Tuesday, December 11, 2007

சங்கு சுட்டாலும்...... !!

அரைமணி நேரமா நின்னுகிட்டு இருக்கேன்,எப்போ பாரு நாம வர்றப்போ மட்டுதான் இந்த பஸ் நேரத்துக்கு வராம இம்சையை கொடுக்கும், உச்சி வெயில் மண்டையைப் பிளந்தது,வழிந்த வியர்வையைத் துடைத்தபடியே பஸ் வருதா எனப் பார்த்துக் கொண்டிருந்தேன்,யாரோ சட்டையைப் பிடித்து இழுப்பது போல் உணர்ந்துத் திரும்பினேன்.

"அய்யா... தர்மம் பண்ணுங்க சாமி.."-தட்டை ஏந்தியபடி பிச்சையெடுக்கும் கிழவி.

"ஏய் சில்லறை இல்ல போ அங்கிட்டு" என்று என் காத்திருத்தலின் எரிச்சலை அவளிடம் காட்டினேன்.

போவேனா என்பது போல் நகராமல் கெஞ்சிக் கொண்டிருந்தாள் கிழவி.

"இருக்கிற எரிச்சலில் இது வேற" முணுமுணுத்தபடியே சட்டைப் பையில் இருந்த நூறு ரூபாய்,ஐம்பது ரூபாய் நோட்டுகளை கையில் எடுத்து வைத்துக் கொண்டு பையைத் துழாவினேன் இருந்த சில்லறைக் காசில் தேடிப் பிடித்து ஒரு ஐம்பது காசை எடுத்துத் தட்டில் போட்டேன்,

ஒரு பெரிய கும்பிடுப் போட்டு கிழவி நகர்ந்தாள்,

திடீரெனெ நான் நின்று கொண்டிருந்த நடைமேடைக்கு எதிரே கல்லூரி மாணவர்களும்,ஆசிரியர்கள் சிலரும் ஒன்று கூடினர்,அவர்களின் கையில் வெள்ள நிவாரண நிதி என்று எழுதிய கைத்தட்டியை வைத்திருந்தனர்.

ஆசிரியர் ஒருவர் சமீபத்தில் பெய்த மழைவெள்ளத்தால் ஏற்பட்ட அழிவுகளையும், அதனால் பாதிக்கப் பட்ட மக்களின் அல்லல்களையும் உருக்கமாக எடுத்துக்கூறி, இறுதியாக "எங்கள் மாணவர்கள் உங்களிடம் உண்டியல் ஏந்தி வருவார்கள் தாங்கள்,தங்களால் இயன்ற உதவியைச் செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

மாணவர்கள் நாலாப் பக்கமும் உண்டியலை ஏந்திச் சென்று கொண்டிருந்தனர், நான் நின்று கொண்டிருந்த நடைமேடைக்கும் ஒருவன் வந்து கொண்டிருந்தான்.

"இவங்களுக்கெல்லாம் வேற வேலை இல்ல" என்று நினைத்தபடியே பஸ் வருதாவெனப் பார்த்துக் கொண்டிருந்தேன்,

எங்க ஊர் பஸ்ஸைத் தவிர மற்ற அனைத்துப் பஸ்ஸும் வந்து போய்க்கொண்டிருந்தது.

அதற்குள் உண்டியல் ஏந்திய மாணவன் என்னை மிக நெருங்கிவிட்டான், என்னிடம் வருவதற்குள் பஸ் வந்து விட வேண்டுமென்று படபடப்போடு நான்.

"சனிய புடிச்ச வண்டி" இன்னும் வரல,

மாணவன் என்னை நெருங்க நெருங்க, முகத்தை வேறு பக்கமாக திருப்பிக் கொண்டேன்,அப்படியே என்னிடம் கேட்டாலும் "இல்லையென சொல்லிட வேண்டியதுதான் " என நினைத்தபடியே நின்றுகொண்டிருந்தேன்.

"தம்பி" என யாரோ கூப்பிடுவதைப் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன்,சற்று முன் என்னிடம் பிச்சை கேட்ட கிழவி,அந்த மாணவனைக் கூப்பிட்டு தன் தட்டில் உள்ள சில்லறையெல்லாம் அந்த உண்டியலில் போட்டுக் கொண்டிருந்தாள்".

"யாரோ என் முகத்தில் காரி உமிழ்ந்தது போல் இருந்தது!".


(சர்வேசனின் சிறுகதைப் போட்டிக்காக எழுதிய சிறுகதை,இது எனது முதல் முயற்சி,குறையிருப்பின் பின்னூட்டத்தில் கூறுங்கள்,திருத்திக் கொள்கிறேன்.)