Wednesday, July 15, 2009

அண்ணாச்சியும்,வெயிலானும் பின்னே நாங்களும்

வார இறுதிக்கு எங்காவது போய்வரலாமென நண்பர் வெயிலான் அலை பேசியதைத் தொடர்ந்து சென்ற சனிக்கிழமை மதியம் திருப்பூரிலிருந்து கோவைக்கு நண்பர் தேவாவின் காரில் கிளம்பினோம்.கோவையில் அண்ணாச்சி வடகரை வேலன், கடற்கரைக்காரன் சிவா மற்றும் சஞ்சய் ஆகியோருடன் இணைந்து பிக்னிக் செல்வதாகப் பிளான்.
 


 கோவை செல்லும் வரை நண்பர் தேவாவின் அப்பா தனது காவல்துறை அனுபவங்களை சுவாரஸ்யமாக பகிர்ந்து கொண்டு வந்தார்.அப்போது அங்கிளும் பிளாக் ஒன்றை ஆரம்பித்தால் கலக்குவார் போலிருக்கிறதே என நான் மனதுக்குள் நினைத்துக் கொண்டிருக்அதையே வெயிலானும் தேவாவின் தந்தையிடம் கூறினார்.இவர்களின் பேச்சில் காவல் துறை சார்ந்த வார்த்தைகளை புரிந்து கொள்வதில் எனக்கு கொஞ்சம் சிரமம் இருந்தது. ஆனால் வெயிலான் காவல் துறை சார்ந்த நிறைய விஷயங்களை தெரிந்து வைத்திருந்தார். அதுமட்டுமல்ல இன்னும் நிறைய துறைகளைப் பற்றிய அறிவும் வெயிலானுக்கு உண்டு. சுவையான இவர்களின் உரையாடலில் லயித்தபடியே கோவை வந்ததும் தேவாவும் அவரது தந்தையும் விடைபெற்றுக்கொள்ள நானும் வெயிலானும் எங்களுக்காகக் காத்திருந்த அண்ணாச்சி மற்றும் சிவாவோடு இணைந்து கொண்டு அண்ணாச்சியின் காரில் சஞ்சய் வெயிட்டிக் கொண்டிருக்கும் இடத்திற்கு விரைந்தோம்.

சஞ்சய் வெயிட் செய்வதாக சொல்லியிருந்த இடத்திற்கு நாங்கள் சென்ற பின் சிறிது நேரம் கழித்தே சஞ்சய் வந்தார்.நாங்கள் நால்வரும் காரிலேயே அமர்ந்துக் கொண்டு சஞ்சய் எங்களைத் தேடுவதை ரசித்துக் கொண்டிருந்தோம். காரின் முன்னாலேயே நின்று கொண்டு அண்ணாச்சியின் அலைபேசிக்கு தொடர்பு கொண்டார், அவரின் அழைப்பை அட்டெண்ட் செய்யாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தோம், அப்போதும், எங்களைப் பார்த்தப் பிறகும் சஞ்சயின் எக்ஸ்பிரஷன்கள் ரசனையான விஷுவல் ஹைக்கூ.

பிறகு "உம்பா உம்பா" என்ற மியூசிஸிக் இல்லாத பஞ்ச தந்திரர்களாய் பாலக்காடு செல்லும் ரோடில் மஞ்சு துஞ்சும் மலைகளை ரசித்தபடியே பயணித்துக் கொண்டிருந்தபோது அருகில் இருந்த சிவாவிடம் மெல்ல ,"நண்பா நாம இப்போ எங்கே போறோம்" என நான் கேட்க, "யாருக்குத் தெரியும்" என சிவா சொல்ல இதைக் கேட்ட அண்ணாச்சி எங்கே போறோம்னே தெரியாம கிளம்பிட்டீங்களாடா" என்று கூறிச் சிரிக்க முதல் சந்திப்பில் இருக்கும் ஒரு சிறிய தயக்கம் மெல்ல மெல்ல மறைந்து பல நாட்கள் பழகிய நண்பர்களைப் போல் ஒருவரை ஒருவர் கிண்டலடித்துக் கொண்டே கேரளாவின் நெல்லியம்பதியை நான்கு மணி நேர பயணத்தில் அடைந்தோம்.

நெம்மாரா என்னும் இடத்திலிருந்து நெல்லியம்பதிக்கு செல்லும் மலைப்பாதை ஆரம்பமாகி விடுகிறது. மலைப்பாதையில் நாங்கள் சென்றுக் கொண்டிருந்தபோது மெல்ல இருட்டத் தொடங்கிவிட்டது. மலைப்பாதையின் இருபுறமும் ஓங்கி உயர்ந்திருந்த மரங்களில் சில எப்போது வேணாலும் விழுவோம் என பயமுறுத்தியபடி நின்றுக் கொண்டிருந்தன.சாலை ஓரத்திலேயே அருவியில் கொட்டும் நீரின் சலசலப்பு கேட்டு கொண்டே இருந்தது.கொஞ்சம் நேரத்தோடு வந்திருந்தால் அருவிகளை ரசித்திருக்கலாம் என்று சொல்லியபடியே நாங்கள் புக் செய்திருந்த ரிஸார்ட்டுக்கு இரவு ஒன்பது மணிக்கு சென்று சேர்ந்தோம்.



எட்டு பேர் தங்குவதற்காக புக் செய்திருந்த விசாலமான அறையில் ஐவரும் அடைக்கலமாகி உடைமாற்றி பிறகு ரிஸார்ட்டின் முன்புறம் ஒரு சிறிய சதுர மேஜை குறுநாடு (மாநாட்டிற்கு எதிர்பதம் குறுநாடுதானே வரும்?) நடத்தினோம்.இந்த குறுநாட்டில் இலக்கியம், அரசியல், பதிவுலகம், சினிமா என பல சுவராஸ்யமான விஷயங்கள் அலசப்பட்டது. இங்கே வேலன் அண்ணாச்சியைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும். எல்லோருக்குள்ளும் இருக்கும் நிறை,குறை கடந்து மனிதர்களை மனிதர்களாகப் பார்க்கும்,நேசிக்கும் அருமையான மனிதர் அண்ணாச்சி. ஒருவன் தவறானவன் என சமுதாயம் அடையாளப் படுத்தினாலும் தவறே செய்யாமல் சூழ்நிலை யாரை வேண்டுமானாலும் சமுதாயத்தின் பார்வைக்கு குற்றவாளியாகக் காட்டும் என்ற உண்மையை நன்கு அறிந்திருக்கும் அண்ணாச்சியின் நட்பு கிடைத்தது பதிவுலகம் எனக்குக் கொடுத்த மிகப் பெரிய கொடை. நம்மில் எத்தனை பேர் தீர விசாரித்தலின் அவசியத்தை புரிந்தவர்களாய் இருக்கிறோம். கண்ணால் பார்ப்பதையும், காதால் கேட்பதையும் (blog படிப்பதையும் சேர்த்துக்கலாமோ) வைத்துத்தானே பல நேரங்களில் அடுத்தவர்களின் பிம்பத்தைக் கட்டமைக்கிறோம். மனிதர்களை புரிந்து கொள்ளும் கலையை அண்ணாச்சியிடம் கற்றுக் கொள்ளலாம். இப்படியெல்லாம் சொல்வதால் அண்ணாச்சியை பெருசோ என்று நினைத்து விடாதீர்கள் நமது கல்லூரி காலத்து நட்புகளையும், அரட்டைகளையும் நினைவுபடுத்தும்படி படு ஜாலியான மனிதர்.

இந்த குறுநாட்டின் இறுதியில் சஞ்சய் ஒரு கேள்வியைக் கேட்டார்.அதாவது தற்போது நாம் பேசும் தமிழும் தற்கால இலக்கியங்களில் இருக்கும் தமிழும் ஒரே மாதிரியாக இருக்கிறது,அப்படியானால் சங்க இலக்கியங்களில் இருக்கும் வார்தைகளைத் தான் அப்போதிருந்த மக்கள் பேசியிருக்கக் கூடும். அப்படி இருக்கும் பட்சத்தில் தற்காலத் தமிழுக்கும் சங்கத் தமிழுக்கும் இருக்கும் இத்தனை பெரிய வேறுபாடு எப்படி வந்தது? என்றார்.இதற்கு சில நல்ல விளக்கங்கள் அண்ணாச்சி மற்றும் சிவாவும் தர சில நொல்ல விளக்கங்கள் என்னால் தரப்பட இதில் எந்த பதிலும் சஞ்சய்க்கு திருப்தியை தரவில்லை. (யாராவது தெரிஞ்சா சொல்லிட்டு போங்கப்பா). பிறகு இரவு உணவை அங்கேயே வரவழைத்து உண்டு மகிழ்ந்து உறங்கச் செல்கையில் மணி ஒன்றாகிவிட்டது.

காலையில் வெயிலான்,சிவா மற்றும் நான் மூவரும் எழுந்து சிறிது தூரம் காலைப்பனியூடாக மலைச்சாலையில் உறையவைக்கும் குளிரில் நடக்கலானோம். வெயிலான் சில பல கோணங்களில் மலைகளின் அழகை தனது கேமராவில் அள்ளிக்கொண்டிருந்தார். அங்குள்ள காஃபி எஸ்ட்டேட்டைப் பற்றியும்,குறு மிளகுச் செடிகளையும் பற்றியும் வெயிலான் சொல்ல ஆர்வமாக கேட்டுக் கொண்டே மீண்டும் எங்களது அறைக்கு திரும்புகையில் அடுத்தாகச் செல்லவிருக்கும் மாம்பாறா என்ற இடத்திற்குச் செல்ல ஜீப் எட்டரைக்கெல்லாம் வந்துவிடும் என்று ரூம் சர்வெண்ட் சொல்ல அவசரமாகக் கிளம்பத் தயாரானோம். (இந்த ரிஸார்ட்டுக்குள் வந்த உடன் எங்களது மலையாளப் புலமையைக் காட்ட ஓட்டை மலையாளத்தில் ரூம் சர்வண்ட்டிடம் ஏதோ கேட்க, அவரோ தெளிவான தமிழில் பேசி எங்களை டரியலாக்கினார்.)

"குளிக்காமல் கிளம்பி விடலாமா" என வெயிலான் கேட்க எல்லோருக்கும் அந்தக் குளிரில் அது சரியெனப் பட்டாலும் யாரும் ஓங்கிச் சொல்லாததால் வெயிலானே முதல் குளியலைப் போட்டு மற்ற எல்லோரும் குளித்தே ஆக வேண்டிய இக்கட்டான சூழலை உருவாக்கியதால் எல்லோரும் வேறு வழியின்றி குளித்துவிட்டு காலை உணவாக கொண்டுவரப்பட்ட புட்டை, புட்டு புட்டு சாப்பிட்டு விட்டு மாம்பாறாவை நோக்கி பயணித்தோம்.


வழி நெடுக இருந்த தேயிலைத் தோட்டங்களும்,சிறு சிறு ஓடைகளும்,சின்ன சின்ன நீர்த் தேக்கங்களும்,வண்ண வண்ணப் பூக்களுமாய் எத்தனை அற்புதக் காட்சிகள். அந்த ஜீப் பயணமும் மலைக்காட்சிகளும் "மலையின் காட்சி இறைவன் ஆட்சி" என்ற முள்ளும் மலரும் பாடல் வரிகளை நினைவு படுத்தியது. வானம், விட்டு விட்டுத் தூறிக் கொண்டிருந்தது. தார்ச் சாலையிலேயே சென்றுக் கொண்டிருந்த ஜீப் திடீரென மண் சாலைக்குத் தாவியது. மண் சாலை என்பதுக் கூடத் தவறு மேடு பள்ளங்களாய் கற்களும் மர வேர்களுமாய் இருக்கும் மண்தடம் என்றால் சரியாக இருக்கும். இப்படியான பாதையில் சென்று கொண்டிருந்த ஜீப், நின்ற நிலையில் கிட்டத் தட்ட செங்குத்தாக இறங்கத் தொடங்கியது.இறங்கத் தொடங்கியது என்பதைவிட வழுக்கத் தொடங்கியது என்றால் மிகையில்லை.அண்ணாச்சி எங்களை ஜாக்கிரதையாக கம்பியை இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளுங்கப்பா என்றதும், "இது கூட எங்களுக்கு பயமாக இல்லை அண்ணாச்சி, இவர் ஜீப்பை ஜீப்பாகத்தான் ஓட்டுறார்,நேற்று நீங்க காரை ஃபிளைட்டாக்கினீங்களே அதை நெனச்சாத்தான் உதறுது" என்றேன் அடியேன்.

எங்களுக்கு முன்பாகச் சென்றுக் கொண்டிருந்த மற்றொரு ஜீப், கொண்டை ஊசி
வளைவைப் போன்றதொரு இடத்தில் சேற்றில் மாட்டிக் கொண்டு மேலே செல்ல முடியாமல் நின்றுக் கொண்டிருந்தது. அதில் பயணம் செய்த கேரள இளைஞர்கள் அந்த ஜீப்பை மேலேற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். பல நிமிட போராட்டங்களுக்குப் பிறகு மேலேற்றியதைத் தொடர்ந்து அதே இடத்தில் நாங்கள் சென்ற ஜீப்பும் மாட்டிக் கொண்டது.பிறகு அதே முயற்சி, இந்த முறை சிவாவும், சஞ்சயும் கயிற்றின் உதவியோடு தங்களது புஜ பராகிரமங்களைக் காட்டியதில் எங்கள் ஜீப்பும் மேலேறியது. எங்களுக்கு பின் வந்த அத்தனை ஜீப்பிற்கும் அதே நிலைதான்.இதே மாதிரி இரண்டு இடங்களில் செய்ய வேண்டியதாய் இருந்தது. எங்களுக்கு அது பயங்கர என் ஜாய்மென்ட்டாக இருந்தது. அடுத்ததாக இந்த மண்பாதையும் முடிவுற்று பாறைகளில் தாவி ஏறியது ஜீப்.


கரடு முரடான பாறையில் அசால்ட்டாக வண்டி ஓட்டிய ஜீப் டிரைவரை பார்க்க அப்போது என் கண்களுக்கு பெரிய சாகச நாயகனாகத் தெரிந்தார்.அதேப் பாறையில் செங்குத்தாக ஏறத் தொடங்கி ஒரு பத்து நிமிடத்தில் மலை உச்சியான மாம்பாறையை அடைந்தோம். "இறைவா எத்தனைக் கோடி இயற்கை வைத்தாய் இந்த கேரளாவில்" என்று கத்தனும் போல் தோன்றியது நாங்கள் அங்கு கண்ட காட்சி.

உலகமே எங்கள் காலடியில் இருப்பது போன்றதொரு உயரம்."காற்று மேலே ஏறி மேகத்தையெல்லாம் தாண்டி" என்று ஒரு பாடலில் வருமே அப்படி உண்மையிலேயே மேகத்திற்கு மேலே நின்று கீழே வெண்பஞ்சாய் பறக்கும் மேகக் கூட்டத்தை ரசித்ததை வார்த்தைகளில் வர்ணிப்பது சிரமம்.

கரணம் தப்பினால் மரணம் என்று சொல்லக் கூடிய உயரத்தில் இருக்கும் அந்த மாம்பழ வடிவப் பாறையில் அமர்ந்து ஏரியல் வியூவில் தெரிந்த காட்சிகளை ரசித்துப்படியே அரட்டையடித்துக் கொண்டிருந்த போது மெல்ல எங்களை மூடிச் சென்றது ஒரு பெரிய மேகக் கூட்டம்.மூடிய மேகம் விலகியதும் சிவா தனது காலில் ஏதோ ஊர்வதாகணர்ந்து பார்த்ததில் சில மில்லி லிட்டர் ரத்தத்தை உறிஞ்சி விட்டு ஹாயாக ஊர்ந்து கொண்டிருந்த காட்டு அட்டை, சிவாவின் சந்தோஷத்தையும் சேர்த்து உறிஞ்சிவிட்டு பாறையிடுக்கில் அடைக்கலமானது. இதைப் பார்த்த நாங்கள் முதலில் பதறி பிறகு சிரித்தோம், காரணம் "இவ்வளோ ரத்தத்தை உறிஞ்சும் வரைக்கும் உனக்குத் தெரியவே இல்லையா" என்று கேட்ட சஞ்சய் எதார்த்தமாய் தனது காலைப் பார்க்க அங்கே ஏற்கனவே ரத்தம் உறிஞ்சப்பட்டு உறைந்து போயிருந்ததுதான்.

பிறகு எல்லோரும் அவரவர் உடைகளை பதறி உதறிக் கொண்டிருக்கையில் மெல்ல சிறு தூரலும் இல்லாமல் பெரு மழையாகவும் இல்லாமல் சன்னமான மழை பெய்யத் தொடங்கியது.அப்படியே நனைந்து களித்தோம்,களித்தே நனைந்தோம்.
சிவா தனது கைகளை விரித்து,கண்களை மூடியபடியே நனைந்ததைப் பார்த்தபோது எனக்கு பிரேசிலின் மலையுச்சி ஜீஸஸ் சிலை ஞாபகம் வந்தது. இன்னொரு புறம் சஞ்சய் சிறு குழந்தைகளின் நடன அசைவை ஒத்தபடி ஆடிக்கொண்டும், நர்சரி குழந்தைகளின் ரைம்ஸ் போல் ஏதோ பாடியபடியே நனைந்து கொண்டிருந்தார். முந்தின நாள் இரவு, டாம் அன்ட் ஜெர்ரியை தொலைக்காட்சியில் பார்த்து ரசித்ததிலிருந்து இதோ இப்போது இந்த மலை உச்சியில் சில கேரள இளைஞர்கள், நம்ம ஊர் பெண்கள் சுற்றி நின்று கும்மியடிப்பதுபோல் வட்டமா நின்றுக்கொண்டு டான்ஸ் மாதிரி ஏதோ ஆடிக்கொண்டிருந்ததை சிறு குழந்தையின் ஆச்சர்யத்தோடு அவர்களின் அருகில் சென்று பார்த்துக் கொண்டிருந்ததுவரை கவனித்ததில் சஞ்சயை 100% மீசை வைத்தக் குழந்தையென்பேன்.(சஞ்சய் உன்னோட ஐஸ்பைஸ் பதிவை அவ்வளவு நேர்த்தியாக நீ எழுதியிருப்பதன் காரணம் புரியுதுப்பா,உனக்குள் இருக்கும் அந்த குழந்தைத்தனம் எப்போதுமே இருக்கட்டும்).




சில நிமிடங்களில் மழை நின்று ஜில்லென காற்று வீசத் தொடங்கியது, அப்போது சஞ்சய் தூரத்தில் தெரிந்த ஏரி ஒன்றைக் காட்டி, "அதோ ஏரி பாருங்க" என்றார். "ஏறி பார்க்க முடியாது,இறங்கித்தான் பார்க்கனும்" என்று மொக்கினேன் நான்.ஒரு மணி நேரம் போனதேத் தெரியாமல் சொர்கமே இதுதானோங்கிற மாதிரி இருந்த அந்த மலையும் மழையும் காட்சி எனக்குள் இனி பசுமரத்தாணி.பிறகு அதே "ஏற்றிவிடப்பா, தூக்கிவிடப்பா" பாதையில் மீண்டும் சாகசப் பயணத்தைத் தொடர்ந்து ரிஸார்ட்டுக்கு வந்தடைந்ததும் சுடச்சுட வந்த மதிய உணவை ஒரு வெட்டு வெட்டிவிட்டு எல்லோரும் சிறிது நேரம் உறங்கி விழித்து மாலை மூன்று மணிக்கு கோவைக்கு புறப்பட்டோம். திரும்ப வரும்போதுதான் தெரிந்தது முதல் நாள் எத்தனை அற்புதமானக் காட்சிகளை மிஸ் செய்திருக்கிறோம் என்பது. ஒவ்வொரு நூறு மீட்டருக்கும் குறைந்தது இரண்டு அருவிகளை காண முடிந்தது.செங்குத்தாய்,கிடைமட்டமாய் பெரிதும், சிறிதுமாக மனதை அள்ளும் பல வித அருவிகளை ஒவ்வொரு இடத்திலும் நின்று ரசித்துக் கொண்டே வந்ததில் மேலும் ஒரு முறை சிவாவும்,சஞ்சயும் அட்டையின் அட்டாக்கிற்கு ஆளானார்கள்.


நேரத்தோடு கோவை சென்றுவிட வேண்டும் என்றபடியே காரை விரட்டிய அண்ணாச்சி திடீரென வேக வேகமாக கார் கண்ணாடிகளை ஏற்றிய படியே காரை நிறுத்திவிட்டு மெல்ல சொன்னார், முன்பக்க கண்ணாடியில் நெளிந்து கொண்டிருந்த பச்சைப் பாம்பை அடிக்கும்படி. காரில் இருந்து வேகமாக இறங்கிய சஞ்சய் ஒரு சிறு குச்சியால் அந்த பாம்பை எடுத்து அருகில் இருந்த செடிகளின் மேல் வீசிவிட்டு,"அடிகிடி பட்டிருக்குமோ, பாவம் சின்னக் குட்டிதான் பொழச்சு போகட்டும்" என்றார். சஞ்சயின் அந்த பாம்பாபிமானத்துக்கு ஒரு ராயல் சல்யூட்.
இந்த இனிமையான பயணத்தில் அண்ணாச்சி,வெயிலான்,சிவா மற்றும் சஞ்சய் என ஒவ்வொருத்தரிடமும் ஒரு சில விஷயங்களில் என்னையே பார்க்க முடிந்தது. இப்படியான ஒத்த ரசனையுள்ளவர்களின் நட்பிற்கு பலநாள் ஏங்கியிருக்கிறேன். ஏதாவது ஒரு கவிதையையோ, கதையையோ யோசித்துவிட்டு "நல்லாயிருக்கா" என நண்பர்களிடம், "டேய் நீ கேளேன்,மச்சி நீ கேளேன்" என கெஞ்சத் தேவையிராத நட்பு வட்டத்தை எனக்குக் கொடுத்த இணையத்திற்கு இத்தருணத்தில் ஒரு பெரிய நன்றி.

எப்போதும் போல்
weak end ஆக செல்ல இருந்த week end ஐ மறக்க முடியாத நாட்களாக மாற்றிய நண்பர் வெயிலானுக்கு நன்றிகள் பல.(வெயிலான், வார இறுதியை வர இறுதியாக மாற்றிவிட்டீங்க நண்பா தேங்க்ஸ்).

இதே பயணத்தைப் பற்றி மேலும் தகவலுக்கு நண்பர் வெயிலானின் பக்கத்திற்கு இங்கே அழுத்தவும்.

நெல்லியம்பதி பற்றி மேலும் தகலுக்கு: இங்கேயும்
, இங்கேயும் அழுத்தவும்.

35 comments:

நாஞ்சில் நாதம் said...

ம் ம் ம் ம் ம் ம்

நல்லா என்ஜாய் பண்ணியிருக்கீங்க

Sanjai Gandhi said...

இதுக்குப் பேர்தான் பயணக்கட்டுரை.. பின்னி பெடலெடுத்து இருக்கிங்க நாடோடி.

இந்த மாதிரி கட்டுரைகள்ல ஒரு சாபக் கேடே நம்மை பத்தின ரசனையான விஷ்யங்களை வெளிப்படுத்திக்க முடியாமல் போவவது தான். பயணம் பற்றி எதுவும் மிஸ் பண்ணாம எழுதி இருக்கிங்க.

ஆனா நீங்க எவ்ளோ ரசனையான ஆள்னு சொல்லாம விட்டுட்டிங்க. உங்களுக்குள்ள இருக்கும் கவிதை ரசிகனை போல் இதுவரை நான் கண்டதில்லை.

எந்த பாடலாக இருப்பினும் அதில் சிறந்த வரிகளை விரல் இடுகில் வைத்து தேவையான் நேரத்தில் வெளிப்படுத்தும் திறன், புரியாத வார்த்தைகளுக்கு அர்த்தம் தேடும் ஆர்வம்.. என்னை மாதிரி வளவளா கொழகொழா ஆட்களின் பேச்சையும் பொருமையாய் கேட்கும் சுபாவம் இப்டி நெறய.. விடுங்க.. தனிப் பதிவா போட்ருவோம்.. :))

மாடு மேச்சதும் புத்தகம் படிச்சதும் அண்ணன் கிட்ட பல்பு வாங்கினதும்.. எழுத ஏராளமா இருக்கே.. ;))

tt said...

payana anupavangalai padippathu oru sugam!

பாசகி said...

அருமை அருமை...

குசும்பன் said...

அருமையா எழுதி இருக்கீங்க!

//அதுமட்டுமல்ல இன்னும் நிறைய துறைகளைப் பற்றிய அறிவும் வெயிலானுக்கு உண்டு.//

அப்படியா!!! அப்ப எங்க ஊரு குளபடிதுறையில் எத்தனை படின்னு கரீட்டா சொல்ல சொல்லுங்க பார்ப்போம்:)))

குசும்பன் said...

அது யாருங்க ஜீப் மேல ஏறி உட்காந்துக்கிட்டு ஆய்போவது:))

ஆமா சஞ்சய் ஜீப்பை இழுத்தாரா? அவ்வ்வ்வ்

சஞ்சயை அட்டை கடித்ததா? அச்சிச்சோ அட்டைக்கு என்ன ஆச்சு? நல்லா இருக்கா?

☀நான் ஆதவன்☀ said...

அருமையான பயண கட்டுரை இலக்கியன்.

☼ வெயிலான் said...

// அப்ப எங்க ஊரு குளபடிதுறையில் எத்தனை படின்னு கரீட்டா சொல்ல சொல்லுங்க பார்ப்போம் //

போன வாரம் மழையில உங்க ஊரு படித்துறை தண்ணியில போயிருச்சு குசும்பன் :)

கோவி.கண்ணன் said...

படங்களும் தகவல்களும் சிறப்பாக இருக்கிறது

சிவக்குமரன் said...

ஒரு விஷயத்துக்கு, வெயிலானுக்கு ஒரு சிறப்பு நன்றி சொல்லி ஆகணும். போகுமிடத்தைப் பற்றிய எந்த ஒரு சிறப்பையும் சொல்லி எதிர்பார்ப்பை ஏற்படுத்தாமல், அடுத்த வினாடி ஆச்சரியங்களையும்/அழகையும் அனுபவிக்க வைத்ததற்காக. அதுவும் ஜீப்பில் பயணம் செய்ததை வர்ணிக்க வார்த்தைகளில்லை. அதை பயணம் என்ற சொல்லில் அடக்க முடியாது. ஒரு மோசமான தார் சாலையில் சென்று கொண்டு இருந்தபோது, நான் வெயிலானிடம் சொன்னேன், சாலை மிக மோசம் என்று. தார் சாலையை கடந்தபோதுதான் தெரிந்தது, நான் சொன்னது எவ்வளவு தவறென்று. அந்த செம்மண் பாதை பயணம் மறக்க இயலாதது. (அட்டைக் கடியையும்தான் பாரி, என்ன பண்றது மனுஷ புத்தி)

சிவக்குமரன் said...

///Blogger ICQ said...

இதுக்குப் பேர்தான் பயணக்கட்டுரை.. பின்னி பெடலெடுத்து இருக்கிங்க நாடோடி.///

ஆமோதிக்கிறேன்..


///Blogger ICQ said...

ஆனா நீங்க எவ்ளோ ரசனையான ஆள்னு சொல்லாம விட்டுட்டிங்க. உங்களுக்குள்ள இருக்கும் கவிதை ரசிகனை போல் இதுவரை நான் கண்டதில்லை.

என்னை மாதிரி வளவளா கொழகொழா ஆட்களின் பேச்சையும் பொருமையாய் கேட்கும் சுபாவம் இப்டி நெறய.. விடுங்க.. தனிப் பதிவா போட்ருவோம்.. :))
///

உங்களையும் என்னையும் சமாளிச்சிட்டாரில்ல. இனி எவ்ளோ மொக்கை போடற ஆளா இருந்தாலும் தாங்குவாரு..

☼ வெயிலான் said...

// நண்பர் வெயிலானுக்கு நன்றிகள் பல. //

நாங்கள் தேர்வு செய்த இடம் வேறு. நாம் சென்ற இடம் வேறு.

அண்ணாச்சிக்கு தான் நீங்க நன்றி சொல்லணும். அவர் தான் இந்த பயணத்தை முன்னெடுத்தவர்.

முக்கியமாக ஈரவெங்காயம் சாமிநாதனுக்கு நன்றி ;)

சிவக்குமரன் said...

///☼ வெயிலான் 15 July, 2009 7:03:00 PM IST

முக்கியமாக ஈரவெங்காயம் சாமிநாதனுக்கு நன்றி ;)///

ஆம்..நன்ற்கழ்ழ் ப்ல கீஎடிய்

தினேஷ் said...

அப்பு நல்லா எஞ்சாய் பண்னுநீங்க போல ..

நாடோடி இலக்கியன் said...

நன்றி நாஞ்சில்நாதம்,(ஆமாங்க சரியான என்ஞ்சாய்மென்ட்).

நன்றி சஞ்சய்,(நீங்க எப்போ எழுத போறீங்க?)

நன்றி தமிழ்,(பயணங்கள் செல்வதைப் போன்றே பயணக் கட்டுரைகளும் சந்தோஷத்தைக் கொடுக்கும் என்பது உண்மைதான்).

நன்றி பாசகி.

நன்றி குசும்பன்,(

//குள படி துறையில் எத்தனை படின்னு கரீட்டா சொல்ல சொல்லுங்க பார்ப்போம்:)))//

யோவ் குசும்பா உமக்குதான் தேவையான விஷயம் சிக்கிருச்சுல்ல.
//அருமையா எழுதி இருக்கீங்க//
அப்போ இது எதுக்கு.

//அட்டைக்கு என்ன ஆச்சு? நல்லா இருக்கா?//

எனக்கும் அதே கவலைதான்.)

நன்றி நான் ஆதவன்.

நன்றி வெயிலான்,(சொல்லவே இல்ல,முதலில் எங்கே போறதா பிளான் இருந்தது நண்பா.

//அண்ணாச்சிக்கு தான் நீங்க நன்றி சொல்லணும்//

சொல்லிட்டா போச்சு அண்ணாச்சிக்கு நன்றிகள் பல.அப்புறம் ஈரவெங்காயத்துக்கு நான் எதுக்கு நன்றி சொல்லனும்னேன் ஹி ஹி)

நன்றி கோவியாரே.

நன்றி சிவா,(
//ஒரு மோசமான தார் சாலையில் சென்று கொண்டு இருந்தபோது, நான் வெயிலானிடம் சொன்னேன், சாலை மிக மோசம் என்று//

முதலில் நானும் இதை எழுதியிருந்தேன் பிறகு எடிட்ங்கில் போயிருச்சு சிவா.)

நன்றி சூரியன்,(ஆமாங்க சரியான என்ஞ்சாய்மென்ட்)

Raman Kutty said...

நெம்மாராவில், வருடம் தோறும் ஏப்ரல் முதல் வாரத்தில் நடக்கும் பட்டாசுத்திருவிழா மிகவும் பிரசித்தம், அருகில் உள்ள வல்லேங்கி என்கிற ஊரார்க்கும் இவர்களுக்கும் பந்தல் போடுவது முதல்.. பட்டாசு வெடிப்பது வரை அனத்திலும் போட்டிதான்.. இதில் பட்டாசுக்கு மட்டும் குறைந்தது ஒரு கோடி ரூபாய் என்கிறார்கள், முடிந்தால், அடுத்த வருடம் ஏப்ரல் மாத முதல் வாரத்திற்கு முயற்சி செய்யுங்கள்.

நாடோடி இலக்கியன் said...

நன்றி ராமன்,(அடுத்த ஏப்ரலில் வாங்க எல்லாம் சேர்ந்தே போயிடுவோம்,உங்களுக்கு மலையாளம் தெரியுமோ?)

துளசி கோபால் said...

அட்டகாசமான பயணம் & விளக்கம்.

ரசித்தேன்.

ஆணா இருப்பதில் உள்ள சுகங்களில் இது(வும்) ஒன்னு.

நிகழ்காலத்தில்... said...

அடுத்தமுறை போடும்போது தகவல் கொடுங்க, முடிந்தால் வருகிறேன்.

கட்டுரை நானே பயணித்தது போல் இருந்தது

உண்மைத்தமிழன் said...

ம்.. கொடுத்து வைச்சவங்க..

அனுபவிங்க..!

ஜோசப் பால்ராஜ் said...

நான் பெங்களூர்ல இப்டித்தானுங்க வாழைப்பழ தள்ளுவண்டிக் கடையில ரொம்ப கஷ்டப்பட்டு கனடத்துல பேரம் பேசி வாழப் பழம் வாங்குனேன். அப்ப என் அண்ணண் சொன்னான், "டேய் நீ தமிழ்ல பேசியிருந்தா இன்னும் ரெண்டு பழம் கூட தருவாங்க. ஏன்னா அவங்க எல்லாம் கிருஷ்ணகிரிகாரங்க தான்".


பயணக் கட்டுரை ரொம்ப நல்லாருக்கு.

நாடோடி இலக்கியன் said...

நன்றி துளசி டீச்சர்,

நன்றி நிகழ்காலத்தில்,(எதிர்காலத்தில் போகும்போது சொல்லிவிடுகிறோம் நண்பரே,உங்க பின்னூட்டத்தில் kவுக்கு பதிலா tய அழுத்திட்டீங்க போல :) ).

நன்றி உண்மைத்தமிழன் சார்.

நன்றி ஜோசப் பால்ராஜ்.(எங்க கூடவும் ஒரு கிருஷ்ணகிரி ஆளு,நம்ம தஞ்சை குசும்புக்கு மேல இருக்கு இந்த சஞ்சய் குசும்பு).

மங்களூர் சிவா said...

wow கலக்கல்!

பயணக்கட்டுரை சூப்பர்!

சஞ்சய் இழுத்து அந்த கார் மேல ஏறிச்சின்னு சொல்றதுதான் கொஞ்சம் ஓவரா இருக்கு!
:))

நாடோடி இலக்கியன் said...

நன்றி மங்களூர் சிவா, (ஓவராத்தான் இருக்கு இருந்தாலும் அதுதான் உண்மை,லைன்டேட்ஸ் நிறைய சாப்பிடுவாராயிருக்கும்,சிங்கம் போல ஸ்ட்ரென்த் அவருக்கு).

ஆனா இதிலயும் ஒரு லாஜிக் இடிக்குதுல்ல சஞ்சய்.

குசும்பன் said...

//யோவ் குசும்பா உமக்குதான் தேவையான விஷயம் சிக்கிருச்சுல்ல.

//அருமையா எழுதி இருக்கீங்க//

அப்போ இது எதுக்கு.//

எடுத்தவுடனே ஒரு பொண்ணுக்கிட்ட போய் ஐ லவ் யூன்னு லெட்டர் கொடுத்துட முடியுமா? அழகா இருக்கீங்கன்னு பொய் சொல்றது இல்ல அதுமாதிரிதான் இதுவும்:)))

நாடோடி இலக்கியன் said...

குசும்பன், ஹி ஹி ,(கமென்ட் பார்த்த உடனேயே புரிஞ்சிடுச்சு.இதுக்கு விளக்கம் வேறயா குசும்பரே.)

துபாய் ராஜா said...

இனியதொரு பயணம்.

படங்களை பார்த்தாலே குளிர்கிறது.

நாடோடி இலக்கியன் said...

நன்றி துபாய் ராஜா,

Unknown said...

இதுப்போன்ற ஒரு ஊரிலேயே பிறந்து வளர்ந்திருந்ததால் மிகவும் ரசித்து படித்தேன் நன்றி.

நாடோடி இலக்கியன் said...

நன்றி சுந்தர்.

Unknown said...

அண்ணா இந்த பதிவு நான் ஏற்கனவே படிச்சிட்டேன்... கமெண்ட் தான் போடல... :)))

Unknown said...

மிக அருமையான பயணக்குறிப்பு அண்ணா.. :)))

//ஆணா இருப்பதில் உள்ள சுகங்களில் இது(வும்) ஒன்னு.//

ரிப்பீட்டு.. :))

நாடோடி இலக்கியன் said...

நன்றி ஸ்ரீமதி,
முன்னாடியே படிச்சிட்டா சமத்தா பின்னூட்டம் போடுறதில்லையா?
:)
போனஸ் பின்னூட்டத்திற்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.

சாமக்கோடங்கி said...

மிக அருமையான ஒரு பயணக் கட்டுரை... நாங்கள் பார்க்க விரும்பிய இப்பகுதியைப் பற்றி இணையத்தில் எங்கு தேடியும் நல்ல தகவல் கிடைக்க வில்லை.. ஆனால் நமது ப்ளாக் எவ்வளவு பெரிய தகவல் களஞ்சியம் என்று இப்போது தான் புரிகிறது..
நண்பர்கள் அனைவரும் சேர்ந்து அசத்தி இருக்கிறீர்கள்.. என்ன ஒரு அருமையான எழுத்து நடை.. நன்றி..

நாடோடி இலக்கியன் said...

நன்றி பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி.