முதல் இரண்டு பகுதிகள் இங்கே:முதல் பகுதி , இரண்டாம் பகுதி
இப்பதிவில் மோகன்லால் நடித்த குடும்பப் படங்களையும் காமெடி படங்களையும் பார்ப்போம்.
T.P.பாலகோபாலன் M.A(1986):
இயக்கம்:சத்யன் அந்திக்காடு
சொற்ப சம்பளத்தில் வேலையில் இருக்கும் லோயர் மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞனின்(மோகன்லால்) சம்பளத்தை மட்டுமே நம்பியிருக்கும் குடும்பம். ஒரு கட்டத்தில் அவன் வேலையை இழக்க நேரிடுகிறது. அதன் பிறகு அவனது நிலை என்ன என்பது கதை. மிடில் கிளாஸ் மக்களின் அன்றாட கஷ்டங்களை எதார்த்தாமாய் சொன்ன படம். அவ்வளவு கஷ்டங்களுக்கும் நடுவே ஷோபனாவுடன் இருக்கும் காதலால், ஷோபனாவின் குடும்பத்தார் மோகன்லாலிடம் பணத்தை சுரண்டும் காட்சிகளெல்லாம் காமெடியாக கையாண்டிருப்பார்கள். இந்த படம் காமெடியான திரைக்கதையில் சீரியஸான விஷயத்தைச் சொன்னது.
வெள்ளானக்களூடே நாடு(1986):
இயக்கம்:பிரியதர்ஷன்
வீடு கட்டுமானம் மற்றும் ரோடு கான்ட்ராக்ட் ஆகியவற்றில் ஊழல் செய்யும் முனிசிபல் மாபியா கும்பலை தோலுரித்துக் காட்டிய படம். ரோடு கான்ட்ராக்டராக வரும் மோகன்லால் மிடில் கிளாஸ் ஃபேமிலியை பின்புலமாகக் கொண்டவர், அவர் எப்படி ஒவ்வொரு அதிகாரிக்கும் கூலைக் கும்பிடு போட்டும், லஞ்சம் கொடுத்தும் கான்ட்ராக்ட் வாங்குகிறார் என்பதையும், வேலையை முடித்து பில் பாஸாக்காமல் அவரை இழுத்தடிப்பதால் கூலியாட்களுக்கு அவரால் சம்பளம் கொடுக்க முடியாமல் தவிப்பதையும் பயங்கர காமெடியாக சொல்லியிருப்பார்கள். கையில் எப்போதும் குடையுடனும், ஒரு கையில் வேட்டியைப் பிடித்தபடியே நடக்கும் மோகன்லாலின் மேனரிஸமும், வேலையாட்களிடம் எரிந்து எரிந்து விழும்போது பேசும் டயலாக்குகளும் வெடிச் சிரிப்பை வரவழைப்பவை.
வரவேழ்ப்பு(1989):
இயக்கம்:சத்யன் அந்திக்காடு
கதை:சீனிவாசன்
ஏழு ஆண்டுகளாய் வளைகுடா நாடுகளில் சம்பாதித்தப் பணத்தை வைத்து சொந்த ஊரில் தொழில் தொடங்கி செட்டிலாக நினைக்கும் இளைஞனை (மோகன்லால்), சூழ்நிலை எப்படி மீண்டும் வெளிநாட்டிற்கே துரத்துகிறது என்பது கதை. சொந்தத் தொழில் தொடங்க நினைத்து பஸ் ஓனராகும் மோகன்லாலை, ரூட் அப்ரூவல் வாங்குவது தொடங்கி தொழிலாளர் ஸ்ட்ரைக் வரை வரிசையாக பலசோதனைகள் துரத்தும். இந்த விஷயங்களை காமெடியாக திரைக்கதைப் படுத்தியிருப்பார்கள். தொழிலாளர் நலம் பேணுவதாய் நடிக்கும் போலி கம்யூனிஸ்டுகளை ஷார்ப்பான வசனங்களால் கடுமையாகச் சாடியது இந்தப் படம்.
பிரியதர்ஷனின் இயக்கத்தில் மோகன்லால்,ஊர்வசியின் நடிப்பில் 1993ம் ஆண்டு வெளிவந்த "மிதுனம்" படமும் மிடில்கிளாஸ் மக்களின் பிரச்சனையை பேசிய படமே. இதிலும் மோகன்லால் படும் கஷ்டங்கள் அனைத்தும் காமடியாகவே சொல்லப்பட்டிருக்கும்.
முழுநீள நகைச்சுவைப் படங்கள்:
மலையாளத் திரையுலகில் மோகன்லால் மற்றும் மம்முட்டி இருவரும் நடிப்பில் பல பரிமாணங்களைக் காட்டியவர்கள். ஆனால் இவர்களில் யார் சிறந்த நடிகரென இருவரின் ரசிகர்களுக்கிடையே நேரிலும், இணையம் போன்ற ஊடகங்களிலும் கருத்து போர் நடக்கும். அப்படிப்பட்டக் கருத்துக்களில் ஒன்று காமெடி, ரொமான்ஸ் ஆகிய இரு விஷயங்களிலும் மோகன்லாலே தி பெஸ்ட் என்பது. என்னுடைய கருத்தும் அதேதான். (மம்முட்டியின் சிறப்புகள் அவரின் படங்களைப் பற்றிய தொடரில் எழுதுகிறேன்). மோகன்லாலை "லாலேட்டன்" என கேரள மக்கள் அழைப்பதற்குக் காரணம் அவரின் ஆரம்பக் காலக் காமெடி மற்றும் குடும்பப் படங்களே என்றால் மிகையில்லை.
நாடோடிக்காட்டு(1987):
இயக்கம்:சத்யன் அந்திக்காடு
கதை:சீனிவாசன்
தமிழில் பாண்டியராஜன்,எஸ்.வி.சேகர் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான "கதாநாயகன்" படத்தின் ஒரிஜினல் இந்தப் படம். குவைத் என்று நினைத்து சென்னையில் வந்து இறங்கும் மோகன்லாலும், சீனிவாசனும் அடிக்கும் லூட்டிகள், தமிழில் பார்த்தைவிட நன்றாக இருக்கும். ஷோபனாவிடம் மோகன்லால் வழிந்து கொண்டு பேசுகிற சீனிலெல்லாம் பட்டையை கிளப்பியிருப்பார். இந்த படத்தின் மாபெரும் வெற்றியால், பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகமும்,மூன்றாம் பாகமும் முறையே "பட்டண பிரவேஷம்", மற்றும் "அக்கரே அக்கரே அக்கரே" என்ற பெயர்களில் வெளிவந்து வெற்றிப் படங்களாயின.
சித்ரம்(1988):
இயக்கம்:பிரியதர்ஷன்
சின்னச் சின்ன திருட்டுகளை செய்யும் ஒருவனுக்கு(மோகன்லால்) ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் சம்பளத்தில், பதினைந்து நாட்களுக்கு கோடீஸ்வரன் (பூர்ணம் விஸ்வநாதன்) மகளுக்கு(ரஞ்சனி) கணவனாக நடிக்க வேண்டிய சந்தர்ப்பம் கிடைக்கிறது. அமேரிக்காவிலிருந்து பதினைந்து நாள் விடுமுறையில் சொந்த ஊருக்கு வரும் பூர்ணம் விஸ்வநாதனின் முன்புதான் அவர்கள் இந்த கணவன்,மனைவி ட்ராமாவை அரங்கேற்ற வேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, கிடைக்கும் கேப்பிலெல்லாம் பணம் சுருட்ட நினைக்கும் மோகன்லாலின் செயல்கள், மோகன்லாலை கண்டாலே வெறுப்பாகும், ஆனாலும் தனது அப்பாவின் முன் நடித்தாக வேண்டிய கட்டாயத்திலும் இருக்கும் ரஞ்சனியின் இக்கட்டான நிலை, அவர்கள் நிஜ கணவன் மனைவி இல்லை என்பதை அறிந்து கொள்ளும் ரஞ்சனியின் அத்தை மகன் (சீனிவாசன்), பூர்ணம் விஸ்வநாதனிடம் போட்டுக்கொடுக்க எடுக்கும் முயற்சிகள் என படம் நெடுக சரவெடி காமெடித் தோரணங்கள். கேரளாவில் அதிக தியேட்டர்களில் தொடர்ந்து பல நாட்கள் ஓடி அதற்கு முன்பிருந்த பல சாதனைகளை முறியடித்தப் படம். தமிழில் "எங்கிருந்தோ வந்தான்" என்ற பெயரில் சத்யராஜ்,ரோஜாவின் நடிப்பில் வெளிவந்து மோசமான திரைக்கதையால் வந்தச் சுவடேத் தெரியாமல் தியேட்டரை விட்டே ஓடியது.
வந்தனம்(1989):
இயக்கம்:பிரியதர்ஷன்
சித்ரம் மெகா ஹிட் ஆனதைத் தொடர்ந்து வெளிவந்த இப்படத்தில், மோகன்லால் ஒரு போலிஸ் ஆபிஸர்,பல கிரிமினல் வழக்குகளில் சிக்கியிருக்கும் நெடுமுடி வேணுவை எப்படி அவரின் மகளுக்கு(கிரிஜா) காதல் வலை விரித்துப் பிடிக்கிறார் என்பதேக் கதை. ரொமான்ஸ், காமெடி, ஆக்ஷன் என சுவாராஸ்யமான கலவையில் வெளிவந்து ஹிட்டானது. "உள்ளத்தை அள்ளித்தா" படத்தில் கார்த்திக் ரம்பாவிடம் "ஐ லவ் யூ" சொல்ல சொல்லிக் கேட்பாரே, அக்காட்சி இப்படத்தில் இருந்து அப்பட்டமாக உருவப்பட்டதே. படம் நெடுக மோகன்லால் கிரிஜாவின் பின் சுற்றி காதல் செய்யும் காட்சிகளெல்லாம் "மௌனராகம்" கார்த்திக்கை நினைவு படுத்தும்.
கிலுக்கம்(1991):
இயக்கம்:பிரியதர்ஷன்
கதை:வேணு நாகவள்ளி
ஊட்டியில் டூரிஸ்ட் கைடாக இருக்கும் மோகன்லால், ஊட்டியைச் சுற்றிப் பார்க்க வரும் ரேவதியிடம் (ரேவதி ஒரு பைத்தியம் என்பது தெரியாமல்) மாட்டிக்கொண்டு அவரிடமிருந்து தப்பிக்க எடுக்கும் முயற்சிகளும், ரேவதி பைத்தியம் இல்லை என்ற உண்மைத் தெரிந்து பின் ஏன் அப்படி நடித்தார் என்பதும் கதை. ஜெகதி ஸ்ரீகுமாரும், மோகன்லாலும் அடிக்கும் லூட்டிகளை நினைத்தாலே சிரிப்பை வரவழைக்கக் கூடியவை. இப்படத்தில் இருந்து நிறைய காட்சிகளை "உள்ளத்தை அள்ளித்தா" படத்தில் சுந்தர்.சி பயன்படுத்தியிருப்பார்.
இப்படங்களைத் தவிர மோகன்லால் சீனிவாசன் காம்பினேஷனில் வெளிவந்த "மழை பெய்யுந்நு மத்தளம் கொட்டுந்நு", "பூச்சைக்கொரு மூக்குத்தி" மற்றும் மோகன்லால் மற்ற நடிகர்களின் காம்பினேஷனில் நடித்த "வியட்னாம் காலனி", "மிஸ்டர் பிரம்மச்சாரி"ஆகிய படங்களும் என்னுடைய தேர்வாக உங்களுக்கு பரிந்துரைப்பேன்.
Action படங்கள்:
புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாக மலையாள திரையுலகினர் இப்போதெல்லாம் தமிழ் மசாலப் படங்களைப் பார்த்து Action படங்கள் என்ற பெயரில் பல மொக்கை படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழப் படங்களை மிஞ்சும் வகையில் "பஞ்ச்" டயலாக்குகள் வேறு. மோகன்லால்,மம்முட்டியும் இதற்கு விதிவிலக்கல்ல. இருப்பினும் ஒரு சில ஆக்ஷன் படங்கள் ரசிக்கும் படியும் இருக்கும் . அதில் எனது தெரிவுகளாக "ஆறாம் தம்புரான்","நரன்","பாபா கல்யாணி" போன்ற சில படங்களைச் சொல்லலாம்.
இங்கே பகிர்ந்துக் கொண்டது வெகு சில படங்களே இன்னும் பல அருமையான மோகன்லால் படங்கள் இருக்கின்றன குறிப்பாக, "No:20 மெட்ராஸ் மெயில்"," கமலதலம்","உன்னிகளே ஒரு கத பறயாம்", "ராசாவிண்டே மகன்","தேன்மாவின் கொம்பத்து", "சன்மனசுள்ளவர்க்கு சமாதானம்" இப்படி நீளும் பட்டியல்.
மோகன்லாலின் படங்களை மூன்று பதிவுகளாகப் பார்த்தோம். இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர் என பலராலும் பாராட்டப்படும் இவரின் நடிப்பிற்கு நான் எந்த அளவிற்கு ரசிகனோ அதே அளவிற்கு அவரின் சில படங்களில் தமிழர்களை சித்திரிதிருக்கும் விதம் குறித்து கடுமையான கோபமும் உண்டு. பெரும்பாலும் இவரின் படத்தில் வரும் தமிழ் பேசும் கதாப்பாத்திரங்கள் திருடனாகவோ, வில்லனாகவோ அல்லது வேலைக்காரனாகவோதான் சித்திரிக்கப் பட்டிருக்கும். அப்படியென்ன தமிழர்கள் மீது இவருக்கு வெறுப்பு எனத் தெரியவில்லை. இது குறித்து எனது மலையாளி நண்பர்களிடம் கேட்டபோது, அவர்கள் சொல்வது "தமிழ் படத்தில் மட்டும் எங்க ஊரு சேச்சிகளை வெறும் முண்டு உடுத்தியும், அவர்களிடத்தில் இரட்டை அர்த்த வசனங்களை பேசுவதும் எப்படி உங்களுக்கு காமெடியாக இருக்கிறதோ அப்படித்தான் எங்களுக்கு இது" என்று கூறுகிறார்கள். ஆனால் சமீபத்தில் வெளியாகும் படங்களில் கொஞ்சம் மாற்றம் தெரிகிறது. குறிப்பாக "ரசதந்திரம்", "தன்மாத்ரா" போன்ற படங்களில் பாரதியாரின் கவிதைகளையும், திருக்குறளையும் நேசிக்கும் மனிதராக நடித்திருப்பார்.
இத்தோடு இத்தொடர் நிறைவு பெறுகிறது
22 comments:
அற்புதம்
நன்றி முரளி கண்ணன்.
கிலுக்கம் படத்தை பலமுறை கண்டு ரசித்து இருக்கிறேன். அட்புதமான படைப்பு. அதிலும் ஜகதி ஸ்ரீ குமாரும், லாலும் வரும் காட்சிகள் ஆட்காசமான காமெடீ.
நன்றி
வணக்கம் நண்பரே
சுருக்கமாகவும் அதே நேரம் முத்தாய்ப்பாகவும் ஒவ்வொரு முத்துக்களைச் சொன்னீர்கள் அருமை, மோகன்லாலின் படங்களைப் பார்க்காமல் இருந்த எனக்கு எதேச்சையாகக் கிட்டிய படமொன்றைப் பார்த்ததில் இருந்து தொடர்ந்து அவர் படங்களை விடாமல் தேடிப்பார்க்கும் ரசிகனாகிவிட்டேன். நீங்கள் சொன்ன பட்டியலில் நான் இதுவரை பார்க்காததைத் தேடிப்பார்க்க வசதியாக இருக்கின்றது, மிக்க நன்றி
மோகன்லாலின் தனிச்சிறப்பு என்னவென்றால் கலைப்படமென்றால் அதிலும் அவர் மிகையில்லாத, அலட்டல் இல்லாத நடிப்பால் கவருவார், கமர்ஷியல் படமென்றாலும் அதிலும் ஓவர் அலும்பு செய்யாமல் ரசிக்க வைக்கும் திறமைசாலி.
நன்றி ஜானிவாக்கர்(இன்று வரை அவ்வப்போது போரடித்தால் நானும் அந்த படத்தைதான் பார்ப்பேன்.)
நன்றி கானா பிரபா(நானும் அப்படித்தாங்க, மனிச்சித்ரதாழுதான் ஸ்டார்ட்டிங் பிறகு தீவிர ரசிகராக மாறி தினமும் ஒரு படமென பார்க்க ஆரம்பித்தேன். எதார்த்தமாய் நடிப்பதே அவரின் மிகப்பெரிய பலம்,அவரின் நடிப்பைப் பற்றி பேச நிறைய இருக்கிறது, தமிழில் ஓரளவிற்கு கார்த்திக்கும், ஹிந்தியில் அனுபம்கேரின் நடிப்பும் சில சமயங்களில் எனக்கு லாலேட்டனை நினைவு படுத்தும்).
Hi,
I like your blog on Malayalam movies. Thanks for introducing them.
Thanks,
Toto.
Film4thwall.blogspot.com
நண்பர் நாடோடி இலக்கியன் அவர்களுக்கு,
அருமையான அலசல். மலையாள படத்தில் யாரையும் அடிக்காம, கருத்து சொல்லாம வார்த்தையால (பேசியே) காமடி பண்ணுவாங்க. நல்லா இருக்கும். அடுத்த பதிவு எப்போ?
மலையாள படங்களை பற்றிய அருமையான வலைப்பதிவ
உதயானுதாரம்..?
bToto - Cinema Paradiso
thank you for your comment and arrival.keep reading.
நாஞ்சில் நாதம்,
//மலையாள படத்தில் யாரையும் அடிக்காம, கருத்து சொல்லாம வார்த்தையால (பேசியே) காமடி பண்ணுவாங்க//
எனக்கும் அந்த மாதிரி காமெடிகள் பிடிக்கும்.
அடுத்தப் பதிவு விரைவில்.
நன்றி நண்பா..!
அற்புதமான, மிக அவசியமான பதிவு..
மோகன்லால் இந்தியாவின் தலை சிறந்த நடிகர்..
நீங்கள் சொன்னதுபோல காமெடி, ரொமான்ஸில் பின்னியெடுக்கிறார்.
அவருடைய ஆரம்பக் காலத் திரைப்படங்களும், நீங்கள் சுட்டிக் காட்டியுள்ள திரைப்படங்களும் அவரது நடிப்புத் திறமைக்கு தீனி போட்டவை.
இன்றைக்கும் எந்த மொழி மக்களாலும் மீண்டும், மீண்டும் பார்க்கத் தூண்டும் திரைப்படங்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை.
மீண்டும் ஒரு நன்றி நாடோடி இலக்கியனுக்கு..!
வாழ்க வளமுடன்..!
நன்றி JOE2005,
நன்றி இரா.வசந்த்குமார்,(உதயனானுதாரமும் அருமையான படமே.ஆனால் இந்த படத்தின் தமிழ் ரீமேக்கான வெள்ளித்திரை ஏனோ அவ்வளவாக கவரவில்லை).
மிக்க நன்றி உண்மைத் தமிழன்,
நல்ல அலசல்.
நீங்க நாகர்கோவில் பக்கமோ? கேரளத்தை ஒட்டி இருக்கிற நகரங்களில் இருக்கும் மக்கள் தான் அதிகம் மலையாளப் படங்களை ரசித்து பார்ப்பார்கள்.
அழகான தொகுப்பு தலைவா..
//அதே அளவிற்கு அவரின் சில படங்களில் தமிழர்களை சித்திரிதிருக்கும் விதம் குறித்து கடுமையான கோபமும் உண்டு. பெரும்பாலும் இவரின் படத்தில் வரும் தமிழ் பேசும் கதாப்பாத்திரங்கள் திருடனாகவோ,வில்லனாகவோ அல்லது வேலைக்காரனாகவோதான் சித்திரிக்கப் பட்டிருக்கும்.//
பெரும்பாலும் மலையாள படங்கள் எல்லாவற்றிலும் தமிழர்களை கிழ்தரமாக தான் சித்தரித்து இருப்பார்கள் ஏன் என்று தான் தெரியவில்லை..(குறிப்பாக திலிப் படங்களில்)
அதே மாதிரி நாமும் அப்பெண்களை அதே மாதிரி சித்தரிப்பதை நிறுத்த வேண்டும்..
நன்றி JOE(நமக்கு சொந்த ஊர் தஞ்சாவூர் பக்கம்ங்க,நாகர்கோவில் இல்லீங்க சென்னையில் என்னுடன் மேன்ஷனில் ரூம்மேட்டாக இருந்தவர் ஒரு மலையாளி அவர்மூலமாகவே இந்த மலையாள படங்கள் பார்க்கும் ஆர்வம் வந்தது).
நன்றி நாடோடி.
நான் தஞ்சாவூர் டான் போஸ்கோவில் ஒரு வருடம் படித்தேன்.
இப்பவும் சென்னையிலா இருக்கீங்க?
நன்றி வினோத்கௌதம்,(ஆம் நண்பா,நீங்கள் சொல்வதுமிகச் சரியே. திலீப் படங்களான "கொச்சி ராஜாவு","பாண்டிப்படா" போன்ற படங்களில் தமிழர்களைக் கோமாளிகளாகவேச் சித்தரித்திருப்பார்கள்)
மறுவருகைக்கு மிக்க நன்றி Joe(நான் தற்போது நாடோடி ,அவ்வப்போது சென்னையிலும் இருப்பேன்)
Really a very honest blog about mohanlals films and about him.
Very nice to read this . i admire all the points mentioned by us as a good fan of malayalam films.
Particularly about humilating tamils on mallu films.
In The film naram the dialouges deliveried by mohanlal while fixing the name board in tamil, are very objectionable and condemnalbe.
we are more expection from you..
skarthik@gamil.com
அவர் தன படங்களில் தமிழர்களை மட்டமாக சித்தரிப்பதை ஆனந்த விகடனில் படித்ததாக ஞாபகம். அதைத் தவிர மற்ற செய்திகள் அனைத்தும் எனக்குப் புதியவை.
சுவாரசியமானவையும் கூட.
பகிர்தலுக்கு நன்றி...
Thank u for your comment Mr.Karthik(what u said about the movie naran is absolutly right)
நன்றி இங்கிலீஷ்காரன்.(இங்க்லீஷ்காரன் தமிழில் பின்னூட்டம் ஜூப்பர்)
நல்லாதான் இருக்கு உங்க டூரிங் டாக்கிஸ் .. ஆனால் நமக்கு அந்த குடுப்பினை இல்லை.. எங்க ஏரியாவுல இருந்த ஒரு டாக்கீசும் நான் சிறுவனா இருக்கும்போதே மூடு விழா கண்டிருச்சு .
ஆனால் திருவிழா அப்போ போடுற படங்கள் பார்த்த அனுபவம் நிறையவே இருக்கு ..
Post a Comment