Thursday, May 7, 2009

இளைய திலகம் பிரபு....

பர்ஸனலா எனக்கு பிடித்த நடிகர் நவரச நாயகன் கார்த்திக்(இப்போ அவர் காமடி பண்ணிட்டு இருக்காரு).இவரைப் பற்றி ஒரு பதிவு எழுதி வேறு யாரேனும் எழுதியிருக்கிறார்களா என வலையில் தேடிய போது அருண்மொழிவர்மனின் இந்த பதிவும்,முரளி கண்ணனின் இந்த பதிவும் நான் எழுதி வைத்திருந்தது ஒன்றுமே இல்லையென்று நினைக்க வைத்ததால் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டேன்.


எனக்கு பிடித்த இன்னொரு நடிகர் இளைய திலகம் பிரபு,நேற்று டீ.வியில் கல்யாண் ஜுவல்லர்ஸ் விளம்பரத்தில் பார்த்தபோது திடிரென அவரைப் பற்றி ஒரு பதிவு போடலாம்னு தோணியதன் உடனடி விளைவு இப்பதிவு.



1982-ல் சங்கிலியில் சிவாஜியுடன் அறிமுகமாகி தொடர்ந்து நீதிபதி, நேர்மை, சாதனை,வெள்ளை ரோஜா என மேலும் சில படங்களிளும் சிவாஜியுடன் நடித்துக்கொண்டிருந்த பிரபு பிறகு கோழிக்கூவுது, சூரக்கோட்டை சிங்கக்குட்டி போன்ற படங்களின் மூலம் தனிக் கதாநாயகன் ஆனார்.(ரெண்டிலுமே சில்க் ஸ்மிதாதான் ஜோடி). இந்த படங்களின் வெற்றியால் (வெற்றி படங்கள்தானே முரளி கண்ணன்) அன்றைய நயந்தாரா, திரிஷாக்களான அம்பிகா,ராதா போன்ற பெரிய நடிகைகளுடன் ஜோடிசேர்ந்து முன்னணி கதாநாயகர்கள் வரிசையில் இடம்பிடித்தார்.


1987 ல் வெளியான ஆனந்த் படம் இவரை ஒரு நல்ல நடிகராகவும்,அதே படத்தில் இடம்பெற்ற "ஓல ஓலக் குடிசையிலே" பாடல் பிரபுவை ஒரு சிறந்த டான்ஸராகவும் அடையாளப்படுத்தியது."எப்படி இந்த உடம்பை தூக்கிட்டு அசத்தலா ஆடுறான் பாரு" என அப்போதைய சினிமா ரசிகர்களை ஆச்சர்ய படுத்தினார்.ஆனந்த் படத்திற்கு பிறகுதான் இளம் ரசிக,ரசிகைகள் அவருக்கு கிடைத்தார்கள் என்றால் மிகையில்லை.

முன்னணி நாயகனாக வலம் வந்த போதே எந்தவித ஈகோவும் இல்லாமல் அறிமுக நாயகர்கள் முதல் பெரிய நடிகர்கள்வரை எல்லோருடனும் இரண்டு நாயகர்களில் ஒருவராக சேர்ந்து நடித்த பெருமை தமிழ் திரையுலகில் இவரை மட்டுமே சாரும்.அதுவும் குறிப்பாக அப்போதிருந்த முன்னணி நடிகர்களான ரஜினி(குரு சிஷ்யன்,தர்மத்தின் தலைவன்,சந்திரமுகி), கமல்(வெற்றி விழா, வசூல்ராஜா), விஜயகாந்த்(காலையும் நீயே மாலையும் நீயே), சத்யராஜ்(சின்னத்தம்பி பெரியதம்பி,பாலைவன ரோஜாக்கள்,சிவசக்தி), கார்த்திக்(அக்னி நட்சத்திரம்,உரிமை கீதம்,தை பொறந்தாச்சு,குஸ்தி) ஆகிய எல்லோருடனும் இணைந்து நடித்திருக்கிறார்.

1986ம் வருடம் வெளிவந்த அறுவடை நாளில் பிரபுவும் அவரது அண்ணன் ராம்குமாரும் நடிப்பில் அசத்திருப்பார்கள்.இந்த படம்தான் பின்னாளில் பல படங்களில் அவர் ஏற்று நடித்த வெகுளித்தனமான கதாநாயக பாணிக்கு பிள்ளையார்சுழி போட்டது எனலாம்."சின்னப் பூவே மெல்ல பேசு","ஒருவர் வாழும் ஆலயம்" போன்ற படங்களில் இவர் கதாநாயகன் இல்லையென்றாலும் அப்படங்களில் இவர் எற்று நடித்த கதாபாத்திரங்களாலேயே அந்த படங்கள் பேசப்பட்டன.

பிறகு 90களில் பிரபு,குஷ்பு,பி.வாசு கூட்டணி "சின்னத்தம்பி"யில் ஆரம்பித்து பல வெற்றிபடங்களை கொடுத்தனர். பி.வாசுவின் படங்களில்தான் பிரபுவின் கண்ணக்குழி சிரிப்பு,திரு திரு முழிப்பு போன்ற பிரபுவின் மேனரிஸங்கள் பிரபலமாகியது எனலாம். மற்ற முன்னணி நடிகர்களைப் போன்றே இவரின் 100வது படமான ராஜகுமாரனும் ஊத்திக்கொண்டது இதே 90களின் நடுவில்தான்.(விதி விலக்கு விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன்).


"சின்னத்தம்பி பெரியதம்பி""அரங்கேற்ற வேளை","சின்ன மாப்ளே","வியட்னாம் காலனி" ,"போன்ற படங்களில் இவரின் காமடி கலாட்டாக்கள் நினைத்தாலே சிரிப்பை வரவைக்கக் கூடியவை.அந்த அளவிற்கு காமெடியிலும் தனது திறமையை நிரூபித்தவர்.கெஸ்ட் ரோலில் இவர் நடித்த "அஞ்சலி","பிரியங்கா" ஆகிய படங்களிலும் சிறிது நேரமே வந்தாலும் அந்த படங்களை நினைக்கும்போது இவரின் நினைவு வருவது இவரின் நடிப்பின் திறமைக்குச் சான்று.


1994 - 1995 வருடங்களில் விஜய், அஜித் போன்ற இளம் நடிகர்களின் அறிமுகமான சமயத்தில் இவர்காலத்து நடிகர்களுக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கிய நேரத்தில்தான் இயக்குனர் சிகரம் பாலச்சந்தரின் "டூயட்" வாய்ப்பும்,இயக்குனர் இமயத்தின் "பசும்பொன்னும்" இவருக்கு கிடைத்தது. இந்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும் பெரிய இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்த பெருமை அவருக்கு கிடைத்தற்காக பெருமைபட்டிருப்பார்.



பிறகு வாய்ப்புகள் குறைய தொடங்கியதும்,"திருப்பதி ஏழுமலை வெங்கடேசா","கந்தா கடம்பா கதிர்வேலா","பட்ஜெட் பத்மநாபன்","பந்தா பரமசிவம்" போன்ற சிறிய பட்ஜெட் படங்களில் ஃபீல்ட் அவுட்டான ரோஜா,ரம்பா போன்ற நாயகிகளுடன் சேர்ந்து நடித்தார்.இவற்றில் சில படங்கள் வியாபார ரீதியாக வெற்றியும் பெற்றன.

அதன் பிறகு கதாநாயகனாகத்தான் நடிப்பேன் என்றெல்லாம் இல்லாமல் தன் வயதுக்கேற்ற கதாபாத்திரங்களில் நடிக்கத்தொடங்கி "சம்திங் சம்திங்", "தாமிரபரணி","பில்லா","அயன்" என்று பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கும் பிரபு விளம்பரங்களிலும் அசத்துகிறார்.

கார்த்திக்கும் பிரபு பாணியை கையாண்டிருந்தால் என்னை போன்ற கார்த்திக்கின் ரசிகர்களுக்கு நன்றாக இருந்திருக்கும்.(ச்சே என்ன மாதிரி நடிகன் இப்படி கோமாளி மாதிரி சித்திரிப்பட்டுவிட்டார்
அரசியலில்). மணிரத்னத்தின் "ராவணா"வில் இருவரும் நடித்துவருவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.பார்ப்போம் அக்னி நட்சத்திரங்கள் என்ன செய்திருக்கிறார்களென்று.

7 comments:

nagoreismail said...

ராபர்ட்-ராஜசேகரனின் மனசுக்குள் மத்தாப்பு மட்டும் விடுபட்டுள்ளது. இந்த படத்தை பார்த்து விட்டு தான் சிவாஜி அவர்கள் பிரபுவுக்கு நடிக்கவும் வருகிறது என்று சொன்னதாக படித்த ஞாபகம்

தினேஷ் said...

நன்றாக உள்ளது,,

முரளிகண்ணன் said...

நல்ல பதிவு. தெளிவான விபரங்களுடனும் நல்ல நடையிலும்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நல்ல பதிவு..,


பிரபு படித்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவார்..,

நாடோடி இலக்கியன் said...

@நாகூர் இஸ்மாயில்,
தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே,பிரபு படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று மனசுக்குள் மத்தாப்பு,அந்த படத்தில் வரும் "ஓ பொன்மங்குயில்" பாடல் என்னோட ஆல்டைம் ஃபேவரிட் பாடல்.அந்த படத்தை நினைவூட்டியதற்கு நன்றி.


@சூரியன்,
நன்றி உங்களின் தொடரும் வருகைக்கு.


@முரளி கண்ணன்,
தெளிவான விபரங்களுடன் இருக்கா(!) சினிமா சம்பந்தமா எழுத நினைத்தால் உங்க நினைவு வந்துடுதுங்க அதனாலேயே கொஞ்சம் சிரத்தையோடு எழுத வேண்டியிருக்கிறது,இருந்தாலும் இன்னும் கொஞ்சம் தெளிவாக எழுதியிருக்கணும்.பிரபு-குஷ்பு இணையில் மொத்தம் 11 படங்கள் போன்ற சில விஷயங்களையும் சேர்த்திருக்கலாம்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி முரளி.


@சுரேஷ்,
வாங்க சுரேஷ்,
//பிரபு படித்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவார்..,//
உள்குத்து எதுவும் இல்லையே?
வருகைக்கு நன்றி நண்பா.

ராஜ பார்வை said...

இன்று ஒரு தயாரிப்பராளராகவும் எந்தவித ஈகோவும் இல்லாமல் இயல்பாக நடந்துகொள்கிறார். (குஷ்பூ விஷயம் வேறு தலைப்பில் ..)

நாடோடி இலக்கியன் said...

@ராஜாவின் பார்வை,

//ஒரு தயாரிப்பராளராகவும் எந்தவித ஈகோவும் இல்லாமல் //

உண்மை.

குஷ்பு விஷயமும் இங்கே வேண்டாமென்றுதான் தவிர்த்தேன்.
முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.