Monday, March 29, 2010

எங்க ஊரின் வரலாறு


 எங்க ஊரில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மற்றொரு கிராமத்தின் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் எங்கள் ஊரைச் சேர்ந்தவர்களோடு நன்றாகப் பழகினாலும் தண்ணீர் உட்பட எதுவுமே கொடுக்க மாட்டார்களாம். ”முறைப்பாடு இருக்கிறது தெய்வ குத்தம் ஆகிடும்” என்று சொல்வார்களாம்.இதன் பின்னணியில் ஏதோ ஒரு சுவாரஸ்யம் இருப்பதையறிந்து ஊர் பெருசு ஒன்றிடம் கேட்டபோதுதான் எங்க ஊரின் வரலாறு எனக்குத் தெரிய வந்தது.

எந்த காலக் கட்டத்தில் நடந்தது என்பது தெரியவில்லை, தற்போது எங்கள் ஊர் அமைந்திருக்கும் இடத்திற்கு 2கி.மீ தொலைவில் ஊரின் தெற்கு எல்லையாக காட்டாறு இருக்கும். அந்த காட்டாற்றின் மறுகரையில் தான் எங்களின் பூர்வீகக் கிராமம் இருந்ததாம். நான் சொல்லிக் கொண்டிருக்கும் கதை நடந்த காலத்தில் அடிக்கடி பெரு மழை பெய்து காட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் அங்கே குடியிருந்த எங்கள் முன்னோர்கள் வீடு, கால்நடைகள் முதலிய எல்லாவற்றையும் இழக்க நேர்ந்ததால் அங்கிருந்து இடம் பெயர்ந்து தற்போது இருக்கும் இவ்விடத்திற்கு வந்தார்களாம். அப்படி வந்தபோது அங்கே ஏற்கனவே பூர்வீகக் குடியாய் இருந்த சொற்ப எண்ணிக்கையிலான மற்றொரு சமுதாயத்தினரை மெஜாரிட்டியான எம்முன்னோர்கள் விரட்டியிருக்கிறார்கள். அப்படி விரட்டப்பட்டவர்கள் தான் தற்போதும் தண்ணீர் கூட கொடுக்க மறுக்கும் அம்மக்கள்.(நியாயம்தான்).

எனது முன்னோர்கள் வாழ்ந்த இடமாகச் சொல்லப்படும் அந்த காட்டாற்றின்
மறுகரையில் இன்றும் பாழடைந்த நிலையில் மிகவும் சிறிய அளவிலான பொன்னியம்மன் மற்றும் சிவன் கோயில்கள் இருக்கின்றன.

பொன்னியம்மன் சிலை

பொன்னியம்மன் கோவிலில் அம்மனின் சிலை மட்டுமே இருக்கிறது, சுற்றுச் சுவர் முற்றிலும் சிதிலமடைந்து விட்டது.

சிவன் கோவில் பொன்னியம்மன் கோவிலைவிட சற்று பெரியது, மூன்று அறைகளாகத் தடுக்கப்பட்டிருக்கும் இக்கோயிலில் தற்போது மூலவர் அறை மட்டுமே முழுதாய் இருக்கிறது. ஆள் நடமாட்டம் இல்லாததால் புதர்களும், மரங்களும், பாம்பு சட்டைகளுமாய் ஒரு வித அச்சத்தை தருவிக்கும் தோற்றத்தோடு இருக்கிறது.






சிவன் கோவில்

இப்படி ஒரு கோயில் இருப்பதே எங்கள் ஊரின் இளைய தலைமுறையினர் நிறைய பேருக்குத் தெரியவில்லை. நானும் கூட இக்கதையை அறிந்த பிறகே அங்கே சென்று பார்த்தேன்.
நந்தி
மூலவர் அறை



இந்த செங்கற்கலின் வடிவங்கள் மூன்று விதங்களில் இருக்கின்றன.

கோயிலைக் கட்டப் பயன்படுத்தியிருக்கும் சுட்ட கற்களில் வடிவமும்,அதை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி சுண்ணாம்புக் கலவையால் பூசியிருக்கும் விதமும் அக்காலக் கட்டிடக் கலையின் நேர்த்தியை எண்ணி வியக்க வைத்தது.


சிவன் கோவிலின் உட்புறம் இருக்கும் பெண் சிலை


முட்செடிகளுக்கிடையில் இருக்கும் சிவன் கோவில்

அந்த கோயிலினுள் நின்ற போது பெரிய தொல்பொருள் ஆராய்ச்சியாளன் மாதிரி பயங்கரமான ஒரு ஃபீல்.(உள்ளுக்குள் உதறலோடு).வைரமுத்து மாதிரி “வண்டல்மண் இதிகாசம்” என்று ஒன்று எழுத வேண்டும் என்ற பேராசையெல்லாம் எனக்கு அங்கே நின்றபோது வந்ததுன்னு சொன்னா நீங்க சிரிப்பீங்கதானே,ஆனா நிஜமாவே அப்படித்தாங்க நெனச்சேன்.

கொசுறு:படங்கள் மட்டுமே புதிது, கட்டுரை மீள் பதிவு.

11 comments:

துபாய் ராஜா said...

அழகான புதிய படங்களோடு அருமையான மீள்பதிவு .

இராகவன் நைஜிரியா said...

மீள் பதிவு (இடுகை) என்றாலும் கூட படிக்க நன்றாக இருக்கின்றது.

படங்கள் - மனதை என்னவோ செய்கின்றது.

Chitra said...

எனக்கு புகைப்படங்கள் சரியாக டவுன்லோட் ஆகவில்லை. ஆனால், மீள் பதிவில் தகவல்கள் அருமை.

'பரிவை' சே.குமார் said...

oorukkukku poittu vanthuttu sutachchuta oori patriya seithiyoda... vaanga... orrula ellorum nalama?
nalla pathivu

க.பாலாசி said...

சில ஊருகளுக்கு இந்த மாதிரி ஒரு வரலாறு சுவாரசியப்பின்னணியோட இருக்கும்...

காலப்போக்கில் மிஞ்சிகிடக்கும் கற்சிலைகளும் கோயில் சுவர்களும் அந்த வரலாறை இழுத்துப்பிடித்துகொண்டிருக்கும். நாம் சென்று பார்க்கும்பொழுது ஒரு பிரமிப்பு ஏற்படும். தாங்கள் சொல்வதுபோல் ஊள்ளுர பயமிருந்தாலும்....

நல்ல இடுகை..

நாடோடி இலக்கியன் said...

நன்றி துபாய் ராஜா,

நன்றி ராகவன் நைஜிரியா,

நன்றி சித்ரா,

நன்றி சே.குமார்,

நன்றி பாலாசி.(பின்னூட்டத்திலேயே அசத்துறீங்க நண்பா).

Thamira said...

பாலாசியின் கருத்துகளுக்கு ரிப்பீட்டு. அப்புறம் ரொம்பத்தான் துணிச்சல் உங்களுக்கு. காத்து கருப்பு அடிச்சிரப்போவுது.. பாத்து..

ஊரு எதுனு சொல்லவேயில்லையே இலக்கியன்.

ராம்ஜி_யாஹூ said...

it is not fair to hide the name of the village

நாடோடி இலக்கியன் said...

நன்றி ஆதி,(எங்க ஊர் பேரு முதலிப்பட்டி புதுகை மாவட்டத்தின் எல்லையில் தஞ்சையை ஒட்டியிருக்கிறது).

நன்றி ராம்ஜி,(ஆதிக்கான பதிலை காணவும் நண்பரே).

Thekkikattan|தெகா said...

உங்க பயத்தை என்னால் உணர முடிகிறது. ஏன்னா இது மாதிரி ஓர் இடம் எங்க ஊருக்கு போகும் வழியில் இருக்கும். அந்த இடத்தை கடக்கும் பொழுது என்ன உதறல் எடுக்குங்கிறீங்க - அதனையொட்டிய பாட்டு என்ன, மிதி வண்டி அழுத்துற வேகமென்னா :))

பதிவு அருமை!

நாடோடி இலக்கியன் said...

நன்றி தெகா.(பயமா இருக்கும்போது அனிச்சையாய் பாட்டு வந்திடுதே ஏங்க?உங்க பின்னூட்டத்தில் வேகமாய் சைக்கிள் மிதித்ததைப் படித்ததும் பத்தாம் வகுப்புப் படித்தபோது ட்யூஷன் முடிந்து இரவில் ஒரத்தநாட்டிலிருந்து தனியாக சைக்கிளில் வருவேன்,இடையில் மூன்று இடங்களில் சுடுகாடு இருக்கும் அவ்விடங்களைக் கடக்கையில் ஸ்பீடா பெடல்போட்ட நினைவு வந்து போனது).