Monday, June 15, 2009

கணிதமும் கிராமப்புற மாணவர்களும்..

"ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு திறனும், உள்வாங்கும் கெப்பாசிட்டியும் இருக்கிறது. வளர வளர அதனளவுகளில் வேறுபடலாம். சிலருக்கு ஒருமுறை,சிலருக்கு இருமுறை,பலருக்கு பலமுறை.. ஆனால் புரிந்தே கொள்ள முடியாது என்று எதுவும் இல்லை.. புரிந்தே கொள்ளமுடியாதவர்கள் யாருமே இல்லை"

என்று நண்பர் நர்சிம் தனது இந்த பதிவில் குறிப்பிட்டிருக்கும் கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்வேன். காரணம் எனது நண்பர் ஒருவரின் அனுபவத்திலிருந்தே ஒன்றைச் சொல்ல முடியும். நண்பர் தன்னுடைய முதுகலை பட்டப் படிப்பை தொலைதூரக் கல்வி மூலம் பயின்று கொண்டிருந்த சமயம், ஒரு கிராமப்புற அரசு பள்ளியில் ஒரு வருட காலம் பத்தாம் வகுப்பிற்குக் கணித ஆசிரியராக பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது அங்கே கணித ஆசிரியரின் பணியிடம் நிரப்பப் படாமல் இருந்ததால் தன்னார்வ ஆசிரியராக பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரிடம் அனுமதி பெற்று பணியாற்றினார். அதே பள்ளியில்தான் அவரும் பத்தாம் வகுப்புவரை பயின்றார்.தனக்கு பயிற்றுவித்த அதே ஆசிரிய பெருமக்களோடு சக ஆசிரியனாக வேலை பார்த்த அந்த ஒரு வருட காலம் தன் வாழ்வில் ரொம்ப இனிமையானதொரு தருணம் என்று அடிக்கடிச் சொல்லிக்கொள்வார்.

பத்தாம் வகுப்பு கணிதம் மிகவும் எளிதான ஒன்று என்பது பொதுவாக நிறையபேரின் கருத்தாகும்.அப்படிச் சொல்பவர்கள் பெரும்பாலும் நகர்புறப் பள்ளிகளில் பயின்றவர்களாக இருக்கக் கூடும் என்பது என் கருத்து. ஏனெனில் பத்தாம் வகுப்பின் கணித பாடத்திலும், ஆங்கில பாடத்திலும் தேர்ச்சி பெறாமல் கல்வியைத் தொடர முடியாமல் போன எத்தனையோ இளைஞர்களை கிராமப்புறத்தில் பார்க்கலாம். கணிதம் என்றாலே இன்றும் நிறைய மாணவர்களுக்கு எட்டிக்காயாகவே இருக்கிறது.கணிதத்தின் மேல் உள்ள வெறுப்பின் காரணமாகவே கணித ஆசிரியரை "கணக்கு வாத்தி" என்று அழைப்பதெல்லாம்.

ஒவ்வொரு வருடமும் தேர்வு முடிவுகளை பார்க்கும்போது கிராமப்புற பள்ளிகளில் அதிகமாகக் கணிதத்திலேயே தேர்ச்சி விழுக்காடுக் குறைவாக இருக்கும். நண்பரின் பள்ளியிலும் அதே நிலைதான் நீண்ட வருடங்களாகத் தொடர்ந்து இருந்தது.

நண்பர் பணிபுரிந்த அந்த வருடத்தில் இரு பிரிவுகளாய் பிரிக்கப்பட்டிருந்த பத்தாம் வகுப்பில் ஐம்பது மாணவர்களும், ஐம்பது மாணவிகளும் இருந்தனர். வகுப்பெடுக்கச் சென்ற இரண்டு நாட்களிலேயே மாணவர்களின் தரம் மிகவும் மோசமாக இருந்ததை உணர்ந்து, சொல்லப் போனால் அடிப்படைக் கூட்டல் கணக்கிலேயே அவர்களில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தினருக்குப் பிரச்சினை இருந்திருக்கிறது. தானும் அதே பள்ளியில் பயின்றதாலும் அதே பகுதியைச் சேர்ந்தவர் என்பதாலும் அவர்களின் நிலைமையை புரிந்து கொண்டு, அதற்கேற்றார் போல் எப்படி பாடம் நடத்தலாம் என்று திட்டம் வகுத்திருக்கிறார்.

பாடம் எடுக்கச் செல்லும்போதே தூங்கி வழியும் மாணவர்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க முதலில் கணித பாடத்தை புரிய வைப்பதற்கு முன்பாக, தன்னை அவர்களுக்குப் பிடிக்க வைத்திருக்கிறார். பொது அறிவு, விடுகதைகள், கிரிக்கெட், சினிமா இப்படி அவர்களுக்கு ஈடுபாடான விஷயங்களை அடிக்கடி பாடம் நடத்தும்போது இடை இடையே சொல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார். தவிர வாரத்தின் ஏதாவது ஒரு நாள் பாடமே நடத்தாமல் நல்ல பயனுள்ள விஷயங்களையும் விளையாட்டாகச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார். (அந்த விளையாட்டிலும் ஆங்காங்கே கணித ஃபார்முலாக்களை விளையாட்டோடு தொடர்பு படுத்தி அவர்களின் மனதில் பதிய வைத்திருக்கிறார்). ஓரிரு வாரங்களிலேயே கணித பாடவேளை எப்போது வரும் என்று ஏங்குமளவிற்கு மாணவர்களின் மனதிற்கு பிடித்த ஆசிரியராக ஆகியிருக்கிறார். அதன் பிறகு பாடம் நடத்துவது மிகவும் எளிதாக இருந்திருக்கிறது. அரையாண்டு தேர்வுக்கு முன்னதாகவே சிலபசை முடிக்க வேண்டுமென்பதால் சீக்கிரமாகவே சிலபசை முடித்துச் சோதனைத் தேர்வு நடத்தியதில் முப்பது மாணவர்கள் அறுபது சதவிகித மதிப்பெண்ணும், மற்றவர்கள் அதற்கு கீழும், பலர் தேர்ச்சி பெறாமலும் இருந்திருக்கிறார்கள்.

பொதுவாக ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது எல்லா மாணவர்களுக்கும் புரிந்ததா என்பதை யோசிக்காமல் நன்றாக படிக்கும் சில முந்திரிக் கொட்டை மாணவர்கள் புரிந்து கொண்டவுடன் அடுத்தடுத்த பாடத்திற்கு சென்றுவிடுவர். காரணம் ஒவ்வொருத்தரையும் தனித்தனியாக பார்த்துக் கொண்டிருந்தால் கண்டிப்பாக சிலபசை கவர் செய்ய முடியாது என்பதுதான், அது உண்மையும் கூட,ஏனெனில் அந்த அளவிற்கு மாணவர்களின் உள்வாங்கும் திறனில் வேறுபாடுகள் இருக்கும்.

இதை சரியாக புரிந்து கொண்ட எனது நண்பர், அதற்கு அடுத்த கட்டமாக முதல் வகுப்பில் தேறிய மாணவர்களை தனியாகப் பிரித்து அவர்களுக்கு அதிக மதிப்பெண்கள் எடுப்பதற்கான பயிற்சிகளும், மற்றவர்களுக்கு முதல் பாடத்திலிருந்து மீண்டும் நினைவூட்டும்(refresh) விதமாக ஒவ்வொரு பாடமாக நடத்தியபோது,ரொம்ப எளிதாக அடுத்த கட்டமாக நிறைய முந்திரிக் கொட்டை மாணவர்களை உருவாக்க முடிந்திருக்கிறது. அதுவரை கடைசி பெஞ்சில் அமர்ந்து கொண்டிருந்த மாணவர்களுக்கு இருந்த தாழ்வு மனப்பான்மையையும், அடிப்படை சந்தேகங்களையும்(ஆறாம் வகுப்பிலேயே தெரிந்திருக்கக் கூடியவை) போக்கியதும் அவர்களின் பிக்அப் செய்து கொள்ளும் திறனில் நல்ல முன்னேற்றம். குறிப்பாக மாணவர்களிடம் "இது கூடத் தெரியாதா?" போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திருக்கிறார். அவர்கள் தவறாக கணக்கு செய்தாலும்கூட "பரவாயில்லையே, சின்ன தப்புதான் பண்ணியிருக்க, இப்படித்தான்டா ஆரம்பத்தில் அவனும்(நன்றாக படிக்கும் மாணவனின் பெயரைக் குறிப்பிட்டு) தவறுகள் செய்தான், அவனை மாதிரியே நீயும் அடுத்த டெஸ்டில் நிறைய மார்க் எடுப்பப் பாரு" என்று மோடிவேட் செய்திருக்கிறார். இப்படி ஒவ்வொரு கட்ட பயிற்சியின் போதும் ஒவ்வொரு மாணவனைப் பற்றியும் தனிப்பட்ட முறையில் அவர்களின் பலம், பலவீனம் தெரிய வந்திருக்கிறது. பிறகு அதற்கேற்றார்போல பயிற்சி முறைகளைக் கையாண்டு, கொஞ்சம் கொஞ்சமாக எல்லோரையுமே முதல்தர மாணவர்களாக்கியிருக்கிறார்.


மாணவர்களை ஐந்து நபர்கள் கொண்ட குழுக்களாகப் பிரித்து ஒவ்வொரு குழுவிலும் மிக நன்றாக படிக்கும் மாணவனிலிருந்து பிலோ ஆவரேஜ் மாணவன் வரைக்கும் எல்லாவித மாணவனும் இருக்கும்படி அமைத்து குழுக்களுக்கிடையே போட்டி தேர்வு வைத்து எந்த குழுவின் சராசரி மதிப்பெண் கூடுதலாக இருக்கின்றதோ அவர்களுக்கு சிறு சிறு பரிசுகள் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். இதனால் நன்றாக படிக்கும் மாணவன் தனது குழுவில் உள்ள மற்ற மாணவனின் மதிப்பெண்ணிலும் அக்கறை செலுத்த ஆரம்பித்ததால் ரொம்ப நல்ல பலன் கிடைத்திருக்கிறது.

இறுதியாக ஒன்றுமே செய்ய முடியாத அளவிற்கு இருந்த ஏழு மாணவ மாணவிகளை மட்டும், தலைமை ஆசிரியரிடம் இறுதி ரிப்போர்ட் கொடுத்த போது இவர்கள் ஏழுபேரைத் தவிர மற்ற அனைவரும் நல்ல மதிப்பெண்ணில் தேறிவிடுவர். இருப்பினும் "இவர்களையும் நான் தேர்ச்சி பெற வைத்து விடுகிறேன் சார்" என்று கூறியிருக்கிறார். மற்ற சுற்றுவட்டார பள்ளிகளில் இது போன்ற மாணவர்களைப் பொதுத்தேர்வு எழுத அனுமதிப்பதில்லை. அவர்களின் பெற்றோர்களை வரவழைத்து அவர்களிடம் "அந்த மாணவர்களை தனித்தேர்வர்களாக எழுதச் சொல்லுங்கள் அதற்கான அனைத்து உதவிகளையும் பள்ளி நிர்வாகமே ஏற்றுக்கொள்ளும்" என்று பேரம் பேசி 100% ரிசல்ட்டை காட்டிக் கொள்வார்கள். ஆனால் நண்பரின் பள்ளி இந்த மாதிரியான மலிவான விளம்பரங்களை நாடுவதில்லை.

அந்த வருட பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் சம்பந்தப் பட்ட பள்ளியில் இரண்டு மாணவியர்களைத் தவிர அனைவரும் கணிதத்தில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து தேர்வாகியிருந்தனர். அந்த பள்ளிக்கூடம் ஆரம்பித்து நாற்பது வருட காலத்தில் முதன் முறையாக கணிதத்தில் சதம் எடுத்ததும் அந்த வருடத்தில்தான். இரண்டு மாணவர்கள் நூற்றுக்கு நூறும்,95 -99 மதிப்பெண்கள் வரை பதினைந்து மாணவர்களும், பணிரெண்டு மாணவர்களைத்தவிர மற்ற அனைவரும் கணிதத்தில் எழுபது மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தேர்ச்சியடைந்திருந்தனர். இதில் மற்ற பாடங்களில் அவர்கள் எடுத்த மதிப்பெண்களை விட கணிதத்திலேயே எல்லோரும்(நூறு பேருமே) கூடுதலான மதிப்பெண்களைப் பெற்றிருந்தனர். ஃபெயிலான அந்த இரண்டு மாணவிகள் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெறாதவர்கள், அவர்களின் மதிப்பெண்களிலும் கணிதத்திலேயே அதிகமாக எடுத்திருந்தனர்.

இவ்வளவுக்கும் நண்பர் மாணவர்களை அடிப்பது கிடையாது, சனி ஞாயிறுகளிலும் கூட சிறப்பு வகுப்பெடுக்கச் சொல்லி அந்த மாணவர்கள் நண்பரை கெஞ்சுவதையும் நான் நேரிலேயேப் பார்த்திருக்கிறேன். ஆனாலும் அவரிடம் எந்த அளவிற்கு பாசமாக இருப்பார்களோ அதே அளவிற்கு பயத்தோடவும் இருப்பார்கள். எந்த மாணவனையும் அடிக்காமலேயே அன்பு கலந்த மிரட்டலிலேயெ அவர் இதைச் சாதித்திருக்கிறார்.

இது ரொம்ப சாதாரண விஷயமாகத் தோணலாம் ஆனால் அதன் முன்பும் பிறகும் அந்த பள்ளியில் இன்றுவரை யாரும் செண்ட்டம் எடுக்கவும் இல்லை, கணிதத்தில் அந்த அளவிற்குத் தேர்ச்சி சதவிகிதமும் இன்றுவரை இல்லை. ஒவொரு வருடமும் ரிஸல்ட் வருகிற போதெல்லாம் கண்டிப்பாக எனது நண்பனைப் பற்றிய பெருமையான பேச்சுகள்"அந்த பையன் நல்லா சொல்லி கொடுத்தானப்பா,அது மாதிரி ஒருத்தர் கிடைக்கணும்"என்று இன்றும் அந்த ஊரில் பலர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

எனது நண்பன்,தானே ஒரு மாணவனாக இருந்துகொண்டே, முரட்டு சுபாவம் உள்ள கிராமத்து பசங்களிடம் ஒரே வருடத்தில் இதை செய்து காட்டியிருக்கும்போது, ஏன் அனுபவம் உள்ள ஆசிரியர்களால் இதைச் செய்ய முடிவதில்லை?.

13 comments:

நர்சிம் said...

மிக மகிழ்வாக உணர்கிறேன் நண்பா.. என் பதிவின் தொடர்ச்சியாய் இது இருப்பதற்கும் என் கருத்துக்களை உங்கள் நண்பர் போன்றவர்கள் ஏற்கனவே செயலாற்றி இருப்பதும்.. மிக்க மகிழ்வே.. இது போன்ற சிந்தனைகள் பகிர்ந்து கொள்ளப்படவேண்டும்.. யாரவது ஒருவர் அதைப் படித்து எங்காவது செயல்படித்தினாலே போதும்.. முதல்கட்ட வெற்றியே.

Anonymous said...

this is the real problem faced by the every village students.....n the technique as the teacher followed is really great...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நெகிழ்ச்சியான அனுபவம்..,

ராஜ நடராஜன் said...

நல்ல இடுகை.உளவியல் ரீதியாக பெரும்பாலோர் கல்வியைத் தொடராததற்கு கணக்கு வகுப்பும் ஒரு காரணம் என்பதை தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.

Thamira said...

மனதுக்கு நிறைவான பதிவு. இதுபோன்ற ஆசிரியர்கள் பெருகவேண்டும் என்பது என் அவா.. எனக்கும் இதுபோன்ற ஒரு ஆசிரியனாக வேண்டும் என்ற கனவுகள் முன்பிருந்ததுண்டு.!

வாசுகி said...

மிகவும் பயனுள்ள பதிவு.
வாழ்த்துக்கள்.

ஊர்சுற்றி said...

//"இது கூடத் தெரியாதா?" //

இப்படிச் சொல்லிச் சொல்லியே பல மாணவர்களைத் தாழ்வுமனப்பான்மையில் உழலவிட்டுவிடுவார்கள் நிறைய ஆசிரியர்கள். கண்கூடாகப் பார்த்த உண்மைகளை வைத்து சொல்கிறேன்.

தங்கள் நண்பருக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். :)

சுட்டிப் பையன் said...

நீங்களும் சில நாட்கள் கணித ஆசிரியராகப் பணியாற்றினீர்கள் என நமது நண்பர் ஒருவர் சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறேன் !
எனது ஐயம் உங்களது நண்பர் நீங்கள் தானே ?

நாடோடி இலக்கியன் said...

நன்றி நர்சிம்..
உங்க பின்னூட்டம் கண்டு நானும் மகிழ்வாகவே உணருகிறேன் நண்பரே.

கிராமப்புற கல்வி மேம்பாட்டிற்கான நிறைய திட்டங்கள் இருக்கிறது சூழ்நிலைகள் சாதகமாகும்போது கண்டிப்பாக என்னுடைய பங்களிப்பு இருக்கும்.

(உங்களுடைய அனுமதி இல்லாமல் உங்கள் பதிவின் வாசகங்களை ஒரு உரிமையில் பயன்படுத்திவிட்டேன் நண்பா, தவறில்லையே?)

நாடோடி இலக்கியன் said...

நன்றி அனானி(கிராமப்புறங்களில் நிறைய பசங்க தங்களின் திறமைகளை தாழ்வு மனப்பான்மையினாலேயே வெளிக்காட்டுவதில்லை )

நன்றி SUREஷ் (எப்போதும் உங்க பின்னூட்டத்தை கொஞ்சம் பயத்தோடவே பார்ப்பேன் ஆனால் இன்று நெகிழ்ச்சியா இருக்கு)

நாடோடி இலக்கியன் said...

நன்றி ராஜ நடராஜன்(ரொம்ப மேலோட்டமாகவே நான் சொல்லியிருப்பதாகவே படுகிறது நண்பரே, உளவியல் ரீதியாக அனுகினால் இன்னும் நிறைய விஷயங்களைச் சொல்லலாம்.)

நன்றி ஆதிமூலகிருஷ்ணன்,(உங்களுக்குள் ஒரு நல்லாசிரியர் ஒளிந்திருப்பதை உங்களின் 'சிக்ஸ் சிக்மா','லீன் என்றால் என்ன' போன்ற பதிவுகளைப் படித்தபோதே அறிந்து கொண்டேன் நண்பரே)

நன்றி வாசுகி..!

நன்றி ஊர்சுற்றி(ஆமாம் அந்த வார்த்தை ஆசிரியர்களிடமிருந்து வரவேக் கூடாத வார்த்தை,பொல்லாதது)

நன்றி செந்தில்(யாருப்பா அந்த நண்பர்?அப்புறம் சொல்லுங்க எப்படி இருக்கீங்க சுட்டிப்பையன்?)

Unknown said...

நல்ல பதிவு. இதை நிறைய மக்கள் படித்தல் மிகவும் நல்லது

நாடோடி இலக்கியன் said...

நன்றி பாஸ்கர்(இதைப் படித்து யாராவது இந்த டெக்னிக்கை செயல்படுத்தினால் மிகுந்த மகிழ்ச்சியே)