின்ன பசங்க நாங்க .

Tuesday, November 24, 2009

பொன்னேர் பூட்டுதல்


வருடம்தோறும் சித்திரை மாதத்தில் கிராமங்களில் கொண்டாடப்படும் அல்லது பின்பற்றப்படும் ஒரு சிறிய நிகழ்ச்சி பொன்னேர் பூட்டுதல்.எங்கள் பகுதியில் நல்லேர் கட்டுதல் என்பார்கள்.

பெரும்பாலான கிராமங்களில் சித்திரையின் முதல்நாளே நல்லேர் கட்டுவார்கள்.எங்கள் ஊரில் சித்திரையின் முதல் வாரத்தில் ஏதாவது ஒரு நாளில் கட்டுவார்கள்.எனது ஆரம்பப்பள்ளி நாட்களில் பாடப்புத்தகங்களில் கிராமங்கள் சார்ந்த விழாக்களைப் பற்றிய பாடங்களில் சூரிய உதயத்தில் உழவன் ஒருவன் கலப்பையை தோளில் தாங்கியபடி எருதுகளை ஓட்டிச் செல்வது போலவும்,உழத்தி ஒருத்தி அவன் பின்னால் கஞ்சிப்பானை சுமந்து செல்வது போலவும் ஒரு டெம்ப்ளேட் படம் அச்சிட்டிருப்பார்கள். இந்தக் காட்சி அப்படியே நல்லேர் கட்டுமன்று எங்கள் ஊரில் காணக்கிடைக்கும் .

அதிகாலையிலேயே வீடுகளை கழுவி,மாடுகளை குளிப்பாட்டி அதனோடு கண்டிப்பாக மனிதர்களும் குளித்து கலப்பையை தோளில் சுமந்து எருதுகளை ஓட்டியபடி வயல்களை நோக்கி ஆண்கள் நடக்க அவர்களின் பின்னால் மொத்த குடும்ப உறுப்பினர்களும் பூஜை பொருட்கள், நவதானியங்கள், நீராகாரம் போன்றவற்றை எடுத்துச் செல்வர்.கூடவே ஒரு கூடையில் மாட்டு எரு,பெரும்பாலும் ஒவ்வொரு வீட்டின் பாட்டிமார்களின் தலையில் இந்த எரு அள்ளிக்கொண்டு வருவதை கட்டிவிடுவார்கள்.

வயலில் மண்ணால் சிறு மேடை அமைத்து அதன் மேல் சாணம் அல்லது மஞ்சள் தூள் குழைத்து பிள்ளையார் செய்து, கொண்டுவ‌ந்திருக்கும் பொருட்களை அதன் முன் பரப்பி வைத்துவிட்டு, பஞ்சாங்கத்தின்படி அன்று எந்த திசை நல்ல திசையாக சொல்லப்பட்டிருக்கிறதோ அத்திசையை நோக்கி எருதுகளை நிற்க வைத்து ஏர் பூட்டி உழுவார்கள். குழந்தைகள் உட்பட குடும்ப‌ உறுபின‌ர்க‌ள் ஒவ்வொருவரும் அன்று ஏர் ஓட்டுவார்கள் அதாவது மெயின் டிரைவர் ஒருவர் இருப்பார் மற்றவர்கள் சம்பிரதாயத்திற்காக கொஞ்ச கொஞ்ச நேரம் கலப்பையின் கைப்பிடியைத் தொட்டுக்கொண்டு நடப்பார்கள். இது சம்பிரதாய உழவு என்பதால் வயலின் ஒரு சிறுபகுதியை மட்டும் உழவு செய்துவிட்டு எருதுகளை அவிழ்த்துவிடுவார்கள். பிறகு உழவு செய்த இடத்தில் எருவை கொட்டி அதன் மீது நவதானியங்களை விதைத்துவிட்டு அந்த வருடம் விளைச்சல் சிறப்பாய் இருக்க இறைவ‌னை வேண்டி பூஜைகள் செய்து எருதுகள், கலப்பை, மண்வெட்டி ஆகியவற்றிற்கு மஞ்சள் குங்குமம் வைத்து, கொண்டுவந்திருக்கும் நீராகாரத்தை எல்லோரும் பருகிவிட்டு பிரசாதமாக இனிப்புக் கலந்த பச்சரிசியை சுவைத்தபடியே வீட்டிற்குத் திரும்புவர். சுற்றிலும் இருக்கும் வ‌ய‌ல்வெளி எங்கும் அந்த‌ அதிகாலை நேர‌த்தில் கிராம‌ ம‌க்க‌ள் அனைவ‌ரும் அவ‌ர‌வ‌ர் வ‌யல்க‌ளில் பொன்னேர் பூட்டும் காட்சி திருவிழாக்கோல‌மாக‌ அவ்வ‌ள‌வு ர‌ம்மிய‌மாக‌ இருக்கும்.

வீட்டு வாசலில் வேப்பங்குழை மற்றும் மாவிலைகளோடு ஒரு குடத்தில் நீர் வைத்து அதன் மேல் ஒரு சொம்பில் பசும்பால் வைத்திருப்பார்கள். வயலிலிருந்து திரும்பும் ஒவ்வொருத்தரும் அந்த நீரில் கால்களை சுத்தப்படுத்திக்கொண்டு பசும்பாலை சிறிது சுவைத்து, வேப்பங்குழைகளை வீட்டின் கூரையில் சொறுகிவிட்டு வீட்டினுள் நுழைவார்கள்.

புது வருடம் பிறந்ததும் நல்லேர் கட்டுவதற்கு முன்பாக வேறு எந்த விவசாய வேலைகளையும் செய்யக் கூடாது.அதனாலேயே சித்திரை பிறக்கும் அன்றே பெரும்பாலான கிராமங்களில் நல்லேர் கட்டிவிடுவார்கள்.சித்திரைப் பட்டம் உளுந்து,கடலை போன்ற தானியங்கள் நன்றாக விளையும்.நல்லேர் கட்டுவதற்கு முன்பாகவே மழை பெய்துவிட்டால் ஈரம் காய்வதற்குள் விதைக்க வேண்டும் என்பதற்காக நல்லேர் ரூல்ஸை மீறவும் செய்வார்கள், அப்படி ரூல்ஸை மீறுபவர்கள் கண்டிப்பாக பஞ்சாயத்தில் அபராதம் செலுத்த பணிக்கப்படுவார்கள். அவர்களுக்கும் எல்லாமும் தெரியுமென்றாலும் எல்லாத்தையும் கூட்டிக் கழித்துப் பார்த்து பருவத்தே பயிர் செய்துவிட்டு ஃபைனையும் கட்டுவார்கள்.

இயந்திரமயமாகிவிட்ட இன்றைய விவசாயத்தில் முதலில் காணாமல் போனது உழவு மாடுகள். அதனால் கலப்பைகளுக்கு வேலையில்லாமல் போய்விட்டது. இன்றும் நல்லேர் சம்பிரதாயம் கடைபிடிக்கப்படுகிறது. வீட்டிற்கு ஒருத்தரோ இருவரோ வயலுக்குச் சென்று மண்வெட்டியால் வயலில் சிறிது கொத்திவிட்டு ஜவுளிக்கடை கேரிபேக்கில் பார்சல் செய்யப்பட்ட எருவை கொட்டி நவதானியங்களை அதில் தூவிவிட்டு அவசர பிரார்த்தனை செய்துவிட்டு மினரல் வாட்டர் பாட்டிலில் கொண்டுவந்திருக்கும் நீராகாரத்தை பருகிவிட்டு,அனைத்துப் பொருட்களையும் கையடக்க நவீன பையில் எடுத்துவைத்தபடியே டூவீலரில் கிளம்பிவிடுகிறார்கள்.

ஆள்பற்றாக்குறை,எகிறிய கூலி,போதிய விளைச்சலின்மை, விளைந்த பொருட்களுக்கு நியாயமான விலையின்மை என‌ பல காரணங்களால் எங்கள் பகுதியில் சவுக்கு, யூக்களிப்டஸ் போன்றவற்றை நெல், கடலை, உளுந்து, எள், கரும்பு என நன்றாக விளையக்கூடிய நன்செய் நிலங்களிலும் தரிசாகப் போடக்கூடாதென்பதற்காக நட்டு வைத்திருக்கிறார்கள். விவசாயம் நலிவடைந்திருக்கும் இன்றையச் சூழலில் நல்லேர் பூட்டுவதை ஒரு கடமைக்கேனும் செய்து கொண்டிருப்பதே பெரிய விஷயம்தான்.

Saturday, November 21, 2009

நொறுக்குத் தீனி 21/11/09

சிங்கைக்கு வந்த புதிதில் நான் மிரண்ட விஷயம் பெரிய சைஸ் கிளாஸில் தழும்ப தழும்ப குடித்த டீ தான். ஒரு டீ வாங்கினால் நம்ம ஊரில் ஒரு ஃபேமிலியே சாப்பிடலாம் அவ்வளவு இருக்கும். இதைப் பார்த்ததும் பேராவூரணிக்கு பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்திற்குச் சென்றதுதான் நினைவுக்கு வந்தது. எனது உறவினர் ஒருவரின் பூர்வீகம் அந்தக் கிராமம்,ஒரு முறை அங்கே என்னையும் அழைத்துச் சென்றார்.ரொம்ப நாட்களுக்குப் பிறகு சென்றதால் அங்காளி, பங்காளி வீடுகளில் உறவினருக்கு ஏகப்பட்ட மரியாதை. ஒவ்வொரு வீட்டிலும் தேனீர் கொடுத்து ஒரு வழி செய்துவிட்டார்கள். ”பரவாயில்லைங்க இப்போதான் டீ குடித்தோம்” என்றாலும் கேட்காமல் எல்லோர் வீட்டிலும் தேனீர் அதுவும் பெரிய சைஸ் லோட்டா மாதிரியான டம்ளரில். எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு வீட்டில் கொடுத்த டீ குடிக்கவே முடியாத அளவிற்கு வித்தியாசமாய் இருந்தது, நான் உறவினரைப் பார்க்க அவர் ”எப்படியாவது அட்ஜெஸ்ட் செய்து குடிச்சிடு” என்று கிசுகிசுத்தார்.பிறகு அங்கிருந்து கிளம்பியதும் சொன்னார் ”அது தேங்காய் பாலில் போட்ட டீடா தம்பி” என்று. பால் இல்லாவிட்டால் தேங்காய் பாலில் டீ போடுவது அந்த பகுதியின் வழக்கமாம்.(நல்ல வேளை பஸ் ஸ்டாப் வருகிற வழியில் ஒரு ஏரி இருந்தது).

******************************

சென்ற வாரம் நண்பர் ஒருவரை (ஒருவரையா?,ஒருத்தரையா?) பார்க்க மெரினா பே(Bay) சென்றிருந்தேன். அப்போது அலைபேசியில் மற்றொரு நண்பர் அழைக்க அட்டெண்ட் செய்து ரொம்ப சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருக்கையில் திடீரென இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. மீண்டும் தொடர்பு கொள்ள முயன்றால் போதுமான பேலன்ஸ் இல்லையென்றது. “அட நேற்றுதானப்பா ரீசார்ஜ் பண்ணேன்” என்று குழம்பியபடி நிற்கவும், நண்பர் சொன்னார், ”போன் செட்டிங்ஸ் ஆட்டோமேட்டிக்ல இருக்கா பாருங்க,இங்கே இந்தோனேஷியா நெட்வொர்க் கவராகும் ஒரு வேளை ரோமிங்ல பேசிட்டீங்க போல” என்றார். உடனே சிக்னலை செக் பண்ணினால் axis நெட்வொர்க் இந்தோனேஷியான்னு இருக்கு. முற்றிலும் என்னுடைய கவனக்குறைவு, நெட்வொர்க் மாறியதற்கான குறுஞ்செய்தியை நான் கவனிக்கவில்லை. பிறகு ஒரு பட்டியலே கொடுத்தார்கள் எந்த ஏரியாவுக்கெல்லாம் போனால் அண்டை நாடுகளின் நெட்வொர்க் அல்வா கொடுக்குமென்று.

******************************

நண்பர் ஒருவருடன் சற்று முன்பு சாட்டிக் கொண்டிருந்த போது மீண்டும் ஐ.டிக்கே போய்விட்டீர்களா? என்றார். நானும் Donkey கெட்டா ல் little wall என்றேன். உடனே அவர் ”CHILD WHO TEMPLE SALT MOTHER NEEDLE GONE !” என்று சாட்டி இதற்கான தமிழாக்கம் கேட்டார். திங்கோ திங்குன்னு திங்கியும் தெரியாததால் அவரிடமே கேட்டுத் தெரிந்து கொண்டேன்.நீங்களும் முயற்சி பண்ணி ட்ரான்ஸ்லேட்டுங்களேன்.(மரண மொக்கை, ஏற்கனவே தெரிஞ்சவங்க கம்முன்னு கண்டுக்காம இருங்க).

******************************

“குயில் பாட்டு ஓ வந்ததென்ன”,”பூத்தது பூந்தோப்பு”,”மல்லியே சின்ன முல்லையே”, ”இந்த மாமனோட மனசு”இப்படியான பாடல்களை எங்க ஊர் பக்கம் மினிபஸ்களில் கேட்டிருக்கிறேன்.சிங்கப்பூரின் லிட்டில் இந்தியாவில் இருக்கும் எனது அறையில் அமர்ந்து இந்த இடுகை எழுதுகையில் அருகில் இருக்கும் கடைகளில் இருந்து வரிசையாக இப்படியான பாடல்களை கேட்டபடியே எழுதுகிறேன்.லிட்டில் இந்தியாவில் இருப்பது சொந்த நாட்டில் இருப்பதைக் காட்டிலும் சொந்த கிராமத்தில் இருப்பதைப் போன்று இருக்கிறது.
******************************
ஆரவாரமில்லாமல் அசத்தலான பதிவுகளை எழுதிக்கொண்டிருக்கும் மேலும் இரண்டு பதிவர்களை இந்த நொறுக்குத் தீனியில் குறிப்பிடுவதில் பெருமையடைகிறேன்.

ரகுநாதன்:இவரின் சுழற்பந்து என்ற சிறுகதையைத்தான் முதலில் வாசித்தேன். அருமையான நடையில் மிகச் சிறப்பாக எழுதியிருந்தார்.எல்லாவிதமான இடுகைகளும் எழுதுகிறார்.எழுத்து நடையால் எவ்வளவு பெரிய இடுகையானாலும் ஒரே மூச்சில் படிக்க வைத்துவிடுவார்.

சே.குமார்:கவிதை,சிறுகதை,நெடுங்கவிதைகள் எனப் பிரித்து மூன்று வலைப்பூக்களில் எழுதுகிறார். சிறுகதைகளுக்கு இவர் எடுத்துக் கொள்ளும் கதைக் களங்களும், உரையாடல்களும் மிக யதார்த்தமானதாகவும்,ரசிக்கும் படியும் இருக்கின்றன. இவரின் கவிதையொன்று,

விளைநிலம்:
விளைநிலங்களில்
அங்கொன்றும்...
இங்கொன்றுமாய்...
முளைத்தன...
வீடுகள்..!

Wednesday, November 4, 2009

பிடித்த/பிடிக்காத 10

தோழர் மாதவராஜ் ஆரம்பித்த இத்தொடர் விளையாட்டு நண்பர் ஈரோடு கதிர் மூலமாக என்னிடமும் வந்திருக்கிறது.

இத்தொடர் இடுகையின் விதிகள்:

1. நம் பிடித்தவர், பிடிக்காதவர் பட்டியலில் வருபவர் தமிழகத்தைச் சார்ந்த, பிரபலமாக இருக்க வேண்டும்.

2. இதைத் தொடர இரண்டு முதல் ஐந்து பதிவர்களை அழைக்க வேண்டும்

3. ஏழு முதல் பத்துக் கேள்விகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

அரசியல்வாதி

பிடித்தவர் : யாருமில்லை என்று சொல்ல நினைச்சேன் ஸ்டாலினை கொஞ்சம் பிடிக்கும்.

பிடிக்காதவர் : வை.கோ(ஒரு காலத்தில் இவரை ரொம்ப நம்பினேன்).

எழுத்தாளர்

பிடித்தவர் : எஸ்.ரா,கி.ரா

பிடிக்காதவர் : பாலகுமாரன்(கல்லூரி நாட்களில் இவரின் சில புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்தேன் அப்போது புரியவில்லை,இப்போது படித்து பார்ப்போமே என்று முயற்சித்தேன் இப்போதும் முடியவில்லை,பெரிய பெரிய பத்தியாக வேறு எழுதுகிறார்,ஒரு வேளை இன்னும் மெச்சூர்ட் ஆகி படித்தால் விளங்குமோ என்னவோ)

கவிஞர்

பிடித்தவர் : மு.மேத்தா,வைரமுத்து,ந.முத்துக்குமார்

பிடிக்காதவர் : கபிலன்(நல்ல சிந்தனையாளர் ஆனால் ஓவரா குத்துப்பாட்டு எழுதவதால் இவர் மேல் ஒரு வெறுப்பு).

இயக்குனர்

பிடித்தவர் : மணிரத்னம்,அமீர்

பிடிக்காதவர் : தங்கர்பச்சான்(கடலூரைத் தாண்டி வெளியில் வந்தா பார்க்கலாம்), பேரரசு(உங்க டைரக்‌ஷனில் சிம்பு,எஸ்.ஜே.சூர்யா,நமிதா நடிக்க, ஸ்ரீகாந்த் தேவா இசைக்க,டீ.ஆர் வசனத்தில் ஒரு படம் கொடுங்க ஸார்), சமீபமாக சேரன்(இவர் மாயக்கண்ணாடியில மட்டுதான் முகம் பார்ப்பார் போல).

நடிகர்

பிடித்தவர் : மோகன்லால்,கார்த்தி(க்)

பிடிக்காதவர் : சேரன்,பிரசாந்த்,விஷால்

நடிகை

பிடித்தவர் : அமலா,கோவை சரளா(திறமைக்கேற்ற அங்கீகாரம் இன்னும் கிடைக்காத நடிகை).

பிடிக்காதவர் : த்ரிஷா(பாருங்க நேற்று வந்த தமனா மொழி தெரியாமல் நடிப்பில் பின்னுகிறார் இவரோ நடிப்பைப் பற்றி யோசிப்பதாகவே தெரியவில்லை).

இசையமைப்பாளர்

பிடித்தவர் : இளையராஜா,ஏ.ஆர்.ரகுமான்

பிடிக்காதவர் : ஸ்ரீகாந்த் தேவா(இவங்க அப்பா கானா பாட்டால் காணாமல் போனது போல் இவருக்கு குத்து பாட்டு),எஸ்.ஏ.ராஜ்குமார்(இவரின் ஆரம்பகால பாடல்களை கேட்கும்போதெல்லாம் இப்படி அருமையான பாடல்களைத் தந்துவிட்டு ஏன் லாலாலா.. போட்டு ஒற்றை ட்யூனையே பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கிறார் என்று தோன்றும்).

பட்டிமன்ற பேச்சாளர்

பிடித்தவர் : அறிவொளி,பாரதி பாஸ்கர்

பிடிக்காதவர் : லியோனி குரூப்பில் பேசுபவர்கள் அத்தனை பேரும்


செய்தி வாசிப்பாளர்

பிடித்தவர் : ஜெயஸ்ரீ சுந்தர்(தெளிவான உச்சரிப்பு).

பிடிக்காதவர் : ஃபாத்திமா பாபு(சீரியலை விட செய்தி வாசிக்கும்போது இவரின் நடிப்பு நன்றாக இருக்கும்,ஓவர் மேக்கப் போட்டு கவனத்தை சிதறடிப்பார்).


ஓவியர்

பிடித்தவர் : மணியம் செல்வன்(இவரின் ஓவியங்களில் கண்கள் குறிப்பாய் பெண்களின் கண்கள் பார்த்துக்கொண்டே இருக்கத் தோன்றும்),ஷ்யாம்(குவிந்த உதட்டோடு இருக்கும் சுருள் முடி பெண்கள் இவரின் ஓவியங்களில் எனக்குப் பிடிக்கும்)

பிடிக்காதவர் : அரஸ்


அழைக்க விரும்புவது

ஊர்சுற்றி

பீர்

ப்ரியமுடன் வசந்த்

டிஸ்கி:இதற்கு முன் பல தொடர் விளையாட்டுகளில் அழைக்கப்பட்டு திண்ணை என்ற ஒரே ஒரு தொடர் பதிவைத் தவிர எதையும் எழுதியதில்லை. சோம்பலன்றி வேறொன்றும் காரணமில்லை.மேலும் இந்தத் தொடர் மிகச் சிறியதாகவும் பெரிதாய் யோசிக்கத் தேவையில்லாததாகவும் தோன்றியாதால் எழுதிவிட்டேன்.

Monday, November 2, 2009

உளறல்கள்

இரு நண்பர்களுக்குள் நடந்த ஏதோ கருத்து மோதலில் கருத்தைத் தாண்டி கருத்துரைப்பவரை விமர்சிக்கும் நம் கலாச்சார வழக்கத்தின்படி ஒருவர் இன்னொருவர் மீது தரக்குறைவான வார்த்தைப் பிரயோகம் செய்திருக்கிறார். இச்சம்பவம் நடந்து ஒரு வாரம் கழித்து தவறான வார்த்தை பேசிய நண்பர் மற்றொரு நண்பருக்கு போன் செய்கிறார். கோபத்திலும் வெறுப்பிலும் இருந்த நண்பரோ அட்டெண்ட் செய்யாமல் கட் செய்து கொண்டே இருந்தார். அருகில் இருந்த என்னிடம் அப்போதுதான் நடந்தவற்றைச் சொல்லிவிட்டு ”இனிமேல் அவனுக்கும் எனக்கும் ஒத்துவராது. என்ன பேச்சு பேசிட்டான். இவ்வளவையும் மனசில் வச்சுகிட்டே இவ்வளோ நாளா என்கிட்ட பழகிட்டு இருந்திருக்கான். இப்போ என்ன மயி... போன் பண்றான்” என்று ரொம்ப ஆவேசப்பட்டார்.

கருத்து மோதல் வருகிறபோது எந்தப் புள்ளி தனிமனித தாக்குதலுக்கு இட்டுச் செல்கிறது. நம்மில் அந்யோன்யமான உறவுகளிலிருந்து ஆத்மார்த்தமான நட்புகள் வரை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சிறிதாகவோ பெரிதாகவோ கருத்து வேறுபாடு என்று வருகிறபோது முடிந்த வரை நாம் கூறும் கருத்துக்கான நியாயத்தைச் சொல்கிறோம். முடியாத பட்சத்தில் எதிராளி மீதான கேரக்டர் ஆசாஸினேஷனை கட்டவிழ்த்துவிடுகிறோம். அது நம்மை பலவீனப்படுத்தும் செயல் என்பதை அறிவதில்லை.

பல நாள் இயல்பாய் பேசிச் சிரித்து,ரகசியங்கள் பறிமாறிக்கொண்டு இருக்கும் போது பெரிதாய் தெரியாத இருவரின் தவறுகளும் கருத்து வேறுபாடு என்று வரும்போது அடுத்தவரின் அந்தரங்கத்தை பொதுவில் சொல்லக் கூட தயங்குவதில்லை. நம்பிக்கை துரோகத்தை எளிதாக செய்து விடுவோம் இது மாதிரி சந்தர்ப்பங்களில். நம்மிடம் ரகசியம் பரிமாறிக்கொண்டவனுக்கு எதிராக சூழ்நிலை நம்மை ஆக்கிவிட்டாலும் அவனின் ரகசியத்தைக் கடைசி வரை காப்பதே மனிதத்தின் உச்சம். அதைவிடுத்து அவனை அசிங்கப்படுத்துவதோ, பலி வாங்குவதோ கேவலமான செயல் இதை நம்மில் பலரும் பல சந்தர்பங்களில் யோசிக்காமல் செய்துவிடுகிறோம்.

நண்பருக்கு மீண்டும் மீண்டும் போன்கால் வந்துகொண்டே இருந்தும் அட்டெண்ட் செய்யாமல் இருந்தார்.இப்போ அவரைத் திட்டியவரின் மனநிலை என்னவாக இருக்கும் என்பதை அறிந்து, ”கோபத்தில் வார்த்தைகள் தாறுமாறாய் வெளிப்படுவது இயல்புதாங்க, கோபத்தில் திட்டுகிற வார்த்தைகளுக்கு எப்போதும் அர்த்தம் கற்பித்து கொள்ளக் கூடாது, அது அந்த நேரத்தின் உணர்ச்சியின் வெளிப்பாடு அவ்வளவுதான்,நீங்க சொல்வது போல் இத்தனை நாளும் இவ்வளவையும் மனதில் வைத்துக் கொண்டுதானே பழகியிருக்கான் என்றெல்லாம் யோசிக்காதீங்க, இப்போ அவர் உங்களுக்கு போன் செய்வதிலேயே தெரியலையா அன்று உங்களை திட்டியதெல்லாம் பெரிய குறையாக அவர் பார்ப்பாரானால் இன்று உங்களை அழைக்கவே மாட்டார், எதுவாக இருப்பினும் உங்க நட்பு அவருக்கு வேண்டும் என்பதால்தானே அழைக்கிறார், அவர் தனது தவறை உணர்ந்திருப்பார் தயவு செய்து பேசுங்க” என்றேன்.

உடன் பழகுபவர்களிடத்து அவ்வப்போது சில மைனஸ்களை அல்லது நமக்குப் பிடிக்காத விஷயங்களைக் காண்போம்.அதே போன்று மற்றவர்களும் நம்மீதும் காண்பது இயல்பு.இருப்பினும் அதை மென்மையா சுட்டிக்காட்டியோ அல்லது பெரிய விஷயமாகக் கருதாமலோ நட்பைத் தொடர்வோம் காரணம் மைனஸ்களைத் தாண்டிய பிளஸ்கள் அவரிடத்தில் இருக்கும். இப்படி கண்டும் காணாமல் இருக்கும் சின்ன சின்ன விஷயங்களைத்தான் கருத்து வேறுபாடு என்று வரும்போது எதிராளியை பலவீனப்படுத்த ஆயுதமாய் பெரிது படுத்துகிறோம். அப்படி பெரிது படுத்தி மனக்கஷ்டத்தைக் கொடுப்பதில் கிடைக்கும் திருப்தி எத்தனை வக்கிரமானது என்பதை அறிவதே இல்லை நம்மில் பலரும். அறிமுகமில்லாதவர்கள் பேசும் கடுமையான வார்த்தைகளை விட பழகியவர்கள் பேசும் சாதாரண வார்த்தைகளும் தீவிர வலியைக் கொடுப்பதற்குக் காரணம் இடையில் இருந்த அன்பு, நம்பிக்கை ஆகியவை கேள்விக்குறியாகும்போதுதான்.

இங்கே இன்னொரு விஷயம் கோபத்தில் வார்த்தைகளை வீசிவிட்ட அந்த நண்பர் இவரிடம் மன்னிப்பு கேட்கலாம், இவரும் மன்னிக்கலாம். ஆனாலும் உதிர்த்துவிட்ட வார்த்தைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் அவரை எந்த அளவிற்கு வாட்டியிருக்கும். இது போன்ற சூழலில் முடிந்த வரை நாவடக்குவது நல்லது. நட்பிற்குள் கருத்து வேறுபாடு வருகிறதா உங்களின் கருத்தை ஆழமாகச் சொல்லுங்கள், புரிய வைக்க இயலாத பட்சத்தில் அமைதியாகிவிடுங்கள் அல்லது அவ்விடத்தைவிட்டு அகன்றுவிடுவது சிறப்பு.